Saturday, August 31, 2013

எழுதிய பாடல் 3: பட்டீஸ்வர துர்க்கையே...

பாடியவர்: ஹரிணி
ஆல்பம்: ஓம் நவசக்தி ஜெய ஜெய சக்தி
இசை: மண்ணச்சநல்லூர் கிரிதரன்

பள்ளிப் பருவத்தில் பொன்னியின் செல்வன் படித்த நாள் முதலாக, சோழன், அருள்மொழி வர்மன் போன்ற பெயர்களைக் கேட்டாலோ, கும்பகோணம், பழையாறு போன்ற இடங்களுக்குச் சென்றாலோ நம்மையும் ஒரு சோழனாய்க் கற்பித்துக் கொண்டு மனம் கிளர்ச்சியடையும். அதற்கு அமரர் கல்கியின் எழுத்து வன்மையே காரணம்.

அப்படியிருக்க, பழையாறில் சோழன் மாளிகை அரணில் குடிகொண்டிருந்த துர்க்கைக்கு, ராஜராஜன் உட்பட பல சோழ மாமன்னர்கள் காவல் தெய்வமாய் வழிபட்ட துர்க்கைக்குப் பாட்டெழுதத் தொடங்கியபோது மனம் கொண்ட உணர்ச்சிகளை, சொந்த அனுபவங்களை வரிகளாய் வடித்து விட்டேன்.

துர்க்கையை ஏன் காவல் தெய்வமாய் வழிபடுகிறார்கள்?

துர்கம் என்பது மலை, அரண், மலைக் கோட்டை, அகழி என்றெல்லாம் பொருள் தரும். பகைவனிடமிருந்து காக்கும் இதற்கு சக்தி வடிவம் கொடுக்க அது துர்க்கை தெய்வமானது. காளியும் அது போலவே. ஆனால் அவள் அமர்ந்த நிலையிலிருப்பாள். துர்க்கை நின்ற நிலையிலிருப்பாள்.

இந்த துர்க்கை, வழக்கமான உக்கிர வடிவிலிருந்து வேறுபட்டு, சாந்த சொரூபியாக காட்சியளிக்கிறாள். சோழர் காலத்திற்குப் பின், தஞ்சை நாயக்கர்கள், பட்டீஸ்வரத்தில் தேனுபுரீஸ்வரர் சிவாலய வளாகத்தில் அழகிய யாளி தூண்களுடன் தனிக் கோவில் அமைத்து அங்கே இத்த துர்க்கையைப் பிரதிஷ்டை செய்தனர்.

பாடலை எழுதி முடித்த பின், துர்க்கையின் பிற பெயர்களை சரிபார்க்க நவதுர்க்கை என்ற புத்தகத்தைப் பிரித்தேன். துர்க்கைக்கு வடமொழி பதம் துர்கா. அதை த + உ + ர + க + ஆ பிரித்து பொருள் விளக்கப்பட்டிருந்தது.

த - அசுரர்களை (அ) அசுர எண்ணங்களை அழித்தல்
உ - இடையூறுகளைப் போக்குதல்
ர - வியாதிகளை நிவர்த்தி செய்தல்
க - பாவங்களை நசிக்கச் செய்தல்
ஆ - பயம் மற்றும் சத்ருக்களை அழித்தல்

பாடலின் சரணங்கள், கிட்டதட்ட இதே அர்த்தத்தில், இதே வரிசையில் அமைந்ததைக் கண்டு திகைத்தேன். பின் உணர்ந்தேன். என் கையைப் பிடித்து எழுதியது துர்க்கை.

பல்லவி:
பட்டீஸ்வர துர்க்கையே பட்டத்துன்பம் போதுமே
மனதினில் நீயே குடிகொண்டாயே கருணை செய்வாய் தாயே

சரணம் 1: 
சந்தன ருபீ நீயம்மா என் நொந்திடும் மனதை பாரம்மா
அக்கிரமங்கள் எங்கும்மா உன் சாந்தத்த கலைச்சு காக்கணும்மா
பராசக்தி நீ மகிஷமர்த்தினீ சோழனின் வீரத் தாய் நீ
சிவனின் கோபம் காட்டி பகைவன் போக்க வேண்டும் (மனதினில்)

ராகுவின் தேவி நீயம்மா எனை பிடித்திடும் தோஷம் நீக்கம்மா
அங்காரகனோ தொடருதம்மா உன் சூலத்த வளைச்சு விரட்டம்மா
பஞ்சசக்தி நீ விந்தியவாசினீ கண்ணனின் நாபித் தாய் நீ
விஷ்ணுவின் பாசம் கூட்டி நல்வினை காக்க வேண்டும் (மனதினில்)

சரணம் 2:
கௌசிகன் திரியை போலம்மா என் வெந்திடும் தேகம் ஆற்றம்மா
மருத்துவங்கள் இனி இல்லையம்மா என் நாடிய புடிச்சு காக்கணும்மா
மூலசக்தி நீ சிம்மவாகினீ உயிரின் தீபத் தாய் நீ
எமனின் வாசம் ஓட்டி செய்வினை போக்க வேண்டும் (மனதினில்)

அரக்கனின் கைதி போலம்மா எனை வாட்டிடும் துன்பம் ஏனம்மா
துர்கணங்கள் எனை தொடருதம்மா உன் நெஞ்சில் அணைச்சு காக்கணும்மா
ஆதிசக்தி நீ துர்கநாசினீ தேவர்கள் காவல் தாய் நீ
துர்க்கன் நாசம் காட்டி தீவினை போக்க வேண்டும் (மனதினில்)

ராகாவில் இந்த ஆல்பத்தின் சுட்டி: ஓம் நவசக்தி ஜெய ஜெய சக்தி

1 comment:

உங்கள் கருத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்...