Tuesday, September 18, 2012

மீண்டும் ஹரிணி...


ரெக்கார்டிங் பூத்.

சில நொடி கண்மூடியபின் உணர்வு பூர்வமாக பிள்ளையாரைப் பாடத் தொடங்கினார் ஹரிணி.

தந்தாணி கரத்தாய் ஆனந்த முகத்தாய்
தாயென வருவாய் - மன
சாந்தியை தருவாய்
ஐங்கரா... ஐம்புலா...
சதுர்த்தியில் எம்மை காத்திட வருவாய்...

விவரணத்திற்கு அப்பாற்பட்டு சொக்க வைக்கும் அவரது குரலை, கன்சோல் ரூமில் தன்னிலை மறந்து கேட்டுக் கொண்டிருந்தேன். பாட்டை எழுதிய போது மெல்ல நடந்த உணர்ச்சிகள் இப்போது அவர் குரலொலியில் தடதடத்தன.

கிரிதரன் இசையமைத்து ஆடி மாதம் வெளிவந்த கானாஞ்சலியின் ஓம் நவ சக்தி ஜெய ஜெய சக்தி-க்கு கிடைத்த வரவேற்பு தந்த சக்தியில், அதைப் போலவே உண்ணி கிருஷ்ணன், ஹரிணியின் அற்புதக் குரல்களில் பிள்ளையாருக்கு இசையாஞ்சலி செய்ய முடிவானது.

கிரிதரன், உண்ணி கிருஷ்ணனுக்கான பாடல்களை மடமடவென எழுதிவிட்டு, ஹரிணிக்கான பாடல்களை என்னை எழுதச் சொன்னார். நாளை ரெக்கார்டிங் என்றும் சொல்லி அதிர வைத்தார்.

பிள்ளையாரப்பா, இதுக்கு மேல எந்த வார்த்தையும் இந்தப் பிள்ளைக்கு வரலையேப்பா. முறையிட்டேன்.

கணங்களின் அதிபதி ரெக்கார்டிங்கை இரண்டு நாள் தள்ளி வைத்து, பாடல்களை கிள்ளிக் கொடுத்தார். தந்தத்தை எழுத்தாணியாக்கி பாரதம் எழுதியவனை தந்தாணி கரத்தாய் என்று விளித்தே துவங்கினேன்.

ஆறு பாடல்களுடன், விநாயகர் அகவலுடன் ரெக்கார்டிங் இனிதே நிறைந்தது. கிரிதரன் இரண்டு பாடல்களையும், அகவலையும் பாடியிருக்கிறார்.

ஒளவையின் வரிகளை இசையுடன் கேட்கும்போது, வெட்கம் என்னை வானமாய்க் கவ்விக் கொள்கிறது!

எழுதிய சில வார்த்தைகளும், அதைத் தந்த தந்தன் காலடிக்கே சமர்ப்பணம்.

இந்த உச்சிப் பிள்ளையாரே சரணம் ஆல்பத்தின் பாடல்களையும், நவசக்தியின் பாடல்களையும் raaga.com-ல் கேட்கலாம், வாங்கலாம். அதன் சுட்டிகள் கீழே:

ராகாவில்: உச்சிப் பிள்ளையாரே சரணம்
ராகாவில்: ஓம் சக்தி நவசக்தி ஜெய ஜெய சக்தி