Monday, August 29, 2011

ஹிப் ஹிப் ஹூர்ர்ர்ரே... ஹஸாரே


தோனி சிக்ஸர் அடித்து, இந்தியா உலகக் கோப்பையை வென்ற போது ஏற்பட்ட ஆரவார சந்தோஷத்தை விட அதிகமாக இருக்கிறது இப்போதைய ஒட்டு மொத்த தேசத்தின் ஆனந்தமான உற்சாகம்.

இதன் கேப்டன், ஆல் ரவுண்டர், மேன் ஆப் தி மேட்ச், மேன் ஆப் தி சீரியஸ்... எல்லாம் அன்னா ஹசாரே.

இவர் தோனியைப் போல சிக்ஸர்களை விளாசாமல், அமைதியாக, தீட்சண்யமாக தடுப்பாட்டம்தான் ஆடினார். இவர் மீது குற்றச்சாட்டுகள், நடவடிக்கைகள்... இன்னும் என்னன்னவோ பெளன்சர்களாக, யார்க்கர்களாக வீசப்பட்டன. ஆனால் பெயர்ந்ததென்னவோ எதிரணியின் விக்கெட்டுக்களே!

மிக அபூர்வமாக ஒட்டு மொத்த தேசத்தின் கவனமும் பார்லிமெண்டின் மீது குவிந்திருக்கிறது என்று அங்கே நிதியமைச்சரின் குரல் ஒலித்தது. இதற்கு அடிப்படை மக்களின் இயக்கம், தர்க்கங்களைக் கண்டு பொதுவாக ஒதுங்கும் நடுத்தர வர்க்கங்களின் எழுச்சி, அதை தலைமையேற்று நடத்திய மாமனிதர் ஹசாரே.

இதுவரை பார்லிமெண்டில் அமளி துமளிகளை, சட்டை பேப்பர் கிழிப்புகளை, வெளி நடப்புகளை மட்டும் செய்திச் சானலில் பார்த்திருந்த சாமான்ய இந்தியன், வரலாறு காணாத வகையில் ஒரு தீர்க்கமான விவாதம், ஒரு முழு நாளுக்குத் தொடர்ந்து நடைபெறுவதை, நேரடி ஒளிபரப்பில் பெருமை பொங்கப் பார்த்தான்.

எழுத்துக்களை விட, சொற்களை விட, மெளனமும் முறுவலும் கூட வலிமையானவை என ஹசாரே பறைசாற்றினார்.

மைதான மேடையில், சோர்வை வெளிக்காட்டாமல், தலையணைமேல் அதை விட மிருதுவாகப் படுத்திருந்து அவர் போராடிய காட்சியே, மொழிகளைக் கடந்து, மாநிலங்களை இணைத்து, இந்தியனை அவர் பின் அணிவகுக்க உசுப்பியது.

இதனால் அவரின் பிரதான கோரிக்கைகளுக்கு பாராளுமன்றம் முதற்படி ஒப்புதலை அளித்திருக்கிறது. மக்களின் விருப்பமே, பாராளுமன்றத்தின் விருப்பம் என பிரதமர் வழி மொழிந்திருக்கிறார். ஊழலற்ற பாரதத்திற்கான நம்பிக்கை கீற்றொளி, கடைகோடி இந்தியனுக்கு இப்போது தென்படுகிறது.

பலவித விமரிசனங்கள் ஹசாரே மீது இறைக்கப்பட்டன. ஆனால் எதற்கும் அசையாமல், எந்தவொரு அரசியல் அதிகார பலமும் இன்றி, வயோதிகத்தின் தளர்ச்சிகளையே முடிச்சுகளாக்கி, வைராக்கியத்துடன் அவர் நடத்திய போராட்டம் ஒவ்வொரு இந்தியனுக்கும் நடத்தப்பட்ட பாடம்.

பூனைக்கு மணி கட்டிய ஹசாரே, தோனி சிக்ஸர் அடித்த போது காட்டிய நிதானத்தைவிட, பல மடங்கு நிதானத்தைக் கடைபிடித்து, “இப்போது உண்ணா விரத்தை முடித்துக் கொள்ளவா?” என மக்களிடம் பண்பட்ட விதத்தில் கேட்டு ஒவ்வொருவருக்காகவும் நன்றி தெரிவிக்கிறார்.

ஆனால், நாம்தான் கோடிகளில் நன்றி தெரிவிக்க வேண்டும், இந்த மகாத்மாவிற்கு.

Thursday, August 25, 2011

அபராதம் - இது ரொம்ப ஓவர்!

என் கல்லூரிக் காலம் - 1993. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு மெல்ல துளிர்விட்ட காலம். டிஜிட்டல் லாஜிக் கேட்ஸ்-தான் எங்களுக்குப் பிரதான பாடம். அண்ட், ஆர், நாட் - லாஜிக் கேட்ஸ்-ஐ புரிந்து கொள்ளவே எங்களுக்குப் பல வகுப்புகள் தேவைப்பட்டது. யாரேனும் எக்ஸார், எக்ஸ்னார் என்று அடுத்த கேட்ஸ்-களைப் பற்றிப் பேசினால் அவன் பில் கேட்ஸ்-ஐ விட பெரிய பிஸ்தா!

இரண்டு ராணி காமிக்ஸ் அளவு இருந்த லாஜிக் கேட்ஸ் புத்தகத்தைப் படிக்கவே சக மாணவர்கள் திணறும் போது, கல்லூரி லைப்ரரி-யிலிருந்து 'டிஜிட்டல் டேட்டா கம்யூனிகேஷன்ஸ்' என்று ஒரு நானூறு பக்க புத்தகத்தை நான் எடுத்துவர, நண்பர்களின் காது சிக்கு புக்கு ரயில் பிரபுதேவா கணக்காகப் புகைந்தது.

ஆஹா, இந்தப் புத்தகத்தை வைத்து கொஞ்சம் பந்தா பண்ணலாம் என நினைத்தேன். தினமும் கல்லூரியினுள் நுழையும் போது,  பளபள அட்டையைக் கொண்ட இப்புத்தகத்தை தகத்தகாய கதிரவனின் கதிர்கள் பட்டுத் தெறிக்கும்படி கையிலேயே பிடித்துக் கொண்டு, அன்று புரிந்தோ புரியாமலோ மனனம் செய்த ஓரிரு வாக்கியங்களை வைத்து இல்லாத பொல்லாத வியாக்கியானங்களை அளந்து பொளந்து கட்டி எல்லாருடைய மண்டையையும் காய வைத்தேன்.

“எச்செயலைச் செய்தாலும் முழுமையாக செவ்வனே செய்” என்று ஆன்றோர்கள் சொல்லிக் கொடுத்தார்கள் இல்லையா! அதன்படி லைப்ரரி புத்தகத்தை வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்ட பத்து நாளும் பந்தாவைத் தொடர கங்கணம் கட்டிக் கொண்டேன். துரதிஷ்டவசமாக பத்தாம் நாள் ஜூரம் அடிக்க லீவு எடுக்க வேண்டியதாகி விட்டது.

அடுத்த நாள் அபராதம் கட்ட வேண்டியிருக்கும் என நினைத்தே லைப்ரரிக்குச் சென்றேன். உடல் நலமில்லாததால் நேற்று திருப்பித் தர முடியவில்லை என நூலகரிடம் விளக்க, அவர் சரியென புத்தத்தை வாங்கிக் கொண்டார். “ஃபைன் சார்?” என்றேன். “பாத்துக்கலாம்” என்று சொல்லி திருப்பி அனுப்பி விட்டார். அடடா, எவ்வளவு நல்ல மனிதர் இவர்! உடல் நலமில்லை என்று சொன்னால் எவ்வளவு கரிசனத்துடன் நடத்துகிறார் என மெய் சிலிர்த்தேன்.

பாடங்கள் சூடுபிடிக்க, தேர்வுகள் நெருங்கிவர மீண்டும் லைப்ரரியிலிருந்து புத்தகம் எடுப்பதே மறந்து போனது.  ஆண்டு தேர்வு மணியடிக்க, ஹால்-டிக்கெட் வாங்க முனைந்த போதுதான் நோ-ட்யூ சர்டிஃபிகேட்-இல் நூலகரானவர் ஒரு நாள் தாமதத்திற்கான அபராதத்தை நிரப்பியிருந்தது தெரிந்தது.

அபராதத்தை கல்லூரி வளாகத்தினுள் இயங்கும் ஒரு வங்கியின் கிளையில்தான் செலுத்த வேண்டும். வகுப்பை கட் அடித்ததற்கு ஃபைன், தேர்வில் முழுக்கு போட்டதற்கு ஃபைன், லேப்-இல் எதையாவது உடைத்ததற்கு ஃபைன் என பல காரணிகளால் க்யூ நீண்டிருந்தது.

நான் ஃபைன் கட்ட நிற்பதும், செய்த முன்வினையும் (பந்தா) கல்லூரி முழுக்க பரவி விட்டது. (சில காரணங்களால் நான் பிரபலம். ஆனால் காரணத்தை இங்கே சொல்ல மாட்டேன்!). கூட்டம் கூடி விட்டது. நான் கவுண்டரை நெருங்கும் போது தரதரவென என்னை இழுத்து வந்து, மீண்டும் க்யூவின் கடைசியில் நிற்க வைத்தார்கள். ஒரு முறையல்ல, இரு முறையல்ல... எட்டு முறை!

மதிய இடைவேளை குறுக்கிட, கவுண்டர் மூடப்பட்டது. அவசர அவசரமாய் உணவை முடித்து, முதல் ஆளாக வந்து கவுண்டரை கெட்டியாகக் கட்டிக் கொண்டேன். பின் வந்தவர்கள் என் இரு கால்களையும் தூக்கி தேர் வடம் போல இழுத்தார்கள். இன்னும் சில நொடிகள் கடந்தால் கவுண்டர் பெயர்ந்துவிடும். நல்லவேளை. மதிய ஷிஃப்டிற்கான கேஷியர் அம்மணி அங்கு வர அந்த இடமே கப்சிப்.

நகருக்கு வெளியே இயங்கும் இந்த ஆண்கள் கல்லூரியில் அவர் மட்டுமே பூச்சூடுபவர். வகுப்பறையில் அலப்பறை செய்யும் மாணவர்கள் எல்லாம் கவுண்டரின் முன் நல்லொழுக்கம் பேணுவர். அதுவரை வாரப்படாத கேசங்கள் எல்லாம் சீப்போடு குலவிக் கொள்ளும். இஸ்திரி பெட்டியின் கதகதப்பை உணராத சட்டைகள் எல்லாம் எப்படியோ நேர் செய்யப்படும். அந்த அம்மணியின் புண்ணியத்தில் என் கால்கள் தரையிறங்கின.

பெருமூச்சு விட்டு சலானையும், தொகையையும் நீட்ட, பூவிழியாள் தீவிழியாள் ஆனார். நான் வெட்கித் தலை குனிந்தேன். அருகில் இருந்தவர்கள் குபீரென எழுந்த சிரிப்பை அடக்க முயன்றனர். ‘டொம்’ என்று குத்தப்பட்ட ரிசீவ்ட் சீல்-இன் சப்தத்தில் அம்மணியின் கோபம் தெறித்தது. தள்ளி நின்றவர்கள் வாய்விட்டு அலறி கண்ணீர் மல்கிச் சிரித்தனர்.

ஏனென்று கேட்கிறீர்களா?

இப்படி சலானை எல்லாம் நிரப்பி, கஜினி முகமது போல் படையெடுத்துப் போராடி, தீவிழி தாங்கி நான் கட்டிய ஒரு நாள் அபராதத் தொகை:

இருபத்தி ஐந்து பைசா!!!

Friday, August 5, 2011

முரளீதரனின் காயின் பால்

“நத்திங் ஈஸ் இம்பாசிபிள் ஃபார் முரளி”

என்.டி டிவியில் இப்படி ஒரு தலைப்புடன் செய்தி ஓடிக் கொண்டிருந்தது. ரிடையர் ஆன பிறகு அப்படி என்ன செய்துவிட்டார் முரளீதரன்?! சற்று அசுவாரஸ்யமாகத்தான் செய்தியைப் பார்த்தேன். இங்கிலாந்து ஸ்பின் பெளலர் ஸ்வானும் முரளீதரனும் ஏதோ சிரித்துப் பேசிக் கொண்டனர். சுற்றிலும் வீடியோ, ஃபோட்டோகிராஃபர்கள். மூன்று ஸ்டம்புகள் நடப்பட, ஆஃப் ஸ்டம்பின் மேல் ஒரு கண்ணாடி டம்ளர் வைக்கப்பட்டது. அதன் ஆஃப் சைட் விளிம்பில் சற்று வெளித்தள்ளி ஒரு நாணயம் வைக்கப்பட்டது. புரிந்துவிட்டது! சின்ன வயசில் ஒரு கதை படித்தோமே! தன் புத்திரனின் தலையில் ஒரு ஆப்பிள் வைக்கப்பட அதை குறி தவறாமல் பிளந்த வில்லாளனின் கதை! அது மாதிரி இது ஒரு போட்டி. சுவாரஸ்யம் தட்டுப்பட சீட்டு நுனிக்கு நகர்ந்தேன்.

இருவரும் தலா இரண்டு பந்துகள் வீசினர். பந்து எதன் மேலும் படவில்லை. மூன்றாவது முயற்சியாக முரளீதரன் பந்து வீசினார். ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே விழுந்த பந்து, அழகாக ஸ்பின் ஆகி, கண்ணாடி டம்ளரை உரசுவது போல் ஆனால் அதை தொட்டுவிடாமல் எழும்பி காயினை மட்டும் தட்டிச் செல்ல, அங்கு ஒரே ஆரவாரம்.

அம்பு விடுவதைவிட பந்து விடுவது எவ்வளவு கடினம்! குஷியில் நானும் கை தட்டி குதிக்க, சத்தம் கேட்டு அங்கு வந்த என் தந்தை, ரீ-ப்ளே-வை ரசித்து விட்டு, பழைய கிரிக்கெட் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அவை:

1950-60. பத்து வருடத்தில் இரண்டு மூன்று முறை இங்கிலாந்திற்கு இந்தியா டூர் சென்றிருந்தது.

நம்ம பேட்ஸ்மென்களின் வேகம் நம்மை அலற வைத்த காலம் அது. அவுட் ஆவதில்! மதிய இடைவேளைக்குள் 56 ரன்னுக்குள் சுருண்டனர். உண்ட உணவு செரிப்பதற்கு முன்பே சாயங்காலத்திற்குள் 86 ரன்கள் எடுத்து சற்று நீட்டிச் சுருண்டனர். ஒரே நாளில் தன் இரண்டு இன்னிங்ஸையும் முடித்த பெருமையெல்லாம் இந்தியா கொண்ட காலம் அது.

இந்தியாவின் பேட்ஸ்மேன் குலாம் அஹமது. லாட்ஸ் மைதானத்திற்கு வெளியே ஒரு மணிக்கூண்டில் கடிகாரம் தெரிய, இதனை நான் சிக்ஸர் அடித்து உடைக்கிறேன் என்று சவால் விட்டார். இங்கிலாந்து பெளலர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் இது தெரிய, எல்லோரும் பகபகவெனச் சிரித்தனர். அந்த டெஸ்ட் மாட்சில், இவருக்கு ஸ்பெஷலாக பெளன்சர்கள், பம்பர்கள் வீசப்பட்டன. குலாம் அசரவில்லை. உறு மீனுக்கான கொக்கு போல, சரியான பந்திற்குக் காத்திருந்து, முழு பலங்கொண்டு அடிக்க கடிகாரம் தூள் தூள். குலாம் சொல்லி அடித்த கில்லி.

1963.

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் மாட்ச். 5-ம் நாள். இங்கிலாந்து பாட்டிங்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன், கண்களில் சூரிய ஒளிக்குச் சொந்தக்காரர் என வருணிக்கப்பட்ட ஃபாராங் ஒரல். தனி நபரின் அதிகபட்ச ஸ்கோராக 375 ரன்னை வெகு காலத்திற்கு முடிசூடிக் கொண்ட காரி சோபர்ஸ் அப்போது சின்னப் பையன். வெஸ்ட் இண்டீஸின் வேகப் பந்து வீச்சிற்கே முன்னோடிகளான வெஸ் ஹால் மற்றும் சார்லி கிரிஃபித்; இருவரும் கடுமையாக பந்து வீசிக் கொண்டிருந்தனர். எந்த அணியும் வெற்றி பெறக் கூடிய சூழ்நிலை. ஹாலின் பந்து வீச்சில், இங்கிலாந்தின் முக்கிய பேட்ஸ்மேன் காலின் கெளட்ரி-இன் கை உடைந்துவிட அவர் வெளியேறினார்.

இந்த ஹால் அசகாய சூரர். சென்னையில் நடந்த ஒரு டெஸ்ட்டில் முதல் பந்தை அவர் பெளன்சராக வீசினார். குத்தினார் என்று சொல்வதே சரி. அந்தப் பந்தை எல்லாரும் வேடிக்கைதான் பார்க்க முடிந்தது. ராக்கெட்டென எழும்பிய பந்து பேட்ஸ்மேனைத் தாண்டி, விக்கெட் கீப்பரைத் தாண்டி, ஏன் எல்லைக் கோட்டையையும் தாண்டி சைட் ஸ்கிரீனின் மீது மோதித்தான் விழுந்தது! கிரிக்கெட் வரலாற்றில் பை-யில் சிக்ஸர் சென்றது இது மட்டுமே என நினைக்கிறேன்!

அப்படிப் பட்ட ஹாலும், அவருக்கு எந்த விதத்திலும் குறையாத கிரிஃபித்தும் மற்ற பெளலர்களுக்கு உடல் நலமில்லாததால் அவர்கள் இருவராகவே காலை முதல் மாறிமாறி பந்து வீசிக் கொண்டிருந்தனர். ஹால் சோர்ந்து போனார். ஒரல் பந்து வீச சோபர்ஸ்-ஐ அழைக்க, பெரு மூச்சு விட்ட ஹால், அந்த ஓவர் முடிந்ததுமே அதிர்ந்து போனார். சோபர்ஸ்-ஐ ஒரு ஓவர் வீச வைத்ததே, ஹாலும் கிரிஃபித்தும் தங்கள் பந்து வீசும் சைடுகளை மாற்றி மீண்டும் வீசத்தான்! ஹாலுக்கு பிலுபிலுவென கோபம் வந்துவிட்டது. தன் ஆறடி இரண்டங்குல உடலை முறுக்கிக் கொண்டு, முறைத்துக் கொண்டு ஒரலிடம் சண்டை போட்டார். பந்து வீச முடியாதென கறாராகக் கத்தினார். அவர் கத்தி முடிக்கும் வரை அமைதி காத்த ஒரல், ஒரு முறுவலைச் சிந்தி, ஹாலின் முதுகில் செல்லமாத் தட்டி, புகழ்பெற்ற வாசகத்தை உதிர்த்தார்:

“ஜஸ்ட் கோ பாக் அண்ட் பெளல் அகெய்ன்”

வார்த்தைகளின் தொணியும், கண்களின் ஒளியும் கட்டிப் போட, நாய் வாலெனத் தலையாட்டியபடியே மீண்டும் பந்து வீசத் தொடங்கினார் ஹால்.

ரன்கள் குவிந்தன. விக்கெட்டுக்கள் சரிந்தன. கடும் போட்டி. ஒன்பதாவது விக்கெட்டும் வீழ்ந்தது. இன்னமும் ஒரே ஒரு ஓவர் பாக்கி. இங்கிலாந்திற்கு வேண்டிய ரன்கள் ஐந்தோ ஆறோ. ஏற்கனவே காலின் கெளட்ரி கை உடைந்து சென்று விட்டதில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றதாகவே நினைத்தனர். ஆனால் யாருமே எதிர்பாரா வண்ணம் வலக்கை முழுக்க மாவுக் கட்டுடன், இடக்கையில் குச்சிபோல பேட்டை பிடித்துக் கொண்டு கெளட்ரி மீண்டும் களமிறங்கினார். எல்லாரும் வாய் பிளக்க ஹாலை எதிர் கொள்ளத் தயாரானார்.

பந்து வீச தன் நீண்ட ரன் அப்-இல் நடக்கத் தொடங்கினார் ஹால்.

யாருடைய வெற்றியையும் ஜீரணிக்க முடியாது. காலை முதல் தொடந்து வீசும் ஹாலின் பந்தில் வெற்றி ரன் எடுப்பதை ஏற்க முடியாது. கை உடைந்தும் திட சித்தத்துடன் இடக் கையில் விளையாட வந்த கெளட்ரியின் விக்கெட் பெயர்வதை பார்க்கவும் முடியாது.

பார்வையாளர்களின் இதயம் லபோதிபோ-வென அடிக்கத் தொடங்கியது.

ரன் அப்-இல் கடைசி ஸ்டெப் வைத்து, பந்து வீச ஹால் திரும்ப அது நிகழ்ந்தது. அதுவரை வெளுத்திருந்த வானம் சோ-வெனக் கொட்டித் தீர்க்க, கடைசி ஓவர் வீச முடியாததில் மேட்ச் ட்ரா.

ஃபிட்டிங் எண்ட். இறைவனுக்கே யார் தோற்பதும் பொறுக்கவில்லை என்றெல்லாம் பத்திரிக்கைகள் எழுதித் தள்ளின.

இப்படிப்பட்ட ஆச்சரியங்களும், சுவாரஸ்யங்களும் கொண்ட கிரிக்கெட்டை, வியாபாரமயமாக்கி கெடுத்துவிட்டது ஐ.பி.எல்.