Monday, January 17, 2011

பேண்ட் போட்டு ‘மேத்தமேட்டிக்ஸ்’

“இத்துடன் எல்லா பாடமும் முடிச்சாச்சு. இனி நீ சென்ட்டம் எடுப்பது மட்டுமே பாக்கி” என்றார் என்னுடைய பிரத்யேக டியூசன் வாத்தியார்.

நானூறு பக்க லாங்-சைஸ் நோட்டில் ஸ்கேல் வைத்து அழகாக மூன்று கோடுகள் போட்டு ‘முற்றும்’ எழுதி, ஒரு குருவுக்கு உண்டான மரியாதையுடன் அவருக்கு நன்றி சொல்லி, ஆசி பெற்று, வீட்டிற்குப் புறப்படத் தயாரானேன்.

அந்த லாங்-சைஸ் நோட்டு என்னுடைய பிரதான பொக்கிஷம். அதை எடுத்துச் செல்ல தனியாக பேண்ட் துணி வாங்கி, நோட்டின் சைஸூக்கு ஜிப்புடன் ஒரு பை தைத்துக் கொண்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

அப்போது நான் சுவாசித்த காற்றிலிருந்த ஈரம், மழை பெய்ந்து ஓய்ந்திருப்பதை எனக்கு உணர்த்தியது.

நோட்டை இரண்டு பாலித்தீன் பைகளால் வாட்டர்-ப்ரூஃப் செய்துகொண்டு, பேண்ட்டை(பையை) அதற்கு அணிவித்து, அதை என்னுடைய  டி.வி.எஸ் சேம்ப்-பின் ஹேண்டில் பார் கொக்கியில் மாட்டிக் கொண்டு புறப்பட்டேன்.

அடைமழை கொட்டி இருந்திருக்கிறது. கட்டிடங்களும், காற்றும் மழையில் நினைந்திருந்தன. வீதிகள்தோறும் நீரோட்டம்.

டி.வி.எஸ் சேம்ப்பில் அப்போதுதான் எலட்ரானிக்-ஸ்டார்ட் அறிமுகமாகியிருந்தது. அந்தக் காலத்தில் பரவலாக ஓடிக் கொண்டிருந்த டி.வி.எஸ்-50கள் ஆங்காங்கே நின்று ஸ்டார்ட் ஆகாமல் முனகிக் கொண்டிருந்தன. அதைப் பார்த்து, நான் ராசா(!) மிடுக்கோடு காஞ்சி ராஜவீதியில் சென்று கொண்டிருந்தேன். ராஜவீதி, சாண் உயர நீர்வீதியாக இருந்தது. சர்வ ஜாக்கிரதையாகத்தான் வண்டி ஓட்டினேன். ஆனாலும்...

டொடுக் என்ற சப்தத்துடன் ஏதோ ஒரு பெரிய பள்ளத்தில் முன்சக்கரம் பயங்கரமாக இறங்கியது. முழு பிரேக்கையும் பிடித்தேன். வண்டி நிற்கவில்லை. திமிங்கிலம் விழுங்குவது போல எதனாலோ என் வண்டி கீழ் நோக்கி இழுக்கப் பட்டது. காலூன்ற முயன்றேன். பயங்கர அதிர்ச்சி. தரை தட்டுபடவே இல்லை. காலும் கீழே போய்க்கொண்டிருந்தது.

பட்டெனப் புரிந்தது. கடவுளே! திறந்து வைக்கப்பட்டிருந்த பாதாள சாக்கடையில், நான் வண்டியுடன் செங்குத்தாக கீழிறங்கிக் கொண்டிருந்தேன்.

வண்டி உரசிக்கொண்டே சப்தம் எழுப்ப, உடல் முட்டிகள் எதனெதனுடனோ இடிபட, கண்கள் இருட்டிக் கொண்டன. அது பயத்தினாலா? நீரின் நிறத்தினாலா?  அது அந்தச் சாக்கடைக்கே வெளிச்சம்!

“தூக்கு அவன” என்ற குரலைத் தொடர்ந்து திமுதிமுவென நாலைந்து பேர் ஓடி வரும் காலடியோசைக் கேட்டது. அவர்கள் என் தலையைப் பிடித்து, பின் கைகளைப் பிடித்து அலேக்காகத் தூக்கி நிலத்தில் நிறுத்தினார்கள்.

ஒரு கணம் நின்றுவிட்ட உயிர்நாடி மீண்டும் துடிக்கத்தொடங்க, பெருமூச்சு விட்டேன்.

பாதாள சாக்கடையை எதற்காகவோ நான்கு சதுரடிக்கு வெட்டி அப்படியே விட்டு விட்டார்கள். எமகாதகர்கள். வண்டியின் பின் சக்கரம் மட்டுமே தரைக்கு மேல் இருந்தது. அது மெதுவாக ரிவர்ஸில் சுத்திக் கொண்டிருந்தது. பின்விளக்கு அணைந்து அணைந்து எரிந்து என் முகத்தில் சிவப்பொளியைப் பாய்ச்சியது. (நம்பியார் முறைக்கும் போது அவர் முகத்திற்கு ஒரு ரெட்லைட் எஃபெக்ட் கொடுப்பார்களே, அது மாதிரி.)

வண்டியையும் மீட்டார்கள். முன் பகுதி சற்று நசுங்கியிருக்க, ஹேண்டில் பார் அஷ்ட கோணலாக வளைந்திருந்தது.

“ஏன் தம்பி, ஒரு கொம்ப நட்டு, செவப்பு கொடி வச்சிருக்குல்ல. பாத்து வரப்படாது?” ஒருவர் கடிந்துக் கொண்டார். அவருக்கு சாலை ஓரத்தைச் சுட்டினேன். பத்தடிக்கு ஒன்றாய் வரிசையாக கட்சிக் கொடிகள் நடப்பட்டு இருந்தன.

‘இதுவும் ஒரு கட்சிக் கொடி. கொஞ்சம் நடு ரோட்டுல நட்டுட்டாங்கனு நெனச்சு, நான் பாட்டுக்கு வந்துட்டேன் சார்’ அப்பிராணியாகச் சொன்னேன். (நம்ம ஊர் எல்லா கட்சிக் கொடிகளிலும்தான் சிவப்பு ஒளிருதே!)

அவர் தலையில் அடித்து கொண்டு, “சரி சரி, போய் குளி” என்றார். அப்போதுதான் கவனித்தேன். எங்கள் ஊரில் “செங்கழு நீரோடை வீதி” என்று ஒரு பிரபலமான வீதி உண்டு. ஆனால் இது என்ன கழுநீர் ஓடையோ?  அதில் தலைமூழ்கி எழுந்ததில் கார்மேக வண்ணனாகக் காட்சியளித்தேன். தார் வண்ணன் என்றும் சொல்லலாம். அவ்வளவு கருப்பு.

ஒருவாறு சமாளித்து வண்டியைக் கிளப்பினேன். என்னுடல் துர்வாசனையை நாசியால் தாங்க முடியவில்லை. “சே! நம்ம கதாநாயகர்கள் சாக்கடை வழியாக, கவர்னர் / மந்திரி வீட்டுக்குள் நுழைவது, ஹீரோயினை அனாயாசமாக தூக்கிக் கொண்டு வருவது, உள்ளேயே வில்லனுடன் ஒண்டிக்கு ஒண்டி சண்டை போடுவது எல்லாம் எவ்வளவு பெரிய கப்சா?!!” என்று அந்த நிலையிலும் யோசித்தேன்.

என்னிலையை கண்டு பொறுக்காத கார்மேகம் மீண்டும் அடைமழையைக் கொட்டி என்னை குளிப்பாட்டியது(!). வீதி வெறிச்சோடியதால், வண்டியை நிறுத்தி, நடு ரோட்டில் உடம்பை தேய்த்துவிட்டு ஆனந்தமாகக் குளித்தேன் (டிரஸ்சோடுதான்)!

மீண்டும் பால்வண்ணனாக மாறிய சந்தோசத்தில், ஈரம் சொட்டச்சொட்ட வீடு வந்து சேர்ந்தேன். மரணச் சாக்கடையை முத்தமிட்டுத் திரும்பியவன் என எண்ணிக் கொண்டே, வண்டியை ஸ்டேண்ட் போட்டு, ஹேண்டில் பாரைப் பார்த்த நான் துல்லியமாய் அதிர்ந்தேன்...

பேண்ட் போட்ட என் ‘மேத்தமேட்டிக்ஸ்’ நோட்டைக் காணோம்.

Wednesday, December 29, 2010

சொன்னபடி கேளு மக்கர் பண்ணாத


“அம்மாவ், வுங்க கழனில மாடு பூந்திடிச்சி...” வாசலில் குரல் கேட்டது.

கிராமத்திலிருக்கும் உறவினர் வீட்டுக்கு அப்போதுதான் வந்திருந்தேன். மார்கழித் திங்களால் சில்லிட்ட கிணற்று நீரில் முகம் கழுவிக் கொண்டிருந்த போதுதான் அந்தக் குரல் கேட்டது.

“அது பொல்லாத மாடும்மா, எங்களால ஓட்ட முடியல... நடு கழனில அட்டகாசம் தாங்கலம்மா...” அடுத்தவீட்டுப் பெண்தான்(!) சொல்லிக் கொண்டிருந்தாள்.

உறவினர் வெளியூர் சென்றிருந்தார். நான் மட்டுமே ஆண்மகன். அந்தக் காளையை அடக்க... இல்லை இல்லை விரட்ட இந்தக் காளையாச்சு என, ஈர முகத்தை அவசர அவசரமாய்த் துடைத்துக் கொண்டு, வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு வீராவேசமாக கழனியை நோக்கி ஓடினேன்.

வீட்டிலிருந்து நூறு மீட்டர் தொலைவில் வயலும் வயல் சார்ந்த நிலம்தான். வரப்பில் ஓடியபோது அந்த வித்தியாசத்தை உணர்ந்தேன்.

ஐ.டி கம்பெனியில் 24 மணிநேரமும் சாக்ஸினூடே ஷூவினுள் புழுங்கும் கால்கள், செருப்பு கூட அணியாமல் கெட்டிப்பட்ட களிமண் வரப்புகளில் பனியுடன் படர்ந்திருந்த புற்களின் மேல் ஓடியபோது, ஒரு இனம் புரியாத சிலிர்ப்பு என்னுடல் முழுக்கப் பரவியது.

14 அங்குல மானிட்டரே உலகம் எனப் பார்க்கும் கண்களுக்கு நிஜமான உலகம் எதிரே விரிந்தது. அதன் பார்வையின் வீச்சுவரை இடுப்பளவு உயர்ந்த பயிர்கள் காற்றில் சலசலத்துக் கொண்டிருந்தன.

பயிர் நிலங்களைத் தொடர்ந்து குன்றுகளும், அதன் மேல் நிலவை விட குளிர்ச்சியாக சிவப்புச் சூரியனும்... காட்சியின் கவர்ச்சியில் லயித்து அப்படியே நின்றுவிட்டேன்.

சே! ஐ.டி-யால் எவ்வளவு இழந்து விட்டோம். இரவென்றாலும் பகலென்றாலும் டியூப் லைட்டே நமது சூரியன். காலை, மாலை, அந்தி, சந்தி... எதையுமே உணர முடிவதில்லை. சன்னல்கள்கூட அடைக்கப்பட்டுவிட்ட க்யூபிக்கிள்தான் நம்முடைய ஆறடி நிலம்.

இப்படி வேட்டியை மடித்துக் கட்டி, துண்டை மட்டும் தோளில் போர்த்திக் கொண்டு, வெறும் கால்களை மண்ணில் ஒற்றி, காற்றை நுகர்ந்து, அண்ணாந்து வான் பார்க்கும் சுகத்தை அடியோடு இழந்துவிட்டதை நினைத்து சோககீதம் மீட்டிக் கொண்டிருந்தேன்.

சுரீரென வந்த வேலை உறைத்தது.

சட்டென சுதாரித்து கண்களைச் சுழற்றி மாட்டைத் தேடினேன். எங்கும் காணவில்லை. உறவினரின் நிலத்தை அடையாளம் காணவே சற்று நேரம் பிடித்தது. மெதுவாக அதை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

திடீரென நன்கு வளர்ந்திருந்த வயல் நடுவிலிருந்து இரு கொம்புகள் சற்று எழும்பித்தாழ...

‘ஆஹா... அவனா நீ...’ என்று கூச்சலிட்டபடி அங்கே பாய்ந்தேன்.

நான் வயலை அடைய, அதுவும் வெளி வர, நேருக்குநேர் சந்தித்துக் கொண்டதில் ஜல்லிக்கட்டு முரசு கொட்டியது. அது சாதுவான பசுதான். ஆனால் அது கண்களை உருட்டிய விதத்தில், கொம்புகளை சிலுப்பிய விதத்தில் காங்கேய நல்லூர் காளையெனத் தெரிய, எனக்கு சற்று வெடவெடத்தது.

எனக்குப் பின்னால் அப்போதுதான் உழுது நீர் இறைக்கப்பட்ட கழனி. தமிழ் சினிமாவில் மட்டுமே ஹீரோவும் வில்லனும் சேர்ந்து விழுந்து கட்டிப் புரள்வார்கள். இந்தப் பசு இன்னொரு முறை தலையை சிலுப்பினாலே, நானாகச் சென்று விழ வேண்டியதுதான்.

முரட்டுக் காளை ரஜினி மாதிரி ஜல்லிக்கட்டு போஸ் கொடுத்தேன் (வயலில் யாருமில்லையென்ற தைரியம் தான்!). அது அசரவில்லை.

‘சொன்னபடி கேளு...’ சிங்கார வேலன் மாதிரி பாடினேன். அது முறைத்தபடி என்னை நோக்கி ஓரடி வைத்தது. அவ்வளவுதான். பின்வாங்கிய என் கால்கள் சேற்றில் வசமாகச் சிக்கிக் கொண்டதில் என் வீரம் பறந்தோடியது. கை கூப்பி...

‘மாதா... கோ மாதா... போ மாதா...’ என சாவித்ரி குரலில் பாட முயல, ஸ்ருதி நாராசமாய் எழ, அது மிரண்டு ஓடி, ஒரு வீட்டின் கொல்லைப்புரத்தில் நுழைந்து விட்டது.

உறவினர் பாடுபட்டு விதைத்த வயலின் நடு பகுதி முழுதும் பாழ். மாட்டின் மேல் கோபம் வரவில்லை. அதற்குரிய தீனியைத் தராமல் வயலில் மேய விட்ட மாட்டுக்கார வேலன் மேல்தான் கோபம் வந்தது. மாடு நுழைந்த வீட்டுத் தொழுவத்திற்குச் சென்றேன். அங்கே ஒருவர் தவிட்டைக் கலந்து மாடுகளுக்கு தண்ணி காட்டிக் கொண்டிருந்தார்.

‘ஏங்க, உங்க மாட்ட கட்டி வைக்க மாட்டீங்களா?’ சண்டைக்குச் சென்றேன்.

“எல்லா மாடும் கட்டிதானே இருக்கு” என்றார். உண்மைதான். அங்கே எல்லா மாடுகளும் கட்டப்பட்டுதான் இருந்தன. ஆனால் அனைத்தும் எருமை மாடுகள்.

‘ஒரு பசு மாடு வந்துச்சே!’

“அதுவா, அது எங்க வூட்டு மாடுல்ல. கோடி வூட்டு மாடு. அப்பவே வெரட்டிட்டேன்”

‘ஓ! நல்லது. எந்தப் பக்கம் விரட்டினீங்க’

“கழனி பக்கந்தான்”

அட, தேவுடா... மீண்டும் வயலுக்கு ஓடினேன். அங்கே அந்தப் பசு, என்னைப் பார்த்ததும் ஓடிக் கொண்டே வேகவேகமாய் பயிரைத் தின்னத் தொடங்கியது.30 நிமிடம் கடும் போராட்டம். சேற்றில் இறங்கி, வேலிகளைத் தாண்டி, கிணறுகளைச் சுற்றி, வரப்புகளில் ஓடி (நான் யார் பயிரையாவது மிதித்து விட்டால், கிராமத்து வீச்சரிவாள் என்னை அறுவடை செய்துவிடும்!) ஒரு வழியாக அந்தப் பசுவை வயலை விட்டு விரட்டிவிட்டேன்.

ஆனாலும் தீனி அகப்பட்டு விட்டதில், அதை அசை போட்டபடி அசைந்து அசைந்து நிதானமாகச் சென்றது பசு.

அதற்கு மேல் என்னால் நிற்க முடியவில்லை. வீடு சென்று, திண்ணையில் கால் நீட்டி, பெருமூச்சு விட்டு அமர்ந்தேன். என் மென்மையான(!) பாதங்கள் விண்விண்னென வலித்தது. குனிந்துப் பார்த்தால்...

முட்கள் குத்தி கிழிபட்டதில், சொட்டுச் சொட்டாய்... திட்டுத்திட்டாய் ரத்தம்.

கிணற்றடிக்குச் சென்று ஜல்லிக்கட்டு ரணங்களை கழுவிக் கொண்டிருக்கும்போது “அம்மாவ், கழனில மாடு....” என்று வாசலில் மறுபடி குரல் கேட்டது.

Tuesday, December 28, 2010

கீ-போர்டைப் பார்க்காதே

தமிழோவியம்.காம் இணைய இதழில் எனது கட்டுரை...

கீ-போர்டைப் பார்க்காமல் எப்படி ஏ.ஆர்.ரஹ்மான் மாதிரி வாசிப்பது என்று அங்கலாய்க்க வேண்டாம். நான் சொல்வது கணினியின் கீ போர்டை.
ரஹ்மான் கூட தன் பத்து விரல்களையும் பயன்படுத்திதான் உலகை மயக்குகிறார். ஆனால் நம்ம கணினிக்காரர்கள், இரு ஆள்காட்டி விரல்களால் கீ-போர்டை பாக்குச்சட்டியைப் போலக் குத்திக்குத்தி உலகையே ஆள நினைக்கிறார்கள்.
மேலும் படிக்க...