1979-ல் பாலகனாய் ஒரு கையால் என் தந்தையைப் பற்றி, மறு கையால் படிகள் இறங்கும் கற்சுவற்றை மெள்ளப் பற்றி, அனந்தசரஸ் குளத்திற்கு அடியில், மண்டபத்திற்கு கீழ் இருக்கும் இவ்வறைக்கு (படம்), அத்தி வரதர் சயனம் செய்யும் இடத்திற்குச் நான் சென்று வந்தது, இன்னமும் பசுமையாய் நினைவிருக்கிறது.
2019... நாற்பது வருடங்களுக்குப் பின் மீண்டும் அத்தி வரதரை தரிசித்த பரவசத்தில்... புராண கதையையும், ராமானுஜர் காலத்தையும், சிவகாஞ்சியில் இருக்கும் வைணவ தலங்களையும், தொகுத்து 2-4 சந்தத்தில் ஒரு பாடல் இயற்றியுள்ளேன்:
அத்தி வரதா காஞ்சி வரதா
காட்சி தருகிறாய்
கோடி சுடரை முகத்தில் தரித்து
முறுவல் செய்கிறாய்
கருணை மின்னும் விழியின் ஒளியால்
அருளைத் தருகிறாய்
உந்தன் வருகை எந்தன் வாழ்வை
முழுமை ஆக்குதே
வேத வல்லி கோபம் தணித்த
வேத நாயகா
பிரம்மன் வேள்வித் தீயில் உதித்த
பிரம்ம நாயகா
குளத்தில் மறையும் மறையில் உறையும்
ஞான தேசிகா
தேவ ராஜா உன்தேக ஜோதியில்
உள்ளம் கரைகிறேன்
அத்தி கிரியில் வாசம் செய்யும்
கருடன் வாகனா
வேடன் உருவில் உடையவர் காத்த
சேடன் ஆசனா
கூரத் தாழ்வான் கண்ணுள் வசித்த
ஜீவன் ரட்சகா
நம்பி நண்பா உன்சொல் கேட்க
நம்பி வருகிறேன்
பச்சை வண்ண பவள வண்ண
மேனி கொள்கிறாய்
பேருரு கொண்டு சக்தியின் அருகே
உலகை அளக்கிறாய்
தூதுரு கண்ணா மாவடி மண்ணில்
பார்வைத் தருகிறாய்
ஏகன் உடனாய் உன்னைத் துதித்து
மேன்மை அடைகிறேன்
காஞ்சி ஆளும் தங்கை கண்டு
சித்தம் குளிர்கிறாய்
சாலைக் கிணற்றின் நீரில் ஆடி
நித்தம் மிளிர்கிறாய்
நெறிகள் தந்து குடிகள் காக்க
வரங்கள் தருகிறாய்
பேரருளாளா நின் திருவடிப் பணிந்து
சக்தி பெறுகிறேன்
- காஞ்சி ரகுராம்.