Wednesday, December 28, 2011

இலவச இணைப்பு


‘கடக்காரன் உங்கள நல்லா ஏமாத்திட்டான்பா’

“என்னடா சொல்ற”

‘பின்ன என்னப்பா. இந்த புத்தகத்தோட ஃப்ளாப்பி ஃப்ரீனு சொன்னான்னு நீங்களும் எனக்காக வாங்கி வந்துட்டீங்க... ஃப்ளாப்பி கறுப்பா சதுரமாத்தான் இருக்கும்... இது என்னமோ வட்டமா கலர் கலரா மின்னுது... இது வெறும் பிளாஸ்டிக்ப்பா’ என்று சொல்லி அதை அலட்சியமாக டைனிங் டேபிளின் மேல் வீசி விட்டு, கல்லூரிக்குக் கிளம்பினேன்.

வருடம் 1994.

அரையடி சதுரத்திற்கு 1.2 MB கொள்ளளவுடன் இருந்த ஃப்ளாப்பி டிஸ்க்குகளே பிரதானமாக புழக்கத்தில் இருந்தன. ஒன்றின் விலை 40 ரூபாய். கல்லூரி எங்கள் வகுப்பில் ஆளுக்கு ஒரு ஃப்ளாப்பியை வாங்கிக் கொடுத்திருந்தது. அதை லேப் பீரோவிலேயே பாதுகாக்கவும் செய்தது! லேபினுள் நுழையும் போது, பெயர்களின் அகர வரிசைப்படி லைனில் நிற்போம். இரண்டு பூட்டுக்கள் கொண்ட பீரோவிலிருந்து, எங்கள் ரோல் நம்பர் எழுதப்பட்ட ஃப்ளாப்பியை எடுத்துத் தருவார்கள். கம்ப்யூட்டரில் ப்ரோக்ராம்கள் எழுதிவிட்டு அதை ஃப்ளாப்பியில் சேமித்தபின் கண்ணில் ஒற்றிக் கொண்டு அங்கேயே ஒப்படைத்துவிட்டு வருவோம்.

இரண்டு ஆண்டுகளாக Basic, FORTRAN, COBOL, Pascal ஆகிய கம்ப்யூட்டர் மொழிகளில் மாய்ந்து மாய்ந்து ப்ரோக்ராம் எழுதியும் பாதி ஃப்ளாப்பிதான் நிரம்பியிருந்தது.

ஃப்ளாப்பி டெக்னாலஜியில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டு 1.44 MB-களுடன் கையடக்கமாக ஃப்ளாப்பிகள் வெளிவரத் தொடங்க, அதில் ஒன்றையாவது வாங்கி, C மொழியில் ப்ரோக்ராம் எழுதி நிரப்பி விட வேண்டும் என்பதே, என் அப்போதைய வாழ்நாள் லட்சியம்.

நிலைமை இப்படி இருக்க, தந்தையார் ஏதோ ஒரு பிளாஸ்டிக்கை ஃப்ளாப்பி என்று வாங்கி வந்து விட்டாரே என்று வருத்தப்பட்டேன்.

வகுப்பில் நுழைந்தால், நண்பன் சீனுவாசனைச் சுற்றி அனைவரும் ஏதோ வைரப் புதையலைக் கண்டவர் போல வாய் பிளந்து நிற்க, அவன் கையில் தந்தை வாங்கிய PC-Quest மாத இதழ் + அந்த பிளாஸ்டிக்.

“டேய் ரகு, விஷயம் தெரியுமா... இதோட பேர் காம்பாக்ட் டிஸ்க்காம். இதோட கப்பாஸிடி.... கப்பாஸிடி... அவனுக்கு மூச்சு வாங்கியது... அறுநூத்து ஐம்பது MB-யாம்டா...”

‘என்னாது... அறுநூத்து ஐம்பதா’... ஒரு நொடி கண்ணிருட்டி மயக்கம் வந்து தெளிந்தது.

“PC-Quest-இன் 25 ஆவது இஷ்யுவை கொண்டாட இத ஃப்ரீயா குடுத்திருக்காங்கடா...”

மேற்கொண்டு அவன் சொன்னது எதுவும் காதில் ஏறவே இல்லை. எங்கள் கல்லூரியின் லேப்பில் இருக்கும் கம்ப்யூட்டர்களின் ஹார்ட்-டிஸ்கின் அதிகபட்ச கொள்ளளவே 16 MB-தான். பாதி கம்ப்யூட்டர்களுக்கு ஹார்ட்-டிஸ்கே கிடையாது. அவைகளில் இரண்டு ஃப்ளாப்பி டிரைவ்கள் இருக்கும். Command.com என்ற பைலைக் கொண்ட ஒரு ஃப்ளாப்பியை முதல் டிரைவில் நுழைத்து பூட் செய்து கொள்ள வேண்டும். இரண்டாம் டிரைவில் நுழைக்கப்படும் ஃப்ளாப்பிதான் அந்தக் கம்ப்யூட்டரின் ஹார்ட்-டிஸ்க். லேப்பில் இருக்கும் அனைத்து கம்ப்யூட்டர் ஹார்ட்-டிஸ்குகளின் கொள்ளளவைக் கூட்டினாலும் 100 MB தேறாது. இதனால் அறுநூத்து ஐம்பதைக் கேட்ட காதில் இடி இறங்க, இயல்பு நிலைக்கு மீள முடியாமல் இயந்திர கதியில் நடந்து என் சீட்டில் அமர்ந்தேன்.

ஆங்கில ப்ரொஃபஸர் நுழைய வகுப்பு துவங்கியது. ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் ஸீசர் நாடக பாடத்தை நடத்தத் தொடங்கினார். மனம் அதில் லயிக்காமல் தருமி போல் புலம்பத் தொடங்கியது. “ஒரு MB-யா ரெண்டு MB-யா... அறுநூத்து ஐம்பது MB ஆச்சே.... அறுநூத்து ஐம்பது MB ஆச்சே....”

ப்ரொஃபஸர், சீசரைப் போல பாடி-லாங்வேஜூடன் எதையோ சொல்ல, அவர் ஜோக் அடித்துவிட்டதாக நினைத்து, ஹஹ்ஹஹ்ஹா என்று வாய்விட்டு சிரித்தேன்.

அந்தோ பரிதாபம். அறுபது பேர் இருந்த வகுப்பில் நான் மட்டுமே சிரித்திருக்கிறேன். இதனால் அடுத்த நொடியே ஒட்டு மொத்த வகுப்பும் சிரித்து அதிர்ந்து அடங்கியது.

“என்னாச்சு”

‘ஒண்ணுமில்ல சார். கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டுட்டேன்”

அவர் பாடத்தைத் தொடர, மனம் மீண்டும் அரற்றியது.

“ஐயோ, அந்த டிஸ்கை விசிறிய வேகத்தில், அது டேபிளிலிருந்து கீழே விழுந்திருந்தால், துப்புரவு செய்பவர் தூக்கி போட்டிருப்பார்களே!”

அதற்கு மேல் நிலை கொள்ள முடியாமல், அடுத்த வகுப்புகளை கட் அடித்துவிட்டு சைக்கிளில் வீட்டிற்குப் பறந்தேன். என் வேகத்தில் வழியில் இருக்கும் மயான பூமிக்கடியில் இருப்பவர்களின் நீடு துயில் கூட சற்றுக் கலைந்திருக்கும்.

‘டைனிங் டேபிளில் டிஸ்கைக் காணோம்’

தரையில் லேசாக பினாயில் நெடி அடிக்க... போச்சு... போச்சு, வீட்டை பெருக்கி துடைத்தாகிவிட்டது. டிஸ்க்கை தூக்கி போட்டிருப்பார்கள். ஒரு நப்பாசையுடன் ஹாலின் இண்டு இடுக்கிலெல்லாம் தேடினேன். ம்ஹூம் கிடைக்கவில்லை. ஒரு மணி நேரம் துக்கம் தாங்கவில்லை. சரி, கல்லூரிக்குக் கிளம்ப வேண்டியதுதான் என நினைத்து சாப்பிட டைனிங் டேபிளை நெருங்க, துள்ளிக் குதித்தேன்.

வெளியே கிளம்பும் அவசரத்தில், சரியான தட்டு கிடைக்காததால் ஈய சொம்பின் வாய் விட்டத்திற்குச் சரியாக இருந்ததால், டிஸ்க்கினால் அதை மூடிவிட்டுச் சென்றிருக்கிறார் என் அன்னை.

ரச நீர் ஆவியில் குளித்தபடி MB-களைச் சிமிட்டியது, நான் கண்ட முதல் சி.டி.

Thursday, November 10, 2011

நாகர்களின் ரகசியம்

சிவாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, வீரபத்ரனிடமிருந்து வாங்கி, தன் ஆனை முகத்தைத் தூக்கி, அதை உள்ளிழுக்க முயன்று, புகைக்கத் தெரியாமல் கணேஷ் இரும, எல்லாரும் கொல்லென்று சிரிக்கிறார்கள்.

இந்து மத உணர்வுகளை புண்படுத்தாமல் இப்படி ஒரு காட்சி Secret of the Nagas நாவலில் மட்டுமே சாத்தியம்.

முதல் நாவலான The Immortals of Meluha (விமர்சனம் இங்கே: சிவா... மஹாதேவ்)-வில் தந்த ஆச்சரியம், திருப்தி, ஆனந்த உணர்ச்சிகளை அப்படியே இதிலும் தொடர்ந்திருக்கிறார் ஆசிரியர் அமிஷ்.

சூர்ய வம்சிகளிடையே நிகழ்ந்த சிவாவின் பயணம், இந்த நாவலில் சந்திர வம்சிகளுடன். வட இந்தியாவின் பல நிலப்பரப்புகள் (காசி உட்பட) இந்நாவலில் அழகான காட்சிகளாகுகின்றன.

ஊழலும், வஞ்சகமும், குழப்பமும், ஏற்றத் தாழ்வுகளும், அதனுள் நல்லுள்ளங்களும், ஞானமும், திறமையும், உழைப்பும் கொண்ட இந்தியாவின் கதம்ப முகத்தை சந்திர வம்சிகளை வைத்து வெளிப்படுத்தியிருப்பது பிரமாதம்.

இதில் ஒரு தமாஷ். இவர்களுக்கு நேர் எதிராக, அனைத்து பிரஜைகளுக்கும் சம நீதியுடன், கட்டுக் கோப்பான சட்ட ஒழுக்கங்களுடன் ஒட்டு மொத்தமாக முன்னேறிய சமுதாயமாக சூர்ய வம்சம். இதன் கோட்பாடுகளை இந்தியா முழுதும் பரப்பும் நோக்கத்துடன், தக்கன் கோலோச்சும் அதன் நிலப்பரப்புதான் இப்போது பாகிஸ்தான்!!

ஆசிரியரைப் பாராட்ட வேண்டிய பல அம்சங்களில் ஒன்று, சிவாவை ஒன்-மேன்-ஆர்மியாக மிகைப்படுத்தாதது. என்னதான் அவரை மஹாதேவ் நிலைக்கு படிப்படியாக உயர்த்தினாலும், இக்கட்டான சமயங்களில், மந்திரமாய் வந்து குதிக்கும் தமிழ் சினிமா கதாநாயகன் போல, சிவா தோன்ற வாய்ப்பிருந்தும், காட்சிகளிலிருக்கும் பிற பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களையே கையாள விட்டிருப்பது யதார்த்தம்.

சில சமஸ்கிருத வார்த்தைகள், கடவுள்களின் பெயர்கள், தத்துவங்களுக்கு வரும் ஒரு வரி விளக்கங்கள் அட்டகாசம். உதாரணங்களாக: ஏழு நதிகள் பாயும் வட இந்தியாவின் பெயர் சப்த சிந்து. மற்ற இந்திய நதிகளைவிட பிரம்மாண்டமாக கரைபுரளும் அந்த ஒரு நதிக்கு மட்டுமே ஆண்பால் பெயர்: பிரம்ம புத்திரா. இந்நதியும் கங்காவும் இணைந்து காத்து வளப்படுத்தும் நிலம் பிரங்கா!

சமஸ்கிருத காரணப் பெயர்களுடன் கடும் போட்டியிட்ட மொழி நம் தமிழ். சொன்னது கண்ணதாசன், அர்த்தமுள்ள இந்துமதத்தில். காசியிலிருந்து விசாலமான இந்திய நிலப்பரப்பை ஆள்வதால், அவள் பெயர் விசாலாட்சி!

இந்தியாவின் இரு கண்கள், இவ்விரு செம்மொழிகளும். அதை உணர்ந்தே, சங்கத் தமிழ் தந்த மனுதர்ம சாஸ்திரமே சூர்ய வம்ச சட்டங்களுக்கு அடிப்படை என கோடிட்டுக் காட்டியிருக்கிறார் ஆசிரியர்.

புராணங்கள் கற்பனையோ, கட்டுக் கதையோ, அதில் வரும் கணக்கற்ற குணசித்திர பாத்திரங்களை நவீன படைப்புகளில் வடிப்பது துர்லபம். ஆனால் கதைக் களம் புராணத்தை அடிப்படையாகக் கொண்டதால் இதை சாதித்துக் காட்டியிருக்கிறார் அமிஷ்.

முதல் நாவலில் வாயுபுத்திரர்கள் வரை வந்த பாத்திரங்கள் இதில் பகீரதன், பரசுராம், கார்த்திக், கணேஷ், காளி... என நீள்கிறது. கார்கோடன், சந்திரகேது, ஜமதக்னி, ரேணுகா, உமா... என ஒரு சில பத்தி பாத்திரங்களும் அடக்கம். புராண பாத்திரங்களின் உருவ குணங்களுடனேயே இவற்றை வடித்திருப்பது சிறப்பு.

சிவாவின் உருகும் மனசை,  சூழ்நிலைகளால் பின்னாளிலேயே ஏற்ற சதியின் காதல் தோசையை அப்படியே திருப்பிப் போட்டு, ஆனந்தமயி - பர்வதேஸ்வர் காதலை இங்கே சமைத்திருக்கிறார். சில இடங்கள் நாசூக்காக சிரிப்பை வரவழைக்கின்றன.

சிவாவின் பயணத்தை ஒட்டி கிட்டதட்ட ஒரே நேர்க் கோட்டில் சென்றது முதல் நாவல். ஆனால் இங்கே சிவா, சதி, நாகா... மூவரை முன்னிலைப்படுத்தி நகரும் அத்தியாயங்கள் க்ரைம் நாவலுக்கே உரிய த்ரில்லர்.

தீய சக்திகளை அழிப்பதே தனது கடமையென படையெடுக்கும் சிவா, சந்திர வம்சி, பரசுராம், நாகா என யாருமே தீயவராக இல்லாமல், அவரவர் சூழ்நிலை நியாயங்களுடன் வேறு ரூபத்தில் இருப்பது கண்டு திகைக்கிறார். கிட்டதட்ட எல்லாருமே தங்களைக் காக்க, இவர் வரவை எதிர்பார்த்துக் காத்திருப்பது இவரை வெகுவாகக் குழப்புகிறது.

தேவர்களுக்காக அசுரர்களை ஒடுக்கிய ருத்ரன், ஒரு கட்டத்தில் அசுரர்கள் அப்படியொன்றும் தீயவரில்லை என உணர்ந்த கதையிலிருந்து சில தெளிவுகளைப் பெறுகிறார். உண்மையான தீய சக்தியை அடையாளம் காண ருத்ரனின் கோவில்களில் வாயுபுத்திரர்களுடன், முதலில் நேரிலும், பின் டெலிபதி மூலமாகவும் சிவா மேற்கொள்ளும் உரையாடல்கள், அவருக்கு மட்டுமல்ல நமக்கும் சில பக்குவங்களைத் தருகின்றன.

நம் யூகத்தின்படியே இந்நாவல் முடிந்தாலும், மூன்றாவது நாவலுக்கு (The Oath of the Vayuputras) எந்த க்ளூவும் இல்லாதது எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. 

அவசரமில்லை அமிஷ். கைலாச சிகரமாய் மூன்றாம் நாவலைத் தர காலம் எடுத்துக் கொள்ளுங்கள். காத்திருக்கிறோம். http://shivatrilogy.com

Thursday, October 20, 2011

சிவா... மஹாதேவ்!


கி.மு 1900 - காஷ்மீர் - ஸ்ரீநகர்.

- படுக்கையறையுடன் இணைக்கப்பட்ட குளியலறையில் சோப்பு தேய்த்துக் குளிக்கிறார்... சிவா... மஹாதேவ்!

- பின் பருத்தி வேட்டியை அணிந்து கொள்ள, அவரது புலித்தோல் ஆடை hygienic காரணங்களுக்காக சுத்தம் செய்ய எடுத்துச் செல்லப்படுகிறது.

இப்படி ரகளையான கற்பனைகளுடன் துவங்கும் நாவல் - Immortals of Meluha. (ஆங்கில நாவலுக்கு தமிழில் விமரிசனம் எழுதக்கூடாது என ஏதாவது விதி இருக்கிறதா?!)

கைலாஷ் மலையடிவாரத்தில், ஒரு சிறு கூட்டத்திற்குத் தலைவனாக இருக்கும் சிவா, சூரியவம்ச சாம்ராஜ்யத்தின் அழைப்பை ஏற்று, தன் கூட்டத்துடன் காஷ்மீருக்குக் குடிபெயர்ந்தபின் படிப்படியாக மஹாதேவ் நிலைக்கு உயர்வதே கதைக்களம்.

பயங்கொள்ளும் கோபம், தீவிரக் காதல், கடும் வீரம், அட்டகாச நடனம், தீயதை அழிக்கும் சக்தி... அனைத்தையும் உள்ளடக்கிய மஹாதேவ், கடவுளாக இல்லாமல் நம்மைப்போல் இரத்த சதை மனிதனாக இருந்தால்... இக்கற்பனையே இக்கதையின் கரு.

வானத்தின் வர்ணனையுடன், நீர்க் கரையில் இளம் கதாநாயகனுடன் துவங்கும் சாண்டில்யனின் சரித்திரக் கதை போலவே, மானசரோவரின் கரையில் சூரிய அஸ்தமனத்தை தீவிர சிந்தனையுடன் சிவா காண, முதல் காட்சி விரிகிறது.

அட்டைப் படத்தைப் பாருங்கள். திரிசூலத்தின் முன், ஜடாமுடியுடன், எஃகு தேகத்துடன், தோள்பட்டைகளில் தைக்கப்பட்ட நீண்ட போர் வெட்டு காயங்களுடன் சிவா... இப்பிம்பத்துடன் முதல் காட்சியை மனத்திரையில் விரித்தால்... நமக்குள் ஒரு ஆகர்ஷண சக்தி ஊற்றெடுக்கத் தொடங்குகிறது.

பின்னாளில், இவர் தலைமையில் சூர்யவம்ச சேனை, சந்திர வம்சத்துடன் போரில் மோதும் போது... ‘ஹர் ஹர் மஹாதேவ்... ஹர் ஹர் மஹாதேவ்...’ என அடிநாதத்தில் கூக்குரலிடும்போது, அந்த ஆகர்ஷண சக்தி நம்முள் பிரவாகமெடுக்கிறது.

தலை வணக்கங்கள் அமிஷ். இவர்தான் நூலாசிரியர். கொல்கத்தாவைச் சேர்ந்த 35 வயது IIM பட்டதாரி. சிவ கதையின் அனுபவத்தினால், தான் வேறு மனிதனாக உணர்கிறேன் என முன்னுரையில் சொல்கிறார். உண்மைதான். படிக்கும் நமக்குள்ளும் சில மாற்றங்கள் இயல்பாக நிகழ்கின்றன. தக்க வைப்பது நம் பொறுப்பு.

புராணம், வரலாறு, நவீன உலகம்... மூன்றையும் கலந்து கதை புனையப்பட்டிருக்கிறது. ராமயணப் பாத்திரங்களை நவீனப்படுத்தியிருப்பார் ராவணன் படத்தில் மணிரத்தினம். அது போலவே சதி (பார்வதி), தக்கன், நந்தி, வீரபத்திரன், பர்வதேஸ்வர், பிரகஸ்பதி (இவர் இங்கே விஞ்ஞானி!)... என அனைத்து பாத்திரங்களும் கச்சிதம். படத்திற்குத் தீர்ப்பு எப்படியோ?! இந்நாவல் சூப்பர் ஹிட்.

கதையின் காலம் ராமனுக்குப் பின் 1200 வருடங்கள். ராமனின் சோமபானம் சர்ச்சைக்கு வித்திட்டது நினைவிருக்கும். ஆனால் அது இங்கே சோம்ராஸ் மருந்தாக, ஆயுளை நீட்டும் மருந்தாக வருகிறது. (தக்கனின் வயது 185!)

ராமனால் அனைத்து சூர்யவம்ச பிரஜைகளுக்கும் கிடைக்கச் செய்யப்பட்ட இம்மருந்திற்கு முக்கிய மூலப்பொருள் சரஸ்வதி நதிநீர். நதியை சந்திரவம்சிகள் தடை செய்ய, போர் மூள்கிறது. தோல்வியடையும் சந்திரவம்சி தீவரவாதத் தாக்குதல்களில் இறங்குகிறார்கள். அடடா! இந்தியா-பாக் பிரச்சனையைக் கூட நுழைத்து விட்டார் ஆசிரியர் (பின்னே காஷ்மீரில் வேறு கதை துவங்குகிறதே!).

தீவிரவாதத் தாக்குதல்களில் திணறும் சூர்யவம்சி, நீலகண்டர் அவதரிப்பார் என காத்திருக்க, சோம்ராஸ்-ஐப் பருகும் சிவனின் கழுத்து நீலமாகிறது! வாவ்... கற்பனை எல்லாம் மத்தாப்பு சிமிட்டல். (ஹூம்... காவரி நதிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க இன்னொரு நீலகண்டன் அவதரித்தால் நலம்)

கதையோடு பிணைந்து வரும் சிவாவின் காதலும், போர்க்களத்தில் சதியிடத்து (பார்வதி) அது கனியும் விதமும் வீர அழகு.

தன்னை சாதாரண மனிதனாகவே கருதும் சிவா, சந்திரவம்சியை வீழ்த்தியபின், பல உணர்ச்சிகளுக்கு ஆளாகி, அயோதி இராமர் கோவிலில் மஹாதேவனாக உணர்ந்து பயணத்தைத் துவங்கும் போது ‘தொடரும்’ என நாவல் முடிகிறது. ஆம், இது இன்னும் இரு பகுதிகள் கொண்ட தொடர் நாவல் - The secret of the Nagas, The Oath of the Vayuputras. மூன்றாம் நாவல் இனிதான் வெளிவரும்.

முதல் நாவல் தந்த புது ரத்தப் பாய்ச்சலில், இரண்டாவதை படிக்கத் தொடங்குகிறேன். http://shivatrilogy.com/

Wednesday, October 19, 2011

காற்றடைத்த பையடா!


பேசும் வசதியுடன் மட்டும் பிறந்த செல்போன், இன்று பல வசதிகளைக் கொண்டு ஸ்மார்ட் ஃபோனாக வளர்ந்திருக்கிறது. ஆயிரங்கள் கொடுத்து வாங்கிய ஸ்மார்ட் போன் கீழே விழுந்து உடைந்தால் நம் மனதும் சுக்கு நூறாகாதா?

கொஞ்சம் பழைய செய்திதான். என்றாலும் சொல்கிறேன். நம் ஸ்மார்ட் போனைப் பாதுகாக்க, அதில் காற்றுப் பைகளைப் பொருத்தலாம் என ஓர் அசாத்தியமான அல்லது அபத்தமான(!) யோசனையை மொழிந்து அதற்குக் காப்புரிமையையும் பெற்று விட்டார் அமேசான் நிறுவனத்தின் CEO ஜெஃப் பெஜோஸ்.

மேலும்...

Monday, August 29, 2011

ஹிப் ஹிப் ஹூர்ர்ர்ரே... ஹஸாரே


தோனி சிக்ஸர் அடித்து, இந்தியா உலகக் கோப்பையை வென்ற போது ஏற்பட்ட ஆரவார சந்தோஷத்தை விட அதிகமாக இருக்கிறது இப்போதைய ஒட்டு மொத்த தேசத்தின் ஆனந்தமான உற்சாகம்.

இதன் கேப்டன், ஆல் ரவுண்டர், மேன் ஆப் தி மேட்ச், மேன் ஆப் தி சீரியஸ்... எல்லாம் அன்னா ஹசாரே.

இவர் தோனியைப் போல சிக்ஸர்களை விளாசாமல், அமைதியாக, தீட்சண்யமாக தடுப்பாட்டம்தான் ஆடினார். இவர் மீது குற்றச்சாட்டுகள், நடவடிக்கைகள்... இன்னும் என்னன்னவோ பெளன்சர்களாக, யார்க்கர்களாக வீசப்பட்டன. ஆனால் பெயர்ந்ததென்னவோ எதிரணியின் விக்கெட்டுக்களே!

மிக அபூர்வமாக ஒட்டு மொத்த தேசத்தின் கவனமும் பார்லிமெண்டின் மீது குவிந்திருக்கிறது என்று அங்கே நிதியமைச்சரின் குரல் ஒலித்தது. இதற்கு அடிப்படை மக்களின் இயக்கம், தர்க்கங்களைக் கண்டு பொதுவாக ஒதுங்கும் நடுத்தர வர்க்கங்களின் எழுச்சி, அதை தலைமையேற்று நடத்திய மாமனிதர் ஹசாரே.

இதுவரை பார்லிமெண்டில் அமளி துமளிகளை, சட்டை பேப்பர் கிழிப்புகளை, வெளி நடப்புகளை மட்டும் செய்திச் சானலில் பார்த்திருந்த சாமான்ய இந்தியன், வரலாறு காணாத வகையில் ஒரு தீர்க்கமான விவாதம், ஒரு முழு நாளுக்குத் தொடர்ந்து நடைபெறுவதை, நேரடி ஒளிபரப்பில் பெருமை பொங்கப் பார்த்தான்.

எழுத்துக்களை விட, சொற்களை விட, மெளனமும் முறுவலும் கூட வலிமையானவை என ஹசாரே பறைசாற்றினார்.

மைதான மேடையில், சோர்வை வெளிக்காட்டாமல், தலையணைமேல் அதை விட மிருதுவாகப் படுத்திருந்து அவர் போராடிய காட்சியே, மொழிகளைக் கடந்து, மாநிலங்களை இணைத்து, இந்தியனை அவர் பின் அணிவகுக்க உசுப்பியது.

இதனால் அவரின் பிரதான கோரிக்கைகளுக்கு பாராளுமன்றம் முதற்படி ஒப்புதலை அளித்திருக்கிறது. மக்களின் விருப்பமே, பாராளுமன்றத்தின் விருப்பம் என பிரதமர் வழி மொழிந்திருக்கிறார். ஊழலற்ற பாரதத்திற்கான நம்பிக்கை கீற்றொளி, கடைகோடி இந்தியனுக்கு இப்போது தென்படுகிறது.

பலவித விமரிசனங்கள் ஹசாரே மீது இறைக்கப்பட்டன. ஆனால் எதற்கும் அசையாமல், எந்தவொரு அரசியல் அதிகார பலமும் இன்றி, வயோதிகத்தின் தளர்ச்சிகளையே முடிச்சுகளாக்கி, வைராக்கியத்துடன் அவர் நடத்திய போராட்டம் ஒவ்வொரு இந்தியனுக்கும் நடத்தப்பட்ட பாடம்.

பூனைக்கு மணி கட்டிய ஹசாரே, தோனி சிக்ஸர் அடித்த போது காட்டிய நிதானத்தைவிட, பல மடங்கு நிதானத்தைக் கடைபிடித்து, “இப்போது உண்ணா விரத்தை முடித்துக் கொள்ளவா?” என மக்களிடம் பண்பட்ட விதத்தில் கேட்டு ஒவ்வொருவருக்காகவும் நன்றி தெரிவிக்கிறார்.

ஆனால், நாம்தான் கோடிகளில் நன்றி தெரிவிக்க வேண்டும், இந்த மகாத்மாவிற்கு.

Thursday, August 25, 2011

அபராதம் - இது ரொம்ப ஓவர்!

என் கல்லூரிக் காலம் - 1993. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு மெல்ல துளிர்விட்ட காலம். டிஜிட்டல் லாஜிக் கேட்ஸ்-தான் எங்களுக்குப் பிரதான பாடம். அண்ட், ஆர், நாட் - லாஜிக் கேட்ஸ்-ஐ புரிந்து கொள்ளவே எங்களுக்குப் பல வகுப்புகள் தேவைப்பட்டது. யாரேனும் எக்ஸார், எக்ஸ்னார் என்று அடுத்த கேட்ஸ்-களைப் பற்றிப் பேசினால் அவன் பில் கேட்ஸ்-ஐ விட பெரிய பிஸ்தா!

இரண்டு ராணி காமிக்ஸ் அளவு இருந்த லாஜிக் கேட்ஸ் புத்தகத்தைப் படிக்கவே சக மாணவர்கள் திணறும் போது, கல்லூரி லைப்ரரி-யிலிருந்து 'டிஜிட்டல் டேட்டா கம்யூனிகேஷன்ஸ்' என்று ஒரு நானூறு பக்க புத்தகத்தை நான் எடுத்துவர, நண்பர்களின் காது சிக்கு புக்கு ரயில் பிரபுதேவா கணக்காகப் புகைந்தது.

ஆஹா, இந்தப் புத்தகத்தை வைத்து கொஞ்சம் பந்தா பண்ணலாம் என நினைத்தேன். தினமும் கல்லூரியினுள் நுழையும் போது,  பளபள அட்டையைக் கொண்ட இப்புத்தகத்தை தகத்தகாய கதிரவனின் கதிர்கள் பட்டுத் தெறிக்கும்படி கையிலேயே பிடித்துக் கொண்டு, அன்று புரிந்தோ புரியாமலோ மனனம் செய்த ஓரிரு வாக்கியங்களை வைத்து இல்லாத பொல்லாத வியாக்கியானங்களை அளந்து பொளந்து கட்டி எல்லாருடைய மண்டையையும் காய வைத்தேன்.

“எச்செயலைச் செய்தாலும் முழுமையாக செவ்வனே செய்” என்று ஆன்றோர்கள் சொல்லிக் கொடுத்தார்கள் இல்லையா! அதன்படி லைப்ரரி புத்தகத்தை வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்ட பத்து நாளும் பந்தாவைத் தொடர கங்கணம் கட்டிக் கொண்டேன். துரதிஷ்டவசமாக பத்தாம் நாள் ஜூரம் அடிக்க லீவு எடுக்க வேண்டியதாகி விட்டது.

அடுத்த நாள் அபராதம் கட்ட வேண்டியிருக்கும் என நினைத்தே லைப்ரரிக்குச் சென்றேன். உடல் நலமில்லாததால் நேற்று திருப்பித் தர முடியவில்லை என நூலகரிடம் விளக்க, அவர் சரியென புத்தத்தை வாங்கிக் கொண்டார். “ஃபைன் சார்?” என்றேன். “பாத்துக்கலாம்” என்று சொல்லி திருப்பி அனுப்பி விட்டார். அடடா, எவ்வளவு நல்ல மனிதர் இவர்! உடல் நலமில்லை என்று சொன்னால் எவ்வளவு கரிசனத்துடன் நடத்துகிறார் என மெய் சிலிர்த்தேன்.

பாடங்கள் சூடுபிடிக்க, தேர்வுகள் நெருங்கிவர மீண்டும் லைப்ரரியிலிருந்து புத்தகம் எடுப்பதே மறந்து போனது.  ஆண்டு தேர்வு மணியடிக்க, ஹால்-டிக்கெட் வாங்க முனைந்த போதுதான் நோ-ட்யூ சர்டிஃபிகேட்-இல் நூலகரானவர் ஒரு நாள் தாமதத்திற்கான அபராதத்தை நிரப்பியிருந்தது தெரிந்தது.

அபராதத்தை கல்லூரி வளாகத்தினுள் இயங்கும் ஒரு வங்கியின் கிளையில்தான் செலுத்த வேண்டும். வகுப்பை கட் அடித்ததற்கு ஃபைன், தேர்வில் முழுக்கு போட்டதற்கு ஃபைன், லேப்-இல் எதையாவது உடைத்ததற்கு ஃபைன் என பல காரணிகளால் க்யூ நீண்டிருந்தது.

நான் ஃபைன் கட்ட நிற்பதும், செய்த முன்வினையும் (பந்தா) கல்லூரி முழுக்க பரவி விட்டது. (சில காரணங்களால் நான் பிரபலம். ஆனால் காரணத்தை இங்கே சொல்ல மாட்டேன்!). கூட்டம் கூடி விட்டது. நான் கவுண்டரை நெருங்கும் போது தரதரவென என்னை இழுத்து வந்து, மீண்டும் க்யூவின் கடைசியில் நிற்க வைத்தார்கள். ஒரு முறையல்ல, இரு முறையல்ல... எட்டு முறை!

மதிய இடைவேளை குறுக்கிட, கவுண்டர் மூடப்பட்டது. அவசர அவசரமாய் உணவை முடித்து, முதல் ஆளாக வந்து கவுண்டரை கெட்டியாகக் கட்டிக் கொண்டேன். பின் வந்தவர்கள் என் இரு கால்களையும் தூக்கி தேர் வடம் போல இழுத்தார்கள். இன்னும் சில நொடிகள் கடந்தால் கவுண்டர் பெயர்ந்துவிடும். நல்லவேளை. மதிய ஷிஃப்டிற்கான கேஷியர் அம்மணி அங்கு வர அந்த இடமே கப்சிப்.

நகருக்கு வெளியே இயங்கும் இந்த ஆண்கள் கல்லூரியில் அவர் மட்டுமே பூச்சூடுபவர். வகுப்பறையில் அலப்பறை செய்யும் மாணவர்கள் எல்லாம் கவுண்டரின் முன் நல்லொழுக்கம் பேணுவர். அதுவரை வாரப்படாத கேசங்கள் எல்லாம் சீப்போடு குலவிக் கொள்ளும். இஸ்திரி பெட்டியின் கதகதப்பை உணராத சட்டைகள் எல்லாம் எப்படியோ நேர் செய்யப்படும். அந்த அம்மணியின் புண்ணியத்தில் என் கால்கள் தரையிறங்கின.

பெருமூச்சு விட்டு சலானையும், தொகையையும் நீட்ட, பூவிழியாள் தீவிழியாள் ஆனார். நான் வெட்கித் தலை குனிந்தேன். அருகில் இருந்தவர்கள் குபீரென எழுந்த சிரிப்பை அடக்க முயன்றனர். ‘டொம்’ என்று குத்தப்பட்ட ரிசீவ்ட் சீல்-இன் சப்தத்தில் அம்மணியின் கோபம் தெறித்தது. தள்ளி நின்றவர்கள் வாய்விட்டு அலறி கண்ணீர் மல்கிச் சிரித்தனர்.

ஏனென்று கேட்கிறீர்களா?

இப்படி சலானை எல்லாம் நிரப்பி, கஜினி முகமது போல் படையெடுத்துப் போராடி, தீவிழி தாங்கி நான் கட்டிய ஒரு நாள் அபராதத் தொகை:

இருபத்தி ஐந்து பைசா!!!

Friday, August 5, 2011

முரளீதரனின் காயின் பால்

“நத்திங் ஈஸ் இம்பாசிபிள் ஃபார் முரளி”

என்.டி டிவியில் இப்படி ஒரு தலைப்புடன் செய்தி ஓடிக் கொண்டிருந்தது. ரிடையர் ஆன பிறகு அப்படி என்ன செய்துவிட்டார் முரளீதரன்?! சற்று அசுவாரஸ்யமாகத்தான் செய்தியைப் பார்த்தேன். இங்கிலாந்து ஸ்பின் பெளலர் ஸ்வானும் முரளீதரனும் ஏதோ சிரித்துப் பேசிக் கொண்டனர். சுற்றிலும் வீடியோ, ஃபோட்டோகிராஃபர்கள். மூன்று ஸ்டம்புகள் நடப்பட, ஆஃப் ஸ்டம்பின் மேல் ஒரு கண்ணாடி டம்ளர் வைக்கப்பட்டது. அதன் ஆஃப் சைட் விளிம்பில் சற்று வெளித்தள்ளி ஒரு நாணயம் வைக்கப்பட்டது. புரிந்துவிட்டது! சின்ன வயசில் ஒரு கதை படித்தோமே! தன் புத்திரனின் தலையில் ஒரு ஆப்பிள் வைக்கப்பட அதை குறி தவறாமல் பிளந்த வில்லாளனின் கதை! அது மாதிரி இது ஒரு போட்டி. சுவாரஸ்யம் தட்டுப்பட சீட்டு நுனிக்கு நகர்ந்தேன்.

இருவரும் தலா இரண்டு பந்துகள் வீசினர். பந்து எதன் மேலும் படவில்லை. மூன்றாவது முயற்சியாக முரளீதரன் பந்து வீசினார். ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே விழுந்த பந்து, அழகாக ஸ்பின் ஆகி, கண்ணாடி டம்ளரை உரசுவது போல் ஆனால் அதை தொட்டுவிடாமல் எழும்பி காயினை மட்டும் தட்டிச் செல்ல, அங்கு ஒரே ஆரவாரம்.

அம்பு விடுவதைவிட பந்து விடுவது எவ்வளவு கடினம்! குஷியில் நானும் கை தட்டி குதிக்க, சத்தம் கேட்டு அங்கு வந்த என் தந்தை, ரீ-ப்ளே-வை ரசித்து விட்டு, பழைய கிரிக்கெட் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அவை:

1950-60. பத்து வருடத்தில் இரண்டு மூன்று முறை இங்கிலாந்திற்கு இந்தியா டூர் சென்றிருந்தது.

நம்ம பேட்ஸ்மென்களின் வேகம் நம்மை அலற வைத்த காலம் அது. அவுட் ஆவதில்! மதிய இடைவேளைக்குள் 56 ரன்னுக்குள் சுருண்டனர். உண்ட உணவு செரிப்பதற்கு முன்பே சாயங்காலத்திற்குள் 86 ரன்கள் எடுத்து சற்று நீட்டிச் சுருண்டனர். ஒரே நாளில் தன் இரண்டு இன்னிங்ஸையும் முடித்த பெருமையெல்லாம் இந்தியா கொண்ட காலம் அது.

இந்தியாவின் பேட்ஸ்மேன் குலாம் அஹமது. லாட்ஸ் மைதானத்திற்கு வெளியே ஒரு மணிக்கூண்டில் கடிகாரம் தெரிய, இதனை நான் சிக்ஸர் அடித்து உடைக்கிறேன் என்று சவால் விட்டார். இங்கிலாந்து பெளலர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் இது தெரிய, எல்லோரும் பகபகவெனச் சிரித்தனர். அந்த டெஸ்ட் மாட்சில், இவருக்கு ஸ்பெஷலாக பெளன்சர்கள், பம்பர்கள் வீசப்பட்டன. குலாம் அசரவில்லை. உறு மீனுக்கான கொக்கு போல, சரியான பந்திற்குக் காத்திருந்து, முழு பலங்கொண்டு அடிக்க கடிகாரம் தூள் தூள். குலாம் சொல்லி அடித்த கில்லி.

1963.

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் மாட்ச். 5-ம் நாள். இங்கிலாந்து பாட்டிங்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன், கண்களில் சூரிய ஒளிக்குச் சொந்தக்காரர் என வருணிக்கப்பட்ட ஃபாராங் ஒரல். தனி நபரின் அதிகபட்ச ஸ்கோராக 375 ரன்னை வெகு காலத்திற்கு முடிசூடிக் கொண்ட காரி சோபர்ஸ் அப்போது சின்னப் பையன். வெஸ்ட் இண்டீஸின் வேகப் பந்து வீச்சிற்கே முன்னோடிகளான வெஸ் ஹால் மற்றும் சார்லி கிரிஃபித்; இருவரும் கடுமையாக பந்து வீசிக் கொண்டிருந்தனர். எந்த அணியும் வெற்றி பெறக் கூடிய சூழ்நிலை. ஹாலின் பந்து வீச்சில், இங்கிலாந்தின் முக்கிய பேட்ஸ்மேன் காலின் கெளட்ரி-இன் கை உடைந்துவிட அவர் வெளியேறினார்.

இந்த ஹால் அசகாய சூரர். சென்னையில் நடந்த ஒரு டெஸ்ட்டில் முதல் பந்தை அவர் பெளன்சராக வீசினார். குத்தினார் என்று சொல்வதே சரி. அந்தப் பந்தை எல்லாரும் வேடிக்கைதான் பார்க்க முடிந்தது. ராக்கெட்டென எழும்பிய பந்து பேட்ஸ்மேனைத் தாண்டி, விக்கெட் கீப்பரைத் தாண்டி, ஏன் எல்லைக் கோட்டையையும் தாண்டி சைட் ஸ்கிரீனின் மீது மோதித்தான் விழுந்தது! கிரிக்கெட் வரலாற்றில் பை-யில் சிக்ஸர் சென்றது இது மட்டுமே என நினைக்கிறேன்!

அப்படிப் பட்ட ஹாலும், அவருக்கு எந்த விதத்திலும் குறையாத கிரிஃபித்தும் மற்ற பெளலர்களுக்கு உடல் நலமில்லாததால் அவர்கள் இருவராகவே காலை முதல் மாறிமாறி பந்து வீசிக் கொண்டிருந்தனர். ஹால் சோர்ந்து போனார். ஒரல் பந்து வீச சோபர்ஸ்-ஐ அழைக்க, பெரு மூச்சு விட்ட ஹால், அந்த ஓவர் முடிந்ததுமே அதிர்ந்து போனார். சோபர்ஸ்-ஐ ஒரு ஓவர் வீச வைத்ததே, ஹாலும் கிரிஃபித்தும் தங்கள் பந்து வீசும் சைடுகளை மாற்றி மீண்டும் வீசத்தான்! ஹாலுக்கு பிலுபிலுவென கோபம் வந்துவிட்டது. தன் ஆறடி இரண்டங்குல உடலை முறுக்கிக் கொண்டு, முறைத்துக் கொண்டு ஒரலிடம் சண்டை போட்டார். பந்து வீச முடியாதென கறாராகக் கத்தினார். அவர் கத்தி முடிக்கும் வரை அமைதி காத்த ஒரல், ஒரு முறுவலைச் சிந்தி, ஹாலின் முதுகில் செல்லமாத் தட்டி, புகழ்பெற்ற வாசகத்தை உதிர்த்தார்:

“ஜஸ்ட் கோ பாக் அண்ட் பெளல் அகெய்ன்”

வார்த்தைகளின் தொணியும், கண்களின் ஒளியும் கட்டிப் போட, நாய் வாலெனத் தலையாட்டியபடியே மீண்டும் பந்து வீசத் தொடங்கினார் ஹால்.

ரன்கள் குவிந்தன. விக்கெட்டுக்கள் சரிந்தன. கடும் போட்டி. ஒன்பதாவது விக்கெட்டும் வீழ்ந்தது. இன்னமும் ஒரே ஒரு ஓவர் பாக்கி. இங்கிலாந்திற்கு வேண்டிய ரன்கள் ஐந்தோ ஆறோ. ஏற்கனவே காலின் கெளட்ரி கை உடைந்து சென்று விட்டதில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றதாகவே நினைத்தனர். ஆனால் யாருமே எதிர்பாரா வண்ணம் வலக்கை முழுக்க மாவுக் கட்டுடன், இடக்கையில் குச்சிபோல பேட்டை பிடித்துக் கொண்டு கெளட்ரி மீண்டும் களமிறங்கினார். எல்லாரும் வாய் பிளக்க ஹாலை எதிர் கொள்ளத் தயாரானார்.

பந்து வீச தன் நீண்ட ரன் அப்-இல் நடக்கத் தொடங்கினார் ஹால்.

யாருடைய வெற்றியையும் ஜீரணிக்க முடியாது. காலை முதல் தொடந்து வீசும் ஹாலின் பந்தில் வெற்றி ரன் எடுப்பதை ஏற்க முடியாது. கை உடைந்தும் திட சித்தத்துடன் இடக் கையில் விளையாட வந்த கெளட்ரியின் விக்கெட் பெயர்வதை பார்க்கவும் முடியாது.

பார்வையாளர்களின் இதயம் லபோதிபோ-வென அடிக்கத் தொடங்கியது.

ரன் அப்-இல் கடைசி ஸ்டெப் வைத்து, பந்து வீச ஹால் திரும்ப அது நிகழ்ந்தது. அதுவரை வெளுத்திருந்த வானம் சோ-வெனக் கொட்டித் தீர்க்க, கடைசி ஓவர் வீச முடியாததில் மேட்ச் ட்ரா.

ஃபிட்டிங் எண்ட். இறைவனுக்கே யார் தோற்பதும் பொறுக்கவில்லை என்றெல்லாம் பத்திரிக்கைகள் எழுதித் தள்ளின.

இப்படிப்பட்ட ஆச்சரியங்களும், சுவாரஸ்யங்களும் கொண்ட கிரிக்கெட்டை, வியாபாரமயமாக்கி கெடுத்துவிட்டது ஐ.பி.எல்.

Tuesday, July 12, 2011

அடடா துபாய் - 5 : அட்லாண்டிஸ் அதிசயங்கள்

அந்த ஜெல்லி மீனைப் பார்ப்பதற்கு ஆச்சர்யமாக இருந்தது! பெல்லி மீன் என்றும் சொல்லலாம். வயிறு மட்டும்தான் இருக்கிறது. கண், காது என மெய்ப்புலன்களில் நான்கைக் காணோம். மீனின் உருவம் குடை போல, பூ போல இருக்கிறது. அதன் நடுவே பஞ்சுப் பிஞ்சாய் உறுப்புகள். விளிம்புகளில் ஓரங்குல இடைவெளியில் ஓரடி நீளத்திற்கு நார் போன்ற உறுப்புகள். இந்த உறுப்புகளில் ஏதேனும் பிசின் இருக்கிறதா எனத் தெரியவில்லை. அசினின் ஷாம்பு விளம்பரத்தில் கூந்தல் வழுக்கிக் கொண்டுச் செல்வதைப் போல, சக மீன்களின் உறுப்புகளோடு சிக்கிக் கொள்ளாமல் வழுக்கிக் கொண்டு நீந்துகின்றன.

மேலும்...

Wednesday, June 29, 2011

அடடா துபாய் – 4 : தமிழ் பேசிய பாகிஸ்தானி!

லேன் மாறிச் சென்று விட்டது நான் சென்ற டாக்ஸி. அரை நொடியில் சுதாரித்த டிரைவர், படு எக்ஸ்பர்ட்டாக சரியான லேனுக்குத் திருப்பி விட்டார். இருப்பினும் சாலையைக் கண்காணிக்கும் கேமரா, ராடாரில் சிக்கியிருப்போம் என நினைத்து பெரு மூச்சு விட்டார். வேகத்திலும் கட்டுக்கோப்பாக வாகனங்கள் சீராகச் செல்லும் துபாய் சாலையில் இதுபோன்ற தவறு அபூர்வம். சற்று நிதானித்து கேட்டு விட்டேன்...

மேலும்...

Thursday, June 23, 2011

அடடா துபாய்! – 3 : கலிகால இந்திரப்பிரஸ்தம்

ஒன், டூ, த்ரீ, ஃபோர்… உலகின் அதிவேக லிஃப்டினுள் மானிட்டர், வினாடியைவிட வேகமாய் எண்ணிக்கையை காட்டத் தொடங்கியது. அதன் பின்புறத்தில் மேகங்கள் கீழிறங்குவது போல் அனிமேஷன். சரி, லிஃப்ட் புறப்படப்போகிறது என நினைத்தேன். சில நொடிகளில், விமான டேக் ஆஃப்-இல் நிகழ்வது போல காதடைத்த போதுதான் லிஃப்ட் நகர்வதே உறைத்தது...

மேலும்...

Wednesday, June 15, 2011

அடடா துபாய்! – 2 : பாலைவனத்தில் பெல்லி டான்ஸ்

அறுபதடிக்கும் மேல் சரிவான பெரும் மணல் பள்ளம். அதன் உச்சியில் சறுக்கி சிக்கிக் கொண்டு நின்றது எங்கள் டொயோட்டா SUV கார். “எல்லாரும் இறங்கி காரை பின் பக்கமாக இழுங்க” என்றார் டிரைவர். இப்பள்ளத்தில் எப்படி இறங்க முடியும்?! உள்ளிருந்த ஐந்து பேருக்கும் வயிறு பிசைந்தது. வேறுவழியில்லை, இதோ பாருங்க என அவர் ரிவர்ஸ் எடுக்க முயல திணறித்திணறி சரியத் தொடங்கியது கார்...

மேலும்...

அடடா துபாய்! -1 : துபாய் மெயின் ரோடு!!

ஏர்போர்ட்டிலிருந்து அல் பார்ஸாவுக்கு டாக்ஸி 120km வேகத்தில் அநாயாசமாக விரைந்தது. எல்லா டாக்ஸி டிரைவர்களும் நேர்த்தியாக உடுத்தி, டை கட்டி, கூலிங்கிளாசுடன் அமீர்கான் கணக்காகத் தெரிகிறார்கள். தொலைவில் ஒரு போர்டு. டோல் கேட். ஏற்கனவே ஐந்து லேன் இருக்கும் சாலை, இன்னமும் விரிய, ஸ்பீட் பிரேக்கர்கள் தாண்டி, சுங்கம் வசூலிக்கும் பூத்துக்கள் இருக்கும் என நினைத்தேன். (நம்ம ஊரில் அப்படித்தானே இருக்கிறது). ஆனால்...

மேலும்...

Monday, May 9, 2011

யூஸபிலிட்டியுடன் ஒரு பேருந்து – டாடா மார்கோபோலோ

‘இன்று’ வலைத்தளத்தில் எனது பதிவு.

அப்பாடா… சென்னை மாநகரப் பேருந்துகளிலேயே முதன் முறையாக, முன் சீட்டில் கால் முட்டி உராய்ந்து ஜிவுஜிவுக்காமல் நிம்மதியாக அமர முடிந்தது. கால்களுக்கும் மனமுண்டு என அதற்குரிய இடவசதியைத் தந்த பேருந்து, இப்போது சென்னையில் பரவலாக ஓடத் தொடங்கியிருக்கும் டாட்டாவின் மார்கோபோலோ.


மேலும் படிக்க...

Friday, April 15, 2011

கல்பாக்கம் அணு மின் நிலையம் பாதுகாப்பானதா?

பிரபல எழுத்தாளர்கள் எழுதும் ‘இன்று’ வலைத்தளத்தில் வெளியாகியிருக்கும் எனது கட்டுரை.  வெளியிட்டமைக்கு சத்யராஜ்குமார், சித்ரன் இருவருக்கும் நன்றி.


கான்கிரீட் கலவையைக் கொட்டியாவது அணுவின் கதிர்களைக் கட்டுப்படுத்த ஜப்பான் நினைக்கிறது.  திறமைக்கும், உழைப்பிற்கும், அரசு விசுவாசத்திற்கும் பெயர் பெற்ற ஜப்பானிற்கே இக்கதியென்றால்... நமது கூடங்குளம், கல்பாக்கத்தின் நிலை?  அதுவும் நாம் கண்ட சுனாமியின் ரணங்கள் இன்னமும் ஆறாத போது?  ஒரு சாமான்ய மனிதனாய் என் மனமும் சலனப்பட்டது.
சமீபத்தில் என் உறவினர் வீட்டிற்குச் சென்றபோது நடந்த ஒரு சிறு சம்பவம் என் சலனத்தை கடலாக்கியது.
மேலும் படிக்க...

Friday, April 1, 2011

இரா. முருகனின் “மூன்று விரல்”


கணினித்துறையில் இருந்தபடியே எழுத்துலகில் கோலோச்சும் இரா. முருகன் அவர்களின், அத்துறையின் வாழ்வு தழுவிய நாவலே “மூன்று விரல்”.

மென்பொருள் உலகின் மாயைகளை, நிலையற்ற தன்மைகளை, குறுகிய கால ஏற்றங்களை, படுபாதாள வீழ்ச்சிகளை, கூடிப் பிரியும் நட்புகளை, ஈரமற்ற மனங்களை, நாயகன் சுதர்சனனின் பயணத்தில் கோர்வையான நிகழ்ச்சிகளாகத் தொகுத்திருக்கிறார்.

முதல் பக்கமே மென்பொருள் உலகின் பாதக முகத்தை, அதன் ஒப்பனையை பட்டவர்த்தனமாக வெளுக்க வைக்கிறது. நாய் வளர்ப்போர் சங்கத்துக்கான சாஃப்ட்வேரில் துவங்கும் கதை, பாத்திரங்களை விற்பவர்கள் கூட தங்களுக்கும் ஒரு சாஃப்ட்வேர் வேண்டுமென்பதும், அதையே சாக்கிட்டு பெட்டிக்கடைகள் கூட, சில கம்ப்யூட்டர்களை வைத்தே சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட் கம்பெனியென சுயபட்டம் சூட்டிக் கொண்ட காலகட்டத்தை அப்பட்டமாகக் காட்டுகிறது.

கதையின் களமும் போக்கும் கச்சிதமாக அமைந்திருக்கிறது. மென்பொருள் துறையைச் சார்ந்ததென்றாலும், ஒரு மென்பொருளாளன் (சுருக்கமாக... மென்னவன்!) அனுதினமும் கணினியே கதியெனக் கிடப்பது போல், அத்துறையின் வலைகளிலேயே சிக்கிவிடாமல், கிராமம், காதல், பல மனிதர்களின் முகங்கள்/மனங்கள் எனப் பல துடுப்புகளுடன் பயணிக்கிறது கதை. அதே கணம் அத்துறையின் கீழ் நிலைகளை கோடிட்டுக் காட்டவும் அது தவறவில்லை.

ஒரு உதாரணம். சுதர்சன் தன் கிராமத்து வீட்டில் நுழையுமிடம். வாழ்வு முழுவதும் ஆனந்தமாக இருக்கத்தான், சீரான இடைவெளியில் பண்டிகைகளைக் கொண்டாடும்படி நம் முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். பெற்றவரை, பிறந்த மண்ணை விட்டு வெகு தொலைவு சென்றுவிடும் மென்னவன் இவற்றை முற்றிலும் இழக்கிறான். அவன் காலண்டரில், சிகப்பில் தேதி ஒளிர்வது புராஜெக்ட் டெட்லைன் மட்டுமே. இவ்வவல நிலையைத்தான் வீட்டினுள் நுழையும் சுதர்சன் மாக்கோலக் கால்களைக் கண்டு “எப்போது கிருஷ்ண ஜெயந்தி வந்து போனது?” எனக் கேட்கும் கேள்வி கோலத்தால் கோடிட்டுக் காட்டுகிறது.

நாவல் நெடுகிலும் வரும் உவமைகள் அழகு. நாயகிகள் சந்தியாவும் புஷ்பாவும் ஒருசேர தன்னை கேலி செய்வதாய் சுதர்சன் நினைக்குமிடத்தில், எந்தவொரு பூடகமும் இன்றி நுழையும் ஒற்றை வரி; “இவன் இளைய பல்லவனும் அல்ல. இது சாண்டில்யன் கதையும் அல்ல.” இந்த அட்டகாச சரித்திர உவமை தந்த பாதிப்பிலிருந்து விடுபடவே எனக்கு பல நாழிகை(!) பிடித்தது.

ஆங்காங்கே சில விசயங்களை ஆசிரியரின் பேனா உரசுகிறது. அப்துல் கலாமிற்கு வைத்தியம் பார்த்து, அவருடன் எடுத்த படத்தை சுவரில் மாட்டி, தன் சன்மானத்தை உயர்த்தும் டாக்டரைப் போல, பில்கேட்ஸுடன் எடுத்த போட்டோவை வைத்து ட்ரெயினிங் கம்பெனி நடத்துபவர்களை நோக்கி மறைமுகமாகச் சொடுக்கிய சாட்டை சபாஷ். ATL COM கோர்ஸூக்காக நிலங்களை விற்ற நபர்களை நான் கண்டிருக்கிறேன்.

பாத்திரங்கள் வெகு நுணுக்கமாகச் செதுக்கப் பட்டிருக்கின்றன. துறைமாட்சி இல்லாமல் சண்டித்தனம் செய்யும் ரங்கா, மனிதர்களை கத்திரிக்காய் கூறாய் விற்கும் கன்சல்டென்சி பலா, அபூர்வ புரொபஷலனாய் ஒளிவிடும் அவ்தார் சிங், மாற்றங்களை இழப்புகளை முறுவலித்து ஏற்கும் லண்டன் ஜெப்ரி, கிளையண்டாக இருந்தும் இக்கட்டில் முதல் நபராய் ஆதரவு நல்கும் தாய்லாந்து குன் தாங்க்லோர்... ம்ஹீம்... எவரையும் விட்டுவிட முடியவில்லை. உடல் பாதிக்கப்பட்டும் உழைக்கும் ராவை, ஒரு இரவில் பணத்தை மட்டும் பிரதானமாகக் கருதும் நீரஜ் மறந்து போகலாம். ஆனால் குழந்தை முக கண்ணாத்தா உட்பட எந்தப் பாத்திரத்தையும் படிப்பவரால் மறக்க முடியாது.

நிலம் விட்டு நடுங்கடலில் தத்தளிக்கும் படகைப்போல், தன் புலம் விட்டு, தன் வாழ்வாதாரம் விட்டு விழி பிதுங்கும் மென்னவர்களின் வாழ்க்கையை, இந்த நூல் தெளிவாகக் காட்சிப் படுத்துகிறது. கதையின் முடிவைப் போல் நடந்தவை ஏராளம். ஆனால், இந்நூற்றாண்டின் துவக்கத்தில் நடந்ததை பார்த்தறியாத மென்னவர்கள், முடிவை ஏற்க மறுக்கலாம்.

இவர்களின் வாழ்வைக் காக்கவும், இத்துறையின் அபரிமித வளர்ச்சியால் வேறு ரூபங்களில் பாதிக்கப்படும் சமுதாயத்தைக் காக்கவும் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

நூல்: மூன்று விரல்.
ஆசிரியர்: இரா. முருகன்.
வெளியீடு: கிழக்குப் பதிப்பகம், சென்னை.
URL: https://www.nhm.in/shop/978-81-8368-073-8.html

Monday, January 24, 2011

பேயோனின் ‘திசை காட்டிப் பறவை’


புத்தகங்களை வாசிக்கும் அனுபவத்தில் புதியதொரு திசையைக் காட்டுகிறது, ரைட்டர் பேயோனின் ‘திசை காட்டிப் பறவை’.

வரிகளின் ஓட்டத்தை விழிகளால் இடைவிடாமல் தொடர்ந்து, பக்கங்களைப் புரட்டிக் கொண்டேச் செல்வது ஒருவித சுகமென்றால், சில வரிகளைப் படித்ததுமே மனம் அதில் சிக்கி, சற்றுத் திகைத்து, வாய்விட்டுச் சிரித்து (பேருந்தில் படித்தால் வாய் பொத்திச் சிரித்து), பின் படிப்பைத் தொடந்து மீண்டும் மீண்டும் சிக்கிக் கொள்வது மற்றொரு சுகம்.

பேயோன் தரும் இந்த இரண்டாவது சுகத்தை எழுத்துலகில் கோலோச்சும் ஜெமோ, பாரா போன்றவர்களே சிலாகிக்கிறார்கள் என்றால், மேற்கொண்டு நான் எதைச் சொல்ல?  இருப்பினும் இது ஒரு கடைக்கோடி வாசகனின் வாசிப்பனுபவம்.

பொதுவாக ஒருவரின் தற்புகழ்ச்சியில் நமக்கு எரிச்சலே மிஞ்சும். ஆனால் இவர், எவர் மனதையும் புண்படுத்தாமல் தன்னைத்தானே புகழ்ந்து உயர்த்திக் கொள்வதெல்லாம் சிரிப்புச் சரவெடி. சர்வ நிச்சயமாக இது பேயோனுக்கு மட்டுமே சாத்தியம்.

பறவை நொடிமுள்ளிலிருந்து திசை காட்டத் தொடங்குகிறது.

இணையத்தில் பேயோனை நான் முதன்முதலில் வாசிக்கத் தொடங்கியதும், இந்த ‘நொடிமுள்ளின் கதை’-யிலிருந்துதான். எச்சூதுமறியா இளம்பிள்ளையாய் இக்கதையை வாசித்து, அதில் மேற்கோள் காட்டப்பட்டிருந்த புத்தகங்களை கூகுளில் தேடினேன். சொற்களை டைப் அடிக்கத் தொடங்கியதுமே தேடியதை சரமாரியாகக் கொட்டும் கூகுள் விழி பிதுங்கத் தொடங்கியதும்தான் இவை அனைத்துமே பகடி என்பது புரிந்தது. இப்படிக் கூட ஒருவரால் இட்டுக்கட்டி எழுத முடியுமா என்ற பிரமிப்பிலிருந்து விடுபடவே எனக்கு வெகு நேரம் பிடித்தது.

அதுமுதல் அவருக்கு வாசக ரசிகனானேன்.

நிஜங்கள் கசக்கும்போது கற்பனை உலகே நமக்கு மீட்சி. அதை அள்ளிக் கொடுத்த கவிதைகளும் இன்று நிஜங்களுக்கு வந்துவிட்ட பிறகு, பத்திகளால் அனுமான எல்லைகளுக்கு அப்பாற்பட்ட கற்பனை உலகிற்கு அழைத்துச் சென்று நம் மனதை அலசித் தருகிறார் ரைட்டர் பேயோன்.

இவர் பார்த்து நடந்த ‘பிரெஞ்சுப் புரட்சி’, இவர் பாத்திரம் பிச்சை போட்ட ‘ரஷ்ய புரட்சி’ போன்றவற்றின் பத்திகள் சிரிப்பை வெடிக்க வைப்பதெல்லாம் பதிவுலகில் ஒரு புதிய புரட்சி!

நுணுக்கமான வரி வார்த்தைகளால் நகைச்சுவையை ஊசியாய் நுழைப்பது போலவே சோகம், பயங்கரத்தையும் நுழைக்கிறார். ‘கனவினூடே’-வைப் படித்த இரவே, ஒரு ஆட்டோவின் ஒவ்வொரு சக்கரத்தின் மேல் பகுதி தனித்தனியாக கழன்று என்னுடலை ஊடுருவிக் கூறுபோடுவதுபோல் எனக்கு கனவு வந்ததென்றால், இதன் தாக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.

பிரிமியம் பாண்ட் பேப்பரில் பிராஜெக்ட் ரிப்போர்ட்டை பிரிண்ட் எடுப்பதையே நாங்கள் பெருமையாகக் கருதிய கல்லூரிக் காலங்களுண்டு. ஆனால் ஒரு புள்ளி கூட வைக்காத ஒரு பாண்ட் பேப்பரை வைத்தே ‘அந்த வெற்று காகிதமே’ எழுதியிருப்பது இவரின் கற்பனை ஊற்றுக்குச் சாட்சி என்றால், இனி எழுத எதுவுமே இல்லை என அங்கலாய்க்கும் பதிவர்களுக்கு, இல்லை என்ற ஒரு வார்த்தையை வைத்தே, இல்லை இல்லை என்று சொல்லியே அவர் ‘இல்லை’-யை எழுதியிருப்பது பாலபாடம்.

பூத உடலின் பயணத்தின் கணங்கள், சிந்தனை உலவின் கணங்களை வரையறுக்க வல்லவை. குறிப்பாக ஒரு தேர்ந்த எழுத்தாளன், தன் ‘சமகால’ எழுத்தாளனை ஒரு பயணத்தில் சந்தித்து கணங்களை பரிமாறிக் கொண்டால் அக்கணமே ஒரு இலட்சத்து எழுபத்தி ஆறாயிரம் சிந்தனைச் செல்கள் வளர்சிதை மாற்றத்திற்கு உட்படும்.  இப்படித்தான் ஒரு முறை, அண்டார்டிகா நீர்ப்பரப்பிலுள்ள அலக்டோரியா தீவினில் நடக்க இருந்த ‘சமகால எழுத்தரின் கணங்கள்’ மாநாட்டில் கலந்து கொள்ளப் பயணித்தேன். ஒரு ‘கேப் பெட்ரல்’ பறவை திசை காட்டிச் செல்ல, அதன் வெள்ளெச்சம் விழும் தடத்தை ஒற்றிச் சென்ற படகில் என்னுடன் பேயோனும் இருப்பதைக் கண்டு அதிசயத்து...

ஹஹ்ஹஹ்ஹா... வேறொன்றுமில்லை... ‘என்னைப் போல் பத்தி எழுதுவது எப்படி’ படித்ததன் பின்வினையே கடந்து சென்ற நிறைவேறாத பகடிப்பத்தி.

ஒற்றிலக்க பத்திகளில் ஒரு கதையும், இரட்டையிலக்க பத்திகளில் வேறொரு கதையும் நகர்ந்து, கடைசி பத்தியின் கடைசி வரிகளில் இணையும் ‘அடுத்த வாரத் தொடர்ச்சி’ கிளாசிக்.

அவரின் நினைவுக் கூர்மையும், பார்வைக் கூர்மையுமே அவரின் எழுத்தின் கூர்மைக்கு அடிப்படை. கண்ணின் நிழலில் அசைவதற்குக் கூட சுவாரஸ்ய எழுத்து வடிவம் தருகிறார்.

‘மயிலிறகிற்கு நட்ராஜ் பென்சில் சீவல் பிடிக்கும்’

‘உதவுதல் நாடி சுலைமான் அபெக்கேவுக்கு கடிதம்’ போன்ற இடங்கள் இரண்டே இதற்கு அத்தாட்சி.

பறவை ‘சியாமள விகாச பட்சியாய்’ நம்மை விகாசிக்க வைத்து, சிறகுதாரியாய் நம் மனதை சிறகடிக்க வைத்து, ‘வாழும் கணங்களில்’ நிறைகிறது.

பத்திகளின் வரிசையை மாற்றிப் படித்தாலும் தொடரும் ‘வாழும் கணங்கள்’, உண்மையில் வாசிக்கும் கணங்கள்.

இவரெழுத்தை ஆப்சன்மைண்டட்டாக வாசிக்க முடியாது. இன்னமும் சொல்ல எண்ணிக்கை இருந்தும், இப்பதிவு ‘நெடுங்கதையாகத்’ தொடர்வதால், என்னையும் சேர்த்து ஒற்றையிலக்க வாசிப்பாகும் எனத் தயங்கி, இத்துடன் புள்ளி வைக்கிறேன்.

புத்தக கண்காட்சியில், ஆழி பதிப்பகத்தில் இவர் யாரென்ற புலன் விசாரணை அனுதினமும் நடந்திருக்கும். அங்கே நான் இப்புத்தகத்தைக் கேட்டபோது, அங்கிருந்தவர்கள் என்னை நிமிர்ந்துப் பார்த்தார்கள். ஆனால் நான் ஒரு சொல் வினவாமல், புத்தகம் வாங்கி அமைதியாக நகர்ந்தேன். ஏனெனில்...

கடவுளைத் தேடும் வரைதான் ஆராதனைகள். பேயோன் என்ற தேடல் உள்ளவரைதான் அவர் எழுத்து சுவை ஊற்றெடுக்கும் சுனைகளாக இருக்கும்.


Monday, January 17, 2011

பேண்ட் போட்டு ‘மேத்தமேட்டிக்ஸ்’

“இத்துடன் எல்லா பாடமும் முடிச்சாச்சு. இனி நீ சென்ட்டம் எடுப்பது மட்டுமே பாக்கி” என்றார் என்னுடைய பிரத்யேக டியூசன் வாத்தியார்.

நானூறு பக்க லாங்-சைஸ் நோட்டில் ஸ்கேல் வைத்து அழகாக மூன்று கோடுகள் போட்டு ‘முற்றும்’ எழுதி, ஒரு குருவுக்கு உண்டான மரியாதையுடன் அவருக்கு நன்றி சொல்லி, ஆசி பெற்று, வீட்டிற்குப் புறப்படத் தயாரானேன்.

அந்த லாங்-சைஸ் நோட்டு என்னுடைய பிரதான பொக்கிஷம். அதை எடுத்துச் செல்ல தனியாக பேண்ட் துணி வாங்கி, நோட்டின் சைஸூக்கு ஜிப்புடன் ஒரு பை தைத்துக் கொண்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

அப்போது நான் சுவாசித்த காற்றிலிருந்த ஈரம், மழை பெய்ந்து ஓய்ந்திருப்பதை எனக்கு உணர்த்தியது.

நோட்டை இரண்டு பாலித்தீன் பைகளால் வாட்டர்-ப்ரூஃப் செய்துகொண்டு, பேண்ட்டை(பையை) அதற்கு அணிவித்து, அதை என்னுடைய  டி.வி.எஸ் சேம்ப்-பின் ஹேண்டில் பார் கொக்கியில் மாட்டிக் கொண்டு புறப்பட்டேன்.

அடைமழை கொட்டி இருந்திருக்கிறது. கட்டிடங்களும், காற்றும் மழையில் நினைந்திருந்தன. வீதிகள்தோறும் நீரோட்டம்.

டி.வி.எஸ் சேம்ப்பில் அப்போதுதான் எலட்ரானிக்-ஸ்டார்ட் அறிமுகமாகியிருந்தது. அந்தக் காலத்தில் பரவலாக ஓடிக் கொண்டிருந்த டி.வி.எஸ்-50கள் ஆங்காங்கே நின்று ஸ்டார்ட் ஆகாமல் முனகிக் கொண்டிருந்தன. அதைப் பார்த்து, நான் ராசா(!) மிடுக்கோடு காஞ்சி ராஜவீதியில் சென்று கொண்டிருந்தேன். ராஜவீதி, சாண் உயர நீர்வீதியாக இருந்தது. சர்வ ஜாக்கிரதையாகத்தான் வண்டி ஓட்டினேன். ஆனாலும்...

டொடுக் என்ற சப்தத்துடன் ஏதோ ஒரு பெரிய பள்ளத்தில் முன்சக்கரம் பயங்கரமாக இறங்கியது. முழு பிரேக்கையும் பிடித்தேன். வண்டி நிற்கவில்லை. திமிங்கிலம் விழுங்குவது போல எதனாலோ என் வண்டி கீழ் நோக்கி இழுக்கப் பட்டது. காலூன்ற முயன்றேன். பயங்கர அதிர்ச்சி. தரை தட்டுபடவே இல்லை. காலும் கீழே போய்க்கொண்டிருந்தது.

பட்டெனப் புரிந்தது. கடவுளே! திறந்து வைக்கப்பட்டிருந்த பாதாள சாக்கடையில், நான் வண்டியுடன் செங்குத்தாக கீழிறங்கிக் கொண்டிருந்தேன்.

வண்டி உரசிக்கொண்டே சப்தம் எழுப்ப, உடல் முட்டிகள் எதனெதனுடனோ இடிபட, கண்கள் இருட்டிக் கொண்டன. அது பயத்தினாலா? நீரின் நிறத்தினாலா?  அது அந்தச் சாக்கடைக்கே வெளிச்சம்!

“தூக்கு அவன” என்ற குரலைத் தொடர்ந்து திமுதிமுவென நாலைந்து பேர் ஓடி வரும் காலடியோசைக் கேட்டது. அவர்கள் என் தலையைப் பிடித்து, பின் கைகளைப் பிடித்து அலேக்காகத் தூக்கி நிலத்தில் நிறுத்தினார்கள்.

ஒரு கணம் நின்றுவிட்ட உயிர்நாடி மீண்டும் துடிக்கத்தொடங்க, பெருமூச்சு விட்டேன்.

பாதாள சாக்கடையை எதற்காகவோ நான்கு சதுரடிக்கு வெட்டி அப்படியே விட்டு விட்டார்கள். எமகாதகர்கள். வண்டியின் பின் சக்கரம் மட்டுமே தரைக்கு மேல் இருந்தது. அது மெதுவாக ரிவர்ஸில் சுத்திக் கொண்டிருந்தது. பின்விளக்கு அணைந்து அணைந்து எரிந்து என் முகத்தில் சிவப்பொளியைப் பாய்ச்சியது. (நம்பியார் முறைக்கும் போது அவர் முகத்திற்கு ஒரு ரெட்லைட் எஃபெக்ட் கொடுப்பார்களே, அது மாதிரி.)

வண்டியையும் மீட்டார்கள். முன் பகுதி சற்று நசுங்கியிருக்க, ஹேண்டில் பார் அஷ்ட கோணலாக வளைந்திருந்தது.

“ஏன் தம்பி, ஒரு கொம்ப நட்டு, செவப்பு கொடி வச்சிருக்குல்ல. பாத்து வரப்படாது?” ஒருவர் கடிந்துக் கொண்டார். அவருக்கு சாலை ஓரத்தைச் சுட்டினேன். பத்தடிக்கு ஒன்றாய் வரிசையாக கட்சிக் கொடிகள் நடப்பட்டு இருந்தன.

‘இதுவும் ஒரு கட்சிக் கொடி. கொஞ்சம் நடு ரோட்டுல நட்டுட்டாங்கனு நெனச்சு, நான் பாட்டுக்கு வந்துட்டேன் சார்’ அப்பிராணியாகச் சொன்னேன். (நம்ம ஊர் எல்லா கட்சிக் கொடிகளிலும்தான் சிவப்பு ஒளிருதே!)

அவர் தலையில் அடித்து கொண்டு, “சரி சரி, போய் குளி” என்றார். அப்போதுதான் கவனித்தேன். எங்கள் ஊரில் “செங்கழு நீரோடை வீதி” என்று ஒரு பிரபலமான வீதி உண்டு. ஆனால் இது என்ன கழுநீர் ஓடையோ?  அதில் தலைமூழ்கி எழுந்ததில் கார்மேக வண்ணனாகக் காட்சியளித்தேன். தார் வண்ணன் என்றும் சொல்லலாம். அவ்வளவு கருப்பு.

ஒருவாறு சமாளித்து வண்டியைக் கிளப்பினேன். என்னுடல் துர்வாசனையை நாசியால் தாங்க முடியவில்லை. “சே! நம்ம கதாநாயகர்கள் சாக்கடை வழியாக, கவர்னர் / மந்திரி வீட்டுக்குள் நுழைவது, ஹீரோயினை அனாயாசமாக தூக்கிக் கொண்டு வருவது, உள்ளேயே வில்லனுடன் ஒண்டிக்கு ஒண்டி சண்டை போடுவது எல்லாம் எவ்வளவு பெரிய கப்சா?!!” என்று அந்த நிலையிலும் யோசித்தேன்.

என்னிலையை கண்டு பொறுக்காத கார்மேகம் மீண்டும் அடைமழையைக் கொட்டி என்னை குளிப்பாட்டியது(!). வீதி வெறிச்சோடியதால், வண்டியை நிறுத்தி, நடு ரோட்டில் உடம்பை தேய்த்துவிட்டு ஆனந்தமாகக் குளித்தேன் (டிரஸ்சோடுதான்)!

மீண்டும் பால்வண்ணனாக மாறிய சந்தோசத்தில், ஈரம் சொட்டச்சொட்ட வீடு வந்து சேர்ந்தேன். மரணச் சாக்கடையை முத்தமிட்டுத் திரும்பியவன் என எண்ணிக் கொண்டே, வண்டியை ஸ்டேண்ட் போட்டு, ஹேண்டில் பாரைப் பார்த்த நான் துல்லியமாய் அதிர்ந்தேன்...

பேண்ட் போட்ட என் ‘மேத்தமேட்டிக்ஸ்’ நோட்டைக் காணோம்.