Thursday, July 8, 2010

பிரெஞ்சுப் புரட்சி

நாங்கள் படித்த யுனிவெர்சிட்டியில் பல வசதிகள். ஒரே சமயத்தில் இரண்டு மூன்று கோர்ஸ்கள் படிக்கலாம். அல்லது குறைந்த பட்சம் மற்ற டிபார்ட்மெண்ட்களுக்குச் சென்று பிடித்தமான பேப்பர்களைத் தேர்ந்தெடுத்தும் படிக்கலாம்.

படிக்கும் ஐ.டி துறைமூலம் விரைவிலேயே ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்து, உலகம் சுற்றும் வாலிபர்களாகப் போகிறோம் என்ற கனவில் றெக்கை கட்டிப் பறந்து கொண்டிருந்ததால், லிங்குஸ்டிக் டிபார்ட்மெண்ட் சென்று ஒவ்வொரு செமஸ்டரிலும் ஒரு உலக மொழியைக் கற்கலாம் என்று முடிவெடுத்தோம்.

கடைசி செமஸ்டரில் கேம்பஸ் இண்டர்வியுவிற்கு வரும் முதல் கம்பெனிக்கு ஜப்பானில் கிளை இருப்பதால் முதலில் ஜப்பானிய மொழியைத் தேர்ந்தெடுத்தோம்.

எங்களுக்குப் பாடம் நடத்திய ஆசிரியர்... ஸாரி... ஜப்பானிய ஆசிரியை மிக அழகாக அம்மொழியைக் கற்றுக் கொடுத்தார்.

போஸ்ட் கிராஜுவேட் படிக்கும் வயதில் கிள்ளை பிள்ளைகளாட்டம் ”எ ஃபார் ஆப்பிள், பி ஃபார் பனானா” என்ற ரீதியில் கோரஸாகப் படிப்பதும், முதன் முதலாக ஸ்லேட்டில் பலப்பம் பிடித்து எழுதுவது போல மொழியின் எழுத்துக்களை வரைவதும் (அம்மொழியின் ஒவ்வொரு எழுத்தும் ஒரு பூச்சியின் படம் போல வேறு இருந்தது) தமாஷாக இருந்தது.

எனக்கு மட்டும் ஒரு சின்ன வருத்தம். அவருக்கு ’ர’ உச்சரிப்பு வராமல், என்னை ”லகுலாம், லகுலாம்” என்று அழைத்துக் கொண்டிருந்தார்.

(ஆனால், கணையாழியின் கடைசி பக்கங்களில் தன் ஜப்பானிய பயண அனுபவத்தைச் சொல்லும் சுஜாதா, அவர்களுக்கு ’ல’ க்கு பதில் ’ர’ தான் வருகிறது என்கிறார். “புர்ரட் ட்ரெயின், புர்ரட் ட்ரெயின்” என்று அவர்கள் சொன்னது “புல்லட் ட்ரெயின்” என்று வெகு நேரத்திற்குப் பின்பே தனக்கு புரிந்தது என்றும் சொல்கிறார். ஒரு வேளை அந்த ஆசிரியை இந்தியா வந்துவிட்டதால் லகரமும், ரகரமும் இடமாறிவிட்டதோ?!)

சின்னஞ்சிறு கண்களுடன், எப்போதும் சிந்தும் புன்னகையுடன், ஒரு குழந்தைக்கு கற்றுத் தரும் கனிவுடன் அவர் பாடம் நடத்தியவிதம் எங்களை பிரைமரி ஸ்கூலின் கபடமற்ற நினைவுகளில் தாலாட்டியது.

நான்கு ஜப்பானிய வார்த்தைகள் கற்றுக் கொண்ட குஷியில், ‘அனதாவா ஜென்கி தேசுகா (நீங்கள் சௌக்கியமா)?, சயோனாரா மாதாஆய் மாசோ (டாடா பை பை) ’ என்றெல்லாம் எதிர்பட்டவர்களிடம் பேசி, அவர்கள் முகம் வெளிர வைத்தோம்!

ஒரு மொழியைக் கற்கும்போது பரிசயமற்ற உச்சரிப்புகளில் நா பிறழ்வதும், புதிய புதிய வார்த்தைகளின் நளினத்தில் மனம் புரள்வதும் ஒரு சுகானுபவம்.

அந்த அனுபவம் தந்த உற்சாகத்தில், அடுத்த செமஸ்டரில் எந்த மொழியைத் தேர்ந்தெடுக்கலாம் என்று, நண்பர்கள் ஒன்று கூடி விவாதித்தோம். அப்போது, என்னுடைய ஐ.பி.எல் பதிவின் நாயகன் கிருஷ்ணன் எங்கள் முன் தோன்றி, பிரெஞ்சு மொழியைத் தேர்ந்தெடுக்கலாம் என்று ஆலோசனை கூறினார். தான் பிளஸ்ஒன் முதலே அதைப் படித்ததாகச் சொல்லி, அம்மொழியின் அருமை பெருமைகளையெல்லாம் சிலாகித்துச் சொன்னார்.

ஆஹா, பிரெஞ்சு மொழியைக் கற்று, அப்படியே கன்கார்ட் விமானத்தில் லண்டனிலிருந்து பாரிஸூக்குப் பறந்து, ஈஃபிள் டவர் அருகே நின்று எதிர்ப்படுபவர்களிடம் ”மான்சியூர்” சொல்லி போட்டோவெல்லாம் எடுத்துக் கொள்ளலாம் எனக் கனவு கண்டோம்.

முதல் நாள் வகுப்பு. பிரெஞ்சு ஆசிரியையை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஆனால் வந்ததோ ஒரு உள்ளூர் ஆசாமி. சிரிப்பை பாதாள லோகத்தில் புதைத்து விட்டார் போல; சுரத்தே இல்லாமல் வகுப்பெடுத்தார்.

ஜப்பானிய பாஷை கடினமாக இருந்தாலும் கற்க முடிந்தது. ஆனால் பிரெஞ்சு பாஷை ரெண்டுங்கெட்டானாக இருந்தது. சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் ரொம்பவே மெனக்கெட வேண்டியிருந்தது. எண்ணிக்கையைச் சொல்ல இருபதுக்கு மேல் வார்த்தைகளே இல்லை. உதாரணமாக 97 என்பதை ‘குவாதர் வான் திசெப்ட்” என்று சொல்ல வேண்டும். குவாதர் என்றால் நான்கு, வான் என்றால் இருபது, திசெப்ட் என்றால் பதினேழு. அதாவது நான்கு இருபது பதினேழு என்று சொல்ல வேண்டும். என்ன கொ. சரவணா இது?!

இதைவிடக் கொடுமை, எழுத்துக்கள் ஆங்கிலம் போன்றே இருந்தாலும், உச்சரிப்பிற்கும் ஸ்பெல்லிங்கிற்கும் சம்பந்தமே இல்லை. இந்த வான்-னுக்கான ஸ்பெல்லிங் Vingt. பொதுவாக எழுத்தைக் கூட்டி படிக்கச் சொல்வார்கள். இங்கே சில எழுத்துக்களை கழித்துப் படித்தாலும் உச்சரிப்பு வரவில்லை. உச்சரிப்பைப் படித்தால் தியரி எக்ஸாமிலும், ஸ்பெல்லிங்கைப் படித்தால் வைவாவிலும் பெயிலாகி அழ வேண்டியதுதான்.

எங்களை பெயிலின் பாதைக்கு அழைத்துச் சென்ற கிருஷ்ணனை பார்க்கும் போதெல்லாம் காது புகைந்தது. பரீட்சையும் வந்து விட்டது. முதலில் வருவது தியரியாதலால், டைப்ரைட்டிங் கிளாசில் ஆங்கிலமே தெரியாமல் ஒவ்வொரு எழுத்தாக டைப் அடித்தது போல, உருப்போட்டு மனனம் செய்து பரீட்சையை எழுதிவிட்டேன்.

மறுநாள் வைவா. ஹாஸ்டலில் கிருஷ்ணன் மடையான தண்ணி குடித்து சொல்லிக் கொடுத்தார். மற்றவர்களெல்லாம் தட்டுத்தடுமாறி கற்க, நம்ம மூளைக்கு உச்சரிப்பு ஏறவே இல்லை. இரண்டாவது பக்கத்தை படிக்கும் முன்பே முதல் பக்கம் அடியோடு மறந்து போனது. ”போடா, நீயும் உன் பிரெஞ்சும்” என்று சலித்துக் கொண்டு தூங்கச் சென்றேன். “டேய், பொறுப்பில்லாமல் படுக்காதே, நிச்சயம் பெயிலாயிடுவே” என்று அவர் திட்டிக் கொண்டிருக்க, அதை சட்டை செய்யாமல் தூங்கியே விட்டேன்.

விடிந்தது வைவா தினம். முதலில் சென்றுவந்த நண்பன், ”நமது பிரெஞ்சு புத்தகத்திலிருந்து ரேண்டமாக ஒரு பக்கத்தைப் பிரித்து, அதைப் படித்து அர்த்தமும் சொல்லச் சொல்கிறார்கள்” என்றான். அட அவ்வளவுதானா... ஒரு சுலபமான பக்கத்தை தேர்ந்தெடுத்து, அதை சொல்லிக் கொடுக்க கிருஷ்ணனை விளித்தேன். “இத மட்டும் படிச்சு என்னடா பண்ணபோற?” எனப் புலம்பிக் கொண்டே சொல்லிக் கொடுத்தார். அந்த பக்கத்தை ஒரு பத்து தடவை நன்றாக படித்துக் கொண்டேன்.

என் திட்டம் இதுதான். சுண்டு விரலை புக்மார்க்காக வைத்து புத்தகத்தை மூடிக் கொள்வது. எப்பக்கத்தைக் கேட்டாலும், இப்பக்கத்தை தற்செயலாக திறப்பது போல் நடித்து படிக்கத் தொடங்கிவிடுவது. பிறகு நடப்பது அந்த சாட்சாத் கிருஷ்ணன் விட்ட வழி (வேறு என்னதான் செய்ய?!).

என் முறை வர உள்ளே சென்றேன். அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு வருவது அதுதானோ? நான் படித்த இருபத்தி ஏழாவது பக்கத்தைதான் எக்ஸ்டர்னல் திறந்து வைத்தார். அதை ஓரக் கண்ணால் கவனித்துவிட்ட நான், டக்கென சுண்டுவிரலை எடுத்து விட்டு, நிதானமாக அமர்ந்து...

’வார்ம் கீரீட்டிங்ஸ் இன் திஸ் பிளசண்ட் மானிங்’ என்றேன்.

“ஹொ... வெல்கம்.. யு லுக் ஸோ ரிலாக்ஸ்ட்” என்றார். (பின்னே இருக்காதா?)

’வாட்ஸ் தி பேஜ் நம்பர் சார், ஈஸ் ட் ட்வெண்டி செவன்? ஜஸ்ட் எ செகண்ட்’... அப்பக்கத்தை புரட்டி, நெப்போலியன் பூமியில் பிறந்தவன் போல் மடமடவென படித்து அர்த்தத்துடன் அடுக்க...

”ஹோ.. ஹவ் ஃபுலூயண்ட் யு ஆர்... தட்ஸ் இனஃப்” என்றார்.

”தட் ஈஸ் யுவர் ஜெனராசிட்டி, அதர்வைஸ் வாட் ஆம் ஐ?” என்று நன்றி கூறி, ‘கிருஷ்ணா, இதுவல்லவோ உன் லீலா’ என்று புல்லரித்தபடி வந்து விட்டேன்.

அடுத்தது நண்பர் கிருஷ்ணனின் முறை. அவருக்கு மிகக் கடுமையான பகுதி வர, அவர் தன் புலமையைக் காட்டப் போக, ஏதோ களேபரம் ஆகியிருக்கிறது.

ரிசல்டைப் பார்த்தால், ஐந்து வருடம் படித்த அவருக்கு C கிரேடும், ஐந்து நிமிடம் படித்த எனக்கு B கிரேடும் கிடைத்திருந்தன.