Tuesday, December 11, 2012

எழுதிய பாடல் 2: மாங்காடு காமாட்சி


பாடல்: மாங்காட்டில் வாழும் எங்கம்மா
பாடுபொருள்: மாங்காடு காமாட்சி
பாடியவர்: உண்ணி கிருஷ்ணன், ஹரிணி
ஆல்பம்: ஓம் நவசக்தி ஜெய ஜெய சக்தி
இசை: மண்ணச்சநல்லூர் கிரிதரன்

கணவன் சீரியசாக ஒன்றைச் செய்யும் போது, மனைவி விளையாட்டாய், ஆசையாய்க் குறுக்கிட, அது சண்டையில் முடியாத வீடுண்டா? வீட்டுக்கு வீடு வாசற்படிதான். கயிலை வீட்டுக்கும் வாசற்படிதான்.

உலக காரியத்தில் இருந்த சிவனின் கண்களை, பார்வதி விளையாட்டாய் மூட, அது சண்டையாகி, பின் சாபமாகி பார்வதியைப் பிரிக்கிறது.

மீண்டும் சிவகரம் பிடிக்க, மாங்காட்டில் காமாட்சியாய் தீ குண்டங்களின் நடுவே, ஒற்றைக் காலில் நின்று கடும் தவமிருக்கிறாள் பார்வதி.

சிவன் கோபமிளகிப் புறப்பட, ஹையா... தங்கைக்குக் கல்யாணம் என விஷ்ணுவும் கணையாழியை சீதனமாய் எடுத்துக் கொண்டு புறப்பட கதையில் டிவிஸ்ட்.

இழந்த பார்வையைக் கேட்டு சுக்ராச்சாரியாரும் (வெள்ளி) மாங்காட்டில் சிவனை நோக்கித் தவமிருக்கிறார் (பார்வை இழந்தது தனி கிளைக் கதை). பத்தினியைவிட எனக்கு பக்தனே முக்கியம் என வெள்ளிக்கு அருளி வெள்ளீஸ்வரர் ஆகிறார் சிவன். பார்வதியை காஞ்சிக்குச் சென்று தவத்தைத் தொடரப் பணிக்கிறார்.

ஏமாந்து, வைகுண்டம் திரும்ப நினைத்த பெருமாளை, அங்கேயே தங்கும்படி மார்க்கண்டேயன் வேண்ட, அவரும் பக்த பக்திக்கு உருகி கணையாழியைக் கையில் பிடித்தபடியே அங்கு படுத்துக் கொள்கிறார். சிவன் பிற்பாடு, ஏகாம்பரநாதனாய், ஏகனாய் காஞ்சியில் காமாட்சியைக் கரம் பிடிக்கிறார்.

காமாட்சி, வெள்ளீஸ்வரர், வைகுண்ட பெருமாள்... மூவருக்கும் தனித்தனி கோயில்கள் மாங்காட்டில் அருகருகே. இளங்காலையில் இங்கு சென்று வருவதே ரம்மியமான அனுபவம்.

காமாட்சியின் கருவறையில், ஆதி சங்கரர் ஸ்தாபித்த மகாமேருவே இங்கு பிரதானம். மூல விக்கிரகத்தின் முன் ஒளிரும் விளக்கே காமாட்சி விளக்கு.

இங்கு வேண்டுதல் நிறைவேற, எலுமிச்சையுடன் ஆறுவாரங்கள் வழிபடுகிறார்கள்.

இத்தல வரலாற்றைப் பாடி, காதல் மனங்களாய் திருமணம் வேண்டி, பின் தம்பதியாய் நல்மகவை வேண்டுவது போல பாடலை வடித்திருக்கிறேன்.

முதல் சரணத்தை உண்ணி தொடங்கி ஹரிணி தொடர, அடுத்த சரணத்தை ஹரிணி தொடங்கி, உண்ணி தொடர... இது ஒரு பக்தி டூயட்!

கோரஸ்:
எங்கம்மா மாதங்கி
என்றும் நீ தாதங்கி
விரும்பி விரும்பிதான்
கொடுப்பாய் நீயே வா வா வா வா

பல்லவி:
மாங்காட்டில் வாழும் எங்கம்மா - நீ
பூங்காட்டின் வாசம் தெய்வம்மா

அனுபல்லவி:
ஆடிப் பொன் மாதம்தான் கூடிக் கூழ் சாதம்தான்
பந்தல் தச்சி பந்தி வெச்சுத்தான் கும்பிட்டேன் (மாங்காட்டில்)

சரணம் 1:
ஆதிகாமாட்சி தாயே அக்கினி் தவசியே
ஏகனின் காதலும் நீயே

வைகுண்ட வாசனின் கணையாழி காக்கும்
தீகுண்ட வரத்தை காஞ்சியில் பார்க்கும்

சிவமண தவத்தை நான் பாடி
திருமண வரத்தை நான் நாடி

ஆறு வாரந் தோறும் எலுமிச்சை கொண்டும்
மஞ்சள் கட்டி மேரு சுத்தித்தான் கும்பிட்டேன் (மாங்காட்டில்)

சரணம் 2:
வெள்ளீஸ்வரனின் தேவி ஒற்றைக்காலில் நின்றாய் நீ
ஏழையின் காவலும் நீ

கிளி உந்தன் கையில் உன்னருள் பேசும்
அளி எந்தன் பிள்ளை என்மனம் பொங்கும்

காமாட்சி விளக்கொளியை தேடி
என் மனவொளி வேண்டி தேவி

ஆடி வெள்ளி தோறும் செவ்வரளி கோத்தும்
தொட்டில் கட்டி மேரு ஒத்தித்தான் கும்பிட்டேன்  (மாங்காட்டில்)

ராகாவில் இந்த ஆல்பத்தின் சுட்டி: ஓம் நவசக்தி ஜெய ஜெய சக்தி
ஹரிணி Solo-வாகவும் பாடியிருக்கிறார்.

Friday, December 7, 2012

எழுதிய பாடல் - 1: சமயபுர மாரியம்மன்

சமீபத்தில் சென்னை வந்திருந்த எழுத்தாளர் என். சொக்கனைச் சந்தித்தேன்.

‘நீங்கள் எழுதிய பாடல்களை, அதன் குறிப்புடன் ஒவ்வொன்றாகப் பதிவிடலாமே...’

கம்ப ராஜனை, இளையராஜாவைப் பற்றி தொடர்ந்து எழுதும் இவர், இப்படிச் சொல்லி என்னை ஊக்கிவிட..

இதோ எனது பாடல்களின் பதிவு வரிசை.

பாடல்: அம்மா... மாரியம்மா...
பாடுபொருள்: சமயபுர மாரியம்மன்
பாடியவர்: ஹரிணி, மண்ணச்சநல்லூர் கிரிதரன், குழுவினர்
ஆல்பம்: ஓம் நவசக்தி ஜெய ஜெய சக்தி
இசை: மண்ணச்சநல்லூர் கிரிதரன்

ஆடி சமயத்தில், சமயப் பாடல்களை எனக்கு அருளியவள் சமயபுர மாரியே.

திருச்சி பெருவளை வாய்க்கால் கரையோரம், கண்ணபுரம் என்றழைக்கப்பட்ட சமயபுரத்தில் கொலு வீற்றிருந்து, குழந்தைகளை அம்மை நோயிலிருந்து காக்க, தானே கடும் விரதமிருக்கும் பெருந்தகை அவள்.

அவள் தலைமேல் ஐந்து தலை நாகம் குடை விரிக்க, அதுவே சொற்பதமாகி முதல் சரணம் துவங்கியது...

    சர்ப்பக் குடை ஆட்சிகள் கண்ணபுரக் காட்சிகள்
    அன்னை மாரி தந்த தரிசனம்...

அவளிடம் சரணடையும் விதமாக, ஹரிணி சரணங்களைப் பாட, சரணத்தின் இடையிரு வரிகளை சிலிர்க்க வைக்கும் குரலில் கிரிதரன் பாடியிருக்கிறார்.

பல்லவி:
அம்மா... மாரியம்மா...

சமயபுரத்தாயி நீ அபய கரம் தாயேன் மாயி
பெருவளை வாய்க்காலில் நீ இருக்கிறாயே தீர்த்தமாயி (அம்மா)

சரணம்:
சர்ப்பக் குடை ஆட்சிகள் கண்ணபுரக் காட்சிகள்
அன்னை மாரி தந்த தரிசனம்

வெப்பம் பொங்க தவிக்கிறேன் நோயும் அண்ட அழுகிறேன்
வேப்பந் தரித்துக் கேட்கிறேன் அம்மை தடுத்து காக்க வேணும் (அம்மா)

புள்ள பெத்த ஆத்தா சிரிச்சா
விரதம் கொண்டு நோயுந் தீர்த்தா

மகத்துவமே... மகத்துவமே...
மருத்துவமே... மருத்துவமே...

மகத்துவம் எங்களுக்கு பொங்கலுக்கு வந்து உண்ணு (அம்மா)

சரணம்:
தீ மிதிக்கும் அங்கங்கள் அலகு தாங்கும் உள்ளங்கள்
அன்னை மாயி காக்கும் கரிசனம்

சேறு பூசிக் கொள்கிறேன் சோறு மண்ணில் உண்கிறேன்
பாதம் அண்டி கேட்கிறேன் சொந்தங் கொஞ்சங் காக்க வேணும் (அம்மா)

ஏழு உலகை ஆத்தா படைச்சா
ஏழை உறவை காத்து அணைச்சா

பரவசமே... பரவசமே...
பரிமளமே... பரிமளமே...

பரவசம் எங்களுக்கு பந்தலுக்கு வந்து உண்ணு (அம்மா)

சரணம்:
மாயன் தந்த ஆடைகள் ஈசன் தந்த மாலைகள்
மங்கை மாயி கொண்ட சீதனம்

பூவை சிரசில் கொட்டுறேன் பாதம் அலம்பிக் கேட்கிறேன்
அங்கம் புரண்டு வேண்டுறேன் தாலி காத்து அருள வேணும் (அம்மா)

ஆதி பீட ஆத்தா உதிச்சா
வீடு வந்து சோகம் துடைச்சா

கற்பகமே... கற்பகமே...
அட்சயமே... அட்சயமே...

கற்பகம் எங்களுக்கு திங்களுக்கும் இங்கு தங்கு (அம்மா)

ராகாவில் பாடல்: அம்மா... மாரியம்மா...

Friday, November 30, 2012

சபரிமலை வா சரணம் சொல்லி வா - உண்ணி கிருஷ்ணன்



‘பாட்டைப் பாடும் போது, நானே மலைக்கு நடந்து செல்வது போல ஒரு உணர்வு எழுந்தது’ - உண்ணி கிருஷ்ணன் விழா மேடையில் பேசிக் கொண்டிருந்தார்.

சென்னை மகாலிங்கபுரம், ஐயப்பன் கோவிலில், ‘சபரிமலை வா சரணம் சொல்லி வா’ இசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா. அவர் வார்த்தைகள் என் மனசை மிருதுவாக வருடின.

1974-ல் என் தந்தை, காஞ்சியிலிருந்து மதுரை, குமுளி, கோழிகானம், தேவிகுளம், உறைகுழி தீர்த்தம் வழியாக சபரிமலைக்கு பாத யாத்திரை சென்றதை நினைத்து, நான் எழுதிய பாடல் அது. கானாஞ்சலி கிரிதரனின் ஐந்தாவது இறையிசை ஆல்பம்.


கூட்டாக ஐயப்பனைக் காண்பது போலவே, கூட்டாக பாடல்கள் எழுதினோம். கிரிதரன் மூன்று, அவரது குருசாமியும், நண்பர் ஸ்ரீதரும் ஒவ்வொன்று, நான் இரண்டு எழுத, அவற்றை உண்ணி கிருஷ்ணன் அழகாகப் பாடிக் கொடுத்தார்.

எத்தனையோ நிறுவனங்களை நிர்வகித்து நடத்திய கிரிதரனை, இறையிசையில் லயிக்க, நேரடியாகக் கட்டளையிட்டது ஐயப்பனே!

இரு வருடங்களுக்கு முன், ஆலபுழா மாவட்டத்தில் முக்கால் வட்டம் என்னும் இடத்திலிருக்கும் பழைமையான ஐயப்பன் கோவிலுக்குச் சென்றிருந்தார் கிரிதரன். இது ஐயப்பன் களரி பயின்ற இடம். அங்கே ஒருவர் எதிர்பட்டு இவர் தலையில் கை வைத்து, ‘அடுத்த வருடம் இந்தக் கோவிலுக்கு வருவதற்குள், நீயே இசையமைத்து பாட்டும் எழுதி ஐயப்பனுக்கு கீதாஞ்சலி செய்து வருவாய்’ என அருள்வாக்காய்ச் சொல்ல, அதனால் உந்தப்பட்டு கிரிதரன் வெளியிட்டதே ‘ஐயன் மலை எங்கள் மலை’

தொடர்ந்து ‘விந்தைகள் புரிந்தாய் நீ என் வாழ்விலே’ (பெருமாள்), ‘ஓம் நவசக்தி ஜெய ஜெய சக்தி’, ‘உச்சி பிள்ளையாரே சரணம்’ ஆல்பங்களை வெளியிட்டு இப்போது மீண்டும் இசைக்க வைத்த ஐயப்பனுக்காக. இதில் முக்கால் வட்ட ஐயனைப் போற்றிப் பாடலையும் எழுதியிருக்கிறார்.

மூன்றாம் ஆல்பத்திலிருந்து எனக்கு பாடல்கள் எழுத வாய்ப்பளித்து, அந்த விழா மேடையில் கௌரவமும் தந்தார். அவருக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தையில்லை.

பாடுபொருள், தல வரலாறு, அனுபவம், இறையிடம் சரணடையும் போது மடை திறக்கும் உணர்ச்சிகளை, சந்ததிற்கு ஏற்ப பாடலாய் இதுவரை வடித்தேன். கிரிதரன் இசையின் தரத்தை அடுத்தடுத்த ஆல்பங்களில் உயர்த்த, அதற்கு ஈடு கொடுக்க, ‘கவிதை இயற்றிக் கலக்கு’-வில் தொடை நயத்தையும், சந்த இலக்கணத்தையும் படித்தபின், இம்முறை எழுதிய வரிகளில் எளிமையும், சந்தமும் சற்றுக் கூடியது. நூலாசிரியர் பசுபதிக்கும், ‘அறுசீர்’ பதிவில் இந்த நூலைக் குறிப்பிட்ட என். சொக்கனுக்கும் என் நன்றிகள்.

ஒரு பாடலை யாத்திரை வடிவிலும், மறு பாடலை யாசக தொனியிலும் வடித்திருக்கிறேன்.

இந்த ஆல்பம் ராகா.காம்-இல் ஐயப்பன் ஆல்பங்களின் வரிசையில் மூன்றாம் இடத்தை எட்டியிருக்கிறது. இங்கே கேட்கலாம்.

Tuesday, September 18, 2012

மீண்டும் ஹரிணி...


ரெக்கார்டிங் பூத்.

சில நொடி கண்மூடியபின் உணர்வு பூர்வமாக பிள்ளையாரைப் பாடத் தொடங்கினார் ஹரிணி.

தந்தாணி கரத்தாய் ஆனந்த முகத்தாய்
தாயென வருவாய் - மன
சாந்தியை தருவாய்
ஐங்கரா... ஐம்புலா...
சதுர்த்தியில் எம்மை காத்திட வருவாய்...

விவரணத்திற்கு அப்பாற்பட்டு சொக்க வைக்கும் அவரது குரலை, கன்சோல் ரூமில் தன்னிலை மறந்து கேட்டுக் கொண்டிருந்தேன். பாட்டை எழுதிய போது மெல்ல நடந்த உணர்ச்சிகள் இப்போது அவர் குரலொலியில் தடதடத்தன.

கிரிதரன் இசையமைத்து ஆடி மாதம் வெளிவந்த கானாஞ்சலியின் ஓம் நவ சக்தி ஜெய ஜெய சக்தி-க்கு கிடைத்த வரவேற்பு தந்த சக்தியில், அதைப் போலவே உண்ணி கிருஷ்ணன், ஹரிணியின் அற்புதக் குரல்களில் பிள்ளையாருக்கு இசையாஞ்சலி செய்ய முடிவானது.

கிரிதரன், உண்ணி கிருஷ்ணனுக்கான பாடல்களை மடமடவென எழுதிவிட்டு, ஹரிணிக்கான பாடல்களை என்னை எழுதச் சொன்னார். நாளை ரெக்கார்டிங் என்றும் சொல்லி அதிர வைத்தார்.

பிள்ளையாரப்பா, இதுக்கு மேல எந்த வார்த்தையும் இந்தப் பிள்ளைக்கு வரலையேப்பா. முறையிட்டேன்.

கணங்களின் அதிபதி ரெக்கார்டிங்கை இரண்டு நாள் தள்ளி வைத்து, பாடல்களை கிள்ளிக் கொடுத்தார். தந்தத்தை எழுத்தாணியாக்கி பாரதம் எழுதியவனை தந்தாணி கரத்தாய் என்று விளித்தே துவங்கினேன்.

ஆறு பாடல்களுடன், விநாயகர் அகவலுடன் ரெக்கார்டிங் இனிதே நிறைந்தது. கிரிதரன் இரண்டு பாடல்களையும், அகவலையும் பாடியிருக்கிறார்.

ஒளவையின் வரிகளை இசையுடன் கேட்கும்போது, வெட்கம் என்னை வானமாய்க் கவ்விக் கொள்கிறது!

எழுதிய சில வார்த்தைகளும், அதைத் தந்த தந்தன் காலடிக்கே சமர்ப்பணம்.

இந்த உச்சிப் பிள்ளையாரே சரணம் ஆல்பத்தின் பாடல்களையும், நவசக்தியின் பாடல்களையும் raaga.com-ல் கேட்கலாம், வாங்கலாம். அதன் சுட்டிகள் கீழே:

ராகாவில்: உச்சிப் பிள்ளையாரே சரணம்
ராகாவில்: ஓம் சக்தி நவசக்தி ஜெய ஜெய சக்தி

Friday, July 27, 2012

ஓம் நவ சக்தி ஜெய ஜெய சக்தி


1992

‘ரகு... நீ பாடினது போதும். முடிச்சுக்கோ’

நான் இன்னும் முதல் சரணமே முடிக்கவில்லை. அதற்குள் பாட்டுப் போட்டியின் நடுவர்தான் இப்படிச் சொல்லி விட்டார். மற்றொரு நடுவர் உணர்ச்சியற்று கண்ணை மூடிக் கொண்டிருந்தார்.

நான் பாடினால் கர்ண கொடூரமாக இருக்கிறதென பள்ளி நண்பர்கள் கிண்டலடிக்க, ஒரு வீம்புக்காக பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டதில் மூக்குடைபட்டது.

அன்றுடன் பாத்ரூமில் பாடுவதையும் நிறுத்திக் கொண்டேன்.

-- கட் --

2012

‘ரகு... வீட்டுக்கு வா’

நான் முன்பு பணிபுரிந்த IT கம்பெனியின் நிறுவனர் கிரிதரன் போனில் அழைத்தார். சென்றேன்.

கீ-போர்டில் சில டியூன்களை வாசித்துக் காண்பித்தார்.

அவர் SSI, Radiant, Lambent, Elmaq, Onspec கம்பெனிகளை நடத்தியவர். தற்போது EdServ-ஐ நடத்திக் கொண்டிருப்பவர். இசைத் துறையிலும் ஈடுபாடு கொண்டவர். சில மாதங்களுக்கு முன் அவரே இசையமைத்து, பாட்டெழுதி, உண்ணி கிருஷ்ணன் பாட, ஒரு ஐயப்பன் இசை ஆல்பத்தை - அய்யன் மலை எங்கள் மலை - வெளியிட்டிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக அடுத்த ஆல்பத்திற்கான டியூன்கள் இவையெனப் புரிந்தது.

‘இதெல்லாம் அம்மன் பாடல்களுக்கான டியூன்கள். ஆடியில் ரிலீஸ் பண்ணலாம்னு இருக்கேன்’

‘ரொம்ப நல்லா இருக்கு சார்’

அடுத்து அவர் சொன்னது, டெரர் கிளப்பியது.

‘இந்தவாட்டி பாட்ட நீ எழுது’

‘ஐயோ, பாட்டு எனக்கு ஒத்துக்காத விஷயம்னு உங்களுக்கே தெரியும். நீங்க தானா தானான்னு எதையாவது சொன்னீங்கனா, நான் வாணா வாணானு ஓடிடுவேன்’

‘அதெல்லாம் எனக்குத் தெரியும். உனக்காக சில டம்மி லைன்ஸ் போட்டு வெச்சுருக்கேன்”.

அதை அவர் பாட, எனக்கு டெரர் டபுளானது. அவையே அற்புதமாக இருந்தன.

‘இதுவே சூப்பரா இருக்கே. நான் என்னத எழுதறது’

‘சரியா பாரு. இது சந்தம் மட்டுமே. அர்த்தம் இல்லை. கிளம்பு. மூணு நாள்ல முதல் பாட்டோட வா’.

சரி. நமக்கு பாடத்தானே வராது. எழுதித்தான் பார்ப்போமே. எழுதிட்டா ரொம்ப வசதி. நம்ம பாட்டையே பாடும்போது யாரும் கிண்டலடிக்க மாட்டாங்களே!.

சமயபுரம் மாரியம்மனுக்கு முதல் பாடல்.

    அம்மா... மாரியம்மா...
    
    சமயபுரத்தாயி நீ அபய கரம் தாயேன் மாயி
    பெருவளை வாய்க்காலில் நீ இருக்கிறாயே தீர்த்தமாயி (அம்மா)
    
    சர்ப்பக் குடை ஆட்சிகள் கண்ணபுரக் காட்சிகள்
    அன்னை மாரி தந்த தரிசனம்
    
    வெப்பம் பொங்க தவிக்கிறேன் நோயும் அண்ட அழுகிறேன்
    வேப்பந் தரித்துக் கேட்கிறேன் அம்மை தடுத்து காக்க வேணும் (அம்மா)

சந்தம் கச்சிதமாகப் பொருந்த, வேர் விட்ட நம்பிக்கையில் முழுப் பாடலும் வளர்ந்தது. பிற பாடல்களும் கனிந்தது.

முழு அர்ப்பணிப்புடன் இறையுடன் கலந்துவிட்டால், மாற்றமும் சாந்தமும் மனதில் தானாகவே குடிகொள்கின்றன. பட்டீஸ்வர துர்க்கையிடம் நெருக்கத்தையும், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியின் வருடலையும் உணர்ந்தேன்.

உண்ணி கிருஷ்ணன், ஹரிணியின் அற்புதக் குரல்களுடன் பாடல்கள் இசையரங்கேறின. கிரிதரனும் பாடியிருக்கிறார். 

இது கானாஞ்சலியின் “ஓம் நவ சக்தி, ஜெய ஜெய சக்தி” இசை ஆல்பமாய் வெளிவந்திருக்கிறது.


பாடல் குறிப்புகள்:

அம்மா மாரியம்மா - சமயபுரத்தாளை பெருவளை வாய்க்காலின் தீர்த்தமாகவும், பிள்ளைகளை அம்மை நோயிலிருந்து விடுவிப்பவளாகவும், தாலி காக்கும் ஆத்தாளாகவும் சித்தரிக்கிறது.

மாங்காட்டில் வாழும் எங்கம்மா - தீயின் நடுவே ஒற்றைக் காலில் தவம் புரிந்து சிவனை மணந்த காமாட்சியைப் பாடி, இருமனங்களாய் திருமண வரமும், தம்பதியாய் குழந்தை பாக்கியத்தையும் வேண்டுகிறது.

பட்டீஸ்வர துர்கையே - அனைத்திற்கும் மூல சக்தியான பராசக்தி துர்கையின் வடிவங்களைப் பாடி, அக்கிரமங்களை போக்கவும், தோஷங்களை நீக்கவும், மருத்துவம் கைவிட்ட நோய்களிலிருந்து காக்கவும், தொடரும் துர்கணங்களை விரட்டவும் மன்றாடுகிறது.

வருவாய் அருள்வாய் - வடபழனி சாந்தநாயகியை குலதெய்வமாக, அலைபாய்ந்த மனதில் வந்தமர்ந்து, அச்சத்தைத் தீர்த்து அமைதியைத் தந்த தேவியாகப் பாடுகிறது.

அகிலாண்டேஸ்வரி மாதா ஜனனி - யானையும் சிலந்தியும் பூஜித்த திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரனின் பாகமாய் இருப்பவளை, சிவனடியார் பெண்ணாய் வேடம் தரிப்பவளை அடைத்து, காலடியில் அழுது, தாய்மடி கேட்கிறது.

தேர் திருவிழா - மலையனின் பெண்ணாய், மதுரை வம்சியாய் உதித்து, பாண்டி நாட்டை ஆண்ட மீனாட்சியின் அழகை, சாம்பல் பித்தனின் மாலை கண்ட விதத்தைப் பாடுகிறது.

அகிலலோக ஜகந்நாயகி - சர்வ சங்கடங்களுக்கும் நிவாரணியாக இருக்கும் சோழங்கநல்லூர் ப்ரத்யங்கரா தேவியின் பஞ்சகம் இசையுடன் பாடலாய் கலந்திருக்கிறது.

இன்னமும் பாரா முகம் - நடிப்பிசைப் புலவர் (அமரர்) கே.ஆர். ராமசாமியின் பழமையான பாடல், புதிய இசையில் மீண்டும் ஒலிக்கிறது.

உண்ணா முலையம்மனே - தந்தனும் கந்தனும் உண்ணா முலையம்மனை, திருவண்ணாமலையாளும் தேவியை, பெண்களை அண்டும் முலையின் நோய்களிடமிருந்து காப்பவளாய் வரித்து, அவள் ஜோதியிடம் தஞ்சமடைகிறது.

பாடல்களை galatta.com-ல் கேட்கலாம், வாங்கலாம். இசையும் பாடலும் உங்கள் மன அழுத்தங்களை இளகச் செய்தால், அதுவே எங்கள் பாக்கியம்.

Wednesday, January 11, 2012

ஐ.டி கம்பெனியில் வர்ணாஸ்ரமம்

பண்புடன் - இணைய இதழில் வெளியான எனது கட்டுரை...

“நீ என்ன ஜாதி தம்பி?”

அந்த முதியவர் கேட்ட போது என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. பள்ளத்தில் சைக்கிள் இறங்கியதால் விழுந்துவிட்டவரை தூக்கி உட்கார வைத்திருக்கிறேன். அவருக்காக ஹேண்டில் பாரை சரி செய்த போதுதான் அக்கேள்வியைக் கேட்டார்.

இப்போது அவருக்குப் பிடித்த ஜாதியில் நான் இல்லாவிட்டால் மீண்டும் ஹேண்டில் பாரை திருகிக் கொண்டு விழுந்துவிடவா போகிறார்?

“உங்களுக்கு உதவின ஜாதி... பாத்து போங்க...” அனுப்பி விட்டு நடையைத் தொடர்ந்தேன்.

பெற்ற உதவிக்குக் கூட ஜாதி பார்த்துதான் நன்றி சொல்வார்களா? மக்களின் பாதுகாப்பும், வாழ்க்கைத் தரமும் உயர வகுக்கப்பட்ட வர்ணாஸ்ரமம் கால மாற்றத்தில் இந்தளவிற்குத் திரிந்துவிட்டது வேதனை. இதன் நோக்கத்தை ஐ.டி துறையைக் கொண்டு விளக்குகிறேன்.

நான் பணிபுரியும் ஐ.டி கம்பெனியுடன் வியாபார ரீதியாக தொடர்பிலிருக்கும் கம்பெனிகளுக்கு,  புதிய ப்ராஜெக்டை ஆரம்பித்து வைக்க அல்லது இயங்கிக் கொண்டிருக்கும் ப்ராஜெக்டில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்க நான் செல்வதுண்டு. அந்தக் கம்பெனிகள் எனக்கென பிரத்யேகமாக அடையாள அட்டையைத் தரும். அது அவர்களுடைய வழக்கமான அட்டையைப் போலவே இருந்தாலும், வேறு நிறத்தில் இருக்கும்.

ஒருநாள் ஒரு கம்பெனியில் தீவிர விவாதத்தில் இருந்தேன். எனக்கு ஒதுக்கப்பட்ட அறையில், ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு மேல் விவாதத்தைத் தொடர்ந்திருக்கிறேன். அந்த நேரத்தில் அந்த அறையை ரிசர்வ் செய்திருந்த நபர், பொறுமையிழந்து கத்திக் கொண்டே, என்னைத் திட்டிக் கொண்டே வந்தார். உடன் இருந்தவர்கள் குறுக்கிடக் காட்டிய தயக்கம், அவரின் பதவியை உணர்த்தியது.

“என்ன பிரச்சனை சார்?” எழுந்தபடி கேட்டேன். என் அடையாள அட்டையின் நிறம் அவர் கண்ணில் பட, சட்டென நிதானத்திற்கு வந்தார். 

அது வேறு கம்பெனியிலிருந்து வரும் டொமெய்ன் எக்ஸ்பர்ட்டை (Domain Expert) குறிக்கும் முதல் வர்ணம்.

“இங்கே ஒரு முக்கிய மீட்டிங் நடத்த வேண்டியிருக்கிறது. உங்களுடையது எப்போ முடியும்?”. இப்போது அவர் குரலில் கண்ணியம் தெரிந்தது. இந்த வர்ண ஜாலம்தான் வர்ணாஸ்ரமத்தின் அடிப்படை.

எந்த ஐ.டி ப்ராஜெக்டாக இருந்தாலும் நான்கு குழுவினர்களின் பணி முக்கியமானவை.

1. ப்ராஜெக்ட் சம்பந்தமான அறிவியல் அனுபவத்துடன் ப்ராஜெக்டை வடிவமைத்துத் தரும் குழு - டொமெய்ன் எக்ஸ்பர்ட்ஸ் (Domain Experts).

2. முதல் குழுவின் வழி காட்டுதலின் படி Java, .Net போன்ற கணினி மொழிகளைப் பயன்படுத்தி ப்ராஜெக்டை உருவாக்கும் குழு - டெவலப்பர்ஸ் (Developers).

3. உருவாக்கப்பட்டதை விற்பனை செய்யும் குழு - சேல்ஸ் (Sales).

4. ப்ராஜெக்ட் நிறுவப்படும் இடங்களில் அதை இயங்க வைக்கும் குழு - ஆபரேஷன்ஸ் (Operations).

இந்தக் குழுக்கள், அதனதன் பணியைச் சரியாகச் செய்தால்தான் ப்ராஜெக்ட் வெற்றிகரமாக இயங்கும். இவர்களிடையே அனுசரணையும் முக்கியம். சேல்ஸ் குழுவின் மூலம் வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து, ஆபரேஷன்ஸ் குழுவின் மூலம் நடைமுறை சிக்கல்களை அறிந்து, டொமெய்ன் எக்ஸ்பர்ட்ஸ் குழு மேலும் வழிகாட்டுவதை டெவலப்பர்ஸ் கடைபிடித்தால்தான் ப்ராஜெக்ட் மேற்கொண்டு வளரும்.

ப்ராஜெக்டை இப்படி வளர்ப்பதைப் போலவே, சமுதாயத்தை வளர்க்க, ப்ராஜெக்ட் குழுக்களைப் போலவே நான்கு குழுக்கள் அன்றைய நாளில் நியமிக்கப்பட்டன. அறம் வளர்ப்பவர், அதன்படி நாட்டை நடத்திக் காப்பவர், வருவாய் ஈட்டுபவர், இயக்கத்திற்கு உழைப்பவர்.

சில ஐ.டி கம்மெனிகள் அவுட் சோர்சிங் (Out Sourcing) முறை மூலம் வேறு கம்பெனிகளிலிருந்து இக்குழு நபர்களை வருவிக்கும் போது, அவர்களின் பணியை மற்றவர் உணர்ந்து நடந்து கொள்ள வர்ண அடையாள அட்டைகளைத் தருகிறது.

அன்றைய நாளில்,  போட்டோ அடையாள அட்டையை கழுத்தில் தொங்கவிட்டுக் கொண்டு பந்தா காட்டுவது கண்டுபிடிக்கப் படாததால், வண்ணத் துணிகளை தலையில் பாகையாக, இடையில் கச்சையாக, தோளில் பட்டையாகக் கட்டிக் கொண்டார்கள் என நினைக்கிறேன். வெள்ளை, சிவப்பு, பச்சை, கறுப்பு போன்ற நிறங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடும்.

கல்லூரி முடித்து மாணவர்கள் கம்பெனியில் சேரும்போது, முதலில் அனைவருக்கும் பொதுவான பயிற்சி அளித்து, அதில் அவர்களின் தேர்ச்சியை, திறமையை வைத்து, நான்கு குழுக்களுக்குள் ஒன்றை ஒதுக்கி, அதற்கான பிரத்யேக பயிற்சிக்குப்பின் அவர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.

இப்படித்தான் வர்ணாஸ்ரமமும் தகுதியின் அடிப்படையில் நாட்டை உருவாக்கும் நோக்கத்துடன் தோன்றியதே. வனப் பகுதியிலிருந்து, வளப் பகுதிக்கு நகர்ந்த மனிதனுக்கு ஜாதி ஏது?

ஒரு நோக்கம் நிறைவேறியபின் அதற்கான முனைப்புகள் அர்த்தம் இழக்கின்றன.

இயங்கத் தொடங்கிய ப்ராஜெக்ட் மேலும் விஸ்தரியும் போது, அதன் குழுக்களில் புதிய நபர்கள் சேர்கிறார்கள். பழையவர் வேறு கம்பெனிக்குத் தாவுகிறார்கள். சிபாரிசில் சிலர் நுழைகிறார்கள். இவர்கள் அடிப்படையையும், நோக்கத்தையும் தெரிந்து கொள்ள முயலாமல், எதையாவது செய்து ப்ராஜெக்டை சொதப்புகிறார்கள். பிரச்சனைகள் முளைக்கத் தொடங்குகின்றன. பழியை ஒருவர் மீது  ஒருவர் சுமத்த சண்டைகள் ஆரம்பம். இன்று இந்த நான்கு குழுக்களும் அடித்துக் கொள்ளாத ஐ.டி கம்பெனிகளே இல்லை.

வர்ணாஸ்ரமமும் சந்ததி வளர்ச்சியில், மதங்களாகி, ஜாதிகளாகி சில சாரார் மட்டுமே உயர, பல இடங்களில் எப்போதும் கலவர நிலவரம். 

ஐ.டி கம்பெனிகளெல்லாம், செலவுகளைக் குறைக்க, ஆட்களைக் குறைக்க க்ளவுட் கம்யூட்டிங் (Cloud Computing) என்ற அடுத்த கட்ட டெக்னாலஜியை நோக்கி நகரத் தொடங்கிவிட்டன.


இது ஐ.டி குழுக்களின் உட்பிரிவுகளை கணிச்சமாகக் குறைக்கும். அது போல ஜாதிகளும் குறைந்தால் சரி.