Wednesday, September 22, 2010

குரங்கு

என் உறவினரின் கிராமத்திற்கு நான் அடிக்கடிச் செல்வதுண்டு. எங்கள் வீட்டைச் சுற்றி மரங்களும், பின் பகுதியில் வயல்களும், சற்றுத் தள்ளி குன்றுகளும் சூழ்ந்த ரம்மியமான கிராமம்.

இங்கே தினமும் குரங்குக் கூட்டம் எங்கள் வீட்டை கடந்துச் செல்லும். எங்கள் வீடு மாடியில் உள்ளதால் அதன் சன்னல்களில் வசதியாக அமர்ந்துகொண்டு கம்பிகளுக்கிடையே தலையை நுழைத்து எட்டிப் பார்க்கும்.

U-வடிவத்தில் இருக்கும் கம்பிகளுக்கிடையே, கீழே இரண்டு குரங்குகளும், மேலே ஒரு குரங்கும் நெருக்கிக் கொண்டு தலையை நுழைக்கும்போது, அவை மூன்று முகத்தான் போல அழகாகத் தேரியும். ஆனால் அதன் கண்களில் பசியும், ஏதாவது கிடைக்காதா என்ற ஏக்கமும் பட்டவர்த்தனமாகத் தெரியும்.

அவைகளுக்குக் கொடுப்பதற்கென்றே வாழைப்பழம், பிரெட், பிஸ்கெட் ஆகியவை வீட்டில் இருக்கும். அதைக் கொண்டுவர உள்ளே சென்றால், கம்பியில் தலைசாய்த்து படுத்துக் கொண்டு எங்களை நோக்கி விழி வைத்து ஆவலாய்க் காத்திருக்கும்.

சற்றுப் பெரிய குரங்காய் இருந்தால், கொடுப்பதை கை நீட்டி வாங்கி, நிதானமாகச் சாப்பிட்டுவிட்டுச் செல்லும். சின்ன வாலுக்(!) குரங்குகள் ஒன்றோடொன்று போட்டி போட்டுக் கொண்டு, கொடுக்கும் முன்பே பிடுங்கிக் கொண்டு, சண்டையும் போட்டுக் கொண்டு, வாங்கியதை கீழேயும் போட்டு ரகளை செய்துதான் சாப்பிடும்.

பெரிய குரங்குகள் பெரிய மனிதர்களைப் போல பக்குவம் அடைந்தவை. ஒரு முறை மொட்டை மாடியில், கைப்பிடிச் சுவரில் சாய்ந்துகொண்டு சாண்டில்யனின் “யவன ராணி” படித்துக் கொண்டிருந்தேன். அருகில் ஏதோ நிழலாடியது. படிக்கும் சுவாரஸ்யத்தில் அதைச் சட்டை செய்யவில்லை. இரு நிமிடங்கள் கழித்துதான் திரும்பிப் பார்த்தேன். ஐயோ... நிழலாடவில்லை... வாலாடியிருக்கிறது... ஒரு திம்மாங் குரங்கு என் அருகில் அமர்ந்து கொண்டு நான் படிப்பதை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. எனக்கு இடப்பக்கம் அதன் சகாக்கள் வேறு அமர்ந்து கொண்டிருந்தனர். எனக்கு சப்தநாடியும் ஒடுங்கிப்போனது. அலறவோ, ஓடவோ வாய்ப்பின்றி வெலவெலத்துப் போனேன்.

ஆனால், அவை அமைதியாக இருந்தன. இக்கலிகால சாமியார்களிடம் காணமுடியாத சாந்தமும், நிதானமும் அதன் முகங்களிலும், கண்களிலும் தெரிந்தது.

”இப்பத்தான் இதெல்லாம் படிக்கிறயா?” என்பதுபோல என்னை ஒரு அற்பப் பார்வை பார்த்துவிட்டு, திம்மாங் குரங்கு கைப்பிடிச் சுவருக்குத் தாவி, வாலை ஆட்டியபடி செல்ல, அதன் சகாக்களும் ரயில்பெட்டி போல வரிசையாகத் தொடர்ந்தன.

அன்று முதல் எனக்கு குரங்குகளின் மேல் பாசம் அதிகரித்தது. (பின்னே, என் பெயரில் வேறு ’ராம்’ இருக்கிறதே!). அவைகளுக்கு அன்னமிட்ட கையனாய் அதனுடன் நட்பு கொண்டொழுக, ஒருநாள்...

பால்கனியில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தேன். எதிர்வீட்டு மாடியில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாய் குரங்குக் கூட்டம்.

ஒரு நிறைமாத கர்ப்பிணிக்கு மூன்று குரங்குகள் பேன் பார்த்துக் கொண்டிருந்தன (அட, கர்ப்பிணியும் குரங்குதான்). வாலைக் கடித்து, காலைக் கடித்து, காதைக் கடித்துக் கொண்டு குட்டிக் குரங்குகள் விளையாடிக் கொண்டிருந்தன. அந்த வீட்டைச் சுற்றியிருந்த தென்னை, புளி, முருங்கை, மா மரங்களில் பல குரங்குகள் போட்டி போட்டுத் தாவிக் கொண்டிருந்தன. மரங்களின் கிளைகள் காற்றினால் அசைந்ததைவிட குரங்குகளின் தாவலால், பறவைகளின் இறக்கைபோல படபடவென அசைந்தன.

அருகில் இருந்த பி.எஸ்.என்.எல் டவரிலும் சில குரங்குகள். அவை விறுவிறுவென உச்சிக்கு ஏறுவதும், பின் அங்கிருந்து தொங்கிக் கொண்டிருந்த ஒயரில் சர்ர்ர்...ரென இறங்குவதுமாக பரமபதம் ஆடிக்கொண்டிருந்தன.

ஒவ்வொரு குரங்கின் சேஷ்டையையும் நான் அணுவணுவாக ரசித்துக் கொண்டிருந்தபோது, அந்த விபரீதம் நிகழ்ந்தது...

எதிர்வீட்டு மாடியில் துணிக் கொடியை குரங்குகள் பிடித்துக்கொண்டு ஆடியபோது, பட்டென்று அறுந்த கொடி, ஒரு குட்டிக் குரங்கின் கழுத்தில் சுருக்கிட்டு இழுபட, நொடியில் மூச்சு நின்று அது சடலமாய்த் தொங்கியது.

நான் அதிர்ச்சியில் உறைந்தேன். தெருவில் இருந்தவர்கள் இதைக் கவனித்துவிட, மாடியை நோக்கி விரைந்தனர். ஆனால் அதற்குள் குரங்குகளுக்குள் எப்படியோ தகவல் பரிமாறிவிட்டது. அனைத்து குரங்குகளும் அந்த மாடியில் குவிந்து விட்டன. அவை குட்டியைச் சக்கரவட்டமாய்ச் சுற்றிக் கொண்டன. எந்த மனிதரையும் நெருங்கவிடவில்லை.

கீழே ஊர் சனம் கூடிவிட்டது. அவர்கள் பேசிக் கொண்டனர். குரங்குகளும் மனிதர்களைப் போலவே, அதற்கென தனி இடத்தில் தகனம் செய்யும் என்று.

இரு பெரிய குரங்குகள் கொடியிலிருந்து குட்டியை விடுவிக்கப் பார்த்தன. முடியவில்லை. பின் அவை குட்டியைத் தொட்டுத்தொட்டுப் பார்க்க, அதைக் காணத் திராணியற்று குலுங்கியது என்னுடல்.

அனைத்து குரங்குகளும் நடந்ததை ஏற்றுக் கொண்டது போல அமைதியாக அமர்ந்தன. சில நிமிடங்களுக்கு முன்வரை அதகளப்பட்ட மாடியில் இப்போது கனத்த நிசப்தம். அழு குரல்கள் இல்லை. போலியான ஒப்பாரிகள் இல்லை. மெளனமாக ஒரு அஞ்சலி மட்டுமே நடந்தது. பின் தலைவன் குரங்கு எழுந்து நடந்தது. அதைத் தொடர்ந்து அனைத்து குரங்குகளும் எந்தவொரு ஆர்ப்பாட்டமுமின்றி கலைந்து சென்றன.

ஊர் சனம் செயல்பட்டது. ஒருவர் குரங்கை ஜாக்கிரதையாக விடுவித்து கீழே படுக்கவைத்தார். இருவர் தென்னை மட்டையை உடைத்துக்கொண்டு வர, மடமடவென பாடை தயாரானது. பூமாலைகளும் வந்து சேர்ந்தது. அருகிலிருக்கும் பெருமாள் கோயிலின் பட்டர் வரவைக்கப்பட்டார்.

மந்திரங்கள் ஓதி, ஊர் மயானத்திற்குக் குரங்கை எடுத்துச் சென்று சகல மரியாதைகளுடன் தகனம் செய்துவிட்டு திரும்பியது சனம்.

அன்றிரவு உறக்கம் பிடிபடாமல் பால்கனியில் அமர்திருந்தேன். எதிர்வீட்டில் குரங்கு ஊஞ்சலாடி அறுந்த கொடி, காற்றில் ஊசலாடிக் கொண்டிருப்பது நிலவொளியில் தெரிய, அதையே வேகு நேரம் வெறித்துக் கொண்டிருந்தேன்.

Monday, September 6, 2010

வெள்ளைக்காரியும் குருவிக்காரியும்

செங்கல்பட்டு பஸ் நிலையத்தில், மாமல்லபுரம் செல்லும் பஸ்ஸூக்காகக் காத்துக் கொண்டிருக்கும்போது சற்றுத் தள்ளி இரண்டு வெள்ளைக்காரிகள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்நிய நாட்டினரைப் பார்த்தால் சிறு வயது முதல் ஏற்படும் சுவாரஸ்யத்துடன் அவர்களைக் கவனிக்க ஆரம்பித்தபோது எனக்கு ஆச்சரியம்!

ப்ளாட்பாரத்தில், தனக்கே உரிய பாணியில் அமர்ந்திருந்த நரிக்குறவர்களுடன் அவர்கள் வெகு சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தனர். குறவர்களின் தலைவன் - தலைவி போன்று தெரிந்தவர்கள், இவர்களிடம் எந்த அந்நியமும் பார்க்காமல், தங்கள் கூட்டதின் அங்கமாகவே கருதிப் பேசிக் கொண்டிருந்தது எனக்கு படா படா ஆச்சரியம்!

(இவர்களில் ஒருவரை எமி என்றும், மற்றொருவரை லிண்டா என்றும், இப்பதிவின் வசதிக்காக அழைக்கப் போகிறேன்!... சரிதானே!...)

எமியும், லிண்டாவும் மாமல்லபுரத்திற்கு வந்த டூரிஸ்ட் என்பதும், அங்கே இந்தக் குறவர்களுடன் எப்படியோ நட்பு ஏற்பட்டு, அவர்களுடன் செங்கல்பட்டிற்கு வந்து, இப்போது திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் எனக்கு ஒருவாறு புரிந்தது.

அப்போது ஒரு பஸ், நிலையத்தினுள் நுழைய, லிண்டா என்னிடம் வந்து...

“டஸ் இட் கோ டு மாமல்லபுரம்?” என வினவினாள்.

நான் “எஸ்” என்றதுதான் தாமதம்... தன் இருகைகளையும் தன் உதட்டருகே குவித்து...

“எவ்ரூரூரூ...... ப...ஸ்...” என்று குறவர்களைப் பார்த்து அவர்களைப் போலவே கூவ, நான் அசந்து போனேன்.

பஸ் வளைவில் திரும்பிக் கொண்டு வரும்போதே ரன்னிங்கில் ஏறினால்தான் இடம் கிடைக்கும். ஓடத் தயாரான நான் ஸ்தம்பித்து நின்றேன். என்னை முந்திக்கொண்டு, பஸ்ஸில் இடம் பிடிக்க அதிவேகமாகப் பாய்ந்தாள் லிண்டா. அவள் சற்று வாட்டசாட்டமாக இருந்தாள். வாலிபால் எல்லாம் ஆடுவாள் போல!  பஸ்ஸைத் தாவிப் பிடித்த கையில் உறுதி தெரிந்தது.

வேட்டியை மடித்துக்கட்டி பஸ்ஸில் ஏற முற்பட்ட உள்ளூர் வீரர்கள் சற்று சோப்ளாங்கிகள். லிண்டாவிடம் இடிபட்டதில், நிலை தடுமாறி தொபுக்கடீரென கீழே விழுந்து விழி பிதுங்கினர்.

பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்ட ஒருவர் ”ஏம்மா, இப்டி முட்ற” என்று கத்த...

“எலே... கோ...” என லிண்டா பதில் சவுண்ட் விட, அவர் அரண்டு போய்...

“அம்மா.. தாயீ... ஆள வுடு” என கும்பிடுபோட்டு நகர, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

ஒருவழியாக நானும் பஸ்ஸில் ஏறினேன். ஒரு மூன்றுபேர் சீட்டைப் பிடித்திருந்தாள் லிண்டா. ஆனால்...

அடடா... நம்ப ஊர் டெக்னிக் முழுமையாக அவருக்குத் தெரியவில்லை. சன்னல் வழியாக கூடையைப் போட்டு அதில் ஒரு சீட்டைப் பிடித்திருந்த நபர், அங்கே வந்து கூடையைக் காட்டி, “அது என் சீட்” என்று அங்கலாய்த்தார்.

“ஓ, இட் ஈஸ் யுவர் பேக்?” என்று லிண்டா கூடையை எடுத்து அவரிடம் கொடுக்க, அந்த இடமே ஏக ரகளையானது.

நான் குறுக்கிட்டு விளக்க, “ஓ சாரி, டேக் யுவர் சீட்” என்று பார்டிக்குப் பெருந்தன்மையுடன் வழிவிட்டார். எமியும், குறவர்களும் வந்து சேர்ந்தனர். முதல் சீட்டில் எமி அமர, லிண்டா குறவப் பெண்ணின் குழந்தையை வாங்கி, வாஞ்சையோடு அதன் தலையைக் கோதி தன் மடியில் அமர்த்திக் கொண்டாள்.

சன்-சில்க் காணா கேசங்களும், ரின் காணா உடைகளும் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. மதர் தெரசாவைப் படித்திருப்பார்களோ?! பெரிய விஷயம்.

பஸ் புறப்படத் தாமதமாக, உள்ளே கூட்ட நெரிசலால் புழுங்கத் தொடங்கியது. எமியின் டி-சர்ட் வேர்வையில் நனைந்தது. அருகில் நின்று கொண்டிருந்த குறவப் பெண்,  எமியின் டி-சர்டின் முதுகுப்பகுதி U-கட்டை லேசாக இழுத்து (லேசாகத்தான்)   உள்ளே பூ... பூ... என்று ஊதத் தொடங்கினாள். எமியின் முகமும் வேர்க்கத் தொடங்க, குறவப் பெண் தன் முந்தானையால் விசிறவும் செய்தாள். இப்போது எமியின் முகத்தில் வேர்வைக்குப் பதில் கொள்ளை சந்தோசம். இந்த அபூர்வக் காட்சியில் என் மனம் லயித்தது. (விசிறியதில் எனக்குக் கூட கொஞ்சம் காற்று வந்தது!).

பஸ் புறப்பட இருவரும் பள்ளித் தோழிகள் போல அன்னியோன்யமாய்ப் பேசத் தொடங்கினர். எமி ஆங்கிலத்தில் எதையோ கேட்க, குறவப் பெண் அதற்கு தமிழில் பதில் கூறித் தன்பங்குக்கு எதையோ கேட்க அதற்கு எமி ஆங்கிலத்தில் பதில் சொல்ல, எனக்கு மண்டை கிறுகிறுத்தது.

எமியின் ஆக்சென்ட் எனக்கு பிடிபடவில்லை. குறவப் பெண்ணின் தமிழ் உச்சரிப்பும் என் செவிக்குள் நுழையவே இல்லை. இருவரும் கேட்டுக்கேட்டு, கூறிக்கூறி, மாறிமாறிப் பேசியதில் எனக்கு மயக்கமே வந்தது. என்னத்தான் பேசுகிறார்கள்?! எப்படித்தான் இது சாத்தியம்?!...

மெல்ல உண்மை புரியத் தொடங்கியது.

வார்த்தைகள் உச்சரிக்கவே தெரியாத குழந்தைப் பருவத்தில், நாம் தாயிடம் இப்படித்தானே பேசினோம்!

இரண்டு கள்ளமற்ற மனங்களின் உணர்வுகள் ஒன்றிவிட்டால்,  அது அன்பினில் நிறைந்து விட்டால், மொழிகளுக்கிடையே பேதமில்லை. வார்த்தைகளினூடே அர்த்தங்கள் இல்லை. நயன பாஷை, மெளன பாஷை, டெலிபதி ஆகியவை இதன் அடுத்தடுத்த நிலைகளே.

நிறம், மொழி, மதம், நாடு கடந்து அவர்கள் கொண்ட நட்பை மானசீகமாய்க் கைகூப்பி வணங்கினேன்.

என் ஊர் வந்துவிட, படியில் இறங்கிக் கொண்டே அவர்களை மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்த்தேன். குறவப் பெண்ணின் குழந்தை, தன் தாய்மடி எனக் கருதியே, லிண்டாவின் மடியில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது.