Wednesday, January 11, 2012

ஐ.டி கம்பெனியில் வர்ணாஸ்ரமம்

பண்புடன் - இணைய இதழில் வெளியான எனது கட்டுரை...

“நீ என்ன ஜாதி தம்பி?”

அந்த முதியவர் கேட்ட போது என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. பள்ளத்தில் சைக்கிள் இறங்கியதால் விழுந்துவிட்டவரை தூக்கி உட்கார வைத்திருக்கிறேன். அவருக்காக ஹேண்டில் பாரை சரி செய்த போதுதான் அக்கேள்வியைக் கேட்டார்.

இப்போது அவருக்குப் பிடித்த ஜாதியில் நான் இல்லாவிட்டால் மீண்டும் ஹேண்டில் பாரை திருகிக் கொண்டு விழுந்துவிடவா போகிறார்?

“உங்களுக்கு உதவின ஜாதி... பாத்து போங்க...” அனுப்பி விட்டு நடையைத் தொடர்ந்தேன்.

பெற்ற உதவிக்குக் கூட ஜாதி பார்த்துதான் நன்றி சொல்வார்களா? மக்களின் பாதுகாப்பும், வாழ்க்கைத் தரமும் உயர வகுக்கப்பட்ட வர்ணாஸ்ரமம் கால மாற்றத்தில் இந்தளவிற்குத் திரிந்துவிட்டது வேதனை. இதன் நோக்கத்தை ஐ.டி துறையைக் கொண்டு விளக்குகிறேன்.

நான் பணிபுரியும் ஐ.டி கம்பெனியுடன் வியாபார ரீதியாக தொடர்பிலிருக்கும் கம்பெனிகளுக்கு,  புதிய ப்ராஜெக்டை ஆரம்பித்து வைக்க அல்லது இயங்கிக் கொண்டிருக்கும் ப்ராஜெக்டில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்க நான் செல்வதுண்டு. அந்தக் கம்பெனிகள் எனக்கென பிரத்யேகமாக அடையாள அட்டையைத் தரும். அது அவர்களுடைய வழக்கமான அட்டையைப் போலவே இருந்தாலும், வேறு நிறத்தில் இருக்கும்.

ஒருநாள் ஒரு கம்பெனியில் தீவிர விவாதத்தில் இருந்தேன். எனக்கு ஒதுக்கப்பட்ட அறையில், ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு மேல் விவாதத்தைத் தொடர்ந்திருக்கிறேன். அந்த நேரத்தில் அந்த அறையை ரிசர்வ் செய்திருந்த நபர், பொறுமையிழந்து கத்திக் கொண்டே, என்னைத் திட்டிக் கொண்டே வந்தார். உடன் இருந்தவர்கள் குறுக்கிடக் காட்டிய தயக்கம், அவரின் பதவியை உணர்த்தியது.

“என்ன பிரச்சனை சார்?” எழுந்தபடி கேட்டேன். என் அடையாள அட்டையின் நிறம் அவர் கண்ணில் பட, சட்டென நிதானத்திற்கு வந்தார். 

அது வேறு கம்பெனியிலிருந்து வரும் டொமெய்ன் எக்ஸ்பர்ட்டை (Domain Expert) குறிக்கும் முதல் வர்ணம்.

“இங்கே ஒரு முக்கிய மீட்டிங் நடத்த வேண்டியிருக்கிறது. உங்களுடையது எப்போ முடியும்?”. இப்போது அவர் குரலில் கண்ணியம் தெரிந்தது. இந்த வர்ண ஜாலம்தான் வர்ணாஸ்ரமத்தின் அடிப்படை.

எந்த ஐ.டி ப்ராஜெக்டாக இருந்தாலும் நான்கு குழுவினர்களின் பணி முக்கியமானவை.

1. ப்ராஜெக்ட் சம்பந்தமான அறிவியல் அனுபவத்துடன் ப்ராஜெக்டை வடிவமைத்துத் தரும் குழு - டொமெய்ன் எக்ஸ்பர்ட்ஸ் (Domain Experts).

2. முதல் குழுவின் வழி காட்டுதலின் படி Java, .Net போன்ற கணினி மொழிகளைப் பயன்படுத்தி ப்ராஜெக்டை உருவாக்கும் குழு - டெவலப்பர்ஸ் (Developers).

3. உருவாக்கப்பட்டதை விற்பனை செய்யும் குழு - சேல்ஸ் (Sales).

4. ப்ராஜெக்ட் நிறுவப்படும் இடங்களில் அதை இயங்க வைக்கும் குழு - ஆபரேஷன்ஸ் (Operations).

இந்தக் குழுக்கள், அதனதன் பணியைச் சரியாகச் செய்தால்தான் ப்ராஜெக்ட் வெற்றிகரமாக இயங்கும். இவர்களிடையே அனுசரணையும் முக்கியம். சேல்ஸ் குழுவின் மூலம் வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து, ஆபரேஷன்ஸ் குழுவின் மூலம் நடைமுறை சிக்கல்களை அறிந்து, டொமெய்ன் எக்ஸ்பர்ட்ஸ் குழு மேலும் வழிகாட்டுவதை டெவலப்பர்ஸ் கடைபிடித்தால்தான் ப்ராஜெக்ட் மேற்கொண்டு வளரும்.

ப்ராஜெக்டை இப்படி வளர்ப்பதைப் போலவே, சமுதாயத்தை வளர்க்க, ப்ராஜெக்ட் குழுக்களைப் போலவே நான்கு குழுக்கள் அன்றைய நாளில் நியமிக்கப்பட்டன. அறம் வளர்ப்பவர், அதன்படி நாட்டை நடத்திக் காப்பவர், வருவாய் ஈட்டுபவர், இயக்கத்திற்கு உழைப்பவர்.

சில ஐ.டி கம்மெனிகள் அவுட் சோர்சிங் (Out Sourcing) முறை மூலம் வேறு கம்பெனிகளிலிருந்து இக்குழு நபர்களை வருவிக்கும் போது, அவர்களின் பணியை மற்றவர் உணர்ந்து நடந்து கொள்ள வர்ண அடையாள அட்டைகளைத் தருகிறது.

அன்றைய நாளில்,  போட்டோ அடையாள அட்டையை கழுத்தில் தொங்கவிட்டுக் கொண்டு பந்தா காட்டுவது கண்டுபிடிக்கப் படாததால், வண்ணத் துணிகளை தலையில் பாகையாக, இடையில் கச்சையாக, தோளில் பட்டையாகக் கட்டிக் கொண்டார்கள் என நினைக்கிறேன். வெள்ளை, சிவப்பு, பச்சை, கறுப்பு போன்ற நிறங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடும்.

கல்லூரி முடித்து மாணவர்கள் கம்பெனியில் சேரும்போது, முதலில் அனைவருக்கும் பொதுவான பயிற்சி அளித்து, அதில் அவர்களின் தேர்ச்சியை, திறமையை வைத்து, நான்கு குழுக்களுக்குள் ஒன்றை ஒதுக்கி, அதற்கான பிரத்யேக பயிற்சிக்குப்பின் அவர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.

இப்படித்தான் வர்ணாஸ்ரமமும் தகுதியின் அடிப்படையில் நாட்டை உருவாக்கும் நோக்கத்துடன் தோன்றியதே. வனப் பகுதியிலிருந்து, வளப் பகுதிக்கு நகர்ந்த மனிதனுக்கு ஜாதி ஏது?

ஒரு நோக்கம் நிறைவேறியபின் அதற்கான முனைப்புகள் அர்த்தம் இழக்கின்றன.

இயங்கத் தொடங்கிய ப்ராஜெக்ட் மேலும் விஸ்தரியும் போது, அதன் குழுக்களில் புதிய நபர்கள் சேர்கிறார்கள். பழையவர் வேறு கம்பெனிக்குத் தாவுகிறார்கள். சிபாரிசில் சிலர் நுழைகிறார்கள். இவர்கள் அடிப்படையையும், நோக்கத்தையும் தெரிந்து கொள்ள முயலாமல், எதையாவது செய்து ப்ராஜெக்டை சொதப்புகிறார்கள். பிரச்சனைகள் முளைக்கத் தொடங்குகின்றன. பழியை ஒருவர் மீது  ஒருவர் சுமத்த சண்டைகள் ஆரம்பம். இன்று இந்த நான்கு குழுக்களும் அடித்துக் கொள்ளாத ஐ.டி கம்பெனிகளே இல்லை.

வர்ணாஸ்ரமமும் சந்ததி வளர்ச்சியில், மதங்களாகி, ஜாதிகளாகி சில சாரார் மட்டுமே உயர, பல இடங்களில் எப்போதும் கலவர நிலவரம். 

ஐ.டி கம்பெனிகளெல்லாம், செலவுகளைக் குறைக்க, ஆட்களைக் குறைக்க க்ளவுட் கம்யூட்டிங் (Cloud Computing) என்ற அடுத்த கட்ட டெக்னாலஜியை நோக்கி நகரத் தொடங்கிவிட்டன.


இது ஐ.டி குழுக்களின் உட்பிரிவுகளை கணிச்சமாகக் குறைக்கும். அது போல ஜாதிகளும் குறைந்தால் சரி.


Wednesday, December 28, 2011

இலவச இணைப்பு


‘கடக்காரன் உங்கள நல்லா ஏமாத்திட்டான்பா’

“என்னடா சொல்ற”

‘பின்ன என்னப்பா. இந்த புத்தகத்தோட ஃப்ளாப்பி ஃப்ரீனு சொன்னான்னு நீங்களும் எனக்காக வாங்கி வந்துட்டீங்க... ஃப்ளாப்பி கறுப்பா சதுரமாத்தான் இருக்கும்... இது என்னமோ வட்டமா கலர் கலரா மின்னுது... இது வெறும் பிளாஸ்டிக்ப்பா’ என்று சொல்லி அதை அலட்சியமாக டைனிங் டேபிளின் மேல் வீசி விட்டு, கல்லூரிக்குக் கிளம்பினேன்.

வருடம் 1994.

அரையடி சதுரத்திற்கு 1.2 MB கொள்ளளவுடன் இருந்த ஃப்ளாப்பி டிஸ்க்குகளே பிரதானமாக புழக்கத்தில் இருந்தன. ஒன்றின் விலை 40 ரூபாய். கல்லூரி எங்கள் வகுப்பில் ஆளுக்கு ஒரு ஃப்ளாப்பியை வாங்கிக் கொடுத்திருந்தது. அதை லேப் பீரோவிலேயே பாதுகாக்கவும் செய்தது! லேபினுள் நுழையும் போது, பெயர்களின் அகர வரிசைப்படி லைனில் நிற்போம். இரண்டு பூட்டுக்கள் கொண்ட பீரோவிலிருந்து, எங்கள் ரோல் நம்பர் எழுதப்பட்ட ஃப்ளாப்பியை எடுத்துத் தருவார்கள். கம்ப்யூட்டரில் ப்ரோக்ராம்கள் எழுதிவிட்டு அதை ஃப்ளாப்பியில் சேமித்தபின் கண்ணில் ஒற்றிக் கொண்டு அங்கேயே ஒப்படைத்துவிட்டு வருவோம்.

இரண்டு ஆண்டுகளாக Basic, FORTRAN, COBOL, Pascal ஆகிய கம்ப்யூட்டர் மொழிகளில் மாய்ந்து மாய்ந்து ப்ரோக்ராம் எழுதியும் பாதி ஃப்ளாப்பிதான் நிரம்பியிருந்தது.

ஃப்ளாப்பி டெக்னாலஜியில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டு 1.44 MB-களுடன் கையடக்கமாக ஃப்ளாப்பிகள் வெளிவரத் தொடங்க, அதில் ஒன்றையாவது வாங்கி, C மொழியில் ப்ரோக்ராம் எழுதி நிரப்பி விட வேண்டும் என்பதே, என் அப்போதைய வாழ்நாள் லட்சியம்.

நிலைமை இப்படி இருக்க, தந்தையார் ஏதோ ஒரு பிளாஸ்டிக்கை ஃப்ளாப்பி என்று வாங்கி வந்து விட்டாரே என்று வருத்தப்பட்டேன்.

வகுப்பில் நுழைந்தால், நண்பன் சீனுவாசனைச் சுற்றி அனைவரும் ஏதோ வைரப் புதையலைக் கண்டவர் போல வாய் பிளந்து நிற்க, அவன் கையில் தந்தை வாங்கிய PC-Quest மாத இதழ் + அந்த பிளாஸ்டிக்.

“டேய் ரகு, விஷயம் தெரியுமா... இதோட பேர் காம்பாக்ட் டிஸ்க்காம். இதோட கப்பாஸிடி.... கப்பாஸிடி... அவனுக்கு மூச்சு வாங்கியது... அறுநூத்து ஐம்பது MB-யாம்டா...”

‘என்னாது... அறுநூத்து ஐம்பதா’... ஒரு நொடி கண்ணிருட்டி மயக்கம் வந்து தெளிந்தது.

“PC-Quest-இன் 25 ஆவது இஷ்யுவை கொண்டாட இத ஃப்ரீயா குடுத்திருக்காங்கடா...”

மேற்கொண்டு அவன் சொன்னது எதுவும் காதில் ஏறவே இல்லை. எங்கள் கல்லூரியின் லேப்பில் இருக்கும் கம்ப்யூட்டர்களின் ஹார்ட்-டிஸ்கின் அதிகபட்ச கொள்ளளவே 16 MB-தான். பாதி கம்ப்யூட்டர்களுக்கு ஹார்ட்-டிஸ்கே கிடையாது. அவைகளில் இரண்டு ஃப்ளாப்பி டிரைவ்கள் இருக்கும். Command.com என்ற பைலைக் கொண்ட ஒரு ஃப்ளாப்பியை முதல் டிரைவில் நுழைத்து பூட் செய்து கொள்ள வேண்டும். இரண்டாம் டிரைவில் நுழைக்கப்படும் ஃப்ளாப்பிதான் அந்தக் கம்ப்யூட்டரின் ஹார்ட்-டிஸ்க். லேப்பில் இருக்கும் அனைத்து கம்ப்யூட்டர் ஹார்ட்-டிஸ்குகளின் கொள்ளளவைக் கூட்டினாலும் 100 MB தேறாது. இதனால் அறுநூத்து ஐம்பதைக் கேட்ட காதில் இடி இறங்க, இயல்பு நிலைக்கு மீள முடியாமல் இயந்திர கதியில் நடந்து என் சீட்டில் அமர்ந்தேன்.

ஆங்கில ப்ரொஃபஸர் நுழைய வகுப்பு துவங்கியது. ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் ஸீசர் நாடக பாடத்தை நடத்தத் தொடங்கினார். மனம் அதில் லயிக்காமல் தருமி போல் புலம்பத் தொடங்கியது. “ஒரு MB-யா ரெண்டு MB-யா... அறுநூத்து ஐம்பது MB ஆச்சே.... அறுநூத்து ஐம்பது MB ஆச்சே....”

ப்ரொஃபஸர், சீசரைப் போல பாடி-லாங்வேஜூடன் எதையோ சொல்ல, அவர் ஜோக் அடித்துவிட்டதாக நினைத்து, ஹஹ்ஹஹ்ஹா என்று வாய்விட்டு சிரித்தேன்.

அந்தோ பரிதாபம். அறுபது பேர் இருந்த வகுப்பில் நான் மட்டுமே சிரித்திருக்கிறேன். இதனால் அடுத்த நொடியே ஒட்டு மொத்த வகுப்பும் சிரித்து அதிர்ந்து அடங்கியது.

“என்னாச்சு”

‘ஒண்ணுமில்ல சார். கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டுட்டேன்”

அவர் பாடத்தைத் தொடர, மனம் மீண்டும் அரற்றியது.

“ஐயோ, அந்த டிஸ்கை விசிறிய வேகத்தில், அது டேபிளிலிருந்து கீழே விழுந்திருந்தால், துப்புரவு செய்பவர் தூக்கி போட்டிருப்பார்களே!”

அதற்கு மேல் நிலை கொள்ள முடியாமல், அடுத்த வகுப்புகளை கட் அடித்துவிட்டு சைக்கிளில் வீட்டிற்குப் பறந்தேன். என் வேகத்தில் வழியில் இருக்கும் மயான பூமிக்கடியில் இருப்பவர்களின் நீடு துயில் கூட சற்றுக் கலைந்திருக்கும்.

‘டைனிங் டேபிளில் டிஸ்கைக் காணோம்’

தரையில் லேசாக பினாயில் நெடி அடிக்க... போச்சு... போச்சு, வீட்டை பெருக்கி துடைத்தாகிவிட்டது. டிஸ்க்கை தூக்கி போட்டிருப்பார்கள். ஒரு நப்பாசையுடன் ஹாலின் இண்டு இடுக்கிலெல்லாம் தேடினேன். ம்ஹூம் கிடைக்கவில்லை. ஒரு மணி நேரம் துக்கம் தாங்கவில்லை. சரி, கல்லூரிக்குக் கிளம்ப வேண்டியதுதான் என நினைத்து சாப்பிட டைனிங் டேபிளை நெருங்க, துள்ளிக் குதித்தேன்.

வெளியே கிளம்பும் அவசரத்தில், சரியான தட்டு கிடைக்காததால் ஈய சொம்பின் வாய் விட்டத்திற்குச் சரியாக இருந்ததால், டிஸ்க்கினால் அதை மூடிவிட்டுச் சென்றிருக்கிறார் என் அன்னை.

ரச நீர் ஆவியில் குளித்தபடி MB-களைச் சிமிட்டியது, நான் கண்ட முதல் சி.டி.

Thursday, November 10, 2011

நாகர்களின் ரகசியம்

சிவாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, வீரபத்ரனிடமிருந்து வாங்கி, தன் ஆனை முகத்தைத் தூக்கி, அதை உள்ளிழுக்க முயன்று, புகைக்கத் தெரியாமல் கணேஷ் இரும, எல்லாரும் கொல்லென்று சிரிக்கிறார்கள்.

இந்து மத உணர்வுகளை புண்படுத்தாமல் இப்படி ஒரு காட்சி Secret of the Nagas நாவலில் மட்டுமே சாத்தியம்.

முதல் நாவலான The Immortals of Meluha (விமர்சனம் இங்கே: சிவா... மஹாதேவ்)-வில் தந்த ஆச்சரியம், திருப்தி, ஆனந்த உணர்ச்சிகளை அப்படியே இதிலும் தொடர்ந்திருக்கிறார் ஆசிரியர் அமிஷ்.

சூர்ய வம்சிகளிடையே நிகழ்ந்த சிவாவின் பயணம், இந்த நாவலில் சந்திர வம்சிகளுடன். வட இந்தியாவின் பல நிலப்பரப்புகள் (காசி உட்பட) இந்நாவலில் அழகான காட்சிகளாகுகின்றன.

ஊழலும், வஞ்சகமும், குழப்பமும், ஏற்றத் தாழ்வுகளும், அதனுள் நல்லுள்ளங்களும், ஞானமும், திறமையும், உழைப்பும் கொண்ட இந்தியாவின் கதம்ப முகத்தை சந்திர வம்சிகளை வைத்து வெளிப்படுத்தியிருப்பது பிரமாதம்.

இதில் ஒரு தமாஷ். இவர்களுக்கு நேர் எதிராக, அனைத்து பிரஜைகளுக்கும் சம நீதியுடன், கட்டுக் கோப்பான சட்ட ஒழுக்கங்களுடன் ஒட்டு மொத்தமாக முன்னேறிய சமுதாயமாக சூர்ய வம்சம். இதன் கோட்பாடுகளை இந்தியா முழுதும் பரப்பும் நோக்கத்துடன், தக்கன் கோலோச்சும் அதன் நிலப்பரப்புதான் இப்போது பாகிஸ்தான்!!

ஆசிரியரைப் பாராட்ட வேண்டிய பல அம்சங்களில் ஒன்று, சிவாவை ஒன்-மேன்-ஆர்மியாக மிகைப்படுத்தாதது. என்னதான் அவரை மஹாதேவ் நிலைக்கு படிப்படியாக உயர்த்தினாலும், இக்கட்டான சமயங்களில், மந்திரமாய் வந்து குதிக்கும் தமிழ் சினிமா கதாநாயகன் போல, சிவா தோன்ற வாய்ப்பிருந்தும், காட்சிகளிலிருக்கும் பிற பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களையே கையாள விட்டிருப்பது யதார்த்தம்.

சில சமஸ்கிருத வார்த்தைகள், கடவுள்களின் பெயர்கள், தத்துவங்களுக்கு வரும் ஒரு வரி விளக்கங்கள் அட்டகாசம். உதாரணங்களாக: ஏழு நதிகள் பாயும் வட இந்தியாவின் பெயர் சப்த சிந்து. மற்ற இந்திய நதிகளைவிட பிரம்மாண்டமாக கரைபுரளும் அந்த ஒரு நதிக்கு மட்டுமே ஆண்பால் பெயர்: பிரம்ம புத்திரா. இந்நதியும் கங்காவும் இணைந்து காத்து வளப்படுத்தும் நிலம் பிரங்கா!

சமஸ்கிருத காரணப் பெயர்களுடன் கடும் போட்டியிட்ட மொழி நம் தமிழ். சொன்னது கண்ணதாசன், அர்த்தமுள்ள இந்துமதத்தில். காசியிலிருந்து விசாலமான இந்திய நிலப்பரப்பை ஆள்வதால், அவள் பெயர் விசாலாட்சி!

இந்தியாவின் இரு கண்கள், இவ்விரு செம்மொழிகளும். அதை உணர்ந்தே, சங்கத் தமிழ் தந்த மனுதர்ம சாஸ்திரமே சூர்ய வம்ச சட்டங்களுக்கு அடிப்படை என கோடிட்டுக் காட்டியிருக்கிறார் ஆசிரியர்.

புராணங்கள் கற்பனையோ, கட்டுக் கதையோ, அதில் வரும் கணக்கற்ற குணசித்திர பாத்திரங்களை நவீன படைப்புகளில் வடிப்பது துர்லபம். ஆனால் கதைக் களம் புராணத்தை அடிப்படையாகக் கொண்டதால் இதை சாதித்துக் காட்டியிருக்கிறார் அமிஷ்.

முதல் நாவலில் வாயுபுத்திரர்கள் வரை வந்த பாத்திரங்கள் இதில் பகீரதன், பரசுராம், கார்த்திக், கணேஷ், காளி... என நீள்கிறது. கார்கோடன், சந்திரகேது, ஜமதக்னி, ரேணுகா, உமா... என ஒரு சில பத்தி பாத்திரங்களும் அடக்கம். புராண பாத்திரங்களின் உருவ குணங்களுடனேயே இவற்றை வடித்திருப்பது சிறப்பு.

சிவாவின் உருகும் மனசை,  சூழ்நிலைகளால் பின்னாளிலேயே ஏற்ற சதியின் காதல் தோசையை அப்படியே திருப்பிப் போட்டு, ஆனந்தமயி - பர்வதேஸ்வர் காதலை இங்கே சமைத்திருக்கிறார். சில இடங்கள் நாசூக்காக சிரிப்பை வரவழைக்கின்றன.

சிவாவின் பயணத்தை ஒட்டி கிட்டதட்ட ஒரே நேர்க் கோட்டில் சென்றது முதல் நாவல். ஆனால் இங்கே சிவா, சதி, நாகா... மூவரை முன்னிலைப்படுத்தி நகரும் அத்தியாயங்கள் க்ரைம் நாவலுக்கே உரிய த்ரில்லர்.

தீய சக்திகளை அழிப்பதே தனது கடமையென படையெடுக்கும் சிவா, சந்திர வம்சி, பரசுராம், நாகா என யாருமே தீயவராக இல்லாமல், அவரவர் சூழ்நிலை நியாயங்களுடன் வேறு ரூபத்தில் இருப்பது கண்டு திகைக்கிறார். கிட்டதட்ட எல்லாருமே தங்களைக் காக்க, இவர் வரவை எதிர்பார்த்துக் காத்திருப்பது இவரை வெகுவாகக் குழப்புகிறது.

தேவர்களுக்காக அசுரர்களை ஒடுக்கிய ருத்ரன், ஒரு கட்டத்தில் அசுரர்கள் அப்படியொன்றும் தீயவரில்லை என உணர்ந்த கதையிலிருந்து சில தெளிவுகளைப் பெறுகிறார். உண்மையான தீய சக்தியை அடையாளம் காண ருத்ரனின் கோவில்களில் வாயுபுத்திரர்களுடன், முதலில் நேரிலும், பின் டெலிபதி மூலமாகவும் சிவா மேற்கொள்ளும் உரையாடல்கள், அவருக்கு மட்டுமல்ல நமக்கும் சில பக்குவங்களைத் தருகின்றன.

நம் யூகத்தின்படியே இந்நாவல் முடிந்தாலும், மூன்றாவது நாவலுக்கு (The Oath of the Vayuputras) எந்த க்ளூவும் இல்லாதது எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. 

அவசரமில்லை அமிஷ். கைலாச சிகரமாய் மூன்றாம் நாவலைத் தர காலம் எடுத்துக் கொள்ளுங்கள். காத்திருக்கிறோம். http://shivatrilogy.com