Wednesday, October 26, 2016

எம். எஸ். தோனி (சினிமா)


அபூர்வமாக சில படங்கள் மன நிறைவைத் தரும். எம். எஸ். தோனி அவ்வகைப் படம்.

வில்லனின்றி, வன்முறையின்றி, அபத்தக் காமெடியின்றி மூன்று மணி நேரம், ஒரு 20-20 கிரிக்கெட் மேட்சைப் போலவே செல்கிறது  தோனியின் வாழ்க்கைப் படம்.

மனிதன் ரசிக்கும் ஒரு விஷயம் சாயல்.

தந்தையின்/தாயின் ஜாடையிலேயே இருக்கிறது குழந்தை. அவரைப் போலவே இவன் செய்கிறான். இது மனிதனின் அன்றாடப் பேச்சு. அதற்குச் சிறந்த வடிவமாய் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். தோனியின் அச்சில் தன்னைக் கச்சிதமாய் வார்த்தெடுத்திருக்கிறார்.

அமைதியான முகபாவங்கள், இக்கட்டிலும் புன்னகைக்கும் விதம், நடை, தோரணை, தன்னம்பிக்கை, தலைமை, தோனியின் ட்ரேட்மார்க் ஷாட்டுக்கள், குறிப்பாக ஹெலிகாப்டர் ஷாட்... அனைத்தையும் அப்படியே பிரதிபலிக்கிறார்.

ஒரு தந்தையின் தவிப்பு/கண்டிப்பு, தாயின்/தமக்கையின் அரவணைப்பு,  நண்பர்களின் ஆதரவு, கோச்/அதிகாரியின் வழிகாட்டுதல்கள்... இத்தளத்தின் மீதுதான் தோனியெனும் பெருந்தூண் எழுகிறது.

இவர்களின் கோணத்திலும் கதை நகர்வதில், இவர்களின் உணர்ச்சிகள் பார்ப்பவரையும் பற்றி நெகிழ வைக்கிறது.

2011 பைனலில், மூன்று விக்கெட்டுகள் விழுந்து விட்ட நெருக்கடி நிலையில், துணிந்து முன் இறங்கி விளையாடி, இமாலய சிக்ஸருடன் கோப்பையை வென்றதே, தோனியின் வாழ்வில் சிகரம். இதை மையப்படுத்தியே திரைக்கதை சுழல்கிறது. அதில் சின்னச் சின்ன காட்சிகள் அழகாகக் கோர்க்கப் பட்டிருக்கிறது.

குளிர் இரவில் பிட்சிற்கு நீர் ஊற்ற தந்தை (அனுபம் கேர்) செல்வதை சிறுவன் தோனி பார்ப்பது, கோல்-கீப்பிங்கிலிருந்து விக்கெட் கீப்பிங்கிற்கு மாறும் தோனி பந்தைத் தட்டி விடுவது(!), முதல் மேட்சில் பேட்டிங் செய்ய இறங்கியதும் உயரமான கட்டிடத்தையும், மரத்தையும் பார்ப்பது, நண்பனும் அவன் காதலியும் கண்கள் கலந்த நிலையில் ஹெலிகாப்டர் ஷாட் அறிமுகமாவது, யுவராஜுடன் நேருக்கு நேர், இரு காதலிகளுடனான முதல் சந்திப்பு, திடீரென தோனியை நேரில் கண்டதும் திக்குமுக்காடும் சாக்‌ஷியின் தோழி, நிஜ மேட்சுகளில் நடிக தோனியின் முகம்...  இப்பட்டியல் நீளம். திரையில் ரசிப்பதே உத்தமம்.

பல காட்சிகள் மனதில் அழுத்தமாகப் பதிவதால், பிற்பாதியில் வரும் சில குறைகள் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

பொதுவாக தன்னம்பிக்கையை விதைக்கும் படங்கள் இனிப்பைப் போன்றவை. நாவில் கரையும் வரைதான் இனிப்பின் சுவை. அதைப் போல, படம் பார்த்த நான்கு நாட்களுக்குள் கதா நாயகனின் பிம்பம் தந்த தன்னம்பிக்கை மறைந்துவிடும். காரணம் அது வெறும் நடிப்பு என்னும் யதார்த்தம்.

ஆனால் இது சாதித்த மனிதனின் கதை. இந்திய கிரிக்கெட்டை முதல் நிலைக்கு உயர்த்தியவனின் கதை. பல இக்கட்டுக்களை, சர்ச்சைகளை கலங்காமல் கடந்தவனின் கதை. இவனது  நிதானம் மிக அபூர்வம். தன் வாழ்க்கையை மாற்றக் கூடிய பயணத்திற்கான விமானத்தைத் தவற விட்ட நிலையிலும், முறுவலிக்கும் பாங்கே இவனை இந்நிலைக்கு உயர்த்தியது.

எவ்வயதினருக்கும் இப்படம் பிடிக்கும்.

கடைசியில் கண்களில் நீர் கோர்க்க நிற்கும் அனுபம் கேரின் பெருமிதத்தை, நம் தந்தைக்குச் சிறிதளவேனும் அளிக்க முடிந்தால் நாமும் தோனியே.

Wednesday, April 13, 2016

நம்ம சென்னையிலா இப்படி?!

சென்னை ஓப்பன் டென்னிஸ் நடந்த சமயம். செமி ஃபைனல் போட்டிகள். மாலை 5 மணி முதல்.

ஸ்டேடியத்தை நான் அடைந்தபோது மாலை மணி 4.45. ஆன்லைனில் டிக்கெட்டை வாங்கியிருந்தும் கவுண்டரில், அதற்கு ஈடான பேப்பர் டிக்கெட்டை வாங்காமல் நுழைய முடியாதாம். தெருவின் இரு முனை வரை க்யூ நீண்டிருந்தது. முதல் எரிச்சல்.

அங்கே மூன்று கவுண்ட்டர்கள் இருக்க, எது/எவை ஆன்லைன் டிக்கெட்டிற்கான கவுண்ட்டர் என சட்டென புரிபடவில்லை. நிற்பவரிடம் விசாரிக்க எல்லாருமே ஆங்கிலத்தில் பதிலளித்தார்கள். நான் தமிழில் கேட்டதை புரிந்து கொள்ளக் கூட முடியாமல் அவர்கள் தப்பாக பதிலளித்தது இரண்டாவது எரிச்சல்.

மணி 5.20. சரியாக 5 மணிக்கே போட்டி துவங்கிவிட்டதை அரங்கினுள்ளிருந்து கேட்ட சப்தங்கள் சொல்லின. என்னால் இன்னும் கவுண்ட்டரை நெருங்கக்கூட முடியவில்லை.

சென்னை புறநகர் ரயில்களில் கூட மொபைல் App மூலம் டிக்கெட் வாங்கி பயணிக்கும் வசதி வந்துவிட்ட நிலையில், இண்டர் நேஷனல் டென்னிஸ் போட்டிகளுக்கு ஆன்லைன் டிக்கெட்டின் ப்ரிண்ட் அவுட்டைக் கூட அனுமதிக்காதது மகா எரிச்சல்.

மணி 5.40. ஒரு புறம் எரிச்சல் நீள, மறு புறம் பிரமித்தேன்.

நிற்கும் மூன்று க்யூவிலும் தள்ளு முள்ளு இல்லை. யாரும் எவரையும் முந்த முயலவில்லை. டிக்கெட் வழங்கும் முறையை விமர்சித்தார்களே தவிர, எவரும் பொறுமை இழக்கவில்லை.

முதல் போட்டியில் 4-ம் தர வரிசை வீரர் வாவ்ரின்கா விளையாடுகிறார். அவரைக் காணவே அங்கு வந்தவர்கள் அதிகம். பெரும்பாலானவர்கள் கவுண்டரை அடைவதற்குள் அப்போட்டி முடிந்து விடுவதற்கான வாய்ப்பும் அதிகம். அதனால் அவர்களிடமிருந்து ப்ச்.. மொச்.. மட்டும் வெளிப்பட்டது. அவ்வளவுதான்.

கவுண்ட்டர் எனக்கு இன்னும் சில அடி தூரமிருக்க...

ஒரு இளம் தம்பதியினர் வந்தனர். எனக்கு முன் நிற்பவர் அவர்களுக்குப் பரிச்சயம். சில விசாரிப்புகள்.

முன்னவர்: என் கூட வந்திடுங்களேன். (நான் அவர்களை அனுமதிக்கும் எண்ணத்தில் இருக்க...இளம் தம்பதி என்ற காரணமெல்லாம் இல்லை!)

தம்பதி: இல்ல... பரவாயில்லை சார்.

முன்னவர்: ஏன்?

கணவன்: இவ்வளோ பேர் இருக்காங்க. நாங்க லைன்லியே வரோம்.

சொன்னபடி அவர்கள் பின் சென்றனர்.

அரங்கினுள்ளிருந்து ஒலி கேட்டது.

வாவ்.... ரின்கா...