Friday, December 7, 2012

எழுதிய பாடல் - 1: சமயபுர மாரியம்மன்

சமீபத்தில் சென்னை வந்திருந்த எழுத்தாளர் என். சொக்கனைச் சந்தித்தேன்.

‘நீங்கள் எழுதிய பாடல்களை, அதன் குறிப்புடன் ஒவ்வொன்றாகப் பதிவிடலாமே...’

கம்ப ராஜனை, இளையராஜாவைப் பற்றி தொடர்ந்து எழுதும் இவர், இப்படிச் சொல்லி என்னை ஊக்கிவிட..

இதோ எனது பாடல்களின் பதிவு வரிசை.

பாடல்: அம்மா... மாரியம்மா...
பாடுபொருள்: சமயபுர மாரியம்மன்
பாடியவர்: ஹரிணி, மண்ணச்சநல்லூர் கிரிதரன், குழுவினர்
ஆல்பம்: ஓம் நவசக்தி ஜெய ஜெய சக்தி
இசை: மண்ணச்சநல்லூர் கிரிதரன்

ஆடி சமயத்தில், சமயப் பாடல்களை எனக்கு அருளியவள் சமயபுர மாரியே.

திருச்சி பெருவளை வாய்க்கால் கரையோரம், கண்ணபுரம் என்றழைக்கப்பட்ட சமயபுரத்தில் கொலு வீற்றிருந்து, குழந்தைகளை அம்மை நோயிலிருந்து காக்க, தானே கடும் விரதமிருக்கும் பெருந்தகை அவள்.

அவள் தலைமேல் ஐந்து தலை நாகம் குடை விரிக்க, அதுவே சொற்பதமாகி முதல் சரணம் துவங்கியது...

    சர்ப்பக் குடை ஆட்சிகள் கண்ணபுரக் காட்சிகள்
    அன்னை மாரி தந்த தரிசனம்...

அவளிடம் சரணடையும் விதமாக, ஹரிணி சரணங்களைப் பாட, சரணத்தின் இடையிரு வரிகளை சிலிர்க்க வைக்கும் குரலில் கிரிதரன் பாடியிருக்கிறார்.

பல்லவி:
அம்மா... மாரியம்மா...

சமயபுரத்தாயி நீ அபய கரம் தாயேன் மாயி
பெருவளை வாய்க்காலில் நீ இருக்கிறாயே தீர்த்தமாயி (அம்மா)

சரணம்:
சர்ப்பக் குடை ஆட்சிகள் கண்ணபுரக் காட்சிகள்
அன்னை மாரி தந்த தரிசனம்

வெப்பம் பொங்க தவிக்கிறேன் நோயும் அண்ட அழுகிறேன்
வேப்பந் தரித்துக் கேட்கிறேன் அம்மை தடுத்து காக்க வேணும் (அம்மா)

புள்ள பெத்த ஆத்தா சிரிச்சா
விரதம் கொண்டு நோயுந் தீர்த்தா

மகத்துவமே... மகத்துவமே...
மருத்துவமே... மருத்துவமே...

மகத்துவம் எங்களுக்கு பொங்கலுக்கு வந்து உண்ணு (அம்மா)

சரணம்:
தீ மிதிக்கும் அங்கங்கள் அலகு தாங்கும் உள்ளங்கள்
அன்னை மாயி காக்கும் கரிசனம்

சேறு பூசிக் கொள்கிறேன் சோறு மண்ணில் உண்கிறேன்
பாதம் அண்டி கேட்கிறேன் சொந்தங் கொஞ்சங் காக்க வேணும் (அம்மா)

ஏழு உலகை ஆத்தா படைச்சா
ஏழை உறவை காத்து அணைச்சா

பரவசமே... பரவசமே...
பரிமளமே... பரிமளமே...

பரவசம் எங்களுக்கு பந்தலுக்கு வந்து உண்ணு (அம்மா)

சரணம்:
மாயன் தந்த ஆடைகள் ஈசன் தந்த மாலைகள்
மங்கை மாயி கொண்ட சீதனம்

பூவை சிரசில் கொட்டுறேன் பாதம் அலம்பிக் கேட்கிறேன்
அங்கம் புரண்டு வேண்டுறேன் தாலி காத்து அருள வேணும் (அம்மா)

ஆதி பீட ஆத்தா உதிச்சா
வீடு வந்து சோகம் துடைச்சா

கற்பகமே... கற்பகமே...
அட்சயமே... அட்சயமே...

கற்பகம் எங்களுக்கு திங்களுக்கும் இங்கு தங்கு (அம்மா)

ராகாவில் பாடல்: அம்மா... மாரியம்மா...

1 comment:

  1. அருமையான தொடக்கம். நூறாகப் பெருகட்டும் :)

    ReplyDelete

உங்கள் கருத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்...