Tuesday, August 20, 2013

ரயிலில் செயினை இழுக்கலாமா?

சென்னை சென்ட்ரல்.

பொய்ங்ங்...

‘ஐயோ ரகு, நம்ம ட்ரெய்ன் கிளம்புது’ - நண்பன் மகேஷ் அலறினான்.

‘இல்லடா. அந்தப் பிளாட்ஃபார்ம் ட்ரெய்ன் தான் கிளம்புது. நமக்கு இன்னும் ஐஞ்சு நிமிஷம் இருக்...’ திகைத்தேன்.

நாங்கள் செல்ல வேண்டிய மங்களூர் எக்ஸ்பிரஸ் மெல்ல நகரத் தொடங்கியது. அதுவரை பிளாட்ஃபார்மில் நின்றிருந்த மகேஷூம் நானும் பதட்டத்துடன் ட்ரெய்னில் தாவி ஏறினோம். உள்ளே நண்பர்கள் அனைவரின் முகத்திலும் கலவரம்.

ஆபீஸ் நண்பன் ஆனந்துக்குக் கோயம்பத்தூரில் கல்யாணம். சக நண்ப நண்பிகளாய் 20 பேர் கிளம்பிவிட்டோம். முதலில் கேரளக் கோட்டம். அங்கு இரண்டு நாள் எங்க கோட்டம். பின்தான் கோயம்பத்தூர் கல்யாணம்.

காலேஜ் முடித்து, ஐ.டி கம்பெனியில் சேர்ந்த காலம். இளமை எனர்ஜியெல்லாம் (பாஸிடிவ் எனர்ஜி சார்) தளும்பிக் கொட்டிய காலம். யாருக்காவது கல்யாணம் என்றால், இராப்பகல் பாராது, கண் துஞ்சாது, வேலைகளை முடித்துக் கொடுத்து காம்ப்-ஆஃப் லீவு பெற்றுக் கூட்டமாய் ஊர் சுற்றப் படையெடுப்போம்.

அப்படிக் கிளம்பியதில்தான் இன்று கலவரம்.

கேரளாவில் யார் வீட்டுக்கு முதலில் செல்கிறோமோ, அந்த அஜய் நாயர் இன்னும் வந்தபாடில்லை. அதைவிட...

இந்த இ-டிக்கெட்டும், அதை புக் செய்வதற்குள் நமக்குத் தண்ணி காட்டும் அந்த இரயில்வே ஜால வெப்சைட் எல்லாம் அப்போ ஏது சார். மேற்கு மாம்பலம் ரிசர்வேஷன் கவுண்டரில் காலை 6 மணிக்கே வந்து ஹிண்டு பேப்பர் படிக்கும் பெரியவர்களின் வரிசையில் கால் கடுக்க நின்று எங்களுக்கெல்லாம் டிக்கெட் எடுத்த புண்ணியவான் பிரதீப் ஷெனாயைக் காணோம். டிக்கட்டையும்தான் சார்.

நெஞ்சில் பல்ஸ் எகிறியது. எங்கள் யாரிடமும் செல்போன் கிடையாது. ஆனால் பிரதீப்பிடம் மட்டும் உண்டு. கம்பார்ட்மெண்ட் கம்பார்ட்மெண்டாக ஓடினோம்.

‘சரி ட்ரெய்ன் கிளம்பிடிச்சி, போனை வெச்சுடவா...’ குரல் கேட்ட திசையில் பாய்ந்து அந்த மனிதரைச் சூழ்ந்துக் கொண்டு, நிலவரத்தை படபடவெனச் செப்பி, பிரதீப் நம்பரை ஒப்பித்தேன் (அப்போ நம் நம்பர் மெமரி டாப்பு, இப்போ சிம் மெமரியால அதுக்கு ஆப்பு). அவர் போன் போட்டு என்னிடம் தர, முதல் ரிங்கிலேயே எடுத்துவிட்டான் பிரதீப்.

‘டேய், எங்கடா இருக்க...’

‘இதோ, சென்ட்ரல் வாசலுக்கு வந்துட்டேன்’

‘கிழிஞ்சுது, ட்ரெய்ன் சென்ட்ரல வுட்டே போய்க்கிட்டிருக்கு. அஜய் எங்க?’

‘என் கூடத்தான் ஓடிவரான். எப்படியாவது ட்ரெய்னை நிறுத்துடா. ஒரு நிமிஷத்துல வந்துடறேன்’

‘பிளாட்ஃபார்ம் எட்டுக்கு சீக்கிரம் வாடா’

அவர்கள் ஸ்டேஷனுக்குள் ஓடிவர, நாங்க ட்ரெய்னுக்குள் ஓடி, டிடிஆர்-ஐ தேடிப் பிடித்து...

‘சார், கொஞ்சம் ட்ரெய்னை நிறுத்துங்க சார்...’

‘எதுக்கு’

‘சார், விளக்கிச் சொல்ல டைம் இல்ல. எங்க யார்கிட்டயும் டிக்கெட் கிடையாது’

‘என்னது’

‘அதில்ல சார்’

‘அதான் இல்லேங்கிறீங்களே’

‘ஐயோ, எங்க ஃப்ரெண்ட் இப்பத்தான் பிளாட்ஃபாரத்துக்கு வரான். அவன் கிட்டதான் எல்லார் டிக்கெட்டும் இருக்கு சார். ஒரே ஒரு நிமிஷம் நிறுத்துங்க சார்’

‘இதென்ன டவுன் பஸ்சா விசிலடிச்சி நிறுத்த?... அதெல்லாம் முடியாது’

குப் குப் குப் குப் குப்... பக்கத்தில் ஒரு டீசல் என்ஜின் எங்களைப் பார்த்து கபகபவென சிரிப்பது போல புகை விட்டுக் கொண்டிருந்தது. அதிர்ந்தேன். ட்ரெய்ன் பிளாட்ஃபார்மைக் கடந்து விட்டிருந்தது.

‘டேய் இப்ப எங்கடா இருக்க’ (இரு பக்கமும் போன் ஆன்லைன்)

‘பிளாட்ஃபாம் வந்துட்டேன்’

‘ட்ரெய்ன் தெரியுதா’

‘தூரத்துல கடைசி பொட்டியோட X மட்டும் தெரியுது’

‘நாங்க எப்படியாவது நிறுத்தறோம். ஓடி வா’

இனி பேசிப் புண்ணியமில்லை. செயின் இழுத்து நிறுத்த வேண்டியதுதான். ஒரு பலசாலி நண்பன் செயினை இழுக்கத் தொடங்கினான்.

‘ஐயோ, இது துரு பிடிச்சி, ஜாமாக்கி கிடக்குதுடா. அசையவே மாட்டேங்குது’

‘பதினெட்டு பேரும் வித்தவுட்டில் போய் பைன் கட்டினா அதிகமா? செயின் இழுத்து நிறுத்தினா பைன் அதிகமா?’ ஒரு நண்பன் நிதானமாக அலசத் தொடங்கினான்.

‘ரொம்ப முக்கியம், முதல்ல செயினை இழு’. பலசாலி நண்பன் இரு காலையும் ஜன்னலில் வைத்து, உடல் எடை மொத்தத்தையும் பிரயோகித்து இழுக்க, நாலு பேர் அவன் இடுப்பைக் கட்டி இழுக்க...

டிடிஆர் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

படீர்ர்ர்ர்ர்ர்ர்................

சத்தியமா நம்புங்க சார். செயின் கையோடு வந்துவிட்டது. சிவாஜி படத்தில் விவேக்கிற்கு அறுந்த செயின் எங்களுக்கு அப்பவே அறுந்து விட்டது.

‘பிரதீப்... செயினே அறுந்து போச்சுடா...’

‘நான் இப்போ பிளாட்ஃபார்ம் தாண்டி, தண்டவாளம் பக்கமாவே ஓடி வந்துட்டிருக்கேன்.

‘அடப்பாவி. இருட்டுல எங்கயாவது விழுந்து தொலையாதே’

‘ஐயோ அஜயை காணோம்’

‘என்னது’

‘ஆங் அதோ பிளாட்ஃபார்ம் சரிவுல விழுந்து உருண்டுட்டிருக்கான்.

ஒன்றும் செய்ய முடியாமல் திகைத்தோம். அப்போது அதிசயமாய் ட்ரெய்ன் நின்றது.

‘டேய் வாடா வாடா...’

‘கிட்ட வந்துட்...டேன்..... ஐயோ ட்ரெய்ன் திருப்பவும் கிளம்பிடிச்சி’

‘சார் சார் ட்ரெய்னை நிறுத்துங்க சார்.. உள்ள இருபது பேர் இருக்காங்க. இதோ பாருங்க மொத்த டிக்கெட்டும் என் கையில இருக்கு...’

அவன் குரல் கேட்டது. ம்ம். கடைசி பெட்டியில் நிற்கும் கார்ட்டிடம் கெஞ்சிக் கொண்டே ஓடி வருகிறான். அவரும் நிறுத்துவதாய் தெரியவில்லை.

சப். ஏதோ சத்தம் கேட்டது. அப்புறம் அவன் குரல் கேட்கவே இல்லை.

‘பிரதீப்.......’ பதிலில்லை. போன் ஆனில்தான் இருந்தது. பல குரல்கள் மாறிமாறிக் கேட்டது.

‘ஐயோ அவனுக்கு ஏதோ ஆயிடிச்சி...’ எங்கள் இதயம் மொத்தமாக நின்றுவிட்டது. சில நொடிகளுக்கு பிறகு...

‘ஹலோ’ ஒரு இனிமையான பெண் குரல் கேட்டது!!

‘ஹலோ, உங்க பிரெண்டு எங்க கம்பார்ட்மெண்டில் ஏறிட்டார்’

‘டேய் அவன் லேடீஸ் கம்பார்ட்மெண்டில ஏறிட்டான்டா’

‘ஏறினவுடனே மயக்கம் போட்டு விழுந்துட்டார்’

‘ஐயோ’

‘அதெல்லாம் கவலை படாதீங்க. நாங்க எல்லாத்தையும் பார்த்துட்டுதான் இருந்தோம். மயக்கம் தெளிய வெச்சு பத்திரமா அடுத்த ஸ்டாப்புல அனுப்பறோம்’

அடடடடா... என்னே பாக்கியம். கோதையர் கூட்டத்தின் நடுவே பிரதீப்.

‘ஆமா, இன்னோருத்தர் ஓடி வந்திருப்பாரே’

‘அவரு கார்ட்டு பொட்டில ஏறிட்டார்’

‘அம்மா...டி... ரொம்ப தேங்ஸ்மா..’

போனை ஆப் செய்தேன். எங்களைவிட டென்ஷனாகப் பார்த்துக் கொண்டிருந்த அதன் சொந்தக்காரரிடம் ஒப்படைத்தேன்.

அரக்கோணம் ஜங்ஷன்.

ட்ரெய்ன் நிற்க, ஓட்டப் பந்தய வீரர்கள் வந்து சேர்ந்தனர். விழுந்து புரண்டதில் அஜய்க்கு சட்டையெல்லாம் கிழிந்திருந்தது. கோதையர் தெளிய வைத்து அனுப்பிய பிரதீப்பிற்கு வாயெல்லாம் பல்.

டிடிஆரிடம், எக்ஸ்டீரீம்லி சாரி சார்னு சொல்லி, டிக்கெட்டைக் காட்டி, ஒரு அபாலஜி லெட்டரையும் எழுதிக் கொடுத்து, கையெடுத்துக் கும்பிட்டு நன்றி சொன்னோம்.

அவர் நிதானமாக இரு வீரர்களைக் கேட்டார்.

‘ஏன் சார், உங்களுக்கு ட்ரெய்ன் ஏழு மணிக்குனு தெரியாதா?’

3 comments:

  1. //பத்திரமா அடுத்த ஸ்டாப்புல அனுப்பறோம்’
    அடடடடா... என்னே பாக்கியம்.
    அவுக ஊர்ல "ஸ்டாப்" புக்கு "ஸ்டாப்" ரயிலு நிக்குமா?

    ReplyDelete

உங்கள் கருத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்...