Sunday, September 5, 2021

கோவிலுக்குக் குடிபெயர்ந்த விநாயகர்

ஒன்றரை வருடமாக எங்கள் வீட்டில் குடியிருந்த விநாயகர், தனக்கென கட்டி முடிக்கப்பட்ட கோவிலுக்கு இன்று குடிபெயர்ந்தார்.

என் உறவினர் கிராமம். இதன் ஏரிக்கரை அருகே கிராமத்தார் விநாயகர் கோவிலை கட்டத் தொடங்கியிருந்தனர். கொரோனா காலத்தினாலும், பொருளாதாரச் சிக்கல்களாலும் கோவிலின் பணிகள் நீண்டு கொண்டிருந்தன.

கோவிலின் மூல விக்கிரகமாக வடிக்கப்பட்ட நான்கடி உயர கற்சிற்ப கற்பக விநாயகரை ஜலவாசம் முடிந்தபின், தான்ய வாசத்திற்கு எங்கள் வீட்டில் கிராமத்தார் வைத்திருந்தனர்.

இவருக்கென ஓர் அறை ஒதுக்கப்பட்டது. இவருக்கு இருபுறம் சுவர் இருக்க, இருபுறம் மரப்பலகைகள் வைக்கப்பட்டு உச்சிவரை நெல் குவிக்கப்பட, அதனுள் இவர் தன் தான்ய வாசத்தைத் தொடங்கினார். அன்றே எங்கள் குடும்பத்தில் ஒருவராய் உணர்வோடு ஒன்றிவிட்டார். 

அலுவல் பணியும், பள்ளிப் படிப்பும் வீட்டிலிருந்தே... என மருவிவிட்டதால், குடும்பமாய் இவ்வீட்டிற்கு வந்துவிட்டேன். 

நெற்குவியலின் மேல், பிரபையின் நடுவில் இருக்கும் சிங்க முகத்தின் பிடரி மட்டும் சற்றே வெளிப்பட்டிருப்பதைக் கண்டது முதலாய், ஒரு மகிழ்ச்சி என்னைத் தொற்றிக் கொண்டது. தினம் தோட்டத்திலிருந்து பூப்பறிக்கப்பட்டதும், முதலில் இவருக்கே, பிரபையின் மேல் சாற்றப்படும். ஒவ்வொரு முறையும் இவரைக் கடக்கும் போதெல்லாம், பிள்ளையாரப்பா... ஐங்கரா... பார்வதி மைந்தா என ஒரு பெயரை மனம் சொல்லிக் கொண்டே இருந்தது. 

தான்ய வாச காலம் முடிந்தது. இவருக்கு வெள்ளிக் கவசம் செய்ய அளவெடுப்பதற்கு கிராமத்தார், ஆச்சாரியை அவரது குழுவுடன் அழைத்து வந்தனர். 

நெற்குவியலை மெல்ல விலக்கியதும், அற்புதக் கலைநயத்துடன், சொக்க வைக்கும் அழகுடன் வெளிப்பட்டார் விநாயகர்.  

பீடத்தின் அடியிலிருந்து புடைத்துக் கொண்டிருந்த தாமரையின் மேல் வலது காலை வைத்து, அதன் முழங்கால் பகுதியைத் தடவியபடித் தொங்கும் நீண்ட ஆபரணத்தின் விளிம்பை இடது கால் விரல்கள் தொட்டபடி சம்மணமிட்டு பீடத்தின் மேல் ஆனந்த வடிவாய்க் காட்சி தந்தார். 

பாசாங்குசத்தை பிடித்திருக்கும் கைவிரல்களின் கோடுகள், அதன் நகத்தின் விளிப்புகள்,  இடக்கை கொள்ளளவிற்கு லட்டு,  வலமாய் வளைந்த தும்பிக்கையின் நுனியில் கொழுக்கட்டை, தந்தங்களுக்கிடையே மணி பூட்டிய சிறு ஆபரணம், பேழை வயிற்றின் வட்ட வடிவம், அதை இறுக்கியபடி ஒட்டியாணம், தோளையும், மேல் மார்பையும், நெற்றியின் இரு பகுதியில் பிறை வடிவாக அலங்கரிக்கும்  ஆபரணங்கள், மணிக்கட்டில் மணிகள் கோர்க்கப்பட்ட ஆபரணம், அக்னி சுடர்விடும் வடிவாய் கிரீடம்... கோபத்தில் மூக்கு புடைத்த சிங்க முகப் பிரபைதான், ஆனால் வாய்ப் பகுதி வேலைப்பாடுகளால் கோரைப் பற்கள் வெளிப்பட்டும் அது சிரிக்கும் சிங்கமாகவே காட்சி தந்தது. இவ்வளவு அழகுடன் வடித்த சிற்பி யாரோ, அவர் வளமுடன் வாழ்க.

வந்தவர் யாவரும் இவ்வழகில் லயித்து, மகிழ்வோடு தத்தம் செல்போனில் பலவாறு படம் பிடித்துக் கொண்டனர். (அப்பாடா, செல்ஃபி எடுக்கும் எண்ணமெல்லாம் யாருக்கும் வரவில்லை!).

கவசத்திற்கு அச்சு எடுக்கும் பணி துவங்கியது. 

பெரிய அண்டாவில் நீர் ஊற்றப்பட்டு கொதிக்க வைக்கப்பட்டது. ஒரு மூட்டை நிறைய மெழுகும் சாம்பிராணியும் கலந்த பெரிய பெரிய கட்டிகள் இருந்தன. அவை கொதிநீரில் போடப்பட்டதும், குழைந்து சாந்தாக மாறியது. நீண்ட மரக் கரண்டி மூலம் அதைக் கிண்டி எடுத்து தரையில் கிடத்தினர். 

கையால் தொடுமளவிற்குச் சூடு இறங்கியதும், அதை எடுத்து தலை, முகம், கழுத்து, தோள் பகுதிகளில் தனித்தனியாய் பொறுமையாய் அழுத்தி ஒட்டினர். சில நிமிடங்களுப்பின் அதைக் கவனமாய்ப் பிடித்து இழுக்க, அது எந்தவிதச் சிக்கலும் இன்றி, சிலை மேல் எந்தவித ஒட்டுதலும் இன்றி அழகாகப் பிரிந்து வந்தது. அதன் உட்பகுதியில் சிலையின் வடிவங்கள் பதிந்திருந்தன. ஆபரணத்தின் குண்டு மணிகள் கூட கச்சிதமாய்ப் பதிந்திருந்தன. அன்னக்கூடையில் நிரப்பட்ட குளிர்ந்த நீரில் இவற்றை வைக்க, இவை இறுகிக் கொண்டன. 

சிலையின் அனைத்து பகுதிக்கும் அச்செடுக்கும் வரை மெழுகை சாந்தாக்குவதும், அச்செடுப்பதும், அதைக் குளிர்விப்பதும் தொடர்ந்தது. (வெள்ளியை உருக்கி இவற்றில் விட அவை கவச வடிவு பெறும்).

பணி முடிந்தது. தான்ய வாசம் காலம் முடிந்து விட்டதால், துணியால் போர்த்தப்பட்டு அவர் அறையில் வைக்கப்பட்டார். 

இவர் யானை முகத்தை மட்டும் கொண்டிருக்கவில்லை. யானையின் எடையையும்தான் கொண்டிருக்கிறார். ஆறு பேர் சேர்ந்து முயன்றால் அரையடி மட்டும் நகர்ந்து சிரிக்கிறார். கனமான இரும்புக் குழாய்களையும், உருளைக் கட்டைகளையும் அடியில் வைத்து உருட்டித்தான் இவரை நகர்த்த முடிந்தது.

கோவில் பணிகள் மேலும் மாதங்களாய் நீண்டு கொண்டே செல்ல, இவரும் எங்கள் குடும்ப நபராகத் தொடர்ந்தார். 

மண்ணச்சநல்லூர் கிரிதரன் இசையில் விநாயகர் ஆல்பத்திற்கு (உச்சி பிள்ளையாரே சரணம்), உன்னி கிருஷ்ணன்,  ஹரிணி  இருவரின் குரலில் பாடல்கள் எழுதியது முதல் விநாயகரின் வடிவை அணுவணுவாக ரசிக்கத் தொடங்கியிருந்தேன். ஆல்பத்தில் கிரிதரன், ஔவையின் விநாயகர் அகவலுக்கும் இசையமைத்துப் பாடியிருந்தார். அதுமுதலாக தினமும் அகவலை ஓதிக்கொண்டுதான் இருந்தேன். 

ஆனால் இந்த விநாயகரின் வடிவை உள்வாங்கிக் கொண்டபின், தினசரி இவருக்கு ஒரு பூவைச் சூடி, அகவலைப் பாடத் தொடங்கியதும், பல சொற்கள் ஆழமாக விளங்கத் தொடங்க திகைத்துத்தான் போனேன். 

“வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)”... 

“சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி”...

போன்ற சொற்பதங்கள் எல்லாம் மனதை என்னன்னவோ செய்யத்தொடங்கின. 

மெய்யோகம் ரகுராமின், வசு-பிராணாயாமம் வகுப்புகளில் பங்கெடுத்து இடகலை, பிங்கலை, சுழுமுனை மூச்சு முறையை, முறையாகக் கற்றபின், 

“இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்

கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி” - வரிகளும், அதைத் தொடர்பவையும்  வேறொரு பரிமாணத்தில் புரிபடத் தொடங்கியது.

ஔவை வெறும் தமிழ் புலவர் மட்டும் அல்லர். விஞ்ஞானமும் மெய்ஞானமும் தெளிந்த ஞானி. அவர் அகவலை எளிமையாகத்தான் எழுதியிருக்கிறார். விநாயகரை வர்ணித்துத்தான் தொடங்குகிறார். ஆனால் அவரை வேண்டும் விதமாய்த் தொடரும்போது ஒரு மகோன்னத வாழ்விற்கான சூட்சுமத்தையே சொற்களில் மந்திரமாய்ப் பொதித்து வைத்திருக்கிறார்.  

அவற்றை விநாயகரின் வடிவை மனதில் நிறுத்தி சொல்லச் சொல்ல, காலம் செல்லச் செல்ல, சமயத்தில் நமக்குத் துணை வரும் விதமாய் அவை வெளிப்படுகின்றன.

அந்த நிலையை, இந்த விநாயகர் இப்போதே தந்தருளியிருக்கிறார்.

கோவில் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. இன்னும் மூன்று நாட்களில் கும்பாபிஷேகம்.

இன்று காலை கிராமத்தினர் எங்கள் வீட்டிற்கு வந்து, விநாயகரையும், சிறிய மூஞ்சூறு, பலிபீட சிலைகளையும் வண்டியில் ஏற்றினர். வண்டி கோவிலை நோக்கிப் புறப்பட... 

சட்டென்று உள்ளமும், இல்லமும் வெறிச்சோடியது.