Saturday, June 12, 2010

பேர் சொல்லாத பிள்ளை

மறதி ஒரு வரப்பிரசாதம். சிலவற்றை மறக்க முடிவதால்தான் வாழ்க்கை தொடர்கிறது. ஆனால், இதெல்லாம் மறக்கும், இப்படியெல்லாம் மறக்கும் என்ற நிலைகளையெல்லாம் தவிடுபொடியாக்கி, மறக்கவே கூடாத, மறக்கவே முடியாததை நான் மறந்திருக்கிறேன். குழம்புகிறதா? சொல்கிறேன்!

அப்போது நான் ஏழாங் கிளாஸ் படித்துக் கொண்டிருந்தேன். வேறொரு பள்ளியில் கட்டுரை போட்டி. அப்பள்ளியின் பி.டி மாஸ்டர் தான் போட்டிக்குச் சூப்பர்வைசர். அவர் மிலிட்டரியிலிருந்து ரிடையர் ஆனவராம். இன்னமும் அதே மிடுக்குடன் அறிவித்தார்.

"போட்டி நேரம் இருபது நிமிடம் மட்டுமே. அதற்குள் கண்டிப்பாக எழுதி முடித்து விட வேண்டும்" என கட்டளையிட்டு விசிலடித்தார்.

என்னுடைய கட்டுரைக்கு இருபது நிமிடம் ரொம்ப குறைவு என்பதால், உடனடியாக பரபரவென எழுதத் தொடங்கினேன். மிலிட்டரி அடுத்த அறிவிப்பை செய்திருக்கிறார். “இப்பொழுதே உங்கள் பெயர், வகுப்பு, பள்ளி ஆகியவற்றை, பேப்பரின் வலது ஓரத்தில் எழுதி வைத்து விட வேண்டும்.” இருபது நிமிடம் முடிந்த உடனேயே பேப்பரை வாங்கி விடுவேன் என சொல்லியிருக்கிறார். ஆனால் எழுதும் மும்முரத்தில் அதை நான் கவனிக்கத் தவறியிருந்தேன்.

இரண்டொரு முறைதான் கண் சிமிட்டியிருப்பேன். அதற்குள் இருபது நிமிடம் கரைந்து விட்டது. மிலிட்டரி மீண்டும் விசிலடித்து "ஸ்டாப்... ஸ்டாப்..." என கத்தியதோடு மட்டுமில்லாமல் எல்லோரிடமிருந்து பேப்பரை பிடுங்கவும் தொடங்கியிருந்தார்.

இன்னும் ஒரு பத்தி மட்டுமே பாக்கி. எப்படியாவது முடித்து விட பெஞ்ச் அதிர எழுதிக் கொண்டிருந்தேன். அதற்குள் என் பேப்பரை பிடுங்கி விட்டார்.

”சார்.. சார்.. பேர் எழுதல.... ”

பளார்!!!!!!

”எழுதுடா... எழுத சொன்னபோது என்ன பண்ணிட்டிருந்த” என கர்ஜித்தார்...

வாங்கிய அறையில் உடம்பு நடுங்கியது... கன்னம் ஜிவுஜிவுத்தது... கையில் உதறல் எடுக்க, பேனா பூரானாய் நெளிந்தது... பெயரெழுத முனைந்தேன்... ர... ர... ர.... அதற்கு மேல் எழுத்து வரவில்லை... விழி பிதுங்கியது... மூச்சு ஸ்தம்பித்தது... ஐயோ கடவுளே...

”டேய், சீக்கரம் எழுதுடா...”

”சார்... சார்... பேர் மறந்து போச்சு சார்....”

”என்னது??” மீண்டும் அவர் உறும எனக்கு அழுகையே வந்து விட்டது...

அதற்குள் பின்னாலிருந்த பையன் இன்னமும் எழுதிக் கொண்டிருக்க அவனை நோக்கி பாய்ந்துவிட்டார். நின்ற மூச்சு வந்தது. ஆனால் போன பெயர்தான் நினைவிற்கு வரவில்லை.

பக்கத்தில் நிதானமாக கிளம்பிக் கொண்டிருந்த நண்பனை அழைத்து கேட்டேன்... ”டேய்.. என் பேர் என்னடா?”

அவன் என்னை வினோதமாக பார்த்துவிட்டு ஒன்றும் புரியாமல் சென்று விட்டான்.

'ஐயோ.. என்பேர் என்ன?'.. மண்டை கிறுகிறுத்தது... ஏதாவது ஒரு பாட புத்தகம் எடுத்துப் போயிருந்தால் லேபிள் பார்த்துக் கண்டுபிடித்திருக்கலாம்.

அப்போது எனக்காக வாயிலில் காத்துக் கொண்டிருந்த மற்றொரு நண்பன் சொன்னான்...

"டேய் ரகு, என் அப்பா வந்துட்டார்... நான் கிளப்பறேன்..."

'ஆங்.. ரகு...' எழுதி விட்டேன்.

'ஐயோ, இது பாதி பேர் தானே... மீதி பேர் என்ன?'

அதற்குள் மிலிட்டரி திரும்பி வர இன்னொரு அறைக்கு பயந்து பேப்பரை மடித்துக் கொடுத்து விட்டு திரும்பி பார்க்காமல் வெளியே ஓட்டமாய் ஓடி வந்து விட்டேன்.

தெருவில் பாதி பெயர் கொண்ட பையனாய் நடந்து கொண்டிருந்தேன். கன்னம் இன்னமும் வலித்துக் கொண்டிருந்தது. அதைவிட பெயரைத் தேடி மனம் பரபரத்துக் கொண்டிருந்தது. ஐயோ.. நான் யாரு, எனக்கு வைத்த பெயர் யாது? என்றெல்லாம் எழுதலாம் தான். ஆனால், அந்த வயதில் கவிதையாவது, மோனையாவது... என் பெயரில் யாராவது கடை வைத்திருக்கிறார்களா என்று ஒவ்வொரு கடையின் பெயர் பலகையை படித்துக் கொண்டே நடந்தேன்.

அப்போது என் பக்கத்து வீட்டுக்காரர் எதிரே வந்தார். அவருக்கு நான் போட்டிக்குச் சென்றது தெரியும். அவரிடம் என் மீதிப் பெயரை கேட்கலாமா என யோசித்தேன். எப்படி கேட்பது என தயங்கினேன். ஆனால் அவரோ நிலைமை தெரியாமல் திருவிளையாடல் படத்தில் சிவபெருமான் தருமியிடம் கேட்பது போல..

”தம்பியே.. பரிசு கிடைத்ததா..?” என்று கேட்டார்.

”அறை ஒண்ணுதான் கெடச்சுது...” என கடுப்பில் முணுமுணுத்துவிட்டு நகர்ந்தேன்.

சிறிது தூரத்தில் கோதண்ட ராமர் பஜனை கோயிலை கடந்தேன். 'ராமா... இது என்ன சோத... ஹாங்... ராமன்...'

“யுரேகாஆஆஆ... கண்டு பிடிச்சிட்டேன்... கண்டு பிடிச்சிட்டேன்... நான் ராமன்.. ரகுராமன்...” என கத்தியபடியே ஓடி என் வீட்டுக் கண்ணாடி முன் மூச்சிறைக்க நின்றேன்.

‘ரகுராமா... கொஞ்ச நேரம் காணாம போய்ட்டியேப்பா’ என சந்தோசத்தில் கதறினேன். உற்றுப் பார்த்தால், மிலிட்டரியின் மூன்று விரல்கள், செவ்வரிகளாய் என் கன்னத்தில் பதிந்திருந்தன.

ஹூம், அந்த ராமன் பரிவுடன் தடவியதில், அணிலுக்கு மூன்று கோடு விழுந்ததாம். என் கன்னத்தில் விழுந்த மூன்று கோடுகளை ரகுராமனாகிய நான் பரிவுடன் வெகுநேரம் தடவிக்கொண்டிருந்தேன்.

6 comments:

  1. interesting :) 'naan yaarum enakkethum theriyalaiye'nnu paadineengalaa? ;)

    - N. Chokkan,
    Bengalooru.

    ReplyDelete
  2. பாவம்மா இருந்தது படிக்கும்போது :)

    ReplyDelete
  3. வலையுலகில் இன்றைய டாப் ஐம்பது பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

    ReplyDelete
  4. முடியல. :-) நகைச்சுவை சரளமாக வழிந்தோடுகிறது.

    ReplyDelete
  5. comedy is tragedy in long shot நு
    சொல்லுவாங்க. ஆனா இதுல
    கொஞ்சம் க்ளோஸா போயிட்டீங்க.

    //பாவம்மா இருந்தது படிக்கும்போது :)//
    repeat

    ReplyDelete
  6. நேத்து பையனோட நோட்புக்ஸ்-ல பேர் எழுதும்போது ஒரு நோட்ல ஞாபகமில்லாம என் பேரை எழுதிட்டேன்..

    ஆனா உங்க அனுபவத்துக்கு மேற்படி விஷயம் பரவாயில்லையென்றுதான் தோன்றுகிறது.

    சரளமான ஹ்யூமர் எல்லாருக்கும் வராது. கீப் இட் அப் ரகுராமன்!!

    ReplyDelete

உங்கள் கருத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்...