Wednesday, December 24, 2014

வயல்வெளிப் பறவை

ஃபேஸ்புக் பாக்கலாமா? ம்ஹூம் முடியாது.

டிவிட்டர்? நெட்-டே இல்லடா.

போன்? அட உன்கிட்ட எந்த டிஜிட்டல் டிவைஸும் இல்லடா. மனம் சொல்லிச் சிரித்தது.

என்ன பண்ணலாம்? கட்டிலைப் போட்டுப் படு.

ஆஹா நல்லது.

பம்ப் செட் ரூமிற்குச் சென்று, கயிற்றுக் கட்டிலைத் தூக்கி வந்து, வரப்பின் மேல், குட்டைத் தென்னை மரம் தன் ஓலைக் கிளைகளை விரித்து, நிழல் பரப்பி விசிறிய இடத்தில் போட்டு, ஹாயாகப் படுத்தேன்.

நண்பகல் வெயில் தெரியா வண்ணம் காற்று பலமாக வீசியதில், உழுத களைப்பில் மெல்ல கண் சொக்கியது.

என் உறவினர் கிராமம். (இவ்விடத்தை ஏற்கனவே இரு பதிவுகளில் வர்ணித்து விட்டேன்)

அன்று அவருக்கு வேறு வேலை இருந்ததால், நான் உழுகிறேன் என்று வயலிலிறங்கி விட்டேன். உழவு மிஷினை இயக்க, வயலைச் சீராக உழ, குறிப்பாக வரப்பு ஓரங்களில் மிஷினைத் திரும்பும் முறையைச் சொல்லிக் கொடுத்தபின் அவர் வீட்டிற்குச் சென்று விட்டார். அடுத்த வயலில் அன்றுதான் நாற்று நட்டிருக்கிறார்கள். சற்று பிசகினால், மிஷின் வரப்பை உடைத்துச் சென்று, பயிரைப் பாழ் செய்து விடும். வம்பு வளரும். கவனம் என்றும் சொல்லிச் சென்றார்.

மிஷினின் கியர், கார் கியரைப் போல அத்தனை சுலபமாக விழவில்லை. நான் அதை பலம் கொண்டு இழுக்க, டங்-கென்று கியர் விழ, மிஷின் திடுமெனக் கிளம்பி என்னையும் இழுத்துக் கொண்டு ஓடியது. தட்டுத் தடுமாறி, சேற்று நீரை, தையா தையாவென மிதித்து ஓடி, திமிறும் காளையை அடக்குவது போல, சீறும் மிஷினை (சும்மா ஒரு வர்ணனை சார்) வரப்பின் விளிம்பில் பிரயத்தனப்பட்டுத் திருப்பி ஆசுவாசப் படுவதற்குள், முதுகுத் தண்டு விண்ணென்று வலித்தது.

முதல் 15 நிமிடத்திற்கு மிஷினை, தாறுமாறாகத்தான் ஓட்டினேன். மண் இளகத் தொடங்கியதும் லாவகமானது. அடுத்த அரை மணி நேரத்தில் சீராக உழத் தொடங்கியதும், மிஷின் டயரிலிருந்து படபடவென வயற்சேறு என் மீது அடிக்கத் தொடங்க, அதன் மண் வாசத்திலும் குளிர்ச்சியிலும் உடல் மகிழ்ந்தது.

மண் மீதிருக்கும் உழவனின் காதல் புரிந்தது.

அடி மண்ணை மிஷின் கிளரத் தொடங்கியதும் திகைத்தேன். எங்கிருந்தோ சடசடவென பறந்து வந்த வளையம் பறவைகள், விர்விர்ரென கீழிறங்கி எதையோ கொத்திக் கொண்டு மீண்டும் பறந்தன.

ஓ, மண் புழுக்கள்.

அவ்வளவு புழுக்களா என் காலிடையே நெளிகின்றன?! உற்றுப் பார்த்ததில் ஒன்று கூட என் கண்ணில் படவில்லை. ஆனால் பல அடி உயரத்திலேயே பறவைகளின் கண்களுக்கு, வாழை இலையில் ஜவ்வரிசிப் பாயசமாய் புழுக்கள் தெரிந்திருக்கின்றன. இது படைத்தவனின் விந்தையே.

நான் நகர நகர, பின்னே சிறகு படபடக்க அவை இறங்கி எழும் காட்சியை விவரிக்க வார்த்தைகள்... இருக்கு சார். இதை அப்படியே ஒரு செல்ஃபி எடுத்தால், பல ஹீரோக்களின் இண்ட்ரோ காட்சியை மிஞ்சிடலாம் சார்!

நண்பகல் வரை, இடைவெளியின்றி, இடைஞ்சலுமின்றி உழுதேன். வேலையையே துவங்க விடாமல் யாரும் Work plan கேட்கவில்லை. துவங்கும் போதே Status கேட்டு நச்சரிக்கவும் இல்லை. Inbox-ஐ திறப்பதற்குள், மெயிலாய்க் கடுகி வந்து, மெயில் அனுப்பியிருக்கிறேன் படி, என்று யாரும் அணத்தவும் தொணத்தவும் இல்லை. மனித தலைகளே தென்படவில்லை. இரண்டு செல்போன் டவர்களைத் தவிர மருத நிலத்தின் பசுமை மட்டுமே கண்ணிற்கு விருந்தளித்தன.

இதையெல்லாம் அசை போட்டபடி, கட்டிலில் நான் படுத்திருக்க, தங்கமணி வந்து எழுப்பினார். கம்பக் கூழும் வடு மாங்காவும் கொண்டு வந்திருந்தார். அவருடன் பேசியபடி... ம்ம் இது என்ன, பாரதிராஜா படக் காட்சியா? இதை மேலும் விவரிப்பதாய் இல்லை!

உண்டபின், அவர் வீடு திரும்பியபின் நிதானமாக சுற்றிக் கவனித்தேன்.

வரப்புகளின் சந்திப்பில் பூத்த பூக்களின் மேல் பட்டாம்பூச்சி. க்ளக்.. க்ளக்... அருகே பெருங்கிணற்றில், தளும்பும் நீரில், தாவும் தவளை. கிணற்றிலிருந்து, மோட்டார் ரூமிற்கு பைப் செல்லும் பொந்தின் வழியே இரண்டு பூனைக் குட்டிகள் எட்டிப் பார்த்தன. அதன் கண்களில், என்னைக் கண்டதில் ஒரு மிரட்சி.

ம்ம். அதை அப்புறம் ரசிக்கலாம். சரியான நேரத்திற்கு உழுது முடிக்காவிட்டால், நீர் இறைக்க, மோட்டார் இயக்க, மின்சாரம் இருக்காது.

அந்தி வரை உழுதேன். பின் மோட்டாரை இயக்கினேன். வாய் அகண்ட பைப்பின் வழியே பெரும் தூணாய் விழுந்த நீர், வரப்பில் ஓடி, கழனிகளில் கலக்கத் தொடங்கியது.

உடல் மீது அப்பியிருந்த சேற்றை, நீரில் நனைத்து, தேய்த்துக் குளித்தேன். நீரின் வெண்மையால், சேற்றின் வன்மையால், மறுநொடியே என் பால்ய பருவ வண்ணத்தில் உடல் மின்னத் தொடங்கியது. (மெட்ராஸ் தண்ணில குளிச்சே கருத்துட்டேன் சார்.)

உற்சாகம் பொங்க, கிணற்றினுள் டைவ் அடித்து, சற்று நேரம் நீந்தி, மேலேறி வந்து, நீர் விழும் இடத்தில், பள்ளத்தில் கால் நீட்டிப் படுத்தேன்.

ம்ம். தினம் ஸ்கூல் வேனைப் பிடிக்க (பையனுக்குச் சார்), பின் ஆபீஸ் பஸ்ஸைப் பிடிக்க, அரை பக்கெட் நீருக்கு மேல் குளிக்க நேரமில்லை; இன்றோ குளித்து முடிக்கவே மனமில்லை.

உழுத உடலை, நீர் நீவி விட்டது. களைத்த கால்களுக்கு ரம்பை பிடித்து விடுவது போல் இதமாக சுகமாக இருந்தது. (தங்கமணி திட்டமாட்டாங்கனு நம்பி எழுதியிருக்கிறேன்!).

தொலைவில், மலை முகடுகளின் மேல், சிவந்தவன் மெல்ல அஸ்தமித்தான்.

மூன்றாண்டுகளுக்குப் பின்...

அதே இடத்தில் நிற்கிறேன். கண்ணீருடன்.

நகரமயமாக்கலுக்கு இந்த கிராமமும் பலியானது.

நான் நீந்திய கிணறு மூடப்பட்டிருக்க, கண்ணுக்கெட்டிய தூரம் வரை, மருத நிலம் காய்ந்திருக்க, ஏரிக் கரை வரையிலும், பிளாட் கற்கள் நடப்பட்டிருந்தன. கிணற்றின் மீதும் ஒரு பிளாட்.

நான் உழுத நிலத்திற்கு வெகு அருகே ரோட் ரோலர் நிற்க, அதனருகே தார் கலக்கும் இயந்திரம், கரும் புகையைக் கக்கிக் கொண்டிருந்தது.

இக்கிராமம் தொடர்புடைய பதிவுகள்:

Wednesday, December 17, 2014

இராஜராஜ சோழனின் அனுக்கி

பஞ்சவன் மாதேவி.

இராஜராஜ சோழனின் மனைவியருள் ஒருவர். இவர் அரச குலமல்ல. தேவரடியார். ஆனால்...

தனக்குப் பிள்ளை பிறந்து, அவன் இராஜேந்திரனுக்கு எந்த விதத்திலும் அரியணைப் போட்டியைத் தந்து விடக்கூடாது எனக் கருதி, மருத்துவரின் உதவியுடன் தன்னை மலடாக்கிக் கொண்டவள்.

இராஜராஜனுக்கு அனைத்து விதத்திலும் அனுசரணையாக (அனுக்கியாக)... தஞ்சைக் கோவில் கட்டும் பெரும் பணியிலும், அரசு நிர்வாகத்திலும், ஏன்... யுத்தக் களத்திலும் துணை நின்றவள். இதனால், இராஜராஜனின் பிற மனைவியர் முதல், மறவர், மந்திரிகள், மக்கள்... யாவரும் அவளைப் போற்றினர்.

இராஜேந்திரன், இவளை தன்னைப் பெற்ற அன்னையாகவே நினைத்து வணங்கினான். இதனால், இவள் இறையடி சேர்ந்த பின், இவள் அஸ்தியை வைத்து, அதன் மேல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, பள்ளிப்படை கோவில் எழுப்பினான். (இடம் பட்டீஸ்வரம்).

இதையெல்லாம் உடையார் நாவலில் விரிவாய், நெஞ்சம் நெகிழும் விதமாய்ச் சொல்லியிருந்தார் அதன் ஆசிரியர் பாலகுமாரன். சிதிலமடைந்திருந்த இக்கோவில் இப்போது புனரமைக்கப் பட்டுவிட்டது என்பதையும் நாவலின் இறுதியில் சொல்லியிருந்தார்.

இக்கோவிலைக் காணும் ஆவலுடன் சென்றேன். குடந்தையிலிருந்த ஒரு அலுவலால், பட்டீஸ்வரத்தை அடையவே மதியம் ஒரு மணியாகிவிட்டது.

கோவில் நிச்சயம் சாத்தப்பட்டிருக்கும் எனத் தெரிந்தும் ஒரு நம்பிக்கையுடன் வழி விசாரித்தபடி நடந்தேன். பலருக்கு இக்கோவில் பற்றித் தெரியவில்லை (ராமசாமி கோவில் என்று பெயர் மாறிவிட்டிருந்ததும் ஒரு காரணம்). கோபுரமும் தென்படவில்லை.

‘கஷ்டம் வந்தாதான் கோவிலுக்கு வருவியா” என்று ஒரு குடிமகன் வேறு சண்டைக்கு வந்து விட்டார்! அவரைச் சமாளித்துக் கடந்து, ஒரு குறுகலான தெருவின் முனையில், ஒரு வீட்டில் விசாரிக்க, என்னை ஒரு கணம் உற்றுப் பார்த்த அவ்வீட்டுப் பெரியவர்...

‘இதோ இந்தப் பக்கம்தான், கொஞ்சம் இருங்க’

‘ஏம்மா...’ இரண்டு வீடு தள்ளி, துணி துவைத்துக் கொண்டிருந்த சிறுமியை அழைத்து, ‘இவருக்கு, கோவில் சாவியை வாங்கிக் குடும்மா’ என்று சொல்ல அச்சிறுமி அவள் வீட்டினுள் சென்றாள்.

‘நீங்களே கோவிலைத் திறந்து பார்த்துட்டு, பூட்டி சாவியை அந்த வீட்டிலேயே குடுத்துடுங்க’

சிறுமியிடமிருந்து சாவியைப் பெற்று, அப்பெரியவருக்கு நன்றி சொல்லி, அவர் காட்டிய திசையில் ஒரு நிமிடம் நடக்க அங்கே...

பசுமையான, குளுமையான தோப்பின் மத்தியில், அமைதியாய், அழகாய், கம்பீரமாய் கோவில். கோபுர வாயிலின் பூட்டைத் திறந்த போது...

அடடா... ‘இக் கோவிலுக்குச் சென்று ஒரு தீபமாவது ஏற்றிவிட்டு வாருங்கள்’ என்று பாலகுமாரன் எழுதியிருந்தாரே. அதற்கு எதையுமே நான் கொண்டு வரவில்லையே. வருந்தினேன். அருகில் கடைகளும் இல்லை. உள்ளே நுழைந்த பின்னும் வருத்தம் தொடர்ந்தது.

முன் மண்டபத்தில், ஒரு பேனரில் ‘பஞ்சவன் மாதேவீஸ்வரம்’ என்று தலைப்பிட்டு, அவளது சிறப்புகள் பட்டியலிடப்பட்டிருந்தது. பெருமிதமாய்ப் படித்துக் கொண்டே வாயில் பக்கம் கண் திரும்ப, பிரமித்தேன்.

ஒரு முதியவர் நுழைந்தார். அவர் கையில்... எண்ணெய் பாட்டில், அகண்ட அகல், சாண் நீளத் திரி.

என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். நேரே கருவறை சென்றார். லிங்கத்தினடியே அகலை வைத்து, அது நிரம்பும் வரை எண்ணை விட்டு, திரியிட்டு, தீபம் ஏற்றி, பின் கற்பூரமும் காட்டினார்.

அவரிடம் ‘சாவியை உங்க கிட்ட குடுக்கனுமா? ஒரு பத்து நிமிடம் இருக்க முடியுமா?’

‘இல்லை தம்பி, நான் தீபம் ஏற்றவே வந்தேன். நீங்க கோவிலை நிதானமாகப் பார்த்தபின் வாங்கிய வீட்டிலேயே சாவியைக் குடுத்துடுங்க’. மீண்டும் புன்னகைத்துச் சென்று விட்டார்.

உணர்ச்சிகள் பலவாறு கிளர்ந்தன.

அம்மா, பஞ்சவன் மாதேவி, இன்னமும் இங்கே நீ உறைகிறாயா?

சாவி தந்ததும், தீபமேற்ற வந்ததும் தற்செயலா? இல்லை உன் செயலா?

எனக்கென நீ செய்ததாய் எண்ணுவதில்தான் எத்தனை ஆனந்தம்.

உன் பாதம் பணிகிறேன்.

உன்னைப் போன்ற மனைவிகள் பெருக வேண்டும். இராஜராஜன்கள் உருவாக வேண்டும்.

அருளம்மா.

தொடர்புடைய பதிவுகள்:

1) பாலகுமாரனின் உடையார், கங்கை கொண்ட சோழன் - விமர்சனம்
2) இராஜேந்திர சோழன் அரியணை ஏறிய 1000-ஆவது ஆண்டு விழா

Wednesday, December 10, 2014

பாலகுமாரனின் உடையார், கங்கை கொண்ட சோழன் - விமர்சனம்.


மனம் ஆட்டம் காணத் தொடங்கியது.

‘இராஜாதிராஜா, இனி சகலமும் உன் பொறுப்பு... எனக்கு விடை கொடு’ - என தன் மூத்த மகனிடம் மாமன்னன் இராஜேந்திரன் கூறி, சபையை வணங்கி விடை பெறும் போது, இனி இக்கதை அவரது இறுதி காலத்தை நோக்கிப் பயணிக்கும் என்பதால், அதைப் படிக்கும் திராணி இருக்குமா என எண்ணி மனம் கலங்கியது.

உடையார் நாவலில், இராஜராஜ சோழன் இறைவனடி சேர்ந்தார் என்பதை எழுத முடியாமல் கதறி அழுத ஆசிரியர் பாலகுமாரனின் உணர்ச்சிகள், படிக்கும் போது என்னையும் அழ வைத்தன. படிப்பது பேருந்தில் என்ற போதும், பிறர் பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்தும், வழியும் கண்ணீரை என்னால் துடைக்கக் கூட முடியவில்லை.

மறுபடியும் அந்நிலைக்குப் பயந்தே, அதன் தொடர்ச்சியான ‘கங்கை கொண்ட சோழன்’ நாவலின் இறுதி அத்தியாயங்களைத் தனிமையில் படித்தேன்.

ஆனால், ஆஹா, தென்னகத்தின் இரு ஒப்பற்ற மாமன்னர்களின் வாழ்வு மட்டுமல்ல மரணமும் கூட இணையற்றதாய் நிகழ்ந்திருக்கிறது.

சேரனை அடக்கி, பாண்டியனை ஒடுக்கி, மேலைச் சாளுக்கியனை விரட்டி, கீழைச் சாளுக்கியனுக்குப் பெண் கொடுத்து பந்தமேற்படுத்தி, சோழ மக்களைப் பாதுகாத்த திருப்தியுடன், சிறை பிடித்த பகை வீரர்களையும் பாங்குடன் நடத்தி, தக்க சன்மானமும் தந்து, கோவில் பணியில் பங்கெடுக்க வைத்து... பிரமிக்க வைக்கும் கலையாய், உள்ளம் சிவனிடம் சரணடையும் வகையாய், பிரகதீஸ்வரர் கோவில் எழுப்பிவிட்ட பேரானந்தத்துடன்... உடையார்குடியில் ஒரு யோகியைப் போல, உடலை உயிர் நீங்குவதை, உணர்ந்து கொண்டே சிவபாதம் சேர்ந்திருக்கிறான் இராஜராஜன் (சிவபாத சேகரன்).

தனயன் இராஜேந்திரனும் அவ்வண்ணமே.

கங்கைவரை வென்று, அந்நதி நீராலேயே, தான் எழுப்பிய கோவிலுக்குக் குடமுழுக்குச் செய்து, சோழனின் பொருளாதாரத்தை, அனைத்து வருணத்தினரின் தரத்தை பலமடங்கு உயர்த்தி, கடல் கடந்து, கீழைத் தேசங்களையெல்லாம் வென்று, அங்கெல்லாம் தமிழரின் ஆளுமையை, ஆதிக்கத்தை, நாகரிகத்தைப் பரப்பிவிட்டு, தன் வயோதிகத்தில், அரசியலிலிருந்து முற்றிலும் விலகி, காஞ்சி அருகே, பிரம்மதேசம் என்னும் கிராமத்தில், பாணர்களின் மத்தியில் பாடல்கள் கேட்டபடி சில ஆண்டுளை இனிமையுடன் கழித்து, பெரும் மன நிறைவுடன், விண்ணுலகு சென்றான் இராஜேந்திரன்.

தமிழரின் இன்றைய நாகரிகத்திற்கு மையம் சோழ மண்டலம். அதன் சரித்திரத்தை, அம்மக்களின் வாழ்க்கையை, வீரத்தை, இவ்விரு மன்னர்களின் கால கட்டத்தை, இரு பெரும் நாவலாய், மொத்தம் பத்து பாகமாய் விவரித்த பாலகுமாரன் அவர்களை வணங்குகிறேன்.

கதாநாயக நாயகிகளை, அரச குடும்பத்தை மையப்படுத்தியே நகரும் சரித்திரக் கதைகளிலிருந்து வேறுபட்டு, பாத்திரங்களை, மக்களை மையப்படுத்தியே கதை நகருகிறது. அடர்த்தியின்றி, சரளமாக, பிரவாகமாகச் செல்லும் நடை. ஆனால் ஆங்காங்கே நின்று, படித்ததை மனம் அலசுகிறது.

இல்லத்தில் ஒரு குடும்பமாய், பணியில் ஒரு குழுவாய் இயங்கவே இன்று நாம் திணறுகிறோம். நேரமில்லை என்று தள்ளிப் போடும் செயல்கள்தான் எத்தனை எத்தனை! ஆனால் தேவரடியார்கள், வேளாளர்கள், வணிகர்கள், கம்மாளர்கள், தச்சர்கள், சிற்பிகள், பஞ்சமர்கள், அந்தணர்கள் என்று மக்கள் பலவாய், தேசம் ஒன்றாய் இயங்கி வளர்வதைக் கண்டுத் திகைக்கிறேன்.

ஏன் இத்தனை பிரிவுகள். ஆசிரியரின் விளக்கத்தில் பலதும் புரிகிறது.

இன்று மழை வருமா? குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாமா? முடிவெடுக்க முடியாமல் திணறுகிறோம். செவ்வாய் கிரகத்தின் பாதையையும், பயணத்தையும் கணக்கிட்டு, இன்ன நேரத்தில் இன்ன திசையில் மங்கள்யான் ஏவப்பட்டால், அது செவ்வாயை சரியாக அடையும் என்று கணினிகளின் துணையுடன் கணக்கிடுகிறோம்.

எந்தப் பருவத்தில் விதைக்க வேண்டும், எந்த நாளில் படை / மரக்கலம் கிளம்ப வேண்டும், எப்போது பகை நாட்டைத் தாக்க வேண்டும் என்பதையெல்லாம் கணிக்க, நட்சத்திரங்களின் நிலைகளை, வானிலைகளை கவனித்து, கையில் வெறும் நூலைத் தொங்கவிட்டு அது அசைவதை வைத்து காற்றின் திசையை, வேகத்தை, அதில் படியும் ஈரத்தை வைத்து மழையின் நிலையை எல்லாம் கணக்கிட வேண்டி... அதற்கு மனம் கவனம் சிதறாமல் ஒருமுகப் பட்டு இருக்கவே வேறெந்தப் பணியிலும் ஈடுபடாமல் ஒரு சாரர் செயல்பட்டனர்.

பந்தை எதிர் கொள்ளும் பேட்ஸ்மெனின் தேவையை பூர்த்தி செய்யவே, ட்வெல்த்-மேன் தேவைப்படுகிறான். பகையை எதிர் கொள்ளும் மறவனின் ஆயுதங்களைச் செய்ய, செப்பனிட, அவன் குதிரைகளுக்கு லாடம் அடிக்க கம்மாளர்கள், குதிரைகளைப் பராமரிக்க பஞ்சமர்கள் இயங்கினார்கள்.

மறவர்களுக்குள் தான் எத்தனைப் பிரிவுகள். வெறுங்கையாலேயே தாக்கும் கைகோளப்படை, முதுகு வாள் படை, மரணம் நிச்சயம் எனத் தெரிந்தே யுத்ததின் முன்னனிக்குச் செல்லும், முனை திரியார், மாமுனை திரியார்... பெரும் பட்டியலே நீள்கிறது. இவர்களை வழி நடத்த உபதளபதி, தளபதி, மாராயர்... மாதண்ட நாயகர் வரை பல நிலையில் தலைவர்கள். ஆசிரியரின் விவரணங்கள் வாய் பிளக்க வைக்கின்றன.

சரித்திரக் கதையின் யுத்த தந்திரங்கள் பெரும்பாலும் அதன் ஆசிரியரின் கற்பனைகளே.

ஆனால் பாலகுமாரன் போர்ப் பகுதிகளைச் சுருக்கி, போருக்கான ஆயத்தங்களை விரிவாக்கியிருக்கிறார். பல இலட்சம் வீரர்கள் புறப்படும் காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன. காடுவெட்டிகள் முன் சென்று மரங்களை வெட்ட, காடு சேறு சரிவுகளில் தச்சர்கள் பலகைகளுடன் பாதையமைக்க, சமைப்பவர்கள் தானியங்களைச் சேகரித்து உணவிட, மறவரில் முன்னனியினர் தாக்க, கைப்பற்றியதை பின்னனியினர் காக்க... ம்ஹூம், இதை மேலும் விளக்க, மீண்டும் நாவலை நான் புரட்ட வேண்டும்.

போர் விவரங்கள் மட்டுமல்ல...

சிற்பங்கள் செதுக்குவது, ஐம்பொன் சிலைகள் வடிப்பது, கோவில், மரக்கலம் கட்டுவது, கடலில் நீரோட்டம் பிடிப்பது... என்சைக்ளோபீடியா போல், ஆனால் புள்ளி விவரங்களாகத் தந்து விடாமல், கதையின் ஓட்டத்திலேயே பெரும் தகவல்களை ஆசிரியர் தந்த விதம் அற்புதம்.

பாத்திரப் படைப்புகள் வாழ்க்கைப் பாடமே நடத்துகின்றன. பெண் பாத்திரங்கள் படிப்பவரை நிச்சயம் ஆட்டம் காண வைக்கும். அவரவர் வாழ்க்கையோடு ஒப்பிட்டுக் கதற வைக்கும். பெண்ணிற்குப் பிரதான இலக்கணம் இராஜராஜரின் அனுக்கி பஞ்சவன் மாதேவி. எதிர்மறை அவர் மகள் குந்தவை. இவளால் நிர்க்கதியில் உயிர்விடும் கீழைச் சாளுக்கிய மன்னன் விமலாதித்தனைப் போன்றவர் இன்றும் ஏராளம்.

காலம் போடும் கணக்குகள் திகைக்க வைக்கின்றன. 10+ மனைவிகளிருந்தும் இராஜராஜனுக்கு ஒரே மகன். இரு மகள்களும் தடம்மாற, இராஜேந்திரனோ மூர்க்கத் தனத்துடன் வளர்கிறான். பின் பக்குவப்படும் அவனுக்கு 7 மகன்கள். அவர்கள் கச்சிதமாக வளர்கிறார்கள். பரந்த சாம்ராஜ்யப் பகுதிகளை  திட்டம் போட்டு ஒற்றுமையாய் நிர்வகிக்கிறார்கள். சிறிது காலமே வாழும் கடைசி மகன், சோழ கேரளாந்தகன் (கேரளத்தை நிர்வகித்தவன்) உள்ளத்தை பெரிதும் கொள்ளை கொள்கிறான். மீண்டும் சரித்திரத்தின் விசித்திரம். இவர்கள் யாவருக்குமே பிள்ளையில்லை. (கதையின் காலத்திற்குப் பின் விமலாதித்தனின் பேரன் அநபாயன் குலோத்துங்கன் சோழ அரியணை ஏறுவான்.)

பல சம்பவங்கள், கதையைப் படித்து முடித்த பின்பும், பல நாட்களுக்குப் மனதில் பசுமையாகத் தொடர்கிறது.

உதாரணம். இருட்டில், சலசலக்கும் காவிரி நீரோட்டதின் மேல், ஆசனமிட்டு இராஜராஜனும் இராஜேந்திரனும் தனிமையில் உரையாடுவது அனாயாசமாக, 80 பக்கங்களைக் கடக்கிறது. அதுவரை தந்தையுடன் பலதில் முரண்பட்ட இராஜேந்திரன் மெல்ல மெல்ல உணரத் தொடங்குவதைப் படிக்கும் எந்த தந்தையின் உதடும் முறுவலிக்கும்.

இதைப் போலவே சின்னச்சின்ன காட்சிகளும்.

கோவில் கட்டுமிடத்தில் கட்டிலில் அமர்ந்து விவாதிக்கும் இராஜராஜன் அப்படியே கண்ணயர்ந்துவிட, அடுத்த நொடியே ஒரு தாதி வெண்பட்டைப் போர்த்த, இருவர் விசிறத் தொடங்க, மெய்க்காவல் படை தம் குதிரைகளின் கனைப்பு அரசரின் உறக்கத்தைக் கலைத்து விடக்கூடாது என்று அவற்றை சற்று தொலைவிற்கு அனுப்புவதெல்லாம் ஹைகூ.

உடையார் நாவலின் கரு, தஞ்சைக் கோவிலை எழுப்புதல். கங்கை கொண்ட சோழன் நாவலின் கரு கங்கை மற்றும் கடாரத்தின் மீது படையெடுப்பு. இரண்டுமே இரு மன்னரின் தனிப்பட்ட சிந்தனைகள். செயல்படுத்த இரண்டிற்கும் எந்த முன்மாதிரியும் கிடையாது. பலர் ஆதரவும் கிடையாது. அதை அவர்கள் சாதித்தபோது சோழனின், தமிழனின் வாழ்வு பலமடங்கு உயர்ந்து விட்டது.

இந்நோக்கங்களை அடைவதற்குள்தான் எத்தனை எத்தனை சோதனைகள். பிரச்னைகள். ஒரு பெண்ணோ, வீரனோ எந்த முன்யோசனையும் இன்றி செய்யும் ஒரு சிறு தவறு, ஒன்றன்பின் ஒன்றாய் பல்கிப்பெருகி, பெரும் கலவரமாகி, நோக்கத்திற்கே ஊறு விளைவிப்பதும், அதை இரு அரசர்களும் கடந்து சென்று, இலக்கை அடைவதை, ஆசிரியர் பாடமாய்ச் சொன்னது, நம் வாழ்க்கையில் எந்த முயற்சிக்கும் துணை வரும்.

இரு மன்னர்களை நினைத்து நினைத்து நெஞ்சு நிமிர்கிறது. பழையாறை, தஞ்சை, அமண்குடி, உடையார்குடி, மீன்சுருட்டி போன்ற பெயர்களைக் கேட்கும் போதே அது குளிர்கிறது. அவர்கள் வாழ்ந்த ஊர்களுக்கு, எழுப்பிய ஆலயங்களுக்குச் செல்லும் போது, பாலகுமாரன் விவரித்த காட்சிகளை கண்முன் நிறுத்தி, அக்காலத்திற்கே சென்று ஆனந்த சுகத்தில் லயிக்கிறது.

ஆனால் அதே கணம்...

இராஜேந்திரன் வென்ற தேசத்தவனாய் நினைக்கையில் குலை நடுங்குகிறது. கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா ஜிம்பாப்வேயை அடித்து நொறுக்குவதைப் போலத்தான், பல இலட்சம் வீரர்களுடன் சென்று... மேலைச் சாளுக்கியம், தட்சிணலாடம், உத்திரலாடம், ரோஹணம், இலங்கா சோகம், கடாரம்... இன்னும் பல தேசங்களைத் துவம்சம் செய்திருக்கிறான்.

அடுத்த பத்து இருபது ஆண்டுகளுக்கு எழ முடியாமல் நகரங்களைத் தரைமட்டமாக்கி, கடுகை விதைத்து விளைநிலங்களையும் மலடாக்கியிருக்கிறான். பாத்திரங்கள், பெண்டிர், செல்வம், புத்தர் பொற்சிலைகள், ஏன் கோவிலிலிருந்து காளி சிலைகளையும் பெயர்த்துக் கொண்டு வந்திருக்கிறான். மெல்ல அந்த தேசம் துளிர்க்கின்ற போது அவன் மகன் இராஜாதிராஜன் மீண்டும் படையெடுத்து அழித்து வந்திருக்கிறான். யுத்தத்தின் கோரத்தை, தோற்குமிடத்தின் அவலத்தை, வென்ற தேசமே ஆயினும் மரணமடைந்த வீரர்களின் குடும்ப நிலையையும், விதவைகள் பெருகுவதையும் வேறு எந்த சரித்திரக் கதையிலும் இல்லாத அளவிற்கு விவரித்திருக்கிறார் பாலகுமாரன்.

இந்தப் பாவங்களினாலோ என்னவோ... முன்னூறு வருடங்களுக்குப் பின், பாண்டியனால், மற்றொரு தமிழனால், அற்புதமாக நிர்மாணிக்கப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம், ஒரு தூண்கூட நிற்க விடாமல், அழிக்கப் பட்டிருக்கிறது. தமிழன் மட்டும் ஒற்றுமையாய் இருந்திருந்தால், உலகையே ஆண்டிருப்பான். என்ன செய்ய, இது விதி, இது விதி, இது விதி என்று ஆசிரியர் முடித்த போது, அது தந்த வலி மறையவே எனக்கு சில நாட்கள் பிடித்தது.

ம்ம். இது பத்து பாகம் கொண்ட நெடுங்கதை. குறைகளும் உண்டு. பல சின்னச் சின்ன சம்பவங்கள், தொடர்ச்சியின்றி அப்படியே நின்று விடுகின்றன. உதா: நரேந்திரன் இராஜேந்திரனுக்கு எழுதும் ஓலை, மேலைச் சாளுக்கியரிடம் சிக்க, அவர்கள் அவர்களுடைய மன்னனுக்கு எழுதியது போல் மாற்றி, வேண்டுமென்றே சோழ ஒற்றர்களிடம் சிக்க விடுவது. பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டிய இடம் இது. ஆனால் இது தொடரவே இல்லை. கால இடைவெளிகளும் குழப்புகின்றன. இராஜேந்திரனின் மனைவியின் பெயரும் பஞ்சவன்மாதேவி என்று வருவது சற்றே குழப்புகிறது. சொற்பிழைகளும் உண்டு: மூன்று மரக்கலம் (மரக்கால்) நெல். சின்னச் சின்னதாய் இது போன்ற பிழைகள், கதையை லயித்துப் படிக்கும் போது நெருடுகின்றன.

பாலகுமாரன் உயிரைப் பணயம் வைத்து எழுதிய கதை. மருத்துவர் நம்பிக்கையை இழந்த நிலையிலும், மீண்டும் எழுத வேண்டுமே என்ற எண்ண வலிமையினாலேயே மீண்டு படைத்த கதை. எழுத முடியாமல், வாயால் சொல்லி, ஒலிப்பதிவு செய்யப்பட்டு, அவரது உதவியாளரால் எழுத்தாக்கப்பட்ட கதை. இதனால் ஏற்பட்ட குறைகள் களையப்பட வேண்டும் என விரும்புகிறேன்.

பாலகுமாரன், வரலாற்றைச் சொல்லி, நம் பண்பாட்டைக் காட்டி, பற்பல சாதனைகளை, நெறிமுறைகளை விளக்கி, மனதிற்குப் பற்பல உணர்ச்சிகளைத் தந்து, அதைப் பக்குவப் படுத்தி புதிய தேடலுக்கும் வித்திட்டுவிட்டார்.

நன்றி ஐயா.

தொடர்புடைய பதிவு:

Thursday, July 31, 2014

இராஜேந்திர சோழன் அரியணை ஏறிய 1000-ஆவது ஆண்டு விழா

மாமன்னன் இராஜேந்திர சோழன் அரியணை ஏறிய 1000-ஆவது ஆண்டு விழா கங்கை கொண்ட சோழபுரத்தில்,  ஜூலை 25-ஆம் தேதி நிறைவாக நடந்தது. இம்மன்னன் தன் தந்தை இராஜராஜனைப் போல், இன்றைய தலைமுறை மக்களின் மனதில் அரியாசனமிட்டு அமர, இவ்விழா விதை விதைத்திருக்கிறது.

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல், இராஜராஜனை அருண்மொழி வர்மனாய், பல மக்களிடம் அவர்கள் குடும்பத்தில் ஒருவராய்ச் சொந்தமாக்கிவிட, அது போன்ற ஒரு பந்தம், தந்தையை மிஞ்சிய தனயன் இராஜேந்திரனுக்கு ஏனோ கிடைக்கவில்லை.

கல்கி, இராஜராஜன் இளவரசனாக இருக்கும் போதே கதையை முடித்துவிட, அங்கிருந்து அவன் மாமன்னனாகி, சிறந்த ஆட்சி தந்து, இம்மண் உள்ளளவும் தமிழரின் திறனை, நாகரிகத்தைப் பறைசாற்ற பெருங்கோவில் எழுப்பியதை, பாலகுமாரன் ஆறு பாக உடையார் நாவலில் அற்புதமாக விவரித்திருந்தார்.

தன் எண்ணங்களை, உணர்வுகளை, நினைவுகளை சோழ சரித்திரத்தில் சஞ்சரிக்கவிட்டு எழுதிய பெரும் பணியை, மேலும் தவமாக்கி, கர்மமாக்கி, அதன் வலிமையாலேயே தன் உயிரையும் மீட்டு, நான்கு பாகமாய் “கங்கை கொண்ட சோழன்” நாவலைப் படைக்க, இராஜேந்திரனின் கீர்த்தியின் மேல் இன்று புது வெளிச்சம் விழுந்துள்ளது.

இவ்விரு படைப்புகளும் என் சிந்தனைகளைப் புரட்டிப் போட்டன. இவன் தலைநகர் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு, பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் செல்லும் ஆவல் எனக்கு அதிகரிக்க...

அவ்விடத்தில் வசிக்கும் ராஜாராம் கோமகன் என்பவர், இராஜேந்திரன் அரியணை ஏறிய 1000-ஆம் ஆண்டை, விழாவாகக் கொண்டாடுகிறார்... அனைவரும் வாருங்கள் என பாலகுமாரன் நாளிதழில், வார இதழில், தொலைக்காட்சியில் அழைக்க...

ஜூலை 25-ஆம் தேதி, கங்கை கொண்ட சோழபுரத்தில், சோழ அரண்மனை அகழாய்வு செய்யப்பட்ட, மாளிகை மேட்டை, நான் சரியாக மாலை 4-மணிக்கு அடைய, வாத்திய ஒலிகளுடன் விழா துவங்கியது.

பாலகுமாரன் மற்றும் இராஜேந்திரனைப் பற்றி எழுதிய, ஆராய்ச்சி செய்த குடவாயில் பாலசுப்ரமணியன் போன்ற அறிஞர்களுக்கெல்லாம், மரியாதை செய்து, மலர்க் கிரீடம் அணிவித்து, அவர்களை ரதம் போன்ற வண்டியில் அமர்த்தி, யானைகள் முன் செல்ல, இராஜேந்திரன் கட்டிய கோவிலுக்கு (இதுவும் பிரகதீஸ்வரர் கோவில்தான்) அழைத்துச் சென்றனர்.

அனைவரும் அகன்ற பின், அவ்விடத்தில் காற்று மட்டும் துணையிருக்க, அகழாய்ந்த பள்ளத்தில், அரண்மனைச் சுவர்களின் அடித்தளத்தின் மேல் இருந்த, ஓரடி சதுர கல்லின் மேல் அமர்ந்தேன். மூடிய கண்முன் சோழனின் கலம் ஓடிய காலம் விரிந்தது.

ஒரு மனிதனின் சொல்லுக்கு ஒன்பது லட்சம் வீரர்கள் அசைந்திருக்கிறார்கள்.

கீழைத் தேசங்களையும் உள்ளடக்கி, பிரம்மாண்ட சாம்ராஜ்யத்தை, பிரமிக்க வைக்கும் நிர்வாகத்தை, பொருளாதார விருத்தியை, நாகரிக மேன்மையை, அனைத்து தரப்பு மக்களும் இணைந்து உயர்ந்த நிலையை... இதோ இந்த இடத்திலிருந்து நிகழ்த்தியிருக்கிறான் இராஜேந்திரன்.

இவன் வம்சம் மேலும் தொடர்ந்து 280+ ஆண்டுகளுக்கு கோலோச்சியிருக்கிறது. இச் சாதனைகள் எல்லாம் நமக்கு பெரும் பாடங்கள்.

எந்த வளர்ச்சியும், விருத்தியும், விஸ்தரிப்பும் ஒரு நாள் ஒடுங்கும். பிரம்மாண்ட கோட்டை கொத்தளங்களும், ராஜ வீதிகளும், மாட மாளிகைகளெல்லாம் மண் மேடாகி, ஒரு சில சுவடுகள் மட்டும், இன்று இங்கு எஞ்சியிருப்பதும் நமக்கு பாடமே.

ஊர்வலம் கோயிலை அடைந்த சமயத்தில் அதனுடன் இணைந்தேன். பெரும் கூட்டம் கூடியிருந்தது. ஆயிரம் தீபங்கள் ஏற்றப்பட்டன.

விழா மேடையில் நாட்டியாஞ்சலிக்குப் பின் அறிஞர்கள் பேசினார்கள். முனைவர் பொற்கோ தொடங்கிட, பின் பாலகுமாரன் தொடர்ந்தார். ‘இராஜேந்திரனைப் பற்றிப் பேசும் முன் இப்படி ஒரு அற்புத விழாவை ஒருங்கிணைந்து முனைந்து நடந்திய இராஜாராம் கோமகனைப் பற்றி நாலு வார்த்தையாவது பேச வேண்டாமா? எனக் கேட்டு அவரைச் சிறப்பித்துச் சொல்ல அதை மேடை ஓரத்தில், சிறு புன்னகையுடன், தன்னடக்கத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார் கோமகன்.

எந்த நேரத்தில் எந்தத் தகவலைக் கேட்டாலும் அள்ளிக் கொடுத்த குடவாயில் பாலசுப்ரமணியன், முனைவர் இராஜேந்திரன்... இவர்களின் உதவியால்தான் என்னால் நாவல்களைப் படைக்க முடிந்தது என அவர்களுக்குத் தன் நன்றியைத் தெரிவித்தார்.

உங்கள் பிள்ளைகளை ஊட்டி, ஏற்காட்டிற்கு அழைத்துச் செல்வது போல, தஞ்சைக்கும் கங்கை கொண்ட சோழபுரத்திற்கும் அழைத்து வாருங்கள். இக் கோவில்களின் மேன்மைகளை அவர்களுக்குச் சிறு வயதிலேயே சொல்லிக் கொடுங்கள் எனக் கேட்டுக் கொண்டு பேச்சை முடித்தார்.

பின் தொடர்ந்த முனைவர் இராஜேந்திரன் (ஆணையர், வேளாண் துறை) மன்னனைப் பற்றிய பல அரிய தகவல்களைத் தொகுத்துப் பேசினார். வெட்டனும், நட்டனும், கட்டனும்... இம்மூன்றையும் சிறப்பாகச் செய்தவன் இராஜேந்திரன் என்று நயமாகச் சொன்னார். அதாவது, குளங்கள் வெட்டனும், வெற்றிக் கொடி நட்டனும், கோவில் கட்டனும். இவன் மட்டும் கிழக்கே செல்லாமல், மேற்கே தன் படைகளைத் திருப்பியிருந்தால்... கஜினி முகமது முறியடிக்கப்பட்டிருப்பான். ஆப்கானின் ஊடுருவல்கள் தடுக்கப்பட்டிருக்கும். இந்தியாவின் சரித்திரம் மாறியிருக்கும் என தன் ஆதங்கத்தைப் பதிவு செய்தார். இருப்பினும் கிழக்கே தமிழர்கள் பரந்ததற்கு, மலேசியாவில் தை பூசத்திற்கு தேசிய விடுமுறை விடுவதற்கெல்லாம் இவனே காரணம் என்றார்.

மற்றவரும் தொடர்ந்து பேச விழா நடந்தது. ஒவ்வொருவரின் பேச்சையும், கலையாமல், ஆவலாகக் கேட்ட மக்கள் கூட்டத்தைக் கண்டு மகிழ்ந்தேன். பெரும்பாலும் சுற்றுப்புற மக்கள். கோவிலுக்கு வெளியே வெகுவாய் நீண்டிருந்த கார்களின் வரிசை பலரின் வருகையையும் சொல்லியது.

குடும்பமாக வந்திருந்த கூட்டத்தினரிடம் இருந்த மலர்ச்சி என்னையும் பற்றிக் கொண்டது. எந்த அவசரமும் இன்றி, தன் வீட்டு விழா போல், தன்னை அலங்கரித்துப் பங்கெடுத்து, தீபமேற்றி, அமைதியாய் தாமே வரிசையில் நின்று, உள்ளே இறையை தரிசித்து, விழா மேடைமுன் குழுமியதை நான் பார்த்தது, அங்கு பரந்திருந்த பசும் புல் தரையைவிட எனக்கு இதமாக இருந்தது.

மன்னா, இராஜேந்திரா உன் ஆன்மா இன்னமும் இங்கு உலவுவதை உணர்கிறேன். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பும் இங்கே மகிழ்ச்சியைத் தழைக்க வைக்கிறாய். மக்களை உன் பெயரால் ஒருங்கிணைக்கிறாய். குழுவாய்ச் செயல்பட்டு மேம்படவும் வழி நடத்துகிறாய். வணங்குகிறேன். உன் கீர்த்தி ஓங்குக.

இரவு கும்பகோணத்தில் தங்கினேன். இம்மண்ணின் மக்களுக்கு, விழாவின் நாயகர்களுக்கு, குறிப்பாக கோமகனுக்கு மானசீகமாய் நன்றி சொல்லி மன நிறைவுடன் படுத்தேன்.

மோசமான உடல் நிலையிலும் தன் உயிரைப் பயணம் வைத்து, மருத்துவர் துணையுடன் கங்கைவரை பயணம் செய்து, சோழன் சென்ற பாதைகளை கவனித்து, ஆயிரமாண்டிற்கு முந்தைய சோழ சாம்ராஜ்யத்தை நமக்கு எழுத்து மூலம் மீட்டுக் காட்டிய எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் நாவல் காட்சிகள் என்னைத் தாலாட்டி உறங்க வைத்தன.

Wednesday, March 26, 2014

சென்னையில் எச்சரிக்கை!

ஆஹா, வானில் கதிரவன் இன்னும் ஜொலிக்குதே! மனம் வேறேதோ கிரகத்தில் இருப்பதாய் நினைத்துக் குதிக்குதே.

பின்னே என்ன சார்? இந்த ஐ.டி கம்பெனி மேஸ்-ஸிற்குள்ளே (Maze) காலையில் நுழைந்து விட்டால், வேளை மாற்றம் புரியாமல் சீட்டிலேயே சாப்பிட்டு, மவுஸை இயக்கியே கை சோர்ந்த பின் (ஃபேஸ்-புக்கையே பார்த்தாலும் லைக் பண்ணணுமே சார்) வெளிவரும் போது, சூரியக் கணவனோடு சண்டை போட்டு ஒன் எய்ட்டி டிகிரி முகம் திருப்பியிருப்பாள் பூமி. அப்படியிருக்க இன்று நாலு மணிக்கே வீட்டிற்குக் கிளம்பினால் (கண்ணு போடாதீங்க சார்) மனம் குதிக்காதா?

சாலையில் கானல்நீர் மட்டுமே ஓடிக் கொண்டிருந்தது. திணறடிக்கும் நச்சுப் புகை வர, இன்னும் இரு மணி நேரம் இருப்பதால், காற்று சுத்தமாய், சுதந்திரமாய், சந்தோஷமாய் உலாவிக் கொண்டிருந்தது.

சன்னமாக விசிலடித்தபடி, ஒரு பாட்டை முணுமுணுத்தபடி, ஆபீஸ் அருகே இருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தேன்.

ஒரு கை விரல் எண்ணிக்கையில் மட்டுமே சிலர் பஸ்ஸிற்காகக் காத்திருந்தார்கள்.

என்னே பாக்கியம்!! ஆனந்திக்கும்போதே, தோளருகே யாரோ நகர, சுரீர்ரென உள்ளுணர்வு எச்சரிக்கை செய்ய, சட்டென ஓரடி நகர்ந்து திரும்பினேன்.

என் சட்டை பாக்கெட்டை எட்டிப் பார்த்து நகர்ந்த அவன், என்னைப் பார்த்து பகபகவென படு கேவலமாகச் சிரித்தான்.

ஜிம் பாடியை இறுக்கியபடி பழைய டி-சர்ட், ஜீன்ஸ். பரட்டைத் தலை. அவன் தோற்றம் அபாய மணி அடித்தது.

சில அடி தூரத்தில், ஒரு நிழல் நகர, திரும்பினால், அங்கேயும் ஒருவன் இதே போல் என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான்.

என்னமோ நடக்கப் போகிறது என்பதை உணர்ந்த, பிற பயணிகள், பேருந்து நிறுத்தத்தை விட்டு நகர, நான் தனித்து விடப்பட்டேன்.

படு வேகமாய் மனசில் எண்ணங்கள் ஓடத் தொடங்கின.

ஒருவனைச் சமாளிக்கவே என்னிடம் பலமில்லை. ஓடித் தப்பிப்பது சுலபம். ஆனால் எதற்காக என்னை குறி வைக்கிறார்கள்?

ஒரு வேளை, ஆபீஸ் வளாகத்தினுள் இருக்கும் ஏ.டி.எம்-இல் செக்கை டிராப் செய்ய நான் சென்று வந்ததை, பெருமளவு பணம் எடுத்ததாக நினைத்து அதைக் களவாட வருகிறார்களோ?

ம்ஹூம். இவ்விடம் வரும் வரை யாரும் என்னை ஃபாலோ செய்யவில்லை.

ஒருவன் என் சட்டை பாக்கெட்டையே வெறித்துப் பார்த்தான். அடுத்தவன் என் ஷூவைப் பார்த்து,  தன் முகத்தை  ஙே-வென வைத்துக் கொண்டு  பகபகவெனச் சிரித்தான்.

இருவரும் என்னை நோக்கி வர, ஓடத் தயாரானேன்.

இரு இரு... மனம் கட்டளைகளை ட்வீட்டுக்களாய் வீசியது.

இது உன் ஏரியா.

(அதாவது சுற்றுப்புறம் உனக்குப் பரிச்சயம். இண்டு இடுக்குகளில் புகுந்து ஓடி விடலாம்.)

800-மீட்டர் ரன்னிங் ரேஸில் கலந்து கொண்டு நீ பாய்ந்து ஓடிய பள்ளி நாட்களை நினைத்துப் பார்.

நீ கடைசியாகத்தான் வந்தாய். உன் ஓட்டம் தண்டம்தான். ஆனால் இந்த ஜிம்காரர்களை விட நீ  ஜம்மென்று ஓடலாம்.

ஜாக்கிச்சானை, துரோணராய், மானசீக குருவாய் பாவித்து, ஹாய் ஊய் என்று கொஞ்ச காலம் கராத்தேவெல்லாம் கற்றாயே. அவர்கள் அடித்தால் இரண்டு அடிகளைத் தடுக்கலாம். அவ்வளவுதான். திருப்பி அடிப்பதெல்லாம் கீ-போர்ட் தட்டும் விரல் முஷ்டிகளால் முடியாது.

தப்பிப்பது முக்கியம். ஆனால் அவர்களின் நோக்கத்தை அறிவது அதைவிட முக்கியம்.

பதட்டப் படாதே. குறைந்தபட்சம் பதட்டத்தை வெளிக் காட்டாதே. ஆபத்து இன்னும் நெருங்கவில்லை. அசராதது போல் நடி.

பிளாட்ஃபார்மிலிருக்கும் கைப்பிடியில், இரு கைகளையும் பின்புறமாய் ஊன்றி சாய்ந்து நில். வெளிப் பார்வைக்கு நீ அலட்சியமாக இருப்பதாகத் தெரியும்.

ஆனால் கைகளை அழுத்தி ஜம்ப் செய்தால், முதல் தாவலிலேயே ஆறடி தாண்டி ஓடத் தொடங்கலாம்.

(மனக் கட்டளைகளை மெனக்கெட்டுச் செய்யத் தொடங்கினேன்)

இருவரும் கிட்டதட்ட நெருங்கி விட்டார்கள்.

சீக்கிரம் கண்களைச் சுழற்றிக் கவனி. மேலும் ஆட்கள் இருக்கலாம்.

பெல்ட்டை இறுக்கிக் கொண்டே, மெல்ல உடலைத் திருப்பியபடி, நான்முகனாய் திசைகளைப் பார்த்தேன்.

வலப்பக்கம்... சற்றுத் தொலைவில்... அங்கே... டாடா-சுமோ... அதனுள் மேலும் இரண்டு தலைகள் தென்பட...

அவர்கள் கையில் ஏதோ கருப்பாய், உருளையாய், சற்று நீளமாய்...

ஐயோ ஆபத்து வந்தே விட்டது ஓடு...

பாய முனைந்த கால்கள், அப்படியே சடன்-பிரேக் அடித்து நிற்க, இதழ் முறுவலிக்க, முகத்தில் மந்தகாசம் பரவியது.

அஹ்ஹஹ்ஹஹ்ஹா... வாய்விட்டுச் சிரித்தபடி, நெருங்கி விட்ட இருவரையும், இரு கைகளால் பிடித்து, அப்படியே டாடா-சுமோவை நோக்கி அவர்களைத் திருப்பி, கைகளை உயர்த்தி தம்ஸ்-அப் காட்டினேன்.

சற்றே அசட்டுச் சிரிப்புடன், என் கைகளைக் குலுக்கி, ஒரே குரலில் சொன்னார்கள்... தேங்க்யூ சார்.

Pogo சானலில், சோட்டா-பீமிற்கு முன் கொடிகட்டிப் பறந்த Just For Laugh-ஐ போல் எதையோ ஒரு லோக்கல் தமிழ் சானல், Candid Camera ப்ரோக்ராமுக்காக​ எடுத்துக் கொண்டிருந்தது!


Wednesday, March 5, 2014

என். சொக்கனின் ‘மொஸாட்’

மொஸாட். பெயரைக் கேட்ட கணமே ஒரு திரில்லைத் தரும் இஸ்ரேலிய உளவுத் துறை.

தன்னைச் சுற்றி எந்தச் சுவருமின்றி, தரையில் எந்தச் சுகமுமின்றி, எந்நேரமும் உயிர் குடிக்கப் பாயும் விலங்கை எதிர்ப்பார்த்தே துயிலும் காட்டு மனிதனின் உணர்வுகளே மொஸாட்டிற்கு அடிப்படை.

சின்னஞ்சிறு இஸ்ரேல் நாட்டை, விட்டமாய் வளைத்திருக்கும் பகை நாடுகளிடமிருந்து தற்காக்கவும், சதியை மோப்பம் பிடிக்கவும், தானே சதியை முறியடிப்பதோ அல்லது தாக்குதலுக்கு தன்னாட்டு ராணுவத்திற்குத் திட்டமிட்டுக் கொடுப்பதோ மொஸாட்டின் பிரதான வேலைகள்.

மொஸாட் விதைந்து வளர்ந்ததை, செயல்பட்டதை, சாதித்ததை... எளிமையாய், அழகாய், கோர்வையாய், கதை சொல்லியாய் ‘மொஸாட்’ புத்தகத்தில் விளக்குகிறார் ஆசிரியர் என். சொக்கன்.

72-ல் ஜெர்மனியின் மியூனிக் நகரில், ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கும், இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் படுகொலை செய்யப்படும் பரபரப்புடன் புத்தகத்தைத் துவங்குகிறார். கொதித்தெழுந்த இஸ்ரேலியப் பிரதமர், இதற்கு காரணமானவர்களை வேட்டையாட முடிவெடுக்க, மொஸாட் அறிமுகம்.

படுகொலையை நிகழ்த்திய பாலஸ்தீன தீவிரவாதிகளை லிஸ்ட் எடுத்து போட்டுத் தள்ளுகிறது மொஸாட்.

இதென்ன பிரமாதம் என்கிறீர்களா? சொக்கனும் நம்மை இப்படிக் கேட்க வைத்து, இத்தாலி, பிரான்ஸ், ஏன் பாலஸ்தீனர்களின் கோட்டையான லெபனான் ஆகிய நாடுகளில் மொஸாட் எப்படி வேட்டையாடியது என்பதை, புத்தகத்தின் முதல் அத்தியாயங்களில், ஒன்-டே மேட்ச்சின் முதல் பவர்-பிளேயைப் போல விறுவிறுவெனச் சொல்கிறார்.

முதல் சம்பவத்தின் வேட்டை முடிந்தபோது, உலகில் எந்த மூலையிலும் யூதனுக்கு ஒரு பிரச்சினை என்றால் மொஸாட் பாய்வதைச் சொன்ன சொக்கனின் அடுத்த ஜம்ப் -  அடால்ப் ஐக்மென்.

ஹிட்லர் தலைமையில் யூதர்களை இலட்சக் கணக்கில், கர்ண கொடூரமாய்க் கொன்று குவித்த தளபதி. இவரையும் அர்ஜெண்டினாவில் தேடிக் கண்டுபிடித்து போட்டுத் தள்ளுகிறது மொஸாட்.

இப்போது மொஸாட்டின் நதிமூலத்தைக் காட்ட வருகிறார் சொக்கன். அரேபியர்களின் தேசமான பாலஸ்தீனத்தில் மைனாரிட்டியான யூதர்களின் பாதுகாப்பின்மையே மொஸாட்டிற்குப் பிள்ளையார் சுழி.

இந்தக் காலக் கட்டம், இஸ்ரேல் உருவானதற்கு முன்பா, பின்பா என்று வாசகனுக்கு குழப்பம் வருகிறது.

அத்தியாயம் 7. யூதர்களை ஹிட்லரின் நாஜிப் படைகள் கொன்று குவித்த இனப் படுகொலை. அப்போது யூதர்களுக்குத் தனி தேசம் எதுவும் இல்லை.

இந்த ஒரு வரி, 11-ஆம் (நதிமூல) அத்தியாயம் படிக்கும்போது நினைவில் இல்லாவிட்டால், அதுவும் இனப் படுகொலையின் கால கட்டத்தை, வாசகன் அனுமானிக்காவிட்டால், குழப்பம் மிஞ்சும். எப்போதும் இணைப்புகளைச் சரியாக முடிச்சிடும் சொக்கன் இங்கே சற்றே அசந்து விட்டார்.

புத்தகத்தின் பிற்பாதியை படுவேகமாக நகர்த்துகிறார் சொக்கன். மிக், 200 டன் யுரேனியம், போர்ப் படகுகள் ஆகியவற்றை ஈராக், பெல்ஜீயம், பிரான்ஸ் நாடுகளிடமிருந்து மொஸாட் கடத்தும் ’அட்றா சக்க..’ சம்பவங்கள். எகிப்து, ஈராக் மீது விமானத் தாக்குதல்கள். இவற்றைப் படிக்கும் போது மொஸாட்டின் மீது பிரமிப்பும், மரியாதையும் வருகிறது.

உடனே மொஸாட் பல்பு வாங்கிய சம்பவங்களையும் புன்னகைக்கும் விதமாய் சொக்கன் தருகிறார்.

மொஸாட்டின் உளவாளிகளாகட்டும், அல்லது அவ்வமைப்பிற்கோ, யூதர்களுக்கோ உதவும் எவரையும், மொஸாட் காக்கவும், கௌரவப்படுத்தவும் முயலும் என்பதை, ஷூலா என்ற பெண்மணியின் நெகிழ்வான சம்பவம் மூலம் விளக்குகிறார். இந்த அத்தியாயத்தை புத்தகத்தின் கடைசி பகுதியில் வைத்திருந்தால் இன்னும் நெகிழ்வாக முடிந்திருக்கும்.

இருப்பினும், புத்தகத்தைப் படித்து முடித்தபோது, ஒரு நல்ல திருப்தி. நன்றி சொக்கன்.

வெளியீடு: மதி நிலையம்
முகவரி: மதி நிலையம், 2/3, 4வது தெரு, கோபாலபுரம், சென்னை 600 086. தொலைபேசி : 044-2811 1506.

Tuesday, January 21, 2014

இலங்கைத் தமிழர் நலன் வேண்டி... உண்ணி கிருஷ்ணன்

இலங்கை கதிர்காம முருகனுக்கு புதிய பாடலை வெளியிடுகிறோம்.

கானாஞ்சலி கிரிதரன் அவர்களின் இசையில், புராண நிகழ்வுகளுடன் நிகழ்கால வலிகளை சற்றே இணைத்து, வேண்டுதலுடன் பாடலை எழுதியிருக்கிறேன்.

உணர்ச்சிகளை நுணுக்கமாக வெளிப்படுத்திப் பாடியிருக்கிறார் உண்ணி கிருஷ்ணன்.

விரைவில் வெளியாகும் ‘அம்பிகை பாலா கார்த்திகை ராசா’ முருகன் இறையிசை ஆல்பத்தில் இப்பாடல் இடம் பெறும்.

Youtube-ல், ஒரு கோர்க்கப்பட்ட வீடியோவின் பிண்ணனியில் இப்பாடல் ஒலிக்கிறது.

பல்லவி
குமரா கடம்பா கதிர்காம தலவாசா
கருணா கருத்தா கடல்தேசம் காப்பாயா

வள்ளிமலை பிம்பமும் நீயே
அகதிகள் கதிரொளியாய் நீயே
அருள்வாயா

சரணம் 1
சூரனை வெல்ல பாசறையைக் கொண்டாய்
தேவரையும் சயந்தனையும் மீட்டாய்

யந்திரமாய் மந்திரமாய் அமர்ந்தாய்
சமயங்கடந்து யாவருமுனைத் தொழுதார்

பிரிவினை நினைந்து போர் கண்டார்
வலியாற்றாமல் உயிர்கள் சிதைத்தது ஏனோ

சரணம் 2
அனுமனை நீ சீதையிடம் சேர்த்தாய்
வேழனை வேண்டி வள்ளியை மணந்தாய்

தவிக்கும் தமிழன் புணர் வாழ்வைத் தருவாய்
முள்ளியில் நீ விடி வெள்ளியாய் முளைப்பாய்

மனக்களின் விருப்பம் அறிந்தவன் நீ
இனங்களில் இணக்கம் கொணர்வாயே முருகா

தொகையறா
கந்தனுக்கு வேல் வேல்
சூரனுக்கும் வேல் வேல்
யாவருக்கும் வேல் வேல் வேல்

சரணம் 3
வேடரை நீ சொந்தமாய்க் கொண்டாய்
தினையினை நீ படையலாய் உண்டாய்

மீனவர் ஏங்கும் தீர்வினைத் தருவாய்
படைகளைப் போக்கி கலைகளை வளர்ப்பாய்

எளியவர் மனதில் வாழ்பவன் நீ
எழில்நிலம் ஒன்றாய் வாழ வழி செய்வாயா