Showing posts with label நூல் விமர்சனம். Show all posts
Showing posts with label நூல் விமர்சனம். Show all posts

Sunday, February 23, 2020

சத்யானந்தனின் புது-பஸ்டாண்ட்

சிலருக்கு பண்டைய வரலாறு இனிக்கும். சிலருக்கு இக்கால அரசியலும் காதலும் தித்திக்கும். சிலருக்கு எதிர்கால விஞ்ஞானம் சுவைக்கும். இவ்வனைத்தையும் புலிவலம், திருவள்ளரை, துறையூர், திருச்சி சுற்றிய பகுதிகளை ஒட்டி கடந்த காலம் கி.பி 600-1300, நிகழ்காலம், சற்று எதிர்காலம் 2040-2070 கொண்டு 180 பக்கங்களுடன் ஒரு கையடக்க நாவலாய் ‘புது பஸ்டாண்ட்’-ஐ எளிமையான நடையில் படைத்திருக்கிறார் சத்யானந்தன்.

இந்நாவல், படிப்பவர் தன் ஞாபகச் சக்தியைப் பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளும்படியாகவும் வடிக்கப்பட்டிருக்கிறது. சட்டெனக் கீழே விழுந்துச் சிதறும் குண்டு மணிகளைப் போல் பல சம்பவங்கள் - மூன்று காலப் பரப்பில் - ஒரே  நேர்க் கோட்டில் அல்லாமல், விதவித வழிகளில் தொகுக்கப்பட்டிருகின்றன. சற்று அசந்தால், அல்லது சிறு இடைவெளி விட்டுப் படித்தால் பாத்திரங்களின் பெயர்களும் சம்பவங்களும் மறந்தே போய்விடும்.

திருவள்ளரை வைணவக் கோவிலின் பூர்த்தியாகாத ராஜகோபுரத்தை மையப்படுத்தி கதையின் களம் அமைக்கப்பட்டிருக்கிறது. பல சிந்தனைகளைத் தூண்டிவிடுகிறது முன்னுரையில் வரும் ஒரு வரி - “இன்று நாம் ஓர் இரவுப் பயணத்துக்குள் கடந்து விடும் நிலப்பரப்பை ஒரு காலத்தில் நான்கு மன்னர்கள் ஆண்டனர்”. ம்ம், பல்லவன் போரில் தோற்க, சோழனிடம் ஆட்சி மாறியபின் கோபுரம் கட்டும் பணி நிற்கிறது. ஆனால் இப்பணியாலும், போராலும் சாமானிய மக்களிடம் நிகழும் தாக்கமே பிரதானமாகக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. கோவில் பணிக்குச் கல்தச்சர்கள் சென்று விட, அம்மி, ஆட்டுகல் கொத்தித் தருவதற்குக் கூட ஆளில்லை. ஒரு போர் நிகழும் போது கள்வரிடமிருந்து காக்கவும் வீரரில்லை... எந்த ஒரு காலத்திலும், எந்த ஒரு இடத்திலும் ஒரு பெரும் தொழில்/வேலை தொடங்கப்படும் போது, சுற்றுப் புற மக்களுக்கு வேலை கிடைக்கும் அதே சமயம், கடைப் பணிக்கும், வீட்டுப் பணிக்கும், கூலிக்கும் ஆட்கள் அற்றுப் போகும் அவலமும் சேர்ந்தே நிகழ்கிறது. 

அதனுடன் காலங்காலமாய்த் தொடரும் சாதிப் பிரச்சினைகளும், தீண்டாமைகளும், இதையும் மீறிப் பூக்கும் காதல்களும், காமமும், அதன் விளைவுகளும் காட்சிப் படுத்தப்படுகின்றன. ஆயர் குலப் பெண், கல்தச்சனின் வீட்டு வாயிலிலேயே நிற்பதும், இளவயதில் திருமணமாகி பூப்பெய்தும் முன்பே கணவனை இழந்த புலையர் பெண் வள்ளி, போரில் முடவனான சஞ்சீவனைக் காதலிப்பதும், சங்கரனின் தந்தை நடுநிசியில் தேவதாசி பெருந்தேவி வீட்டிற்குச் செல்வதும்... பலவாறு படிப்பவரின் மனதை அசைத்து விடுகின்றன.

இவை இப்படியே இன்றும் தொடர்வது, இவைதான் நம் அடையாளங்களா என்றும் திகைக்க வைக்கிறது. ஆனால் மாலா தன் தாய்க்காகத் தெளிந்து அறிவழகனை விட்டு விலகும் முதிர்ச்சி நம்மை ஆசுவாசப்படுத்துகிறது. இவள் குலத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலம், கொடுக்கப்படாமல் ஏமாற்றப்படுவதும், புது பஸ்டாண்டை  அரசியல் லாபங்களுக்காக கொண்டு வர முனைவதும், அதை ஒட்டிய போராட்டங்களும், வாழ்வாதாரங்களும், திரைமறைவு செயல்பாடுகளும்... குவாரி, கிரானைட், ரியல் எஸ்டேட், செம்மரக் கடத்தல், கந்து வட்டி, நக்ஸலைட்கள், ஃபைனான்ஸ் கம்பெனி, ஆள் கடத்தல் எனப் பலதும் இங்கே கோர்க்கப்பட்டிருக்கிறது. அற்புத திராவிட கழகம் (அ.தி.க), தமேஸான் என்றெல்லாம் சூட்டப்பட்ட பெயர்களால் இக்காலத்தின் பிரதிபலிப்பை படிப்பவர் சுலபமாக உணரலாம். மக்களின் கவனத்தை திசை திருப்பும் உத்திகள் அரசாட்சி முதலாய் நடப்பது சில பத்திகளிலேயே பட்டவர்த்தனம்.

ஒரு பேட்ஸ்மென், முதல் சில பந்துக்களை விட்டுவிட்டு, பிட்சின் தன்மையை உணர்ந்தபின் ஆடத் தொடங்குவது போலத்தான், இந்நாவலின் முதல் சில அத்தியாங்களை நிதானமாகப் படித்தபின்பே வேகமெடுக்க வேண்டும். எந்த ஒரு அறிகுறியுமின்றி, அடுத்த பத்தியிலேயே காலமும் காட்சியும் மாறும். அச்சுப் பிழையோ என்றும் நினைத்தேன். ஆனால் இது ஒரு உத்தி  எனப் புலப்பட்டபின், நினைவில் நிறுத்திப் படிக்கும் விதமாய்த் தொடர்ந்தேன். ஆனாலும், பல சம்பவங்கள் தொடர்ச்சியின்றி தனித்தீவுகளாய் நிற்கும். அதனுடன், பட்சிகளுக்குள் உரையாடல், நாய்க்கும் மனிதனுக்கும், ஒட்டகத்துக்கும் மனிதனுக்கும் உடைரயாடல் என்று துணுக்குகளும் உண்டு. சிலதில் ஒரு தகவலிருக்கும். சிலது வெறுமனே கடந்தும் செல்லும்.

எதிர்காலச் சம்பவங்கள் மிக நேர்த்தியாகத்தான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் வெகு விரைவில் மாற்றங்களைக் காணும் நமக்கு  இதன் சில பகுதிகளில் பட்டம் படிக்கும் விதம், உணவகத்தில் ரோபோக்கள், வேற்று கிரக உயிருடன் உரையாடல்... போன்றவை வசீகரிக்கவில்லை.

எங்கோ தடம் மாறி சென்று விட்ட நாம், இயற்கை விவசாயத்தை நோக்கி மெல்ல திரும்பத் தொடங்கியிருக்கிறோம். இதன் உச்சம் இனி வரும் சில பத்தாண்டுகளிலேயே நிகழ்வதாய்... அறிவழகனின் தந்தை மணவாளன் மூலம், வானம் பார்த்த பூமிகளில் சொட்டு நீர்ப் பாசனம்... விதை நடும் ரோபோக்கள்... பூச்சிக் கொல்லி மருந்துகளை அறவே தவிர்த்து பெரிய பெரிய வெட்டுக் கிளிகளை உண்ணும் க்ளோனிங் செய்யப்பட்ட ராட்சதத் தவளை... சரியும் மக்கள் தொகை.. விரியும் காடுகள் / நீர்ப் பரப்புகள் என்றெல்லாம், பலரின் கனவுகளும், ஆசைகளும்,  முன்னெடுப்புகளும் இப்புத்தகத்தில் பூர்த்தியாவது போல நிகழ வேண்டுமென்பதே படித்து முடிப்பவரின் வேண்டுதலாய் இருக்கும்.

ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்பும், திருச்சி ராஜ கோபுரம் எழும்பியதைப்போல்,  திருவள்ளரை கோபுரத்தோடு தமிழகமெங்கும் இன்னமும் வலுவான அடித்தளமுடன் இருக்கும் பீடங்களின் மேல் கோபுரங்கள் எழும்பட்டும். அதனுடன் இம்மண்ணின் வளமும், மக்களின் நலமும் உயரட்டும். அதைக் கண்டு இந்நூலாசிரியரின் மனம் நிறையட்டும்.

வெளியீடு: Zero Degree Publishing
சுட்டி: புது-பஸ்டாண்ட்

Wednesday, October 28, 2015

பாலகுமாரனின் ஒரு காதல் நிவந்தம் - விமர்சனம்

தந்தையின் புத்தக அலமாரி.

ஒரு புத்தகத்தைத் தேடும் போது, கண்ணில் பட்டது பாலகுமாரனின் மாத நாவல் ‘ஒரு காதல் நிவந்தம்’. படித்ததில்லை. ஆனால் அது இராஜேந்திரனைப் பற்றியது எனத் தெரியும். அழகிய தலைப்பு சொல்லியது, இது இராஜேந்திரனுக்கும், அவனது அனுக்கி நக்கன் பரவைக்கும் உள்ள பிணைப்பு என்று. படிக்கும் ஆசை வர, உடன் தயக்கமும் ஒட்டிக் கொண்டது.

உடையார், கங்கை கொண்ட சோழன் தந்த பிம்பத்தை, உணர்ச்சிகளை இது கலைத்து விடுமோ? 12 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதை. சம்பவங்கள் மாறியிருக்கும். பாத்திரங்களின் பிம்பங்கள் கூட உருமாறியிருக்கும்.

நாவல் கடிகை ஞாபகத்திற்கு வந்தது. அதில் ஆதித்த கரிகாலனைக் கொன்ற ரவிதாஸன், பரமேஸ்வரனே கதா நாயகர்கள்.

இருப்பினும் மனம் உந்த, படித்தேன்.

ஆம், சம்பவங்கள் மாறியே இருந்தன. கங்கை வரை வென்ற பிறகும், கங்கை கொண்ட சோழபுரத்திற்குச் சுவடே இல்லை. இராஜராஜ சோழனின் அனுக்கி பஞ்சவன் மாதேவி இன்னமும் நலமுடன் இருக்கிறாள். கங்கைக்கு முன் சாளுக்கிய தேசத்தை நோக்கிய படையெடுப்பின் போதே, இராஜேந்திரனின் மகன்கள், சேர, பாண்டிய, ஈழ தேசங்களை ஆளத் தொடங்கியிருப்பார்கள். இங்கே இவர்கள் சிறுவராய்த் தெரிகிறார்கள். உடையாரில் தந்தையுடனான நீண்ட உரையாடலில் பலதும் உணர்ந்திடும் இராஜேந்திரன், இங்கே இன்னமும் பக்குவப்படவில்லை. நக்கன் பரவையின் அறிமுகமே இனிதான் நடக்கிறது. இப்படிச் சில.

ஆனாலும் பாதகமில்லை. கதையின் கரு அட்டகாசம். கடந்த விமர்சனத்தில் எழுதியிருந்தேன்.

இராஜேந்திரன் வென்ற தேசத்தவனாய் நினைக்கையில் குலை நடுங்குகிறது. கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா ஜிம்பாப்வேயை அடித்து நொறுக்குவதைப் போலத்தான், பல இலட்சம் வீரர்களுடன் சென்று... மேலைச் சாளுக்கியம், தட்சிணலாடம், உத்திரலாடம்... பல தேசங்களைத் துவம்சம் செய்திருக்கிறான். 

யுத்ததின் வலியை, அதன் நாசம் பெண்களிடம் விதைக்கும் வேதனையை குந்தவை, பரவை மூலம் இராஜேந்திரனுக்கு உணர்த்த முயல்வதே களம்.

பலதும் அறிந்திருந்தும், ஒப்பற்ற நிர்வாகத் திறமையிருந்தும், வெற்றி மட்டுமே கண்டவனெனினும், அவன் செயல்களுக்கு வேறொரு கோணத்தில் பாதக முகமுண்டு என்பதை இராஜேந்திரனுக்கு மட்டுமல்ல, படிப்பவருக்கும் புரியவைக்கிறார் பாலகுமாரன். கூடவே சில பாடங்களும் நயமாகக் கிடைக்கின்றன.

மூன்று சோழ அரசர்களுக்கு முதல் அமைச்சராய், சேனாதிபதியாய் இருப்பவர், கிருஷ்ணன் ராமன் பிரம்மராயர். சபையில் தன் வருகைக்கு எழுந்திருக்க வேண்டாமே என இராஜேந்திரன் வேண்ட...

“ஒரு நாள் உமது மகன் ராஜாதிராஜன் அரியணை ஏறி சபை வரினும் நாம் எழுந்து நிற்போம். அரசனை அதிகாரி மதிக்கவில்லையெனில் அதிகாரியை குடி படை மதிக்காது. வளையாத மூங்கில் வில்லாகாது”

அதைப் போல தளிச்சேரிப் பெண் சரபை. “உண்பதும் உடுப்பதும் சோழர் சொத்து, எனக்கும் நன்றிக் கடன் உண்டல்லவா?” எனத் தாமாக அரச குடும்பச் சிக்கலுக்கு உதவ முன் வருகிறாள்.

ம்ம், பணிவும், மரியாதையும், நன்றிக் கடனும் இருப்பின் சாம்ராஜ்யமே சீராக இயங்கும். இவை நீர்ப்பின், ஒரு வீட்டின் இயக்கம் கூட ஸ்தம்பிக்கும்.

- எவன் மனதிற்குள் சஞ்சலமின்றி அமைதியோடு இருக்கிறானோ அவனே வீரன்

- ஒரு சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி எதற்கெல்லாம் கவலைப்பட வேண்டியிருக்கிறது

- கோபத்தை விட கேடான விஷயம் எதுவுமில்லை

- தான் என்ற அகம்பாவம் அற்றவர், கற்றல் எளிது

- கூட்டமின்றி, கோலாகலமின்றி, சாமானியனாய் இருப்பது விடுதலையாய் இருக்கிறது

- வளர்ச்சியைச் சொல்வதே ஆன்றோர் புத்தி

இப்படி பல ஒற்றை வரிகள் நாவலில் பளிச்சிடுகின்றன. ஆசிரியரின் அனுமானங்களும் முறுவலைத் தருகின்றன.

மனைவிக்குப் பயந்து, அலுவலகத்தில் நடுநிசி வரை உழைக்கும் (நெட்டில் படம் பார்ப்பதுதான்) கணவர்கள் இன்று சகஜம்தானே. மனைவிகளின், சிற்றனைகளின் இம்சையைத் தவிர்க்கத்தான் இராஜேந்திரன் கங்கைவரை சென்று விட்டானாம் :)

பரவை, ‘அற்றைத் திங்கள், அவ்வெண்ணிலவில் யாம் எந்தையும் உடையோம்..’ என பாரி மகளிரின் கவிதையைச் சொல்லி, போரின் கொடுமையை விளக்க, படிக்கும் நமக்கும், எதற்கு இந்தச் சண்டை என்ற எண்ணம் வரத்தான் செய்கிறது.

இந்த நாவலில் ஒரே ஒரு பிழை. திருவாரூரில் இராஜராஜனும், அவன் சேனாதிபதி அருண்மொழியும் மாறு வேடத்தில், பரஞ்சோதி, நம்பி என்ற மாற்றுப் பெயர்களில் இருக்கிறார்கள். இது தனக்கு தெரியாது என்றே பரவை இராஜேந்திரனிடம் பழகுகிறாள். மன்னராய் வெளிப்படும் முந்தின தினமே அருண்மொழி என்ற பெயரை இருவருமே பயன்படுத்தி விட்டார்கள்!

திருவாரூரில் பெரும் வெள்ளம் ஏற்பட, கடைசி பகுதியை அற்புதமாய் முடித்திருக்கிறார் பாலகுமாரன். இது படித்து உணர வேண்டிய அனுபவம். செங்கல் தளியாய் இருக்கும், வீதி விடங்கர், தியாகேசர் கோவில் கற்றளியாய் மாற்றும் உபயம் இங்குதான் பரவையால் விதைக்கப்படுகிறது. முடிவில் அவள் இராஜேந்திரனிடம் சொல்லும் ஒரு வாக்கியம்...

‘நீங்கள் தூசு ஒட்டிக் கிடந்த மாணிக்கம். சற்று துடைத்தேன். மாணிக்கம் தானாய் பிரகாசிக்கிறது’

உடையார், கங்கை கொண்ட சோழன் பிரம்மாண்ட கதைகளுக்கு, இந்நாவல் ஒரு டீஸர்.

நன்றி ஐயா (பாலகுமாரன்).

Wednesday, March 5, 2014

என். சொக்கனின் ‘மொஸாட்’

மொஸாட். பெயரைக் கேட்ட கணமே ஒரு திரில்லைத் தரும் இஸ்ரேலிய உளவுத் துறை.

தன்னைச் சுற்றி எந்தச் சுவருமின்றி, தரையில் எந்தச் சுகமுமின்றி, எந்நேரமும் உயிர் குடிக்கப் பாயும் விலங்கை எதிர்ப்பார்த்தே துயிலும் காட்டு மனிதனின் உணர்வுகளே மொஸாட்டிற்கு அடிப்படை.

சின்னஞ்சிறு இஸ்ரேல் நாட்டை, விட்டமாய் வளைத்திருக்கும் பகை நாடுகளிடமிருந்து தற்காக்கவும், சதியை மோப்பம் பிடிக்கவும், தானே சதியை முறியடிப்பதோ அல்லது தாக்குதலுக்கு தன்னாட்டு ராணுவத்திற்குத் திட்டமிட்டுக் கொடுப்பதோ மொஸாட்டின் பிரதான வேலைகள்.

மொஸாட் விதைந்து வளர்ந்ததை, செயல்பட்டதை, சாதித்ததை... எளிமையாய், அழகாய், கோர்வையாய், கதை சொல்லியாய் ‘மொஸாட்’ புத்தகத்தில் விளக்குகிறார் ஆசிரியர் என். சொக்கன்.

72-ல் ஜெர்மனியின் மியூனிக் நகரில், ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கும், இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் படுகொலை செய்யப்படும் பரபரப்புடன் புத்தகத்தைத் துவங்குகிறார். கொதித்தெழுந்த இஸ்ரேலியப் பிரதமர், இதற்கு காரணமானவர்களை வேட்டையாட முடிவெடுக்க, மொஸாட் அறிமுகம்.

படுகொலையை நிகழ்த்திய பாலஸ்தீன தீவிரவாதிகளை லிஸ்ட் எடுத்து போட்டுத் தள்ளுகிறது மொஸாட்.

இதென்ன பிரமாதம் என்கிறீர்களா? சொக்கனும் நம்மை இப்படிக் கேட்க வைத்து, இத்தாலி, பிரான்ஸ், ஏன் பாலஸ்தீனர்களின் கோட்டையான லெபனான் ஆகிய நாடுகளில் மொஸாட் எப்படி வேட்டையாடியது என்பதை, புத்தகத்தின் முதல் அத்தியாயங்களில், ஒன்-டே மேட்ச்சின் முதல் பவர்-பிளேயைப் போல விறுவிறுவெனச் சொல்கிறார்.

முதல் சம்பவத்தின் வேட்டை முடிந்தபோது, உலகில் எந்த மூலையிலும் யூதனுக்கு ஒரு பிரச்சினை என்றால் மொஸாட் பாய்வதைச் சொன்ன சொக்கனின் அடுத்த ஜம்ப் -  அடால்ப் ஐக்மென்.

ஹிட்லர் தலைமையில் யூதர்களை இலட்சக் கணக்கில், கர்ண கொடூரமாய்க் கொன்று குவித்த தளபதி. இவரையும் அர்ஜெண்டினாவில் தேடிக் கண்டுபிடித்து போட்டுத் தள்ளுகிறது மொஸாட்.

இப்போது மொஸாட்டின் நதிமூலத்தைக் காட்ட வருகிறார் சொக்கன். அரேபியர்களின் தேசமான பாலஸ்தீனத்தில் மைனாரிட்டியான யூதர்களின் பாதுகாப்பின்மையே மொஸாட்டிற்குப் பிள்ளையார் சுழி.

இந்தக் காலக் கட்டம், இஸ்ரேல் உருவானதற்கு முன்பா, பின்பா என்று வாசகனுக்கு குழப்பம் வருகிறது.

அத்தியாயம் 7. யூதர்களை ஹிட்லரின் நாஜிப் படைகள் கொன்று குவித்த இனப் படுகொலை. அப்போது யூதர்களுக்குத் தனி தேசம் எதுவும் இல்லை.

இந்த ஒரு வரி, 11-ஆம் (நதிமூல) அத்தியாயம் படிக்கும்போது நினைவில் இல்லாவிட்டால், அதுவும் இனப் படுகொலையின் கால கட்டத்தை, வாசகன் அனுமானிக்காவிட்டால், குழப்பம் மிஞ்சும். எப்போதும் இணைப்புகளைச் சரியாக முடிச்சிடும் சொக்கன் இங்கே சற்றே அசந்து விட்டார்.

புத்தகத்தின் பிற்பாதியை படுவேகமாக நகர்த்துகிறார் சொக்கன். மிக், 200 டன் யுரேனியம், போர்ப் படகுகள் ஆகியவற்றை ஈராக், பெல்ஜீயம், பிரான்ஸ் நாடுகளிடமிருந்து மொஸாட் கடத்தும் ’அட்றா சக்க..’ சம்பவங்கள். எகிப்து, ஈராக் மீது விமானத் தாக்குதல்கள். இவற்றைப் படிக்கும் போது மொஸாட்டின் மீது பிரமிப்பும், மரியாதையும் வருகிறது.

உடனே மொஸாட் பல்பு வாங்கிய சம்பவங்களையும் புன்னகைக்கும் விதமாய் சொக்கன் தருகிறார்.

மொஸாட்டின் உளவாளிகளாகட்டும், அல்லது அவ்வமைப்பிற்கோ, யூதர்களுக்கோ உதவும் எவரையும், மொஸாட் காக்கவும், கௌரவப்படுத்தவும் முயலும் என்பதை, ஷூலா என்ற பெண்மணியின் நெகிழ்வான சம்பவம் மூலம் விளக்குகிறார். இந்த அத்தியாயத்தை புத்தகத்தின் கடைசி பகுதியில் வைத்திருந்தால் இன்னும் நெகிழ்வாக முடிந்திருக்கும்.

இருப்பினும், புத்தகத்தைப் படித்து முடித்தபோது, ஒரு நல்ல திருப்தி. நன்றி சொக்கன்.

வெளியீடு: மதி நிலையம்
முகவரி: மதி நிலையம், 2/3, 4வது தெரு, கோபாலபுரம், சென்னை 600 086. தொலைபேசி : 044-2811 1506.

Saturday, May 4, 2013

இரா. முருகனின் ‘அரசூர் வம்சம்’


கற்பனை. இதன் வளத்தையும், ஆற்றலையும் கொண்டு, தனக்கென ஓர் உலகைச் சிருஷ்டிக்கும் லயம் ஒரு மனிதனுக்கு வசப்பட்டு விட்டால், காலத்தின் வரிசைகளைக் கூட மாற்றியமைத்து அதில் தன்னிஷ்டம் போல் சஞ்சரிக்க முடியும். அப்படி காலம் மூன்றையும் ஸ்டெம்புகளாக நட்டு, இரா. முருகன் சார் ஆடிய மேட்ச் - அரசூர் வம்சம் - நாவல்.

2004-ல் வெளிவந்த நாவலுக்கு, இப்போது எதற்கு விமர்சனம்?

அவருடைய சமீபத்திய நாவல் - விஸ்வரூபம். அதன் வெளியீட்டு விழாவிற்கு என்னையும் அன்போடு அழைத்திருந்தார். எண்ணற்ற இலக்கியம் படைக்கும் அவர் கையெழுத்துடன், வாழ்த்தெழுத்துடன் அந்நாவலை வாங்கினேன். அது அரசூர் வம்சத்தின் தொடர்ச்சி. அதைப் இப்போது படித்ததால் விமர்சனம்...

மேலும் படிக்க ஆசிரியரின் வலைத்தள சுட்டியைக் கிளிக்கவும்.

Thursday, November 10, 2011

நாகர்களின் ரகசியம்

சிவாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, வீரபத்ரனிடமிருந்து வாங்கி, தன் ஆனை முகத்தைத் தூக்கி, அதை உள்ளிழுக்க முயன்று, புகைக்கத் தெரியாமல் கணேஷ் இரும, எல்லாரும் கொல்லென்று சிரிக்கிறார்கள்.

இந்து மத உணர்வுகளை புண்படுத்தாமல் இப்படி ஒரு காட்சி Secret of the Nagas நாவலில் மட்டுமே சாத்தியம்.

முதல் நாவலான The Immortals of Meluha (விமர்சனம் இங்கே: சிவா... மஹாதேவ்)-வில் தந்த ஆச்சரியம், திருப்தி, ஆனந்த உணர்ச்சிகளை அப்படியே இதிலும் தொடர்ந்திருக்கிறார் ஆசிரியர் அமிஷ்.

சூர்ய வம்சிகளிடையே நிகழ்ந்த சிவாவின் பயணம், இந்த நாவலில் சந்திர வம்சிகளுடன். வட இந்தியாவின் பல நிலப்பரப்புகள் (காசி உட்பட) இந்நாவலில் அழகான காட்சிகளாகுகின்றன.

ஊழலும், வஞ்சகமும், குழப்பமும், ஏற்றத் தாழ்வுகளும், அதனுள் நல்லுள்ளங்களும், ஞானமும், திறமையும், உழைப்பும் கொண்ட இந்தியாவின் கதம்ப முகத்தை சந்திர வம்சிகளை வைத்து வெளிப்படுத்தியிருப்பது பிரமாதம்.

இதில் ஒரு தமாஷ். இவர்களுக்கு நேர் எதிராக, அனைத்து பிரஜைகளுக்கும் சம நீதியுடன், கட்டுக் கோப்பான சட்ட ஒழுக்கங்களுடன் ஒட்டு மொத்தமாக முன்னேறிய சமுதாயமாக சூர்ய வம்சம். இதன் கோட்பாடுகளை இந்தியா முழுதும் பரப்பும் நோக்கத்துடன், தக்கன் கோலோச்சும் அதன் நிலப்பரப்புதான் இப்போது பாகிஸ்தான்!!

ஆசிரியரைப் பாராட்ட வேண்டிய பல அம்சங்களில் ஒன்று, சிவாவை ஒன்-மேன்-ஆர்மியாக மிகைப்படுத்தாதது. என்னதான் அவரை மஹாதேவ் நிலைக்கு படிப்படியாக உயர்த்தினாலும், இக்கட்டான சமயங்களில், மந்திரமாய் வந்து குதிக்கும் தமிழ் சினிமா கதாநாயகன் போல, சிவா தோன்ற வாய்ப்பிருந்தும், காட்சிகளிலிருக்கும் பிற பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களையே கையாள விட்டிருப்பது யதார்த்தம்.

சில சமஸ்கிருத வார்த்தைகள், கடவுள்களின் பெயர்கள், தத்துவங்களுக்கு வரும் ஒரு வரி விளக்கங்கள் அட்டகாசம். உதாரணங்களாக: ஏழு நதிகள் பாயும் வட இந்தியாவின் பெயர் சப்த சிந்து. மற்ற இந்திய நதிகளைவிட பிரம்மாண்டமாக கரைபுரளும் அந்த ஒரு நதிக்கு மட்டுமே ஆண்பால் பெயர்: பிரம்ம புத்திரா. இந்நதியும் கங்காவும் இணைந்து காத்து வளப்படுத்தும் நிலம் பிரங்கா!

சமஸ்கிருத காரணப் பெயர்களுடன் கடும் போட்டியிட்ட மொழி நம் தமிழ். சொன்னது கண்ணதாசன், அர்த்தமுள்ள இந்துமதத்தில். காசியிலிருந்து விசாலமான இந்திய நிலப்பரப்பை ஆள்வதால், அவள் பெயர் விசாலாட்சி!

இந்தியாவின் இரு கண்கள், இவ்விரு செம்மொழிகளும். அதை உணர்ந்தே, சங்கத் தமிழ் தந்த மனுதர்ம சாஸ்திரமே சூர்ய வம்ச சட்டங்களுக்கு அடிப்படை என கோடிட்டுக் காட்டியிருக்கிறார் ஆசிரியர்.

புராணங்கள் கற்பனையோ, கட்டுக் கதையோ, அதில் வரும் கணக்கற்ற குணசித்திர பாத்திரங்களை நவீன படைப்புகளில் வடிப்பது துர்லபம். ஆனால் கதைக் களம் புராணத்தை அடிப்படையாகக் கொண்டதால் இதை சாதித்துக் காட்டியிருக்கிறார் அமிஷ்.

முதல் நாவலில் வாயுபுத்திரர்கள் வரை வந்த பாத்திரங்கள் இதில் பகீரதன், பரசுராம், கார்த்திக், கணேஷ், காளி... என நீள்கிறது. கார்கோடன், சந்திரகேது, ஜமதக்னி, ரேணுகா, உமா... என ஒரு சில பத்தி பாத்திரங்களும் அடக்கம். புராண பாத்திரங்களின் உருவ குணங்களுடனேயே இவற்றை வடித்திருப்பது சிறப்பு.

சிவாவின் உருகும் மனசை,  சூழ்நிலைகளால் பின்னாளிலேயே ஏற்ற சதியின் காதல் தோசையை அப்படியே திருப்பிப் போட்டு, ஆனந்தமயி - பர்வதேஸ்வர் காதலை இங்கே சமைத்திருக்கிறார். சில இடங்கள் நாசூக்காக சிரிப்பை வரவழைக்கின்றன.

சிவாவின் பயணத்தை ஒட்டி கிட்டதட்ட ஒரே நேர்க் கோட்டில் சென்றது முதல் நாவல். ஆனால் இங்கே சிவா, சதி, நாகா... மூவரை முன்னிலைப்படுத்தி நகரும் அத்தியாயங்கள் க்ரைம் நாவலுக்கே உரிய த்ரில்லர்.

தீய சக்திகளை அழிப்பதே தனது கடமையென படையெடுக்கும் சிவா, சந்திர வம்சி, பரசுராம், நாகா என யாருமே தீயவராக இல்லாமல், அவரவர் சூழ்நிலை நியாயங்களுடன் வேறு ரூபத்தில் இருப்பது கண்டு திகைக்கிறார். கிட்டதட்ட எல்லாருமே தங்களைக் காக்க, இவர் வரவை எதிர்பார்த்துக் காத்திருப்பது இவரை வெகுவாகக் குழப்புகிறது.

தேவர்களுக்காக அசுரர்களை ஒடுக்கிய ருத்ரன், ஒரு கட்டத்தில் அசுரர்கள் அப்படியொன்றும் தீயவரில்லை என உணர்ந்த கதையிலிருந்து சில தெளிவுகளைப் பெறுகிறார். உண்மையான தீய சக்தியை அடையாளம் காண ருத்ரனின் கோவில்களில் வாயுபுத்திரர்களுடன், முதலில் நேரிலும், பின் டெலிபதி மூலமாகவும் சிவா மேற்கொள்ளும் உரையாடல்கள், அவருக்கு மட்டுமல்ல நமக்கும் சில பக்குவங்களைத் தருகின்றன.

நம் யூகத்தின்படியே இந்நாவல் முடிந்தாலும், மூன்றாவது நாவலுக்கு (The Oath of the Vayuputras) எந்த க்ளூவும் இல்லாதது எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. 

அவசரமில்லை அமிஷ். கைலாச சிகரமாய் மூன்றாம் நாவலைத் தர காலம் எடுத்துக் கொள்ளுங்கள். காத்திருக்கிறோம். http://shivatrilogy.com

Thursday, October 20, 2011

சிவா... மஹாதேவ்!


கி.மு 1900 - காஷ்மீர் - ஸ்ரீநகர்.

- படுக்கையறையுடன் இணைக்கப்பட்ட குளியலறையில் சோப்பு தேய்த்துக் குளிக்கிறார்... சிவா... மஹாதேவ்!

- பின் பருத்தி வேட்டியை அணிந்து கொள்ள, அவரது புலித்தோல் ஆடை hygienic காரணங்களுக்காக சுத்தம் செய்ய எடுத்துச் செல்லப்படுகிறது.

இப்படி ரகளையான கற்பனைகளுடன் துவங்கும் நாவல் - Immortals of Meluha. (ஆங்கில நாவலுக்கு தமிழில் விமரிசனம் எழுதக்கூடாது என ஏதாவது விதி இருக்கிறதா?!)

கைலாஷ் மலையடிவாரத்தில், ஒரு சிறு கூட்டத்திற்குத் தலைவனாக இருக்கும் சிவா, சூரியவம்ச சாம்ராஜ்யத்தின் அழைப்பை ஏற்று, தன் கூட்டத்துடன் காஷ்மீருக்குக் குடிபெயர்ந்தபின் படிப்படியாக மஹாதேவ் நிலைக்கு உயர்வதே கதைக்களம்.

பயங்கொள்ளும் கோபம், தீவிரக் காதல், கடும் வீரம், அட்டகாச நடனம், தீயதை அழிக்கும் சக்தி... அனைத்தையும் உள்ளடக்கிய மஹாதேவ், கடவுளாக இல்லாமல் நம்மைப்போல் இரத்த சதை மனிதனாக இருந்தால்... இக்கற்பனையே இக்கதையின் கரு.

வானத்தின் வர்ணனையுடன், நீர்க் கரையில் இளம் கதாநாயகனுடன் துவங்கும் சாண்டில்யனின் சரித்திரக் கதை போலவே, மானசரோவரின் கரையில் சூரிய அஸ்தமனத்தை தீவிர சிந்தனையுடன் சிவா காண, முதல் காட்சி விரிகிறது.

அட்டைப் படத்தைப் பாருங்கள். திரிசூலத்தின் முன், ஜடாமுடியுடன், எஃகு தேகத்துடன், தோள்பட்டைகளில் தைக்கப்பட்ட நீண்ட போர் வெட்டு காயங்களுடன் சிவா... இப்பிம்பத்துடன் முதல் காட்சியை மனத்திரையில் விரித்தால்... நமக்குள் ஒரு ஆகர்ஷண சக்தி ஊற்றெடுக்கத் தொடங்குகிறது.

பின்னாளில், இவர் தலைமையில் சூர்யவம்ச சேனை, சந்திர வம்சத்துடன் போரில் மோதும் போது... ‘ஹர் ஹர் மஹாதேவ்... ஹர் ஹர் மஹாதேவ்...’ என அடிநாதத்தில் கூக்குரலிடும்போது, அந்த ஆகர்ஷண சக்தி நம்முள் பிரவாகமெடுக்கிறது.

தலை வணக்கங்கள் அமிஷ். இவர்தான் நூலாசிரியர். கொல்கத்தாவைச் சேர்ந்த 35 வயது IIM பட்டதாரி. சிவ கதையின் அனுபவத்தினால், தான் வேறு மனிதனாக உணர்கிறேன் என முன்னுரையில் சொல்கிறார். உண்மைதான். படிக்கும் நமக்குள்ளும் சில மாற்றங்கள் இயல்பாக நிகழ்கின்றன. தக்க வைப்பது நம் பொறுப்பு.

புராணம், வரலாறு, நவீன உலகம்... மூன்றையும் கலந்து கதை புனையப்பட்டிருக்கிறது. ராமயணப் பாத்திரங்களை நவீனப்படுத்தியிருப்பார் ராவணன் படத்தில் மணிரத்தினம். அது போலவே சதி (பார்வதி), தக்கன், நந்தி, வீரபத்திரன், பர்வதேஸ்வர், பிரகஸ்பதி (இவர் இங்கே விஞ்ஞானி!)... என அனைத்து பாத்திரங்களும் கச்சிதம். படத்திற்குத் தீர்ப்பு எப்படியோ?! இந்நாவல் சூப்பர் ஹிட்.

கதையின் காலம் ராமனுக்குப் பின் 1200 வருடங்கள். ராமனின் சோமபானம் சர்ச்சைக்கு வித்திட்டது நினைவிருக்கும். ஆனால் அது இங்கே சோம்ராஸ் மருந்தாக, ஆயுளை நீட்டும் மருந்தாக வருகிறது. (தக்கனின் வயது 185!)

ராமனால் அனைத்து சூர்யவம்ச பிரஜைகளுக்கும் கிடைக்கச் செய்யப்பட்ட இம்மருந்திற்கு முக்கிய மூலப்பொருள் சரஸ்வதி நதிநீர். நதியை சந்திரவம்சிகள் தடை செய்ய, போர் மூள்கிறது. தோல்வியடையும் சந்திரவம்சி தீவரவாதத் தாக்குதல்களில் இறங்குகிறார்கள். அடடா! இந்தியா-பாக் பிரச்சனையைக் கூட நுழைத்து விட்டார் ஆசிரியர் (பின்னே காஷ்மீரில் வேறு கதை துவங்குகிறதே!).

தீவிரவாதத் தாக்குதல்களில் திணறும் சூர்யவம்சி, நீலகண்டர் அவதரிப்பார் என காத்திருக்க, சோம்ராஸ்-ஐப் பருகும் சிவனின் கழுத்து நீலமாகிறது! வாவ்... கற்பனை எல்லாம் மத்தாப்பு சிமிட்டல். (ஹூம்... காவரி நதிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க இன்னொரு நீலகண்டன் அவதரித்தால் நலம்)

கதையோடு பிணைந்து வரும் சிவாவின் காதலும், போர்க்களத்தில் சதியிடத்து (பார்வதி) அது கனியும் விதமும் வீர அழகு.

தன்னை சாதாரண மனிதனாகவே கருதும் சிவா, சந்திரவம்சியை வீழ்த்தியபின், பல உணர்ச்சிகளுக்கு ஆளாகி, அயோதி இராமர் கோவிலில் மஹாதேவனாக உணர்ந்து பயணத்தைத் துவங்கும் போது ‘தொடரும்’ என நாவல் முடிகிறது. ஆம், இது இன்னும் இரு பகுதிகள் கொண்ட தொடர் நாவல் - The secret of the Nagas, The Oath of the Vayuputras. மூன்றாம் நாவல் இனிதான் வெளிவரும்.

முதல் நாவல் தந்த புது ரத்தப் பாய்ச்சலில், இரண்டாவதை படிக்கத் தொடங்குகிறேன். http://shivatrilogy.com/

Friday, April 1, 2011

இரா. முருகனின் “மூன்று விரல்”


கணினித்துறையில் இருந்தபடியே எழுத்துலகில் கோலோச்சும் இரா. முருகன் அவர்களின், அத்துறையின் வாழ்வு தழுவிய நாவலே “மூன்று விரல்”.

மென்பொருள் உலகின் மாயைகளை, நிலையற்ற தன்மைகளை, குறுகிய கால ஏற்றங்களை, படுபாதாள வீழ்ச்சிகளை, கூடிப் பிரியும் நட்புகளை, ஈரமற்ற மனங்களை, நாயகன் சுதர்சனனின் பயணத்தில் கோர்வையான நிகழ்ச்சிகளாகத் தொகுத்திருக்கிறார்.

முதல் பக்கமே மென்பொருள் உலகின் பாதக முகத்தை, அதன் ஒப்பனையை பட்டவர்த்தனமாக வெளுக்க வைக்கிறது. நாய் வளர்ப்போர் சங்கத்துக்கான சாஃப்ட்வேரில் துவங்கும் கதை, பாத்திரங்களை விற்பவர்கள் கூட தங்களுக்கும் ஒரு சாஃப்ட்வேர் வேண்டுமென்பதும், அதையே சாக்கிட்டு பெட்டிக்கடைகள் கூட, சில கம்ப்யூட்டர்களை வைத்தே சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட் கம்பெனியென சுயபட்டம் சூட்டிக் கொண்ட காலகட்டத்தை அப்பட்டமாகக் காட்டுகிறது.

கதையின் களமும் போக்கும் கச்சிதமாக அமைந்திருக்கிறது. மென்பொருள் துறையைச் சார்ந்ததென்றாலும், ஒரு மென்பொருளாளன் (சுருக்கமாக... மென்னவன்!) அனுதினமும் கணினியே கதியெனக் கிடப்பது போல், அத்துறையின் வலைகளிலேயே சிக்கிவிடாமல், கிராமம், காதல், பல மனிதர்களின் முகங்கள்/மனங்கள் எனப் பல துடுப்புகளுடன் பயணிக்கிறது கதை. அதே கணம் அத்துறையின் கீழ் நிலைகளை கோடிட்டுக் காட்டவும் அது தவறவில்லை.

ஒரு உதாரணம். சுதர்சன் தன் கிராமத்து வீட்டில் நுழையுமிடம். வாழ்வு முழுவதும் ஆனந்தமாக இருக்கத்தான், சீரான இடைவெளியில் பண்டிகைகளைக் கொண்டாடும்படி நம் முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். பெற்றவரை, பிறந்த மண்ணை விட்டு வெகு தொலைவு சென்றுவிடும் மென்னவன் இவற்றை முற்றிலும் இழக்கிறான். அவன் காலண்டரில், சிகப்பில் தேதி ஒளிர்வது புராஜெக்ட் டெட்லைன் மட்டுமே. இவ்வவல நிலையைத்தான் வீட்டினுள் நுழையும் சுதர்சன் மாக்கோலக் கால்களைக் கண்டு “எப்போது கிருஷ்ண ஜெயந்தி வந்து போனது?” எனக் கேட்கும் கேள்வி கோலத்தால் கோடிட்டுக் காட்டுகிறது.

நாவல் நெடுகிலும் வரும் உவமைகள் அழகு. நாயகிகள் சந்தியாவும் புஷ்பாவும் ஒருசேர தன்னை கேலி செய்வதாய் சுதர்சன் நினைக்குமிடத்தில், எந்தவொரு பூடகமும் இன்றி நுழையும் ஒற்றை வரி; “இவன் இளைய பல்லவனும் அல்ல. இது சாண்டில்யன் கதையும் அல்ல.” இந்த அட்டகாச சரித்திர உவமை தந்த பாதிப்பிலிருந்து விடுபடவே எனக்கு பல நாழிகை(!) பிடித்தது.

ஆங்காங்கே சில விசயங்களை ஆசிரியரின் பேனா உரசுகிறது. அப்துல் கலாமிற்கு வைத்தியம் பார்த்து, அவருடன் எடுத்த படத்தை சுவரில் மாட்டி, தன் சன்மானத்தை உயர்த்தும் டாக்டரைப் போல, பில்கேட்ஸுடன் எடுத்த போட்டோவை வைத்து ட்ரெயினிங் கம்பெனி நடத்துபவர்களை நோக்கி மறைமுகமாகச் சொடுக்கிய சாட்டை சபாஷ். ATL COM கோர்ஸூக்காக நிலங்களை விற்ற நபர்களை நான் கண்டிருக்கிறேன்.

பாத்திரங்கள் வெகு நுணுக்கமாகச் செதுக்கப் பட்டிருக்கின்றன. துறைமாட்சி இல்லாமல் சண்டித்தனம் செய்யும் ரங்கா, மனிதர்களை கத்திரிக்காய் கூறாய் விற்கும் கன்சல்டென்சி பலா, அபூர்வ புரொபஷலனாய் ஒளிவிடும் அவ்தார் சிங், மாற்றங்களை இழப்புகளை முறுவலித்து ஏற்கும் லண்டன் ஜெப்ரி, கிளையண்டாக இருந்தும் இக்கட்டில் முதல் நபராய் ஆதரவு நல்கும் தாய்லாந்து குன் தாங்க்லோர்... ம்ஹீம்... எவரையும் விட்டுவிட முடியவில்லை. உடல் பாதிக்கப்பட்டும் உழைக்கும் ராவை, ஒரு இரவில் பணத்தை மட்டும் பிரதானமாகக் கருதும் நீரஜ் மறந்து போகலாம். ஆனால் குழந்தை முக கண்ணாத்தா உட்பட எந்தப் பாத்திரத்தையும் படிப்பவரால் மறக்க முடியாது.

நிலம் விட்டு நடுங்கடலில் தத்தளிக்கும் படகைப்போல், தன் புலம் விட்டு, தன் வாழ்வாதாரம் விட்டு விழி பிதுங்கும் மென்னவர்களின் வாழ்க்கையை, இந்த நூல் தெளிவாகக் காட்சிப் படுத்துகிறது. கதையின் முடிவைப் போல் நடந்தவை ஏராளம். ஆனால், இந்நூற்றாண்டின் துவக்கத்தில் நடந்ததை பார்த்தறியாத மென்னவர்கள், முடிவை ஏற்க மறுக்கலாம்.

இவர்களின் வாழ்வைக் காக்கவும், இத்துறையின் அபரிமித வளர்ச்சியால் வேறு ரூபங்களில் பாதிக்கப்படும் சமுதாயத்தைக் காக்கவும் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

நூல்: மூன்று விரல்.
ஆசிரியர்: இரா. முருகன்.
வெளியீடு: கிழக்குப் பதிப்பகம், சென்னை.
URL: https://www.nhm.in/shop/978-81-8368-073-8.html

Monday, January 24, 2011

பேயோனின் ‘திசை காட்டிப் பறவை’


புத்தகங்களை வாசிக்கும் அனுபவத்தில் புதியதொரு திசையைக் காட்டுகிறது, ரைட்டர் பேயோனின் ‘திசை காட்டிப் பறவை’.

வரிகளின் ஓட்டத்தை விழிகளால் இடைவிடாமல் தொடர்ந்து, பக்கங்களைப் புரட்டிக் கொண்டேச் செல்வது ஒருவித சுகமென்றால், சில வரிகளைப் படித்ததுமே மனம் அதில் சிக்கி, சற்றுத் திகைத்து, வாய்விட்டுச் சிரித்து (பேருந்தில் படித்தால் வாய் பொத்திச் சிரித்து), பின் படிப்பைத் தொடந்து மீண்டும் மீண்டும் சிக்கிக் கொள்வது மற்றொரு சுகம்.

பேயோன் தரும் இந்த இரண்டாவது சுகத்தை எழுத்துலகில் கோலோச்சும் ஜெமோ, பாரா போன்றவர்களே சிலாகிக்கிறார்கள் என்றால், மேற்கொண்டு நான் எதைச் சொல்ல?  இருப்பினும் இது ஒரு கடைக்கோடி வாசகனின் வாசிப்பனுபவம்.

பொதுவாக ஒருவரின் தற்புகழ்ச்சியில் நமக்கு எரிச்சலே மிஞ்சும். ஆனால் இவர், எவர் மனதையும் புண்படுத்தாமல் தன்னைத்தானே புகழ்ந்து உயர்த்திக் கொள்வதெல்லாம் சிரிப்புச் சரவெடி. சர்வ நிச்சயமாக இது பேயோனுக்கு மட்டுமே சாத்தியம்.

பறவை நொடிமுள்ளிலிருந்து திசை காட்டத் தொடங்குகிறது.

இணையத்தில் பேயோனை நான் முதன்முதலில் வாசிக்கத் தொடங்கியதும், இந்த ‘நொடிமுள்ளின் கதை’-யிலிருந்துதான். எச்சூதுமறியா இளம்பிள்ளையாய் இக்கதையை வாசித்து, அதில் மேற்கோள் காட்டப்பட்டிருந்த புத்தகங்களை கூகுளில் தேடினேன். சொற்களை டைப் அடிக்கத் தொடங்கியதுமே தேடியதை சரமாரியாகக் கொட்டும் கூகுள் விழி பிதுங்கத் தொடங்கியதும்தான் இவை அனைத்துமே பகடி என்பது புரிந்தது. இப்படிக் கூட ஒருவரால் இட்டுக்கட்டி எழுத முடியுமா என்ற பிரமிப்பிலிருந்து விடுபடவே எனக்கு வெகு நேரம் பிடித்தது.

அதுமுதல் அவருக்கு வாசக ரசிகனானேன்.

நிஜங்கள் கசக்கும்போது கற்பனை உலகே நமக்கு மீட்சி. அதை அள்ளிக் கொடுத்த கவிதைகளும் இன்று நிஜங்களுக்கு வந்துவிட்ட பிறகு, பத்திகளால் அனுமான எல்லைகளுக்கு அப்பாற்பட்ட கற்பனை உலகிற்கு அழைத்துச் சென்று நம் மனதை அலசித் தருகிறார் ரைட்டர் பேயோன்.

இவர் பார்த்து நடந்த ‘பிரெஞ்சுப் புரட்சி’, இவர் பாத்திரம் பிச்சை போட்ட ‘ரஷ்ய புரட்சி’ போன்றவற்றின் பத்திகள் சிரிப்பை வெடிக்க வைப்பதெல்லாம் பதிவுலகில் ஒரு புதிய புரட்சி!

நுணுக்கமான வரி வார்த்தைகளால் நகைச்சுவையை ஊசியாய் நுழைப்பது போலவே சோகம், பயங்கரத்தையும் நுழைக்கிறார். ‘கனவினூடே’-வைப் படித்த இரவே, ஒரு ஆட்டோவின் ஒவ்வொரு சக்கரத்தின் மேல் பகுதி தனித்தனியாக கழன்று என்னுடலை ஊடுருவிக் கூறுபோடுவதுபோல் எனக்கு கனவு வந்ததென்றால், இதன் தாக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.

பிரிமியம் பாண்ட் பேப்பரில் பிராஜெக்ட் ரிப்போர்ட்டை பிரிண்ட் எடுப்பதையே நாங்கள் பெருமையாகக் கருதிய கல்லூரிக் காலங்களுண்டு. ஆனால் ஒரு புள்ளி கூட வைக்காத ஒரு பாண்ட் பேப்பரை வைத்தே ‘அந்த வெற்று காகிதமே’ எழுதியிருப்பது இவரின் கற்பனை ஊற்றுக்குச் சாட்சி என்றால், இனி எழுத எதுவுமே இல்லை என அங்கலாய்க்கும் பதிவர்களுக்கு, இல்லை என்ற ஒரு வார்த்தையை வைத்தே, இல்லை இல்லை என்று சொல்லியே அவர் ‘இல்லை’-யை எழுதியிருப்பது பாலபாடம்.

பூத உடலின் பயணத்தின் கணங்கள், சிந்தனை உலவின் கணங்களை வரையறுக்க வல்லவை. குறிப்பாக ஒரு தேர்ந்த எழுத்தாளன், தன் ‘சமகால’ எழுத்தாளனை ஒரு பயணத்தில் சந்தித்து கணங்களை பரிமாறிக் கொண்டால் அக்கணமே ஒரு இலட்சத்து எழுபத்தி ஆறாயிரம் சிந்தனைச் செல்கள் வளர்சிதை மாற்றத்திற்கு உட்படும்.  இப்படித்தான் ஒரு முறை, அண்டார்டிகா நீர்ப்பரப்பிலுள்ள அலக்டோரியா தீவினில் நடக்க இருந்த ‘சமகால எழுத்தரின் கணங்கள்’ மாநாட்டில் கலந்து கொள்ளப் பயணித்தேன். ஒரு ‘கேப் பெட்ரல்’ பறவை திசை காட்டிச் செல்ல, அதன் வெள்ளெச்சம் விழும் தடத்தை ஒற்றிச் சென்ற படகில் என்னுடன் பேயோனும் இருப்பதைக் கண்டு அதிசயத்து...

ஹஹ்ஹஹ்ஹா... வேறொன்றுமில்லை... ‘என்னைப் போல் பத்தி எழுதுவது எப்படி’ படித்ததன் பின்வினையே கடந்து சென்ற நிறைவேறாத பகடிப்பத்தி.

ஒற்றிலக்க பத்திகளில் ஒரு கதையும், இரட்டையிலக்க பத்திகளில் வேறொரு கதையும் நகர்ந்து, கடைசி பத்தியின் கடைசி வரிகளில் இணையும் ‘அடுத்த வாரத் தொடர்ச்சி’ கிளாசிக்.

அவரின் நினைவுக் கூர்மையும், பார்வைக் கூர்மையுமே அவரின் எழுத்தின் கூர்மைக்கு அடிப்படை. கண்ணின் நிழலில் அசைவதற்குக் கூட சுவாரஸ்ய எழுத்து வடிவம் தருகிறார்.

‘மயிலிறகிற்கு நட்ராஜ் பென்சில் சீவல் பிடிக்கும்’

‘உதவுதல் நாடி சுலைமான் அபெக்கேவுக்கு கடிதம்’ போன்ற இடங்கள் இரண்டே இதற்கு அத்தாட்சி.

பறவை ‘சியாமள விகாச பட்சியாய்’ நம்மை விகாசிக்க வைத்து, சிறகுதாரியாய் நம் மனதை சிறகடிக்க வைத்து, ‘வாழும் கணங்களில்’ நிறைகிறது.

பத்திகளின் வரிசையை மாற்றிப் படித்தாலும் தொடரும் ‘வாழும் கணங்கள்’, உண்மையில் வாசிக்கும் கணங்கள்.

இவரெழுத்தை ஆப்சன்மைண்டட்டாக வாசிக்க முடியாது. இன்னமும் சொல்ல எண்ணிக்கை இருந்தும், இப்பதிவு ‘நெடுங்கதையாகத்’ தொடர்வதால், என்னையும் சேர்த்து ஒற்றையிலக்க வாசிப்பாகும் எனத் தயங்கி, இத்துடன் புள்ளி வைக்கிறேன்.

புத்தக கண்காட்சியில், ஆழி பதிப்பகத்தில் இவர் யாரென்ற புலன் விசாரணை அனுதினமும் நடந்திருக்கும். அங்கே நான் இப்புத்தகத்தைக் கேட்டபோது, அங்கிருந்தவர்கள் என்னை நிமிர்ந்துப் பார்த்தார்கள். ஆனால் நான் ஒரு சொல் வினவாமல், புத்தகம் வாங்கி அமைதியாக நகர்ந்தேன். ஏனெனில்...

கடவுளைத் தேடும் வரைதான் ஆராதனைகள். பேயோன் என்ற தேடல் உள்ளவரைதான் அவர் எழுத்து சுவை ஊற்றெடுக்கும் சுனைகளாக இருக்கும்.


Monday, August 16, 2010

என். சொக்கனின் ‘முத்தொள்ளாயிரம்’


மதராசபட்டினம் ஒரு கவிதையாய் நம்பளை அறுபது வருடங்கள் பின்னோக்கி அழைத்துச் செல்லுமென்றால், செம்மொழிக் கவிதைகள் ஆயிரம் வருடங்கள் கூட பின்னோக்கி அழைத்துச் செல்லும். அப்படி சங்ககாலத்திற்கு அழைத்துச் செல்ல என்.சொக்கன் பயன்படுத்தியிருக்கும் காலயந்திரம் முத்தொள்ளாயிரம்.

சேர சோழ பாண்டிய மன்னர்கள் குறித்து பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பே முத்தொள்ளாயிரம். இலக்கியச் சுவை மிகுந்த இந்த நூலை, எஸ்.எம்.எஸ் மட்டுமே படிக்கும் இந்த தலைமுறைக்கும் புரியும்படி மறுபிறப்பெடுக்க வைத்திருக்கிறார் சொக்கன்.

”ஐயோ, வெண்பாவா? அதெல்லாம் நமக்கு ஒவ்வா!” என அலறி ஓடும் தமிழ்தாசர்களை நிறுத்தி, படித்துதான் பாரேன் எனச் சவால் விடுகிறது சொக்கனின் எளிய தமிழ் நடை.

பாடல்களின் மையக்கருத்தினைக் குழைத்து ஓரிரு வார்த்தைகளில் சுவாரஸ்யமாக இவர் வைத்திருக்கும் தலைப்புகளே இச்சவாலுக்கான அறைகூவல். உதாரணங்கள்: தீப்பிடித்த தண்ணீர், தரையில் வானவில், யானையின் வெட்கம், சிலந்தி (க)வலை, கவிதை எழுதும் யானைகள், சாவித்துளைக்கு நன்றி!

இதைத் தொடர்ந்து உடனடியாக பாடலுக்குச் சென்றுவிடாமல், ஒரு பக்கக் கதைகளைப் புனைந்திருக்கிறார். சங்கப் புலவர்களின் கற்பனைகளை சிறிதும் காயப்படுத்திவிடாமல், பாடல்களின் ஓட்டத்திலேயே தனது கற்பனை, நகைச்சுவை மற்றும் தற்கால மேற்கோள்களையும் அளவாக பதமாகக் கலந்து கதைகளை/விளக்கங்களை புனைந்திருக்கிறார். 

புலவர்களிடம் கற்பனை வளம் செழித்திருந்திருக்கிறது. அதில் சில புன்னகைக்க வைக்கின்றன. சில ”அட!” போட வைக்கின்றன. சில ”வாவ்!” சொல்ல வைக்கின்றன. அத்தனைக்கும் அடித்தளமமைப்பது சொக்கனின் விளக்கக் கதை. 

உதாரணமாக இமையார் என்று தேவர்களைக் குறிப்பதை, எந்நேரமும் ரம்பை, ஊர்வசி, திலோத்தமை என்று பேரழகிகளைப் பார்த்துப் பழகியதாலோ என்னவோ, தேவர்களின் கண்கள் எப்போதும் இமைப்பதில்லை என்று சுவையாக விரித்திருக்கிறார் (ஏனோ மேனகையை டீலில் விட்டுவிட்டார்).

கதையைத் தொடர்ந்து பாடலையும், அதன் பின் சில சொற்களுக்கான அர்த்தங்களை குட்டி டிக்ஸனரி போலவும் கொடுத்திருக்கிறார்.

சுவையான விளக்கத்தை படித்தபின் பாடலைப் படிக்கும்போது, அது தெளிவாகப் புரிகிறது. அறியாத சொற்களின் அர்த்தத்தையும் ஊகிக்க முடிகிறது. பின்தொடரும் டிக்ஸனரியில் அதைச் சரிபார்க்கும்போது, அட நமக்கும் தமிழ்ப்புலமை கிட்டுகிறதோ என்று துள்ளிக் குதிக்கத் தோன்றுகிறது. நன்றி சொக்கன். நிச்சயம், பாடலெழுதிய புலவர்களின் ஆன்மா தங்களை வாழ்த்தும்.

இப்புத்தகத்தைப் படிக்க தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. விளக்கங்கள் ஜெட் வேகத்தில் பறப்பதால் கிடைக்கும் ஐந்து நிமிட அவகாசத்திலும் ஒரு பாடலைப் படித்துவிடலாம். சொக்கனின் கைவண்ணத்தில்... ஸாரி... எழுத்து வண்ணத்தில் பாடலின் நல்ல சொற்றொடர்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகின்றன. சமயத்தில் அவை பயன்படும்.

உதாரணமாக, உங்கள் மனைவி பொட்டிட்டு வருகையில், “திலகம் கிடந்த நல்நுதலாய்” எனக்கொஞ்சி செல்லமாகக் குட்டு வாங்கலாம். (மாறாக, “ஐயோ என் புருஷனுக்கு கிறுக்கு புடிச்சிடுச்சு” என்று உங்கள் அன்பு நாயகி அலறினால் அதற்கு சொக்கனோ, நானோ பொறுப்பல்ல!)

அனைத்து பாடல்களும் நான்கடி (நான்கு வரிகள்) கொண்ட பாக்கள். ஆனால் பல பாடல்களில் கருத்து இரண்டு அடிகளிலேயே முடிந்து விடுகிறது. ஓரடி மன்னனை,  தேர்ந்தெடுத்த மலர்மாலையை அணிந்தவனே, ஆய்ந்தெடுத்த மணிகளைச் சூடியவனே, கடல்சூழ் உலகை ஆள்பவனே என்றெல்லாம் புகழ்ந்து பாராட்டவும் (சேனைத் தலைவனுக்குப் பாராட்டு விழா!) அடுத்த அடி இணைப்புச் சங்கிலியாகவும் செலவிடப்பட்டிருக்கிறது. இத்தகைய குறுகிய பாடல்களை ஒரு பக்கக் கதைகளாக வடித்திருப்பது சொக்கனின் தனித்திறமை. வணக்கங்கள் சொக்கன்.

இக்கதைகள் குழந்தைகளுக்குச் சொல்ல பெரிதும் பயன்படும். அன்றைய அன்னை குழந்தைக்கு வீரம் ஊட்டினாள். இன்றோ செரிலாக்தான் ஊட்டுகிறாள். நாம் குறைந்த பட்சம் வீரக் கதைகளைச் சொல்லி சோறும் உடன் கொஞ்சம் தமிழையும் ஊட்டலாம் (பசலை படியும், சங்கு வளையல்கள் கழன்று விழும் காதல் கதைகள் சொல்வதற்கில்லை, அவை நமக்கு மட்டும்!) .

இவ்வளவு பயனுடன் எளிமையாக சொக்கன் எழுதினாலும், அவரது பணி எளிமையானதல்ல என உணரமுடிகிறது. ஒவ்வொரு பாடலையும் தீவிரமாகப் படித்து அலசியிருக்கிறார். காதல் பாடல்களுக்கு, திருக்குறள் கா. பாலிலிருந்து வரும் மேற்கோள்களும், ஓரிடத்தில் வரும் குறுந்தொகை, கலிங்கத்துப்பரணி மேற்கோள்களும் அவரது உழைப்பை பளிச்சிடுகின்றன. வாழ்த்துக்கள் சொக்கன்.

சேரனைவிட (கோதை) சோழனிடத்திலும் (கிள்ளி), சோழனைவிட பாண்டியனிடத்திலும் (மாறன்) பலவகைகளில் பாடல்கள் இருக்கின்றன. அவற்றை ஒரே மூச்சில் படித்துவிட்டேன்.

முடித்தபோது சந்தோஷத்துடன் ஒரு ஏக்கமும் இணைந்தது. மூன்று தொள்ளாயிரம் பாடல்களில் வெறும் 108 மட்டுமே கிடைத்திருக்கிறதாம். அவையே இவ்வளவு சுவையென்றால்....

மற்ற பாடல்களில் சில நூறாவது கிடைக்க காலமும், அவற்றை சொக்கன் எழுத தமிழன்னையும் அருள வேண்டுகிறேன் தொழுது.