Friday, July 27, 2012

ஓம் நவ சக்தி ஜெய ஜெய சக்தி


1992

‘ரகு... நீ பாடினது போதும். முடிச்சுக்கோ’

நான் இன்னும் முதல் சரணமே முடிக்கவில்லை. அதற்குள் பாட்டுப் போட்டியின் நடுவர்தான் இப்படிச் சொல்லி விட்டார். மற்றொரு நடுவர் உணர்ச்சியற்று கண்ணை மூடிக் கொண்டிருந்தார்.

நான் பாடினால் கர்ண கொடூரமாக இருக்கிறதென பள்ளி நண்பர்கள் கிண்டலடிக்க, ஒரு வீம்புக்காக பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டதில் மூக்குடைபட்டது.

அன்றுடன் பாத்ரூமில் பாடுவதையும் நிறுத்திக் கொண்டேன்.

-- கட் --

2012

‘ரகு... வீட்டுக்கு வா’

நான் முன்பு பணிபுரிந்த IT கம்பெனியின் நிறுவனர் கிரிதரன் போனில் அழைத்தார். சென்றேன்.

கீ-போர்டில் சில டியூன்களை வாசித்துக் காண்பித்தார்.

அவர் SSI, Radiant, Lambent, Elmaq, Onspec கம்பெனிகளை நடத்தியவர். தற்போது EdServ-ஐ நடத்திக் கொண்டிருப்பவர். இசைத் துறையிலும் ஈடுபாடு கொண்டவர். சில மாதங்களுக்கு முன் அவரே இசையமைத்து, பாட்டெழுதி, உண்ணி கிருஷ்ணன் பாட, ஒரு ஐயப்பன் இசை ஆல்பத்தை - அய்யன் மலை எங்கள் மலை - வெளியிட்டிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக அடுத்த ஆல்பத்திற்கான டியூன்கள் இவையெனப் புரிந்தது.

‘இதெல்லாம் அம்மன் பாடல்களுக்கான டியூன்கள். ஆடியில் ரிலீஸ் பண்ணலாம்னு இருக்கேன்’

‘ரொம்ப நல்லா இருக்கு சார்’

அடுத்து அவர் சொன்னது, டெரர் கிளப்பியது.

‘இந்தவாட்டி பாட்ட நீ எழுது’

‘ஐயோ, பாட்டு எனக்கு ஒத்துக்காத விஷயம்னு உங்களுக்கே தெரியும். நீங்க தானா தானான்னு எதையாவது சொன்னீங்கனா, நான் வாணா வாணானு ஓடிடுவேன்’

‘அதெல்லாம் எனக்குத் தெரியும். உனக்காக சில டம்மி லைன்ஸ் போட்டு வெச்சுருக்கேன்”.

அதை அவர் பாட, எனக்கு டெரர் டபுளானது. அவையே அற்புதமாக இருந்தன.

‘இதுவே சூப்பரா இருக்கே. நான் என்னத எழுதறது’

‘சரியா பாரு. இது சந்தம் மட்டுமே. அர்த்தம் இல்லை. கிளம்பு. மூணு நாள்ல முதல் பாட்டோட வா’.

சரி. நமக்கு பாடத்தானே வராது. எழுதித்தான் பார்ப்போமே. எழுதிட்டா ரொம்ப வசதி. நம்ம பாட்டையே பாடும்போது யாரும் கிண்டலடிக்க மாட்டாங்களே!.

சமயபுரம் மாரியம்மனுக்கு முதல் பாடல்.

    அம்மா... மாரியம்மா...
    
    சமயபுரத்தாயி நீ அபய கரம் தாயேன் மாயி
    பெருவளை வாய்க்காலில் நீ இருக்கிறாயே தீர்த்தமாயி (அம்மா)
    
    சர்ப்பக் குடை ஆட்சிகள் கண்ணபுரக் காட்சிகள்
    அன்னை மாரி தந்த தரிசனம்
    
    வெப்பம் பொங்க தவிக்கிறேன் நோயும் அண்ட அழுகிறேன்
    வேப்பந் தரித்துக் கேட்கிறேன் அம்மை தடுத்து காக்க வேணும் (அம்மா)

சந்தம் கச்சிதமாகப் பொருந்த, வேர் விட்ட நம்பிக்கையில் முழுப் பாடலும் வளர்ந்தது. பிற பாடல்களும் கனிந்தது.

முழு அர்ப்பணிப்புடன் இறையுடன் கலந்துவிட்டால், மாற்றமும் சாந்தமும் மனதில் தானாகவே குடிகொள்கின்றன. பட்டீஸ்வர துர்க்கையிடம் நெருக்கத்தையும், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியின் வருடலையும் உணர்ந்தேன்.

உண்ணி கிருஷ்ணன், ஹரிணியின் அற்புதக் குரல்களுடன் பாடல்கள் இசையரங்கேறின. கிரிதரனும் பாடியிருக்கிறார். 

இது கானாஞ்சலியின் “ஓம் நவ சக்தி, ஜெய ஜெய சக்தி” இசை ஆல்பமாய் வெளிவந்திருக்கிறது.


பாடல் குறிப்புகள்:

அம்மா மாரியம்மா - சமயபுரத்தாளை பெருவளை வாய்க்காலின் தீர்த்தமாகவும், பிள்ளைகளை அம்மை நோயிலிருந்து விடுவிப்பவளாகவும், தாலி காக்கும் ஆத்தாளாகவும் சித்தரிக்கிறது.

மாங்காட்டில் வாழும் எங்கம்மா - தீயின் நடுவே ஒற்றைக் காலில் தவம் புரிந்து சிவனை மணந்த காமாட்சியைப் பாடி, இருமனங்களாய் திருமண வரமும், தம்பதியாய் குழந்தை பாக்கியத்தையும் வேண்டுகிறது.

பட்டீஸ்வர துர்கையே - அனைத்திற்கும் மூல சக்தியான பராசக்தி துர்கையின் வடிவங்களைப் பாடி, அக்கிரமங்களை போக்கவும், தோஷங்களை நீக்கவும், மருத்துவம் கைவிட்ட நோய்களிலிருந்து காக்கவும், தொடரும் துர்கணங்களை விரட்டவும் மன்றாடுகிறது.

வருவாய் அருள்வாய் - வடபழனி சாந்தநாயகியை குலதெய்வமாக, அலைபாய்ந்த மனதில் வந்தமர்ந்து, அச்சத்தைத் தீர்த்து அமைதியைத் தந்த தேவியாகப் பாடுகிறது.

அகிலாண்டேஸ்வரி மாதா ஜனனி - யானையும் சிலந்தியும் பூஜித்த திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரனின் பாகமாய் இருப்பவளை, சிவனடியார் பெண்ணாய் வேடம் தரிப்பவளை அடைத்து, காலடியில் அழுது, தாய்மடி கேட்கிறது.

தேர் திருவிழா - மலையனின் பெண்ணாய், மதுரை வம்சியாய் உதித்து, பாண்டி நாட்டை ஆண்ட மீனாட்சியின் அழகை, சாம்பல் பித்தனின் மாலை கண்ட விதத்தைப் பாடுகிறது.

அகிலலோக ஜகந்நாயகி - சர்வ சங்கடங்களுக்கும் நிவாரணியாக இருக்கும் சோழங்கநல்லூர் ப்ரத்யங்கரா தேவியின் பஞ்சகம் இசையுடன் பாடலாய் கலந்திருக்கிறது.

இன்னமும் பாரா முகம் - நடிப்பிசைப் புலவர் (அமரர்) கே.ஆர். ராமசாமியின் பழமையான பாடல், புதிய இசையில் மீண்டும் ஒலிக்கிறது.

உண்ணா முலையம்மனே - தந்தனும் கந்தனும் உண்ணா முலையம்மனை, திருவண்ணாமலையாளும் தேவியை, பெண்களை அண்டும் முலையின் நோய்களிடமிருந்து காப்பவளாய் வரித்து, அவள் ஜோதியிடம் தஞ்சமடைகிறது.

பாடல்களை galatta.com-ல் கேட்கலாம், வாங்கலாம். இசையும் பாடலும் உங்கள் மன அழுத்தங்களை இளகச் செய்தால், அதுவே எங்கள் பாக்கியம்.