Friday, November 30, 2012

சபரிமலை வா சரணம் சொல்லி வா - உண்ணி கிருஷ்ணன்



‘பாட்டைப் பாடும் போது, நானே மலைக்கு நடந்து செல்வது போல ஒரு உணர்வு எழுந்தது’ - உண்ணி கிருஷ்ணன் விழா மேடையில் பேசிக் கொண்டிருந்தார்.

சென்னை மகாலிங்கபுரம், ஐயப்பன் கோவிலில், ‘சபரிமலை வா சரணம் சொல்லி வா’ இசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா. அவர் வார்த்தைகள் என் மனசை மிருதுவாக வருடின.

1974-ல் என் தந்தை, காஞ்சியிலிருந்து மதுரை, குமுளி, கோழிகானம், தேவிகுளம், உறைகுழி தீர்த்தம் வழியாக சபரிமலைக்கு பாத யாத்திரை சென்றதை நினைத்து, நான் எழுதிய பாடல் அது. கானாஞ்சலி கிரிதரனின் ஐந்தாவது இறையிசை ஆல்பம்.


கூட்டாக ஐயப்பனைக் காண்பது போலவே, கூட்டாக பாடல்கள் எழுதினோம். கிரிதரன் மூன்று, அவரது குருசாமியும், நண்பர் ஸ்ரீதரும் ஒவ்வொன்று, நான் இரண்டு எழுத, அவற்றை உண்ணி கிருஷ்ணன் அழகாகப் பாடிக் கொடுத்தார்.

எத்தனையோ நிறுவனங்களை நிர்வகித்து நடத்திய கிரிதரனை, இறையிசையில் லயிக்க, நேரடியாகக் கட்டளையிட்டது ஐயப்பனே!

இரு வருடங்களுக்கு முன், ஆலபுழா மாவட்டத்தில் முக்கால் வட்டம் என்னும் இடத்திலிருக்கும் பழைமையான ஐயப்பன் கோவிலுக்குச் சென்றிருந்தார் கிரிதரன். இது ஐயப்பன் களரி பயின்ற இடம். அங்கே ஒருவர் எதிர்பட்டு இவர் தலையில் கை வைத்து, ‘அடுத்த வருடம் இந்தக் கோவிலுக்கு வருவதற்குள், நீயே இசையமைத்து பாட்டும் எழுதி ஐயப்பனுக்கு கீதாஞ்சலி செய்து வருவாய்’ என அருள்வாக்காய்ச் சொல்ல, அதனால் உந்தப்பட்டு கிரிதரன் வெளியிட்டதே ‘ஐயன் மலை எங்கள் மலை’

தொடர்ந்து ‘விந்தைகள் புரிந்தாய் நீ என் வாழ்விலே’ (பெருமாள்), ‘ஓம் நவசக்தி ஜெய ஜெய சக்தி’, ‘உச்சி பிள்ளையாரே சரணம்’ ஆல்பங்களை வெளியிட்டு இப்போது மீண்டும் இசைக்க வைத்த ஐயப்பனுக்காக. இதில் முக்கால் வட்ட ஐயனைப் போற்றிப் பாடலையும் எழுதியிருக்கிறார்.

மூன்றாம் ஆல்பத்திலிருந்து எனக்கு பாடல்கள் எழுத வாய்ப்பளித்து, அந்த விழா மேடையில் கௌரவமும் தந்தார். அவருக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தையில்லை.

பாடுபொருள், தல வரலாறு, அனுபவம், இறையிடம் சரணடையும் போது மடை திறக்கும் உணர்ச்சிகளை, சந்ததிற்கு ஏற்ப பாடலாய் இதுவரை வடித்தேன். கிரிதரன் இசையின் தரத்தை அடுத்தடுத்த ஆல்பங்களில் உயர்த்த, அதற்கு ஈடு கொடுக்க, ‘கவிதை இயற்றிக் கலக்கு’-வில் தொடை நயத்தையும், சந்த இலக்கணத்தையும் படித்தபின், இம்முறை எழுதிய வரிகளில் எளிமையும், சந்தமும் சற்றுக் கூடியது. நூலாசிரியர் பசுபதிக்கும், ‘அறுசீர்’ பதிவில் இந்த நூலைக் குறிப்பிட்ட என். சொக்கனுக்கும் என் நன்றிகள்.

ஒரு பாடலை யாத்திரை வடிவிலும், மறு பாடலை யாசக தொனியிலும் வடித்திருக்கிறேன்.

இந்த ஆல்பம் ராகா.காம்-இல் ஐயப்பன் ஆல்பங்களின் வரிசையில் மூன்றாம் இடத்தை எட்டியிருக்கிறது. இங்கே கேட்கலாம்.

1 comment:

  1. வாழ்த்துக்கள்... பல இணைப்புகளுக்கு நன்றி...

    ReplyDelete

உங்கள் கருத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்...