Wednesday, September 4, 2019

Unwinding - ஒரு முன்னோட்டம்



தமிழ் சிறுகதை வடிவம் எடுத்து ஒரு நூற்றாண்டு கடந்திருக்கிறது. இத்தருணத்தில் உலகெங்கும் பரந்திருக்கும், ஆளுமை கொண்ட தமிழ் எழுத்தாளர்களின், தேர்ந்தெடுக்கப்பட்ட 43 சிறு கதைகள்,  ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கும் நூல் “Unwinding".

தமிழின் முதல் சிறுகதையான வ.வே.சு. ஐயரின் “குளத்தங்கரை அரச மரம்”, 1914-ஆம் ஆண்டிலேயே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. அது முதல் அவ்வப்போது  தமிழ்க் கதைகள் ஆங்கிலத்திலும் வந்து கொண்டிருந்தன. இப்போது ஒரு குறிப்பிடும் முயற்சியாக இந்நூல். இந்த அசாத்தியப் பணியை, கடும் சவால்களுக்கிடையில், சில வருடங்கள் கடந்தாலும், தளராமல் சாத்தியப்படுத்தியவர், சிங்கப்பூர் வாழ் எழுத்தாளர் @ஜெயந்தி சங்கர் அவர்கள்.

புலம் பெயர்ந்தவர்களின் கதைகளையும் உள்ளடக்கி, உலகத் தளத்தில், உலகத் தரத்தில், தமிழ் சிறுகதைத் தொகுப்பு, ஆங்கில மொழிபெயர்ப்பில் அற்புதமாக வந்திருக்கிறது.

முதல் முத்தான கதையே அ. முத்துலிங்கத்தினுடையது. கிரேக்க எல்லையில், அந்நாட்டு காவலரிடம் மாட்டிக் கொள்ளும் இலங்கைத் தமிழன்... துருக்கி, பிரேசில், சுவிட்சர்லாந்து.. ஜெர்மனி, இத்தாலி... என தன் பயண வாழ்க்கைக் கதையைச் சொல்ல, அதைக் கேட்டுக் காவலர் மலைக்க, நமக்கும் அந்நிலையே.

கடைசி வரி திருப்பத்தை தன் கதையின் மூலதாரமாய் வைக்கும் சத்யராஜ்குமாரின் அமெரிக்க மண்ணின் கதை, அசல் ஆங்கிலக் கதையாகவே புலப்படுகிறது.

சில கதைகளின் ஆசிரியரும் மொழிபெயர்ப்பாளரும் வேறு வேறு. சிலவற்றை ஜெயந்தி சங்கரே மொழிபெயர்த்திருக்கிறார். சில கதைகளின் ஆசிரியரும் மொழிபெயர்ப்பாளரும் ஒருவரே. குறிப்பாக இரா. முருகன் தன் இளைப்பாறுதல் கதையைத் தானே மொழிபெயர்த்துத் தர, அதுவே “Unwinding". இந்நூலிற்கு மிகப் பொருத்தமான தலைப்பாக அமைந்திருக்கிறது. 

இது போன்றவை மொழி பெயர்ப்பின் சூட்சுமங்களையும், தர்மங்களையும் மிக அழகான பாடங்களாய்த் தருகின்றன. மொழிபெயர்ப்பின் போது, மூல மொழியின் சில பத்திகள், இலக்கு மொழிக்குத் தக்கபடி சுருங்கவோ, விரியவோ செய்யும். உதாரணமாக, Unwinding-ல், ஜப்பானிய புராஜெக்ட் மேனேஜர் தன் குழுவினரிடம் கடந்த இரவின் கலவியைக் குறித்து எழுப்பப்படும் கேள்விகள்... தமிழில் ஒரு வரி மிகுந்தாலும் விரசமாகிவிடும். ஆனால் ஆங்கிலத்தில் முறுவலிக்கும் விதமாய் சில வரிகளைச் சேர்த்திருக்கிறார் இரா. முருகன். இது ஒரு பால பாடம்.

மூல மொழியின் ஜீவனை, இலக்கு மொழியில் அப்படியே தருவிப்பது பெரும் பணி. ஒவ்வொரு கதையின் ஒவ்வொரு வரியையும், ஒவ்வொரு பதத்தையும் சரிபார்த்தல் பெரும் சவால். அதற்கான போராட்டங்களை சளைக்காமல், சலிக்காமல் செய்து சாத்தியப்படுத்திய ஜெயந்தி சங்கரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.  

இவர் முயற்சியால், தமிழ் இலக்கியம் உலத் தளத்தில் தாளமிடும்.

இறுதியாக... பெரும் வானரங்கள் சேது பாலம் கட்ட... ஒரு சிறு கல் கொடுத்த அணிலாய்... ஆருயிர் நண்பன் சித்ரன் ரகுநாத்தின், கல்கியில் வெளியாகி கவனம் பெற்ற லிஃப்ட் கதையை மொழிபெயர்த்து, அவனுடன் யானும் இணைந்து இடம் பெற்றுள்ளேன் :)

வெளியீடு:

EMERALD PUBLISHERS
15A, I Floor, Casa Major Road, Egmore,
Chennai 600008.
Ph: 044 - 28193206, 42146994
Mail: info@emeraldpublishers.com
https://www.emeraldpublishers.com

Wednesday, August 14, 2019

அத்தி வரதா... காஞ்சி வரதா...



1979-ல் பாலகனாய் ஒரு கையால் என் தந்தையைப் பற்றி, மறு கையால் படிகள் இறங்கும் கற்சுவற்றை மெள்ளப் பற்றி, அனந்தசரஸ் குளத்திற்கு அடியில், மண்டபத்திற்கு கீழ் இருக்கும் இவ்வறைக்கு (படம்),  அத்தி வரதர் சயனம் செய்யும் இடத்திற்குச் நான் சென்று வந்தது, இன்னமும் பசுமையாய் நினைவிருக்கிறது.

2019... நாற்பது வருடங்களுக்குப் பின் மீண்டும் அத்தி வரதரை தரிசித்த பரவசத்தில்... புராண கதையையும், ராமானுஜர் காலத்தையும், சிவகாஞ்சியில் இருக்கும் வைணவ தலங்களையும், தொகுத்து 2-4 சந்தத்தில் ஒரு பாடல் இயற்றியுள்ளேன்:



அத்தி வரதா காஞ்சி வரதா
  காட்சி தருகிறாய்
கோடி சுடரை முகத்தில் தரித்து
 முறுவல் செய்கிறாய்
கருணை மின்னும் விழியின் ஒளியால்
 அருளைத் தருகிறாய்
உந்தன் வருகை எந்தன் வாழ்வை
 முழுமை ஆக்குதே
வேத வல்லி கோபம் தணித்த
 வேத நாயகா
பிரம்மன் வேள்வித் தீயில் உதித்த
 பிரம்ம நாயகா
குளத்தில் மறையும் மறையில் உறையும்
 ஞான தேசிகா
தேவ ராஜா உன்தேக ஜோதியில்
 உள்ளம் கரைகிறேன்
 
அத்தி கிரியில் வாசம் செய்யும்
 கருடன் வாகனா
வேடன் உருவில் உடையவர் காத்த
 சேடன் ஆசனா
கூரத் தாழ்வான் கண்ணுள் வசித்த
 ஜீவன் ரட்சகா
நம்பி நண்பா உன்சொல் கேட்க
 நம்பி வருகிறேன்
பச்சை வண்ண பவள வண்ண
 மேனி கொள்கிறாய்
பேருரு கொண்டு சக்தியின் அருகே
 உலகை அளக்கிறாய்
தூதுரு கண்ணா மாவடி மண்ணில்
 பார்வைத் தருகிறாய்
ஏகன் உடனாய் உன்னைத் துதித்து
 மேன்மை அடைகிறேன்
காஞ்சி ஆளும் தங்கை கண்டு
  சித்தம் குளிர்கிறாய்
சாலைக் கிணற்றின் நீரில் ஆடி
  நித்தம் மிளிர்கிறாய்
நெறிகள் தந்து குடிகள் காக்க
 வரங்கள் தருகிறாய்
பேரருளாளா நின் திருவடிப் பணிந்து
 சக்தி பெறுகிறேன்
                                           - காஞ்சி ரகுராம்.

Saturday, May 18, 2019

பாலகுமாரனின் முதலாம் ஆண்டு ஆராதனை விழா

நாள்: மே 15, 2019
இடம்: வாணி மஹால்

இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் ஒவ்வொருவரையும் புன்னகையுடன் வரவேற்று புத்தகத்துடன் ஒரு பையைக் கொடுத்தனர்.

ஓர் ஆர்வம் மேலிட்டது. இது படித்துவிட்ட புத்தகமா? வாங்கியபின் இன்னும் படிக்காமல் வைத்திருக்கும் புத்தகமா? இனிமேல் வாங்கவேண்டிய புத்தகமா? என குறுகுறுக்கும் எண்ணத்துடன், அரங்கினுள் சென்றமர்ந்து, பையிலிருந்து எடுத்துப் பார்த்ததும் பிரமித்தேன்.

அய்யனின் அமர ஜீவிதங்கள் - சரஸ்வதி சுவாமிநாதன்.

முன் தினத்தில்தான், இந்த நிகழ்ச்சி நடக்கப் போவதைப் பற்றி தந்தையிடம் பேசினேன். சில நாவல்கள் எப்படியெல்லாம் பாடம் கற்பித்தன என்று பேச்சு நீண்டது. உடலும், மனதும், வாழ்வும் திடமாக இருந்த போது படித்தவை சில, வாழ்வு சுழலில் சிக்கிக் கொண்டபோது படித்தவை சில. இன்னமும் படிக்க வேண்டியது பல. இன்றைய நிலையில் படித்தால் பெரும் புரிதலே கிடைக்கும். மீண்டும் தேந்தெடுத்துப் படிக்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.

இதோ கையில்... பாலகுமாரனின் அத்தனைப் படைப்புகளின் சாராம்சமாய், அமர ஜீவிதங்கள். ஒவ்வொரு நாவலிலிருந்தும் முக்கிய வரிகளை எடுத்துத் தொகுத்திருக்கிறார் சரஸ்வதி சுவாமிநாதன். இப்படி ஒரு புத்தகம் வருவது இதுவே முதல் முறை என நினைக்கிறேன். தாம் படித்து உணர்ந்தவற்றை அசைபோடலாம். இனி படிக்க வேண்டியதையும் தேடிக் கண்டறியலாம். இவர் செய்தது ஒரு வணங்கத்தக்க பெரும் பணி. பாலா தந்த வாழ்க்கைப் பாடங்களுக்கு ஒரு கோனார் வடிவாய் இந்நூல் அமைந்திருக்கிறது. இப்பணிக்காக அவருக்கும், வருகை தந்த ஒவ்வொருவருக்கும் இப்புத்தகத்தை வழங்கிய பாலாவின் குடுப்பத்தினருக்கும் நன்றிகள் ஆயிரம். நிச்சயம் பாலாவின் ஆன்மா முறுவலித்திருக்கும்.

பையில் மற்றொரு புத்தகமும் உடன் இருந்தது. பிரித்தவன் திகைத்தேன். பாலகுமாரன் நினைவுத் தடங்கள் - கிருஷ்ணா.

அவர் வாழ்க்கை பற்றிய தகவல்கள் என்றுதான் நினைத்தேன். இல்லை. காவேரி மருத்துவமனையில், உயிர் பிரியும் தருவாயில் உடனிருந்த கிருஷ்ணா, அதை அப்படியே பதிவு செய்திருக்கிறார். // என் குழந்தை கௌரிகிட்ட போகும்போது சொல்லிட்டு போகணும்டா, ஃபேஸ் புக்ல விடைபெறுகிறேன்னு ஸ்டேட்டஸ் போடணும். போனைக் கொடு.. என்று மகன் சூர்யாவிடம் கேட்டிருக்கிறார். // நடுங்கி விட்டேன். நிஜ மரணத்தின் பதிவு இது. மேற்கொண்டு புரட்ட இது தருணமல்ல. பையில் வைத்து விட்டேன்.

நிகழ்ச்சி துவங்கியது. OS அருணின் இன்னிசைக்குப் பின் பாலகுமாரனின் பெயரால் “கண்மணித் தாமரை” விருதை இல. கணேசன், இளம் எழுத்தாளர் நரனுக்கு வழங்கினார். விருது பற்றிய சூர்யா பாலகுமாரனின் உரை, நரனின் ஏற்புரை, பாரதி பாஸ்கரின் சிறப்புரை... அனைத்தும் எளிமையாக அழகாக அமைந்தது.

பாலகுமாரனைப் பற்றிய ஆவணப் படம் ஒன்று திரையிடப்பட்டது. இதை இயக்கியவர், ‘தமிழ் இந்து’ துணை ஆசிரியர் ராம்ஜி. நாற்பது நிமிட நீளத்தில் மிக அற்புதமாக வந்திருக்கிறது. பாலாவைப் பற்றி பலதும் அறிய முடிந்தது. பல எழுத்தாளர்களும், திரைத் துறையினரும், வாசகர்களும் பேசினார்கள்.

அவரைப் பற்றி பலரும் பல விஷயங்கள் பேசினாலும், அதன் அடி நாதம் ஒன்றுதான். வாழ்வு நொடிந்துவிட்ட நிலையிலும், நம்பிக்கையை விதைத்து, மீண்டும் வாழ வைத்த பாடங்கள்தான் அவரது படைப்புகள்.

ராம்ஜி வெளிப்படையாகவே கூறினார். இருபது வயதில், தீய பழக்கங்களுடன், தறுதலையாக சுற்றிக் கொண்டிருந்த என்னை, என்னென்னவோ செய்து நல்வழிக்குத் திருப்பியது அவரது எழுத்துக்களே என்று. அவருக்கு மட்டுமா, அந்த எழுத்து சிறப்பித்த வாழ்வினால் அங்கு வந்திருந்த வாசகர் அனைவருமே, ஒருவித உருகும் உணர்வோடு பிணைக்கப்பட்ட சொந்த பந்தமாகவே தென்பட்டனர். அது அபூர்வம். எழுத்தாளன் என்பதைக் கடந்து, பலருக்கு நல்வழிப் படுத்தும், ஆற்றுப் படுத்தும் குருவாகவே வாழ்ந்திருக்கிறார் பாலா.

அரங்கம் நிரம்பிவிட்டதால், இருபுறச் சுவர் ஓரங்களிலும், இரு பகுதி இருக்கைக்கு இடைப்பட்ட இடம் முழுவதும், வீடு திரும்பும் அவசரமின்றி, மூன்று மணி நேரம் நிற்கிறார்கள் என்றால், இவர்கள் பாலாவிற்கு நன்றி சொல்கிறார்கள் என்றே பொருள்.

குறையின்றி எழுத்தில்லை. இவரது சில நாவல்களில் சில குறைகளிருக்கலாம். கதையைப் படிப்பதைவிட கதை மாந்தர்களைப் படித்தறிவதே இங்கு பிரதானம். வாழ்வின் யதார்த்தங்களும் சிக்கல்களும் இம்மாந்தர் ரூபத்தில்தான் அலசப்படுகின்றன. இதில் லயிக்கும் போது குறைகள் உறுத்துவதில்லை. அப்படித்தான் குறையின்றி மனிதருமில்லை. நெருங்கிய உறவோடு, அவர்களின் மனத்தின் லயத்தோடு இணைந்து விட்டால், அவர்களின் குறைகள் ஒரு பொருட்டில்லை. இதனால் கோபங்களும் சண்டைகளும் நீர்த்து வசந்தம் வசப்படும். இக்கலையை இவரின் எழுத்துக்கள் துளிர்க்க வைத்திருக்கின்றன.

படிப்பது ஒரு இயல்பான செயல். படித்ததை உணர்வது ஒரு வரம். உணர்ந்ததை வாழ்வோடு இணைப்பது ஒரு தவம். அத்தவம் முயல்வதை பலரின் முக உணர்வுகள் சொல்லின. எந்த எழுத்தாளனுக்கும் கிடைக்காத பாக்கியம் இது. அவரால் நமக்குக் கிடைத்த பெரும் பாக்கியமும் இது.

இந்நிகழ்ச்சியை நடத்திய விதம் அருமை. வருகையில் பாந்தமாய் சிற்றுண்டியும், பெண்களுக்கு மல்லிகை முழமும், கிளம்புகையில் பாலாவின் முதல் நாவலும் (ஏதோ ஒரு நதியில் - குடும்ப நாவல் - முதலாமாண்டு நினைவாஞ்சலி மலர்), வீடு சேரும் வரை பசிக்காமலிருக்க சிறிதளவு உப்புமாவும் கொடுத்து வழியனுப்பிய விதம்... பண்பட்ட விதம்... எழுத்தும், கனிவும், அக்கறையும் விளைந்த இடம் என்பதை உணர்த்தியது.

புத்தகப் பையில் விபூதி, குங்குமப் பிரசாதங்கள் இருந்தன... புன்னைநல்லூர் மாரியம்மன், கர்ப்பரட்சாம்பிகை, பாபநாசம், வைத்தீஸ்வரன், உறையூர் வெக்காளியம்மன், மண்ணச்சநல்லூர் பிரம்மபுரீஸ்வரர், அண்ணாமலையார்...  இது பலரையும், அவர் வீட்டினரையும் மகிழ்விக்கும், ஆசிர்வதிக்கும்! (புத்தகப் பக்கங்களைப் புரட்டிய போது, அதிலிருந்தும் குங்கும வாசம் வந்தது :))

நிகழ்ச்சி நிறைவாகும்போது, அதைத் தொகுத்து வழங்கிய சம்பத் லஷ்மி கூறினார்...

இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்...
ஊர் சொல்லி விட்டது... இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா...


ஆவணப் படத்தின் சுட்டி: https://youtu.be/1CDvz9TUgy8