Friday, November 30, 2012

சபரிமலை வா சரணம் சொல்லி வா - உண்ணி கிருஷ்ணன்



‘பாட்டைப் பாடும் போது, நானே மலைக்கு நடந்து செல்வது போல ஒரு உணர்வு எழுந்தது’ - உண்ணி கிருஷ்ணன் விழா மேடையில் பேசிக் கொண்டிருந்தார்.

சென்னை மகாலிங்கபுரம், ஐயப்பன் கோவிலில், ‘சபரிமலை வா சரணம் சொல்லி வா’ இசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா. அவர் வார்த்தைகள் என் மனசை மிருதுவாக வருடின.

1974-ல் என் தந்தை, காஞ்சியிலிருந்து மதுரை, குமுளி, கோழிகானம், தேவிகுளம், உறைகுழி தீர்த்தம் வழியாக சபரிமலைக்கு பாத யாத்திரை சென்றதை நினைத்து, நான் எழுதிய பாடல் அது. கானாஞ்சலி கிரிதரனின் ஐந்தாவது இறையிசை ஆல்பம்.


கூட்டாக ஐயப்பனைக் காண்பது போலவே, கூட்டாக பாடல்கள் எழுதினோம். கிரிதரன் மூன்று, அவரது குருசாமியும், நண்பர் ஸ்ரீதரும் ஒவ்வொன்று, நான் இரண்டு எழுத, அவற்றை உண்ணி கிருஷ்ணன் அழகாகப் பாடிக் கொடுத்தார்.

எத்தனையோ நிறுவனங்களை நிர்வகித்து நடத்திய கிரிதரனை, இறையிசையில் லயிக்க, நேரடியாகக் கட்டளையிட்டது ஐயப்பனே!

இரு வருடங்களுக்கு முன், ஆலபுழா மாவட்டத்தில் முக்கால் வட்டம் என்னும் இடத்திலிருக்கும் பழைமையான ஐயப்பன் கோவிலுக்குச் சென்றிருந்தார் கிரிதரன். இது ஐயப்பன் களரி பயின்ற இடம். அங்கே ஒருவர் எதிர்பட்டு இவர் தலையில் கை வைத்து, ‘அடுத்த வருடம் இந்தக் கோவிலுக்கு வருவதற்குள், நீயே இசையமைத்து பாட்டும் எழுதி ஐயப்பனுக்கு கீதாஞ்சலி செய்து வருவாய்’ என அருள்வாக்காய்ச் சொல்ல, அதனால் உந்தப்பட்டு கிரிதரன் வெளியிட்டதே ‘ஐயன் மலை எங்கள் மலை’

தொடர்ந்து ‘விந்தைகள் புரிந்தாய் நீ என் வாழ்விலே’ (பெருமாள்), ‘ஓம் நவசக்தி ஜெய ஜெய சக்தி’, ‘உச்சி பிள்ளையாரே சரணம்’ ஆல்பங்களை வெளியிட்டு இப்போது மீண்டும் இசைக்க வைத்த ஐயப்பனுக்காக. இதில் முக்கால் வட்ட ஐயனைப் போற்றிப் பாடலையும் எழுதியிருக்கிறார்.

மூன்றாம் ஆல்பத்திலிருந்து எனக்கு பாடல்கள் எழுத வாய்ப்பளித்து, அந்த விழா மேடையில் கௌரவமும் தந்தார். அவருக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தையில்லை.

பாடுபொருள், தல வரலாறு, அனுபவம், இறையிடம் சரணடையும் போது மடை திறக்கும் உணர்ச்சிகளை, சந்ததிற்கு ஏற்ப பாடலாய் இதுவரை வடித்தேன். கிரிதரன் இசையின் தரத்தை அடுத்தடுத்த ஆல்பங்களில் உயர்த்த, அதற்கு ஈடு கொடுக்க, ‘கவிதை இயற்றிக் கலக்கு’-வில் தொடை நயத்தையும், சந்த இலக்கணத்தையும் படித்தபின், இம்முறை எழுதிய வரிகளில் எளிமையும், சந்தமும் சற்றுக் கூடியது. நூலாசிரியர் பசுபதிக்கும், ‘அறுசீர்’ பதிவில் இந்த நூலைக் குறிப்பிட்ட என். சொக்கனுக்கும் என் நன்றிகள்.

ஒரு பாடலை யாத்திரை வடிவிலும், மறு பாடலை யாசக தொனியிலும் வடித்திருக்கிறேன்.

இந்த ஆல்பம் ராகா.காம்-இல் ஐயப்பன் ஆல்பங்களின் வரிசையில் மூன்றாம் இடத்தை எட்டியிருக்கிறது. இங்கே கேட்கலாம்.

Tuesday, September 18, 2012

மீண்டும் ஹரிணி...


ரெக்கார்டிங் பூத்.

சில நொடி கண்மூடியபின் உணர்வு பூர்வமாக பிள்ளையாரைப் பாடத் தொடங்கினார் ஹரிணி.

தந்தாணி கரத்தாய் ஆனந்த முகத்தாய்
தாயென வருவாய் - மன
சாந்தியை தருவாய்
ஐங்கரா... ஐம்புலா...
சதுர்த்தியில் எம்மை காத்திட வருவாய்...

விவரணத்திற்கு அப்பாற்பட்டு சொக்க வைக்கும் அவரது குரலை, கன்சோல் ரூமில் தன்னிலை மறந்து கேட்டுக் கொண்டிருந்தேன். பாட்டை எழுதிய போது மெல்ல நடந்த உணர்ச்சிகள் இப்போது அவர் குரலொலியில் தடதடத்தன.

கிரிதரன் இசையமைத்து ஆடி மாதம் வெளிவந்த கானாஞ்சலியின் ஓம் நவ சக்தி ஜெய ஜெய சக்தி-க்கு கிடைத்த வரவேற்பு தந்த சக்தியில், அதைப் போலவே உண்ணி கிருஷ்ணன், ஹரிணியின் அற்புதக் குரல்களில் பிள்ளையாருக்கு இசையாஞ்சலி செய்ய முடிவானது.

கிரிதரன், உண்ணி கிருஷ்ணனுக்கான பாடல்களை மடமடவென எழுதிவிட்டு, ஹரிணிக்கான பாடல்களை என்னை எழுதச் சொன்னார். நாளை ரெக்கார்டிங் என்றும் சொல்லி அதிர வைத்தார்.

பிள்ளையாரப்பா, இதுக்கு மேல எந்த வார்த்தையும் இந்தப் பிள்ளைக்கு வரலையேப்பா. முறையிட்டேன்.

கணங்களின் அதிபதி ரெக்கார்டிங்கை இரண்டு நாள் தள்ளி வைத்து, பாடல்களை கிள்ளிக் கொடுத்தார். தந்தத்தை எழுத்தாணியாக்கி பாரதம் எழுதியவனை தந்தாணி கரத்தாய் என்று விளித்தே துவங்கினேன்.

ஆறு பாடல்களுடன், விநாயகர் அகவலுடன் ரெக்கார்டிங் இனிதே நிறைந்தது. கிரிதரன் இரண்டு பாடல்களையும், அகவலையும் பாடியிருக்கிறார்.

ஒளவையின் வரிகளை இசையுடன் கேட்கும்போது, வெட்கம் என்னை வானமாய்க் கவ்விக் கொள்கிறது!

எழுதிய சில வார்த்தைகளும், அதைத் தந்த தந்தன் காலடிக்கே சமர்ப்பணம்.

இந்த உச்சிப் பிள்ளையாரே சரணம் ஆல்பத்தின் பாடல்களையும், நவசக்தியின் பாடல்களையும் raaga.com-ல் கேட்கலாம், வாங்கலாம். அதன் சுட்டிகள் கீழே:

ராகாவில்: உச்சிப் பிள்ளையாரே சரணம்
ராகாவில்: ஓம் சக்தி நவசக்தி ஜெய ஜெய சக்தி

Friday, July 27, 2012

ஓம் நவ சக்தி ஜெய ஜெய சக்தி


1992

‘ரகு... நீ பாடினது போதும். முடிச்சுக்கோ’

நான் இன்னும் முதல் சரணமே முடிக்கவில்லை. அதற்குள் பாட்டுப் போட்டியின் நடுவர்தான் இப்படிச் சொல்லி விட்டார். மற்றொரு நடுவர் உணர்ச்சியற்று கண்ணை மூடிக் கொண்டிருந்தார்.

நான் பாடினால் கர்ண கொடூரமாக இருக்கிறதென பள்ளி நண்பர்கள் கிண்டலடிக்க, ஒரு வீம்புக்காக பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டதில் மூக்குடைபட்டது.

அன்றுடன் பாத்ரூமில் பாடுவதையும் நிறுத்திக் கொண்டேன்.

-- கட் --

2012

‘ரகு... வீட்டுக்கு வா’

நான் முன்பு பணிபுரிந்த IT கம்பெனியின் நிறுவனர் கிரிதரன் போனில் அழைத்தார். சென்றேன்.

கீ-போர்டில் சில டியூன்களை வாசித்துக் காண்பித்தார்.

அவர் SSI, Radiant, Lambent, Elmaq, Onspec கம்பெனிகளை நடத்தியவர். தற்போது EdServ-ஐ நடத்திக் கொண்டிருப்பவர். இசைத் துறையிலும் ஈடுபாடு கொண்டவர். சில மாதங்களுக்கு முன் அவரே இசையமைத்து, பாட்டெழுதி, உண்ணி கிருஷ்ணன் பாட, ஒரு ஐயப்பன் இசை ஆல்பத்தை - அய்யன் மலை எங்கள் மலை - வெளியிட்டிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக அடுத்த ஆல்பத்திற்கான டியூன்கள் இவையெனப் புரிந்தது.

‘இதெல்லாம் அம்மன் பாடல்களுக்கான டியூன்கள். ஆடியில் ரிலீஸ் பண்ணலாம்னு இருக்கேன்’

‘ரொம்ப நல்லா இருக்கு சார்’

அடுத்து அவர் சொன்னது, டெரர் கிளப்பியது.

‘இந்தவாட்டி பாட்ட நீ எழுது’

‘ஐயோ, பாட்டு எனக்கு ஒத்துக்காத விஷயம்னு உங்களுக்கே தெரியும். நீங்க தானா தானான்னு எதையாவது சொன்னீங்கனா, நான் வாணா வாணானு ஓடிடுவேன்’

‘அதெல்லாம் எனக்குத் தெரியும். உனக்காக சில டம்மி லைன்ஸ் போட்டு வெச்சுருக்கேன்”.

அதை அவர் பாட, எனக்கு டெரர் டபுளானது. அவையே அற்புதமாக இருந்தன.

‘இதுவே சூப்பரா இருக்கே. நான் என்னத எழுதறது’

‘சரியா பாரு. இது சந்தம் மட்டுமே. அர்த்தம் இல்லை. கிளம்பு. மூணு நாள்ல முதல் பாட்டோட வா’.

சரி. நமக்கு பாடத்தானே வராது. எழுதித்தான் பார்ப்போமே. எழுதிட்டா ரொம்ப வசதி. நம்ம பாட்டையே பாடும்போது யாரும் கிண்டலடிக்க மாட்டாங்களே!.

சமயபுரம் மாரியம்மனுக்கு முதல் பாடல்.

    அம்மா... மாரியம்மா...
    
    சமயபுரத்தாயி நீ அபய கரம் தாயேன் மாயி
    பெருவளை வாய்க்காலில் நீ இருக்கிறாயே தீர்த்தமாயி (அம்மா)
    
    சர்ப்பக் குடை ஆட்சிகள் கண்ணபுரக் காட்சிகள்
    அன்னை மாரி தந்த தரிசனம்
    
    வெப்பம் பொங்க தவிக்கிறேன் நோயும் அண்ட அழுகிறேன்
    வேப்பந் தரித்துக் கேட்கிறேன் அம்மை தடுத்து காக்க வேணும் (அம்மா)

சந்தம் கச்சிதமாகப் பொருந்த, வேர் விட்ட நம்பிக்கையில் முழுப் பாடலும் வளர்ந்தது. பிற பாடல்களும் கனிந்தது.

முழு அர்ப்பணிப்புடன் இறையுடன் கலந்துவிட்டால், மாற்றமும் சாந்தமும் மனதில் தானாகவே குடிகொள்கின்றன. பட்டீஸ்வர துர்க்கையிடம் நெருக்கத்தையும், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியின் வருடலையும் உணர்ந்தேன்.

உண்ணி கிருஷ்ணன், ஹரிணியின் அற்புதக் குரல்களுடன் பாடல்கள் இசையரங்கேறின. கிரிதரனும் பாடியிருக்கிறார். 

இது கானாஞ்சலியின் “ஓம் நவ சக்தி, ஜெய ஜெய சக்தி” இசை ஆல்பமாய் வெளிவந்திருக்கிறது.


பாடல் குறிப்புகள்:

அம்மா மாரியம்மா - சமயபுரத்தாளை பெருவளை வாய்க்காலின் தீர்த்தமாகவும், பிள்ளைகளை அம்மை நோயிலிருந்து விடுவிப்பவளாகவும், தாலி காக்கும் ஆத்தாளாகவும் சித்தரிக்கிறது.

மாங்காட்டில் வாழும் எங்கம்மா - தீயின் நடுவே ஒற்றைக் காலில் தவம் புரிந்து சிவனை மணந்த காமாட்சியைப் பாடி, இருமனங்களாய் திருமண வரமும், தம்பதியாய் குழந்தை பாக்கியத்தையும் வேண்டுகிறது.

பட்டீஸ்வர துர்கையே - அனைத்திற்கும் மூல சக்தியான பராசக்தி துர்கையின் வடிவங்களைப் பாடி, அக்கிரமங்களை போக்கவும், தோஷங்களை நீக்கவும், மருத்துவம் கைவிட்ட நோய்களிலிருந்து காக்கவும், தொடரும் துர்கணங்களை விரட்டவும் மன்றாடுகிறது.

வருவாய் அருள்வாய் - வடபழனி சாந்தநாயகியை குலதெய்வமாக, அலைபாய்ந்த மனதில் வந்தமர்ந்து, அச்சத்தைத் தீர்த்து அமைதியைத் தந்த தேவியாகப் பாடுகிறது.

அகிலாண்டேஸ்வரி மாதா ஜனனி - யானையும் சிலந்தியும் பூஜித்த திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரனின் பாகமாய் இருப்பவளை, சிவனடியார் பெண்ணாய் வேடம் தரிப்பவளை அடைத்து, காலடியில் அழுது, தாய்மடி கேட்கிறது.

தேர் திருவிழா - மலையனின் பெண்ணாய், மதுரை வம்சியாய் உதித்து, பாண்டி நாட்டை ஆண்ட மீனாட்சியின் அழகை, சாம்பல் பித்தனின் மாலை கண்ட விதத்தைப் பாடுகிறது.

அகிலலோக ஜகந்நாயகி - சர்வ சங்கடங்களுக்கும் நிவாரணியாக இருக்கும் சோழங்கநல்லூர் ப்ரத்யங்கரா தேவியின் பஞ்சகம் இசையுடன் பாடலாய் கலந்திருக்கிறது.

இன்னமும் பாரா முகம் - நடிப்பிசைப் புலவர் (அமரர்) கே.ஆர். ராமசாமியின் பழமையான பாடல், புதிய இசையில் மீண்டும் ஒலிக்கிறது.

உண்ணா முலையம்மனே - தந்தனும் கந்தனும் உண்ணா முலையம்மனை, திருவண்ணாமலையாளும் தேவியை, பெண்களை அண்டும் முலையின் நோய்களிடமிருந்து காப்பவளாய் வரித்து, அவள் ஜோதியிடம் தஞ்சமடைகிறது.

பாடல்களை galatta.com-ல் கேட்கலாம், வாங்கலாம். இசையும் பாடலும் உங்கள் மன அழுத்தங்களை இளகச் செய்தால், அதுவே எங்கள் பாக்கியம்.