Wednesday, April 7, 2010

ஐ.பி.எல் எல்லாம் ஜுஜுபி

ஐ.பி.எல்-3 பாதிதூரம் கடந்து விட்டது. சில போட்டிகள் சுவாரஸ்யமாகவும், சில போட்டிகள் படு டென்ஷனாகவும் சென்று கொண்டிருக்கின்றன. இன்று இருபது-இருபது ஓவர்களைக் கொண்டு விளையாடும் கிரிக்கெட் போட்டிகள் உலகெங்கும் மிகப் பிரபலமடைந்து விட்டன.

நண்பர்களே, நாம் கல்லூரியில் படிக்கும் போது இருபது-இருபது ஓவர்கள் கொண்ட மேட்சுக்கள்தாம் விளையாடியிருக்கிறோம் இல்லையா? என்ன அதனை ட்வெண்டி-20 என்று அழைக்காமல் பொதுவாக மேட்ச் என்று மட்டுமே அழைத்துக் கொண்டோம். ஆனால் அவை, இன்று நடக்கும் போட்டிகளுக்கு எந்த விதத்திலும் குறையாத ரகளைகளுடன் நடந்தன இல்லையா? அப்படி நடந்த ஒரு மேட்சின் ஒரு பகுதியை இங்கே பகிர்கிறேன்.

நாங்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் டிபார்ட்மெண்ட். எங்களுக்கும் பயோ-கெமிஸ்ட்ரிக்கும் மேட்ச். முதலில் பேட் செய்த அவர்கள், நாங்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்கும் நல்லவர்கள் எனக் கருதி, அடி அடி என அடித்து 140 ரன்களுக்கு மேல் குவித்து விட்டார்கள். இரண்டாவது இன்னிங்ஸில் நாங்களும் சளைக்காமல் ரன் குவித்தோம். 

ஹாஸ்டலிலிருந்து கொண்டுவந்த பக்கெட்டுகளை கவிழ்த்து வைத்து அதை ட்ரம்ஸாகப் பாவித்து, அருகிலிருந்த மரத்திலிருந்து உடைத்த கிளைகளால் அதில் மேளம் அடித்துக் கொண்டு...

பயோவுக்கு சவாலே! கம்ப்யூட்டர்னா சும்மாவா!
இந்த பேட்டிங் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா!
தில்லானா, தில்லானா கம்ப்யூட்டர்னா தூள்னா!

என்றெல்லாம், கத்தி எங்கள் அணியை ஊக்குவித்துக் கொண்டிருந்தோம்.  
   
மேட்சின் க்ளைமேக்ஸ் நெருங்கியது. 13 பந்துகளில் 12 ரன்கள் எடுக்க வேண்டும். கைவசம் மூன்று விக்கெட்டுக்கள் இருந்தன. கேப்டன் வினோத்தும், ஆல்ரவுண்டர் மதனும் ஆடிக்கொண்டிருந்தனர். கிருஷ்ணன் என்பவரும், நானுமே பாக்கி. இந்தக் கிருஷ்ணன், நாங்கள் படிக்கும் யுனிவெர்சிட்டியில் மிகப் பிரபலமானவர். சகல திறமைகளையும் தன்னுள் கொண்டவர். ஆனால், அவரை கலாய்ப்பதில் எங்களுக்கெல்லாம் அவ்வளவு பிரியம்.  இவர்தான் இப்பதிவின் நாயகன்.

18வது ஓவரின் கடைசி பந்தில் கேப்டன் அவுட்டாக, கிருஷ்ணன் விளையாட இறங்கினார்.  19வது ஓவரை அவர்தான் எதிர் கொண்டார். இந்த ஓவரை வீசுவது எங்கள் யுனிவெர்சிட்டியின் அதிவேகப் பந்து வீச்சாளர் வசந்த் என்பவர். அதுவரை எந்த பேட்ஸ்மெனும் காட் எடுக்கவில்லை. ஆனால் இந்தக் கிருஷ்ணன், அம்பயரை அழைத்து லெக் ஸ்டெம்ப்புக்கும், மிடில் ஸ்டெம்ப்புக்கும் காட் எடுத்துக் கொண்டார். சுற்றிப் பார்த்து பீல்டிங்கை சர்வே செயதார். சந்தேகம் வந்து 11 பேர்தான் இருக்கிறார்களா என்றும் எண்ணிச் சரி பார்த்துக்கொண்டு படு நேர்த்தியாக ஸ்டேன்ஸ் எடுத்தார். ஆஹா, வசந்தை தொலைத்து விடுவார் தொலைத்து என்று நாங்கள் எல்லாம் எழுந்து நின்று கரகோஷம் செய்தோம்.
   
12 பந்துகளில் 12 ரன்கள் எடுக்க வேண்டும்.

முதல் பந்து. மிக வேகமாக பேட்டை வீசி ஸ்கொயர் கட் அடித்தார் கிருஷ்ணன்.

ஷாட்..ரா... கிருஷ்ணா... என ஆரவாரித்த நாங்கள், பந்து எந்தப் பக்கம் சென்றது எனத் தேடினோம். அப்புறம்தான் புரிந்தது, அது பேட்டில் படவே இல்லை என்று.  

இரண்டாவது பந்து. முன்பை விட படு வேகமாக பேட்டை வீசினார். இம்முறை பறந்தே விட்டது. ஆனால் அது பந்தல்ல. கை நழுவிப் பறந்த பேட், ஒரு இருபது அடி தள்ளி விழுந்தது.

ச்சீ! இந்த கிளவுஸ் சரியில்லை என்று அதைக் கழற்றி வீசி, வெறுங்கையுடன் பேட் பிடித்தார். “ஐயோ, கிருஷ்ணா! பால் போடறது வசந்துப்பா!. ஸ்டெம்ப் ஒடைஞ்சாலும் பரவால்ல! உன் கை ஒடைஞ்சா, நாளைக்கு எப்படிப்பா எக்ஸாம் எழுதுவே?. நீ எழுதாட்டி, நாங்களெல்லாம் எப்படி காப்பி அடித்து பாஸ் பண்றது” என்று கத்தினோம்.

மூன்றாவது பந்து. எங்கள் கத்தலில் வெறிபிடித்து விட்டது அவருக்கு. ஏறி அடிப்பது என்று முடிவெடுத்து விட்டார் போலும். வசந்த் ஓடிவரத் துவங்க, இவரும் ஏறிவரத் துவங்கினார்.  அவர் ஓட, இவர் ஏற... ஓவராக வெறி பிடித்ததில், தன்னிலை மறந்து, கிட்ட தட்ட பாதி பிட்ச் ஏறிவந்து விட்டார்.

ஐயோ கிருஷ்ணா! என்ன பண்றே?!! என்று நாங்கள் கத்த, திரும்பிப் பார்த்த அவருக்கு அந்த விபரீதம் புரிந்தது. ஸ்டெம்பிற்கு அருகே வந்து விட்ட விக்கெட் கீப்பர், ஸ்டெப்பிங் செய்ய பவுலரைப் பார்த்து பந்தைத் தா.. தா.. எனக் கேட்டுக் கொண்டிருந்தார்.

அரண்டு போன கிருஷ்ணன் பவுலரைப் பார்த்துக் கொண்டே மீண்டும் கிரீசுக்கு ரிவர்ஸில் ஓடத் தொடங்கினார். பவுலரும், பேட்ஸ்மெனும் ஒரே திசையில் ஓடும் இந்த வினோத காட்சியை இங்கு மட்டுமே காண முடியும். பவுலரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. கண்களில் குபுக்கென நீர் தளும்ப பந்தை போட முடியாமல், வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே திரும்பிச் சென்று விட்டார்.

இப்போது மதன் கத்திக் கொண்டிருந்தார். கிருஷ்ணா, நீ அடிக்கவே வேணாம். பந்தைப் போட்டதுமே நான் ஓடிவந்து விடுகிறேன். நீ எப்படியாவது ஒரு ரன் ஓடி வந்துவிடு. மத்ததை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று.  

மீண்டும் மூன்றாவது பந்து. பந்து போடப்பட்டதுமே ஓடத் தொடங்கிய மதன் அப்படியே திகைத்து நின்று விட்டார்.  காரணம், அந்தப் பந்தை அடிக்க கிருஷ்ணன் பேட்டை கண்ணை மூடிக் கொண்டு சுத்தினார். சுத்திய வேகத்தில், பேட்டுடன் சேர்ந்து அவரும் சுத்தினார்.  தலையும் சுத்த நிலை தடுமாறி கீழே விழுந்த அவர், எழுந்த வேகத்தில் திசை மாறி விக்கெட் கீப்பரை நோக்கி ஓடிக் கொண்டிருந்தார். இம்முறை விக்கெட் கீப்பரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அருகில் வந்து விட்ட கிருஷ்ணணை கட்டி பிடித்துக் கொண்டு வயிறு வலிக்க குலுங்கிக் குலுங்கி சிரித்தார்.

எங்கள் தப்படைகளின் சப்தம் சுத்தமாக நின்று போனது.

அடுத்த மூன்று பந்துகள்.  என்னென்னமோ மாய்மாலங்கள் செய்தார் கிருஷ்ணன். ம்ஹும்... பந்து பேட்டிலும் படவில்லை. ஸ்டெம்பிலும் படவில்லை.  ஒவ்வொரு பந்திற்கும் ரன்னிற்காக ஓடோடி வந்து, பின் ஏமாந்து திரும்பிச் சென்ற மதன் வெறுத்துப் போய் கால் நீட்டி கீழே அமர்ந்து விட்டார்.  12 பந்து 12 ரன் என்ற நிலையை, தன் அற்புதத்தால் 6 பந்து 12 ரன் என்று மாற்றிவிட்டார் கிருஷ்ணன்.  

நாங்கள் செய்வதறியாது தவித்து பக்கெட்டுகளை தலையில் கவிழ்த்துக் கொண்டு அம்போவென்று உட்கார்ந்து விட்டோம். சரி, இந்த ஓவரை மதன் பார்த்துக் கொள்வார், அதை கிருஷ்ணன் கெடுக்காமல் இருந்தால் சரி என்று தேற்றிக் கொண்டோம்.

ஏமாற்றத்தையும், ஆத்திரத்தையும் நொடிப்பொழுதில் துடைத்துக் கொண்டு, ஒரு உறுதியுடன் அந்த ஓவரை எதிர் கொண்டார் மதன்.

முதல் பந்து. இரண்டு ரன்கள்.
இரண்டாவது பந்து. நா..ன்கு ரன்கள்.
மூன்றாவது பந்து. மீண்டும்... இரண்டு ரன்கள்.

ஆக 8 ரன்கள் எடுத்தாகி விட்டது. மீண்டும் தப்படைகள் முழங்கத் தொடங்கின.

மதனிருக்க பயம் ஏன்... மதனிருக்க பயம் ஏன்...

நான்காவது பந்து. ரன் எடுக்க முடியவில்லை.

ஐந்தாவது பந்து. தூக்கி அடித்தார் மதன். துரதிஷ்டவசமாக அது கேட்ச் பிடிக்கப்பட அவுட்டானார் மதன்.  அதைவிட துரதிஷ்டம், பேட்டிங் சைடுக்குச் சென்று விட்டார் கிருஷ்ணன். ரன்னர் சைடிலில் நான் நிற்க வேண்டிய நிலை.  

கடைசி பந்து. நான்கு ரன்கள் வேண்டும்.

"கிருஷ்ணா, அன்னைக்கு ஷார்ஜா-ல சேட்டன் ஷர்மாவோட கடைசி பந்தை மியான்தாத் சிக்ஸர் அடிச்சது போல அடிப்பா. யுனிவெர்சிட்டி முழுக்க உன்னை தோளில் சுமந்து சுத்தி வர்ரேன்" என்று கத்தினேன்.

பவுலர் ஓடி வரத் தொடங்கினார்... ஸ்டேடியமே கத்தியது...

கிருஷ்ணாஆஆஆஆஆஆ.........!!! 
  
பவுலர் மிக ஆக்ரோஷமாகப் பந்தை வீசினார். அது ஒரு பீரங்கி குண்டை போல அதிபயங்கரமாக கிருஷ்ணனின் மார்பை நோக்கி எழும்பியது. அவ்வளவுதான், தொலைந்தார் கிருஷ்ணன் என்றே நினைத்தேன். ஆனால்...

ஆஹா, அந்த அற்புத்தை என்னவென்று சொல்ல. அதைக் காண கண்கள் நூறு வேண்டும். எவர் ஆவி அவர் உடலில் புகுந்து கொண்டதோ... மிக அற்புதமாக கபில்தேவின் ட்ரேட் மார்க் மிட் விக்கெட் புல் ஷாட்டை அடித்தார். காற்றைக் கிழித்து, விண்ணை நோக்கி எழும்பிய பந்து அனாயசமாக எல்லைக் கோட்டைத் தாண்டி விழுந்தது. 

சிக்ஸர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......

கிருஷ்ணா... சாதிச்சுட்டபா... என்று கத்திக் கொண்டே அவரை நோக்கி ஓடிய நான், அப்படியே ஸ்தம்பித்து நின்றேன். காரணம், கபில்தேவ் போல ஒற்றைக் காலில் நின்று அடித்தபின், அவரைப் போல் பேலன்ஸ் செய்யாததால், நிலை தடுமாறி ஸ்டெம்பின் மேல் குப்புற விழுந்திருந்தார் கிருஷ்ணன். அவர் பளு தாங்காமல் மூன்று திசைக்கு ஸ்டெம்புகள் சிதறி இருந்தன. பெயில்சுகளைக் காணவில்லை.

திரும்பிப் பார்த்தால், இரு கைகளையும் உயர்த்தி சிக்ஸர் என்பதற்குப் பதில், ஒரு கையை மட்டுமே உயர்த்தி அவுட் என்றார் அம்பயர்.