Sunday, September 5, 2021

கோவிலுக்குக் குடிபெயர்ந்த விநாயகர்

ஒன்றரை வருடமாக எங்கள் வீட்டில் குடியிருந்த விநாயகர், தனக்கென கட்டி முடிக்கப்பட்ட கோவிலுக்கு இன்று குடிபெயர்ந்தார்.

என் உறவினர் கிராமம். இதன் ஏரிக்கரை அருகே கிராமத்தார் விநாயகர் கோவிலை கட்டத் தொடங்கியிருந்தனர். கொரோனா காலத்தினாலும், பொருளாதாரச் சிக்கல்களாலும் கோவிலின் பணிகள் நீண்டு கொண்டிருந்தன.

கோவிலின் மூல விக்கிரகமாக வடிக்கப்பட்ட நான்கடி உயர கற்சிற்ப கற்பக விநாயகரை ஜலவாசம் முடிந்தபின், தான்ய வாசத்திற்கு எங்கள் வீட்டில் கிராமத்தார் வைத்திருந்தனர்.

இவருக்கென ஓர் அறை ஒதுக்கப்பட்டது. இவருக்கு இருபுறம் சுவர் இருக்க, இருபுறம் மரப்பலகைகள் வைக்கப்பட்டு உச்சிவரை நெல் குவிக்கப்பட, அதனுள் இவர் தன் தான்ய வாசத்தைத் தொடங்கினார். அன்றே எங்கள் குடும்பத்தில் ஒருவராய் உணர்வோடு ஒன்றிவிட்டார். 

அலுவல் பணியும், பள்ளிப் படிப்பும் வீட்டிலிருந்தே... என மருவிவிட்டதால், குடும்பமாய் இவ்வீட்டிற்கு வந்துவிட்டேன். 

நெற்குவியலின் மேல், பிரபையின் நடுவில் இருக்கும் சிங்க முகத்தின் பிடரி மட்டும் சற்றே வெளிப்பட்டிருப்பதைக் கண்டது முதலாய், ஒரு மகிழ்ச்சி என்னைத் தொற்றிக் கொண்டது. தினம் தோட்டத்திலிருந்து பூப்பறிக்கப்பட்டதும், முதலில் இவருக்கே, பிரபையின் மேல் சாற்றப்படும். ஒவ்வொரு முறையும் இவரைக் கடக்கும் போதெல்லாம், பிள்ளையாரப்பா... ஐங்கரா... பார்வதி மைந்தா என ஒரு பெயரை மனம் சொல்லிக் கொண்டே இருந்தது. 

தான்ய வாச காலம் முடிந்தது. இவருக்கு வெள்ளிக் கவசம் செய்ய அளவெடுப்பதற்கு கிராமத்தார், ஆச்சாரியை அவரது குழுவுடன் அழைத்து வந்தனர். 

நெற்குவியலை மெல்ல விலக்கியதும், அற்புதக் கலைநயத்துடன், சொக்க வைக்கும் அழகுடன் வெளிப்பட்டார் விநாயகர்.  

பீடத்தின் அடியிலிருந்து புடைத்துக் கொண்டிருந்த தாமரையின் மேல் வலது காலை வைத்து, அதன் முழங்கால் பகுதியைத் தடவியபடித் தொங்கும் நீண்ட ஆபரணத்தின் விளிம்பை இடது கால் விரல்கள் தொட்டபடி சம்மணமிட்டு பீடத்தின் மேல் ஆனந்த வடிவாய்க் காட்சி தந்தார். 

பாசாங்குசத்தை பிடித்திருக்கும் கைவிரல்களின் கோடுகள், அதன் நகத்தின் விளிப்புகள்,  இடக்கை கொள்ளளவிற்கு லட்டு,  வலமாய் வளைந்த தும்பிக்கையின் நுனியில் கொழுக்கட்டை, தந்தங்களுக்கிடையே மணி பூட்டிய சிறு ஆபரணம், பேழை வயிற்றின் வட்ட வடிவம், அதை இறுக்கியபடி ஒட்டியாணம், தோளையும், மேல் மார்பையும், நெற்றியின் இரு பகுதியில் பிறை வடிவாக அலங்கரிக்கும்  ஆபரணங்கள், மணிக்கட்டில் மணிகள் கோர்க்கப்பட்ட ஆபரணம், அக்னி சுடர்விடும் வடிவாய் கிரீடம்... கோபத்தில் மூக்கு புடைத்த சிங்க முகப் பிரபைதான், ஆனால் வாய்ப் பகுதி வேலைப்பாடுகளால் கோரைப் பற்கள் வெளிப்பட்டும் அது சிரிக்கும் சிங்கமாகவே காட்சி தந்தது. இவ்வளவு அழகுடன் வடித்த சிற்பி யாரோ, அவர் வளமுடன் வாழ்க.

வந்தவர் யாவரும் இவ்வழகில் லயித்து, மகிழ்வோடு தத்தம் செல்போனில் பலவாறு படம் பிடித்துக் கொண்டனர். (அப்பாடா, செல்ஃபி எடுக்கும் எண்ணமெல்லாம் யாருக்கும் வரவில்லை!).

கவசத்திற்கு அச்சு எடுக்கும் பணி துவங்கியது. 

பெரிய அண்டாவில் நீர் ஊற்றப்பட்டு கொதிக்க வைக்கப்பட்டது. ஒரு மூட்டை நிறைய மெழுகும் சாம்பிராணியும் கலந்த பெரிய பெரிய கட்டிகள் இருந்தன. அவை கொதிநீரில் போடப்பட்டதும், குழைந்து சாந்தாக மாறியது. நீண்ட மரக் கரண்டி மூலம் அதைக் கிண்டி எடுத்து தரையில் கிடத்தினர். 

கையால் தொடுமளவிற்குச் சூடு இறங்கியதும், அதை எடுத்து தலை, முகம், கழுத்து, தோள் பகுதிகளில் தனித்தனியாய் பொறுமையாய் அழுத்தி ஒட்டினர். சில நிமிடங்களுப்பின் அதைக் கவனமாய்ப் பிடித்து இழுக்க, அது எந்தவிதச் சிக்கலும் இன்றி, சிலை மேல் எந்தவித ஒட்டுதலும் இன்றி அழகாகப் பிரிந்து வந்தது. அதன் உட்பகுதியில் சிலையின் வடிவங்கள் பதிந்திருந்தன. ஆபரணத்தின் குண்டு மணிகள் கூட கச்சிதமாய்ப் பதிந்திருந்தன. அன்னக்கூடையில் நிரப்பட்ட குளிர்ந்த நீரில் இவற்றை வைக்க, இவை இறுகிக் கொண்டன. 

சிலையின் அனைத்து பகுதிக்கும் அச்செடுக்கும் வரை மெழுகை சாந்தாக்குவதும், அச்செடுப்பதும், அதைக் குளிர்விப்பதும் தொடர்ந்தது. (வெள்ளியை உருக்கி இவற்றில் விட அவை கவச வடிவு பெறும்).

பணி முடிந்தது. தான்ய வாசம் காலம் முடிந்து விட்டதால், துணியால் போர்த்தப்பட்டு அவர் அறையில் வைக்கப்பட்டார். 

இவர் யானை முகத்தை மட்டும் கொண்டிருக்கவில்லை. யானையின் எடையையும்தான் கொண்டிருக்கிறார். ஆறு பேர் சேர்ந்து முயன்றால் அரையடி மட்டும் நகர்ந்து சிரிக்கிறார். கனமான இரும்புக் குழாய்களையும், உருளைக் கட்டைகளையும் அடியில் வைத்து உருட்டித்தான் இவரை நகர்த்த முடிந்தது.

கோவில் பணிகள் மேலும் மாதங்களாய் நீண்டு கொண்டே செல்ல, இவரும் எங்கள் குடும்ப நபராகத் தொடர்ந்தார். 

மண்ணச்சநல்லூர் கிரிதரன் இசையில் விநாயகர் ஆல்பத்திற்கு (உச்சி பிள்ளையாரே சரணம்), உன்னி கிருஷ்ணன்,  ஹரிணி  இருவரின் குரலில் பாடல்கள் எழுதியது முதல் விநாயகரின் வடிவை அணுவணுவாக ரசிக்கத் தொடங்கியிருந்தேன். ஆல்பத்தில் கிரிதரன், ஔவையின் விநாயகர் அகவலுக்கும் இசையமைத்துப் பாடியிருந்தார். அதுமுதலாக தினமும் அகவலை ஓதிக்கொண்டுதான் இருந்தேன். 

ஆனால் இந்த விநாயகரின் வடிவை உள்வாங்கிக் கொண்டபின், தினசரி இவருக்கு ஒரு பூவைச் சூடி, அகவலைப் பாடத் தொடங்கியதும், பல சொற்கள் ஆழமாக விளங்கத் தொடங்க திகைத்துத்தான் போனேன். 

“வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)”... 

“சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி”...

போன்ற சொற்பதங்கள் எல்லாம் மனதை என்னன்னவோ செய்யத்தொடங்கின. 

மெய்யோகம் ரகுராமின், வசு-பிராணாயாமம் வகுப்புகளில் பங்கெடுத்து இடகலை, பிங்கலை, சுழுமுனை மூச்சு முறையை, முறையாகக் கற்றபின், 

“இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்

கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி” - வரிகளும், அதைத் தொடர்பவையும்  வேறொரு பரிமாணத்தில் புரிபடத் தொடங்கியது.

ஔவை வெறும் தமிழ் புலவர் மட்டும் அல்லர். விஞ்ஞானமும் மெய்ஞானமும் தெளிந்த ஞானி. அவர் அகவலை எளிமையாகத்தான் எழுதியிருக்கிறார். விநாயகரை வர்ணித்துத்தான் தொடங்குகிறார். ஆனால் அவரை வேண்டும் விதமாய்த் தொடரும்போது ஒரு மகோன்னத வாழ்விற்கான சூட்சுமத்தையே சொற்களில் மந்திரமாய்ப் பொதித்து வைத்திருக்கிறார்.  

அவற்றை விநாயகரின் வடிவை மனதில் நிறுத்தி சொல்லச் சொல்ல, காலம் செல்லச் செல்ல, சமயத்தில் நமக்குத் துணை வரும் விதமாய் அவை வெளிப்படுகின்றன.

அந்த நிலையை, இந்த விநாயகர் இப்போதே தந்தருளியிருக்கிறார்.

கோவில் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. இன்னும் மூன்று நாட்களில் கும்பாபிஷேகம்.

இன்று காலை கிராமத்தினர் எங்கள் வீட்டிற்கு வந்து, விநாயகரையும், சிறிய மூஞ்சூறு, பலிபீட சிலைகளையும் வண்டியில் ஏற்றினர். வண்டி கோவிலை நோக்கிப் புறப்பட... 

சட்டென்று உள்ளமும், இல்லமும் வெறிச்சோடியது.

Wednesday, December 2, 2020

பாம்பும் பூனையும்

சட்டென்று அந்தப் பாம்பு தோட்டத்தின் புற்களிடையே சீறி எழுந்து படமெடுத்து நிற்க, அதனுடன் சண்டைக்குச் சென்ற பூனை ஓரடி பின்வாங்கி நிற்க... ஆஹா, இன்று இவைகளின் சண்டையைப் படமெடுத்து விடலாம் என்று மொபைல் போனை எடுத்து வர வீட்டினுள் ஓடினேன்.

இந்த கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தே வேலையென்பதால், உறவினரின் கிராமத்திற்குச் சென்று விட்டேன். மழைக்காலம் தொடங்கியதில் பல ஜீவராசிகள் தத்தம் இடங்களிலிருந்து வெளியே வந்து சுற்றிக் கொண்டிருந்தன. ஒரு சிறு முதலை அளவிற்கு ஒரு உடும்பு தோட்டத்துப் பக்கம் வந்து சென்றது. சைனாவிலிருந்தே வந்து விட்டனவோ என அஞ்சும்படி இருபது வௌவ்வால்கள் கூட பெரும் சப்தம் எழுப்பிப் பறந்தன. ஆனால் அதிகப்படியாக சுற்றுவது என்னவோ பாம்புகள்தாம். 

வீட்டு வாசற் பகுதியில், ஜே.சி.பி இயந்திரத்தின் மூலம் நிலத்தடி குழாய் வேலையாய் ஊராட்சி பள்ளம் தோண்ட, பூமியினுள் நாகலோகம் திறந்து கொண்டதோ என்னமோ?!, அப்பள்ளத்தின் வழியே பாம்புகள் வெளிவந்து செல்வதும் சகஜமானது. ஒரு முறை டூ-வீலர் ஸ்டேண்டின் மீது நான் கால் வைக்க, வெகு அருகில், வண்டியின் அடியிலிருந்து ஒரு பாம்பார் எட்டிப் பார்த்து, தன் பிளவுபட்ட நாக்கு நுனியை, வெளியே உள்ளேயென சிலமுறை நீட்டி இழுத்து காட்சி தந்தபின் சென்றுவிட்டார். நாம் அதை அடிக்க முயலாமல் சிவனே என்று இருந்தால், அவைகளும் அதே சிவனே என்று போய்விடுகிறன. 

ஆனால் இங்கே நான்கு பூனைகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இவைகளுக்கு அக்கம்பக்கத்து வீடுகள் எதுவும் ஒரு எல்லையில்லை.  எந்தச் சுவர்களும் ஒரு தடையுமில்லை. வீட்டுக்கு வீடு சுவரேறிச் சென்று, சமையல் அறை சன்னல் வழியே உள்ளே நுழைந்து பாலைக் குடித்துவிட்டு, வெளியே விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர் சிறுமியரிடம் கொஞ்சிக் குலவிவிட்டுச் சுற்றிக் கொண்டிருக்கும். 

பாரதியார் பாடியதுபோல சாம்பல் நிறத்தில் ஒரு பூனை, வெள்ளைப் பாலின் நிறத்தில் ஒன்று, பாம்பின் நிறத்தில் ஒன்று... அட விடுங்க... பாம்பின் நிறத்தில் பூனை இருப்பதெல்லாம் தேவையில்லை. இவை நாலுமே, பாம்பைக் கண்டால் சண்டைக்கு வந்து விடுகின்றன. ஏரியா பிரித்து, உனக்கு அந்தப் பாம்பு எனக்கு இந்தப் பாம்பு என்றெல்லாம் பங்கு பிரித்து சண்டைக்கு வருகின்றன.

டூ-வீலரின் அடியே ஓய்வெடுக்கும் பாம்பை ஒரு பூனை தாவி அதன் தலையருகே கவ்விப் பிடிக்க, பாம்பு சடசடவென தன் உடலை பூனையின் கழுத்தை சுற்றி இறுக்க முயல... இவைகளின் சண்டையின் களம், தெருவுக்கு மாறி, பின் பள்ளத்தினுள் விழுந்து புரண்டு, மறுபடியும் மேலேறி, ஒரு புதரினுள் சென்று மறைந்து விட்டன. கிளைமாக்ஸ் தெரிய  இரண்டு நாட்கள் ஆனது. எதற்கும் பாதிப்பில்லை. மறுபடியும் டூ-வீலரின் அடியே பாம்பார் ஓய்வெடுக்க வந்தார். பூனையார் வழக்கம் போல் தோட்டத்துப் பக்கம் சுற்றித் திரியத் தொடங்கினார்.

நான் பெரும்பாலும் தோட்டத்தின் அருகேதான் லேப்டாப்பில் பணிசெய்து கொண்டிருக்கிறேன். வெள்ளைப் பூனை மெல்ல ஓட்டின் மேலே பதுங்கிப் பதுக்கி முன் நகர்வது ஓரக் கண்ணில் தெரிய திரும்பியவன் திகைத்தேன். இதுவரைக் கண்ட பாம்புகள் எல்லாம் இரண்டு முதல் இரண்டரை அடி நீளம் மட்டுமே இருந்தன. ஆனால் இப்போது கண்டதோ ஆறடிக்கும் மேலான நீளத்தோடு மிரள வைக்கும் தேகவனப்போடு ஒரு பாம்பு. மெல்ல ஓட்டின் மீதிருந்து, தூணின் வழியே கீழே இறங்கிக் கொண்டிருந்த இதன் வாலைப் பிடிக்கத்தான், பூனையார் பதுங்கி வந்து கொண்டிருந்தார்.

எனக்கும் தூணுக்கும் இடைப்பட்ட தூரம் வெறும் நாலைந்து அடிதான். பூனை, பாம்பின் வாலைப் பிடித்து இழுத்து, இது சீறி எழுந்தால், என்பக்கம் வந்து விழும் வாய்ப்பு அதிகம்,. சுதாரித்து நான் எழுவதற்குள். பூனை தாவிப் பிடிக்க, அதன் விரல் நகங்களுக்கிடையே, மாட்டிக் கொள்ளாமல், பாம்பின் வால் வழுக்கிச் செல்ல, பாம்பு காம்பவுண்ட் சுவர் ஓரமாய் பல மாதமாய் கிடக்கும் கட்டைகளுக்கிடையே சென்று மறைந்து விட்டது. அவ்வப்போது வெளியே வந்து ஓட்டின் மேலேறி, இரைதேடித் திரும்புவது இதன் வாடிக்கையானது.

எந்தக் காட்சியும் இமைபொழுதில் மறைந்து விடுகின்றன. ஒருமுறைகூட படம் எடுக்க முடிந்ததில்லை. இந்த ஆறடிப் பாம்பும் வெள்ளைப் பூனையும்தான் இப்போது நேருக்கு நேர் போர் முரசு கொட்டின.

சிறு வயதில் Snake in the monkey's shadow என்றொரு குங்ஃபூ படம் பார்த்ததெல்லாம் ஞாபகத்திற்கு வந்தது.  பாம்பின் ஸ்டைலில் சண்டை போட்டு பலரை வீழ்த்தும் வில்லன்கள் இருவரை வெல்ல முடியாமல் திணறும் நாயகன், காட்டில் பாம்புடன் சண்டையிட்டு ஜெயிக்கும் குரங்கைக் கண்டு, பின் அதைப் போலவே சண்டையிட்டு வெல்கிறான். அந்த பாம்பும் ஆறடிக்கு மேல் நீளமிருந்ததும் நினைவுக்கு வந்தது. அது போல ஒரு சண்டையை நாம் இப்போது படமெடுக்கப் போகிறோம்... அட மொபைலில்தாங்க... என்று எண்ணிக் கொண்டே, கேமிராவை ஆன் செய்து கொண்டே விரைந்து திரும்பினேன்.

பூனை அப்படியே அசையாமல் கூர்மையான பார்வையோடு நின்று கொண்டிருந்தது. ஆனால் பாம்பைக் காணோம். புற்களிடையே ஏதாவது சலசலப்பு தெரிகிறதா எனப் பார்த்தேன். ம்ஹூம். பாம்பிருக்கும் சுவடே இல்லை. அதுவரை வீரச் சவால் நாயகனாய் நின்றிருந்த பூனை என்னை திரும்பிப் பார்த்து விட்டு அதுவும் சிவனே என்று சென்று விட்டது. 

சை... இன்றும் படமெடுக்க முடியவில்லை என சலித்து, கேமராவை அணைக்கும் போது, யூ.டியூப் ஆப் மீது விரல் பட்டுவிட்டது. ஆப் திறந்து கொள்ள... ரஜினி, குஷ்பு, பாம்பு என அண்ணாமலை படத்தின் பாம்புக் காட்சி முதலாவதாய் வந்து நின்றது. என்ன டிசைனோ!

Monday, October 26, 2020

விடாப்பிடி (குறுநாவல்)

சுஜாதா அவர்களின் தமிழ் மூலம்தான் கம்ப்யூட்டரைப் பற்றி பள்ளிப் பருவத்தில் அறிய முடிந்தது. பின் ஐ.டி. துறையே வாழ்க்கையான பிறகு, எழுத்தாளர் இரா. முருகன் அவர்களின் நட்பு கிடைக்க, “சுஜாதா சார் பெரிய அளவில் செய்ததை நானும் என் நண்பர்களும் நம்மால் முடிந்த அளவில் செய்து வருகிறோம். நீங்களும் எழுத வாருங்கள்” என அன்போடு அழைத்தார். அது முதல் ஐ.டி. துறை சார்ந்த கதை எழுதும் ஆசை வேர் விட்டிருந்தது. 

ஒரு தொலைபேசி உரையாடலில் எழுத்தாளர் பா. ராகவன் அவர்கள்  “சுஜாதா நினைவு போட்டி நடக்க இருக்கிறது. அதற்கு ஒரு குறுநாவல் எழுதி அனுப்புங்கள்” என ஊக்குவிக்க... இரு பெரும் எழுத்தாளுமைகளின் ஆசியால் விளைந்ததே இந்த ’விடாப்பிடி’ குறுநாவல்.

கொரோனாவினால்  போட்டி நடக்க இயலாமல் போனதால், இது கிண்டிலில் புத்தகமானது. 

ஐ.டி. துறையில், டாட்.காம் குமிழி வெடித்து பெரும் பிரளயமே நிகழ்ந்த இறுதி ஆண்டில் (2001), அதில் சிக்கிக் கொண்ட ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் நாயகன் ஒரு சி.டி.யை (குறுந்தகடு) வைத்து புது ப்ராஜெக்டை உருவாக்கி கம்பெனியை மீட்க முயலும் கதையே இந்த “விடாப்பிடி”.

எதை எழுதினாலும் முதல் நபராகப் படித்து, திருத்தங்கள் யோசனைகள் சொல்லும் நண்பர் சித்ரன் ரகுநாத் அவர்களின் உதவியின்றி இந்த “விடாப்பிடி” முழுமை அடைந்திருக்காது.  மூவருக்கும் நன்றி.

இக்குறுநாவல் சற்றே ஒரு த்ரில்லர் வகையாக அமைந்திருக்கிறது. தங்களின் கருத்துக்களையும் விமர்சனங்களையும் அறிய ஆவல். நன்றி.

அமேசான் சுட்டி: விடாப்பிடி  

விலை: ரூ 49.