Wednesday, April 13, 2016

நம்ம சென்னையிலா இப்படி?!

சென்னை ஓப்பன் டென்னிஸ் நடந்த சமயம். செமி ஃபைனல் போட்டிகள். மாலை 5 மணி முதல்.

ஸ்டேடியத்தை நான் அடைந்தபோது மாலை மணி 4.45. ஆன்லைனில் டிக்கெட்டை வாங்கியிருந்தும் கவுண்டரில், அதற்கு ஈடான பேப்பர் டிக்கெட்டை வாங்காமல் நுழைய முடியாதாம். தெருவின் இரு முனை வரை க்யூ நீண்டிருந்தது. முதல் எரிச்சல்.

அங்கே மூன்று கவுண்ட்டர்கள் இருக்க, எது/எவை ஆன்லைன் டிக்கெட்டிற்கான கவுண்ட்டர் என சட்டென புரிபடவில்லை. நிற்பவரிடம் விசாரிக்க எல்லாருமே ஆங்கிலத்தில் பதிலளித்தார்கள். நான் தமிழில் கேட்டதை புரிந்து கொள்ளக் கூட முடியாமல் அவர்கள் தப்பாக பதிலளித்தது இரண்டாவது எரிச்சல்.

மணி 5.20. சரியாக 5 மணிக்கே போட்டி துவங்கிவிட்டதை அரங்கினுள்ளிருந்து கேட்ட சப்தங்கள் சொல்லின. என்னால் இன்னும் கவுண்ட்டரை நெருங்கக்கூட முடியவில்லை.

சென்னை புறநகர் ரயில்களில் கூட மொபைல் App மூலம் டிக்கெட் வாங்கி பயணிக்கும் வசதி வந்துவிட்ட நிலையில், இண்டர் நேஷனல் டென்னிஸ் போட்டிகளுக்கு ஆன்லைன் டிக்கெட்டின் ப்ரிண்ட் அவுட்டைக் கூட அனுமதிக்காதது மகா எரிச்சல்.

மணி 5.40. ஒரு புறம் எரிச்சல் நீள, மறு புறம் பிரமித்தேன்.

நிற்கும் மூன்று க்யூவிலும் தள்ளு முள்ளு இல்லை. யாரும் எவரையும் முந்த முயலவில்லை. டிக்கெட் வழங்கும் முறையை விமர்சித்தார்களே தவிர, எவரும் பொறுமை இழக்கவில்லை.

முதல் போட்டியில் 4-ம் தர வரிசை வீரர் வாவ்ரின்கா விளையாடுகிறார். அவரைக் காணவே அங்கு வந்தவர்கள் அதிகம். பெரும்பாலானவர்கள் கவுண்டரை அடைவதற்குள் அப்போட்டி முடிந்து விடுவதற்கான வாய்ப்பும் அதிகம். அதனால் அவர்களிடமிருந்து ப்ச்.. மொச்.. மட்டும் வெளிப்பட்டது. அவ்வளவுதான்.

கவுண்ட்டர் எனக்கு இன்னும் சில அடி தூரமிருக்க...

ஒரு இளம் தம்பதியினர் வந்தனர். எனக்கு முன் நிற்பவர் அவர்களுக்குப் பரிச்சயம். சில விசாரிப்புகள்.

முன்னவர்: என் கூட வந்திடுங்களேன். (நான் அவர்களை அனுமதிக்கும் எண்ணத்தில் இருக்க...இளம் தம்பதி என்ற காரணமெல்லாம் இல்லை!)

தம்பதி: இல்ல... பரவாயில்லை சார்.

முன்னவர்: ஏன்?

கணவன்: இவ்வளோ பேர் இருக்காங்க. நாங்க லைன்லியே வரோம்.

சொன்னபடி அவர்கள் பின் சென்றனர்.

அரங்கினுள்ளிருந்து ஒலி கேட்டது.

வாவ்.... ரின்கா...