Wednesday, December 29, 2010

சொன்னபடி கேளு மக்கர் பண்ணாத


“அம்மாவ், வுங்க கழனில மாடு பூந்திடிச்சி...” வாசலில் குரல் கேட்டது.

கிராமத்திலிருக்கும் உறவினர் வீட்டுக்கு அப்போதுதான் வந்திருந்தேன். மார்கழித் திங்களால் சில்லிட்ட கிணற்று நீரில் முகம் கழுவிக் கொண்டிருந்த போதுதான் அந்தக் குரல் கேட்டது.

“அது பொல்லாத மாடும்மா, எங்களால ஓட்ட முடியல... நடு கழனில அட்டகாசம் தாங்கலம்மா...” அடுத்தவீட்டுப் பெண்தான்(!) சொல்லிக் கொண்டிருந்தாள்.

உறவினர் வெளியூர் சென்றிருந்தார். நான் மட்டுமே ஆண்மகன். அந்தக் காளையை அடக்க... இல்லை இல்லை விரட்ட இந்தக் காளையாச்சு என, ஈர முகத்தை அவசர அவசரமாய்த் துடைத்துக் கொண்டு, வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு வீராவேசமாக கழனியை நோக்கி ஓடினேன்.

வீட்டிலிருந்து நூறு மீட்டர் தொலைவில் வயலும் வயல் சார்ந்த நிலம்தான். வரப்பில் ஓடியபோது அந்த வித்தியாசத்தை உணர்ந்தேன்.

ஐ.டி கம்பெனியில் 24 மணிநேரமும் சாக்ஸினூடே ஷூவினுள் புழுங்கும் கால்கள், செருப்பு கூட அணியாமல் கெட்டிப்பட்ட களிமண் வரப்புகளில் பனியுடன் படர்ந்திருந்த புற்களின் மேல் ஓடியபோது, ஒரு இனம் புரியாத சிலிர்ப்பு என்னுடல் முழுக்கப் பரவியது.

14 அங்குல மானிட்டரே உலகம் எனப் பார்க்கும் கண்களுக்கு நிஜமான உலகம் எதிரே விரிந்தது. அதன் பார்வையின் வீச்சுவரை இடுப்பளவு உயர்ந்த பயிர்கள் காற்றில் சலசலத்துக் கொண்டிருந்தன.

பயிர் நிலங்களைத் தொடர்ந்து குன்றுகளும், அதன் மேல் நிலவை விட குளிர்ச்சியாக சிவப்புச் சூரியனும்... காட்சியின் கவர்ச்சியில் லயித்து அப்படியே நின்றுவிட்டேன்.

சே! ஐ.டி-யால் எவ்வளவு இழந்து விட்டோம். இரவென்றாலும் பகலென்றாலும் டியூப் லைட்டே நமது சூரியன். காலை, மாலை, அந்தி, சந்தி... எதையுமே உணர முடிவதில்லை. சன்னல்கள்கூட அடைக்கப்பட்டுவிட்ட க்யூபிக்கிள்தான் நம்முடைய ஆறடி நிலம்.

இப்படி வேட்டியை மடித்துக் கட்டி, துண்டை மட்டும் தோளில் போர்த்திக் கொண்டு, வெறும் கால்களை மண்ணில் ஒற்றி, காற்றை நுகர்ந்து, அண்ணாந்து வான் பார்க்கும் சுகத்தை அடியோடு இழந்துவிட்டதை நினைத்து சோககீதம் மீட்டிக் கொண்டிருந்தேன்.

சுரீரென வந்த வேலை உறைத்தது.

சட்டென சுதாரித்து கண்களைச் சுழற்றி மாட்டைத் தேடினேன். எங்கும் காணவில்லை. உறவினரின் நிலத்தை அடையாளம் காணவே சற்று நேரம் பிடித்தது. மெதுவாக அதை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

திடீரென நன்கு வளர்ந்திருந்த வயல் நடுவிலிருந்து இரு கொம்புகள் சற்று எழும்பித்தாழ...

‘ஆஹா... அவனா நீ...’ என்று கூச்சலிட்டபடி அங்கே பாய்ந்தேன்.

நான் வயலை அடைய, அதுவும் வெளி வர, நேருக்குநேர் சந்தித்துக் கொண்டதில் ஜல்லிக்கட்டு முரசு கொட்டியது. அது சாதுவான பசுதான். ஆனால் அது கண்களை உருட்டிய விதத்தில், கொம்புகளை சிலுப்பிய விதத்தில் காங்கேய நல்லூர் காளையெனத் தெரிய, எனக்கு சற்று வெடவெடத்தது.

எனக்குப் பின்னால் அப்போதுதான் உழுது நீர் இறைக்கப்பட்ட கழனி. தமிழ் சினிமாவில் மட்டுமே ஹீரோவும் வில்லனும் சேர்ந்து விழுந்து கட்டிப் புரள்வார்கள். இந்தப் பசு இன்னொரு முறை தலையை சிலுப்பினாலே, நானாகச் சென்று விழ வேண்டியதுதான்.

முரட்டுக் காளை ரஜினி மாதிரி ஜல்லிக்கட்டு போஸ் கொடுத்தேன் (வயலில் யாருமில்லையென்ற தைரியம் தான்!). அது அசரவில்லை.

‘சொன்னபடி கேளு...’ சிங்கார வேலன் மாதிரி பாடினேன். அது முறைத்தபடி என்னை நோக்கி ஓரடி வைத்தது. அவ்வளவுதான். பின்வாங்கிய என் கால்கள் சேற்றில் வசமாகச் சிக்கிக் கொண்டதில் என் வீரம் பறந்தோடியது. கை கூப்பி...

‘மாதா... கோ மாதா... போ மாதா...’ என சாவித்ரி குரலில் பாட முயல, ஸ்ருதி நாராசமாய் எழ, அது மிரண்டு ஓடி, ஒரு வீட்டின் கொல்லைப்புரத்தில் நுழைந்து விட்டது.

உறவினர் பாடுபட்டு விதைத்த வயலின் நடு பகுதி முழுதும் பாழ். மாட்டின் மேல் கோபம் வரவில்லை. அதற்குரிய தீனியைத் தராமல் வயலில் மேய விட்ட மாட்டுக்கார வேலன் மேல்தான் கோபம் வந்தது. மாடு நுழைந்த வீட்டுத் தொழுவத்திற்குச் சென்றேன். அங்கே ஒருவர் தவிட்டைக் கலந்து மாடுகளுக்கு தண்ணி காட்டிக் கொண்டிருந்தார்.

‘ஏங்க, உங்க மாட்ட கட்டி வைக்க மாட்டீங்களா?’ சண்டைக்குச் சென்றேன்.

“எல்லா மாடும் கட்டிதானே இருக்கு” என்றார். உண்மைதான். அங்கே எல்லா மாடுகளும் கட்டப்பட்டுதான் இருந்தன. ஆனால் அனைத்தும் எருமை மாடுகள்.

‘ஒரு பசு மாடு வந்துச்சே!’

“அதுவா, அது எங்க வூட்டு மாடுல்ல. கோடி வூட்டு மாடு. அப்பவே வெரட்டிட்டேன்”

‘ஓ! நல்லது. எந்தப் பக்கம் விரட்டினீங்க’

“கழனி பக்கந்தான்”

அட, தேவுடா... மீண்டும் வயலுக்கு ஓடினேன். அங்கே அந்தப் பசு, என்னைப் பார்த்ததும் ஓடிக் கொண்டே வேகவேகமாய் பயிரைத் தின்னத் தொடங்கியது.30 நிமிடம் கடும் போராட்டம். சேற்றில் இறங்கி, வேலிகளைத் தாண்டி, கிணறுகளைச் சுற்றி, வரப்புகளில் ஓடி (நான் யார் பயிரையாவது மிதித்து விட்டால், கிராமத்து வீச்சரிவாள் என்னை அறுவடை செய்துவிடும்!) ஒரு வழியாக அந்தப் பசுவை வயலை விட்டு விரட்டிவிட்டேன்.

ஆனாலும் தீனி அகப்பட்டு விட்டதில், அதை அசை போட்டபடி அசைந்து அசைந்து நிதானமாகச் சென்றது பசு.

அதற்கு மேல் என்னால் நிற்க முடியவில்லை. வீடு சென்று, திண்ணையில் கால் நீட்டி, பெருமூச்சு விட்டு அமர்ந்தேன். என் மென்மையான(!) பாதங்கள் விண்விண்னென வலித்தது. குனிந்துப் பார்த்தால்...

முட்கள் குத்தி கிழிபட்டதில், சொட்டுச் சொட்டாய்... திட்டுத்திட்டாய் ரத்தம்.

கிணற்றடிக்குச் சென்று ஜல்லிக்கட்டு ரணங்களை கழுவிக் கொண்டிருக்கும்போது “அம்மாவ், கழனில மாடு....” என்று வாசலில் மறுபடி குரல் கேட்டது.

Tuesday, December 28, 2010

கீ-போர்டைப் பார்க்காதே

தமிழோவியம்.காம் இணைய இதழில் எனது கட்டுரை...

கீ-போர்டைப் பார்க்காமல் எப்படி ஏ.ஆர்.ரஹ்மான் மாதிரி வாசிப்பது என்று அங்கலாய்க்க வேண்டாம். நான் சொல்வது கணினியின் கீ போர்டை.
ரஹ்மான் கூட தன் பத்து விரல்களையும் பயன்படுத்திதான் உலகை மயக்குகிறார். ஆனால் நம்ம கணினிக்காரர்கள், இரு ஆள்காட்டி விரல்களால் கீ-போர்டை பாக்குச்சட்டியைப் போலக் குத்திக்குத்தி உலகையே ஆள நினைக்கிறார்கள்.
மேலும் படிக்க...