Showing posts with label பாலகுமாரன். Show all posts
Showing posts with label பாலகுமாரன். Show all posts

Saturday, May 18, 2019

பாலகுமாரனின் முதலாம் ஆண்டு ஆராதனை விழா

நாள்: மே 15, 2019
இடம்: வாணி மஹால்

இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் ஒவ்வொருவரையும் புன்னகையுடன் வரவேற்று புத்தகத்துடன் ஒரு பையைக் கொடுத்தனர்.

ஓர் ஆர்வம் மேலிட்டது. இது படித்துவிட்ட புத்தகமா? வாங்கியபின் இன்னும் படிக்காமல் வைத்திருக்கும் புத்தகமா? இனிமேல் வாங்கவேண்டிய புத்தகமா? என குறுகுறுக்கும் எண்ணத்துடன், அரங்கினுள் சென்றமர்ந்து, பையிலிருந்து எடுத்துப் பார்த்ததும் பிரமித்தேன்.

அய்யனின் அமர ஜீவிதங்கள் - சரஸ்வதி சுவாமிநாதன்.

முன் தினத்தில்தான், இந்த நிகழ்ச்சி நடக்கப் போவதைப் பற்றி தந்தையிடம் பேசினேன். சில நாவல்கள் எப்படியெல்லாம் பாடம் கற்பித்தன என்று பேச்சு நீண்டது. உடலும், மனதும், வாழ்வும் திடமாக இருந்த போது படித்தவை சில, வாழ்வு சுழலில் சிக்கிக் கொண்டபோது படித்தவை சில. இன்னமும் படிக்க வேண்டியது பல. இன்றைய நிலையில் படித்தால் பெரும் புரிதலே கிடைக்கும். மீண்டும் தேந்தெடுத்துப் படிக்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.

இதோ கையில்... பாலகுமாரனின் அத்தனைப் படைப்புகளின் சாராம்சமாய், அமர ஜீவிதங்கள். ஒவ்வொரு நாவலிலிருந்தும் முக்கிய வரிகளை எடுத்துத் தொகுத்திருக்கிறார் சரஸ்வதி சுவாமிநாதன். இப்படி ஒரு புத்தகம் வருவது இதுவே முதல் முறை என நினைக்கிறேன். தாம் படித்து உணர்ந்தவற்றை அசைபோடலாம். இனி படிக்க வேண்டியதையும் தேடிக் கண்டறியலாம். இவர் செய்தது ஒரு வணங்கத்தக்க பெரும் பணி. பாலா தந்த வாழ்க்கைப் பாடங்களுக்கு ஒரு கோனார் வடிவாய் இந்நூல் அமைந்திருக்கிறது. இப்பணிக்காக அவருக்கும், வருகை தந்த ஒவ்வொருவருக்கும் இப்புத்தகத்தை வழங்கிய பாலாவின் குடுப்பத்தினருக்கும் நன்றிகள் ஆயிரம். நிச்சயம் பாலாவின் ஆன்மா முறுவலித்திருக்கும்.

பையில் மற்றொரு புத்தகமும் உடன் இருந்தது. பிரித்தவன் திகைத்தேன். பாலகுமாரன் நினைவுத் தடங்கள் - கிருஷ்ணா.

அவர் வாழ்க்கை பற்றிய தகவல்கள் என்றுதான் நினைத்தேன். இல்லை. காவேரி மருத்துவமனையில், உயிர் பிரியும் தருவாயில் உடனிருந்த கிருஷ்ணா, அதை அப்படியே பதிவு செய்திருக்கிறார். // என் குழந்தை கௌரிகிட்ட போகும்போது சொல்லிட்டு போகணும்டா, ஃபேஸ் புக்ல விடைபெறுகிறேன்னு ஸ்டேட்டஸ் போடணும். போனைக் கொடு.. என்று மகன் சூர்யாவிடம் கேட்டிருக்கிறார். // நடுங்கி விட்டேன். நிஜ மரணத்தின் பதிவு இது. மேற்கொண்டு புரட்ட இது தருணமல்ல. பையில் வைத்து விட்டேன்.

நிகழ்ச்சி துவங்கியது. OS அருணின் இன்னிசைக்குப் பின் பாலகுமாரனின் பெயரால் “கண்மணித் தாமரை” விருதை இல. கணேசன், இளம் எழுத்தாளர் நரனுக்கு வழங்கினார். விருது பற்றிய சூர்யா பாலகுமாரனின் உரை, நரனின் ஏற்புரை, பாரதி பாஸ்கரின் சிறப்புரை... அனைத்தும் எளிமையாக அழகாக அமைந்தது.

பாலகுமாரனைப் பற்றிய ஆவணப் படம் ஒன்று திரையிடப்பட்டது. இதை இயக்கியவர், ‘தமிழ் இந்து’ துணை ஆசிரியர் ராம்ஜி. நாற்பது நிமிட நீளத்தில் மிக அற்புதமாக வந்திருக்கிறது. பாலாவைப் பற்றி பலதும் அறிய முடிந்தது. பல எழுத்தாளர்களும், திரைத் துறையினரும், வாசகர்களும் பேசினார்கள்.

அவரைப் பற்றி பலரும் பல விஷயங்கள் பேசினாலும், அதன் அடி நாதம் ஒன்றுதான். வாழ்வு நொடிந்துவிட்ட நிலையிலும், நம்பிக்கையை விதைத்து, மீண்டும் வாழ வைத்த பாடங்கள்தான் அவரது படைப்புகள்.

ராம்ஜி வெளிப்படையாகவே கூறினார். இருபது வயதில், தீய பழக்கங்களுடன், தறுதலையாக சுற்றிக் கொண்டிருந்த என்னை, என்னென்னவோ செய்து நல்வழிக்குத் திருப்பியது அவரது எழுத்துக்களே என்று. அவருக்கு மட்டுமா, அந்த எழுத்து சிறப்பித்த வாழ்வினால் அங்கு வந்திருந்த வாசகர் அனைவருமே, ஒருவித உருகும் உணர்வோடு பிணைக்கப்பட்ட சொந்த பந்தமாகவே தென்பட்டனர். அது அபூர்வம். எழுத்தாளன் என்பதைக் கடந்து, பலருக்கு நல்வழிப் படுத்தும், ஆற்றுப் படுத்தும் குருவாகவே வாழ்ந்திருக்கிறார் பாலா.

அரங்கம் நிரம்பிவிட்டதால், இருபுறச் சுவர் ஓரங்களிலும், இரு பகுதி இருக்கைக்கு இடைப்பட்ட இடம் முழுவதும், வீடு திரும்பும் அவசரமின்றி, மூன்று மணி நேரம் நிற்கிறார்கள் என்றால், இவர்கள் பாலாவிற்கு நன்றி சொல்கிறார்கள் என்றே பொருள்.

குறையின்றி எழுத்தில்லை. இவரது சில நாவல்களில் சில குறைகளிருக்கலாம். கதையைப் படிப்பதைவிட கதை மாந்தர்களைப் படித்தறிவதே இங்கு பிரதானம். வாழ்வின் யதார்த்தங்களும் சிக்கல்களும் இம்மாந்தர் ரூபத்தில்தான் அலசப்படுகின்றன. இதில் லயிக்கும் போது குறைகள் உறுத்துவதில்லை. அப்படித்தான் குறையின்றி மனிதருமில்லை. நெருங்கிய உறவோடு, அவர்களின் மனத்தின் லயத்தோடு இணைந்து விட்டால், அவர்களின் குறைகள் ஒரு பொருட்டில்லை. இதனால் கோபங்களும் சண்டைகளும் நீர்த்து வசந்தம் வசப்படும். இக்கலையை இவரின் எழுத்துக்கள் துளிர்க்க வைத்திருக்கின்றன.

படிப்பது ஒரு இயல்பான செயல். படித்ததை உணர்வது ஒரு வரம். உணர்ந்ததை வாழ்வோடு இணைப்பது ஒரு தவம். அத்தவம் முயல்வதை பலரின் முக உணர்வுகள் சொல்லின. எந்த எழுத்தாளனுக்கும் கிடைக்காத பாக்கியம் இது. அவரால் நமக்குக் கிடைத்த பெரும் பாக்கியமும் இது.

இந்நிகழ்ச்சியை நடத்திய விதம் அருமை. வருகையில் பாந்தமாய் சிற்றுண்டியும், பெண்களுக்கு மல்லிகை முழமும், கிளம்புகையில் பாலாவின் முதல் நாவலும் (ஏதோ ஒரு நதியில் - குடும்ப நாவல் - முதலாமாண்டு நினைவாஞ்சலி மலர்), வீடு சேரும் வரை பசிக்காமலிருக்க சிறிதளவு உப்புமாவும் கொடுத்து வழியனுப்பிய விதம்... பண்பட்ட விதம்... எழுத்தும், கனிவும், அக்கறையும் விளைந்த இடம் என்பதை உணர்த்தியது.

புத்தகப் பையில் விபூதி, குங்குமப் பிரசாதங்கள் இருந்தன... புன்னைநல்லூர் மாரியம்மன், கர்ப்பரட்சாம்பிகை, பாபநாசம், வைத்தீஸ்வரன், உறையூர் வெக்காளியம்மன், மண்ணச்சநல்லூர் பிரம்மபுரீஸ்வரர், அண்ணாமலையார்...  இது பலரையும், அவர் வீட்டினரையும் மகிழ்விக்கும், ஆசிர்வதிக்கும்! (புத்தகப் பக்கங்களைப் புரட்டிய போது, அதிலிருந்தும் குங்கும வாசம் வந்தது :))

நிகழ்ச்சி நிறைவாகும்போது, அதைத் தொகுத்து வழங்கிய சம்பத் லஷ்மி கூறினார்...

இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்...
ஊர் சொல்லி விட்டது... இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா...


ஆவணப் படத்தின் சுட்டி: https://youtu.be/1CDvz9TUgy8

Wednesday, October 28, 2015

பாலகுமாரனின் ஒரு காதல் நிவந்தம் - விமர்சனம்

தந்தையின் புத்தக அலமாரி.

ஒரு புத்தகத்தைத் தேடும் போது, கண்ணில் பட்டது பாலகுமாரனின் மாத நாவல் ‘ஒரு காதல் நிவந்தம்’. படித்ததில்லை. ஆனால் அது இராஜேந்திரனைப் பற்றியது எனத் தெரியும். அழகிய தலைப்பு சொல்லியது, இது இராஜேந்திரனுக்கும், அவனது அனுக்கி நக்கன் பரவைக்கும் உள்ள பிணைப்பு என்று. படிக்கும் ஆசை வர, உடன் தயக்கமும் ஒட்டிக் கொண்டது.

உடையார், கங்கை கொண்ட சோழன் தந்த பிம்பத்தை, உணர்ச்சிகளை இது கலைத்து விடுமோ? 12 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதை. சம்பவங்கள் மாறியிருக்கும். பாத்திரங்களின் பிம்பங்கள் கூட உருமாறியிருக்கும்.

நாவல் கடிகை ஞாபகத்திற்கு வந்தது. அதில் ஆதித்த கரிகாலனைக் கொன்ற ரவிதாஸன், பரமேஸ்வரனே கதா நாயகர்கள்.

இருப்பினும் மனம் உந்த, படித்தேன்.

ஆம், சம்பவங்கள் மாறியே இருந்தன. கங்கை வரை வென்ற பிறகும், கங்கை கொண்ட சோழபுரத்திற்குச் சுவடே இல்லை. இராஜராஜ சோழனின் அனுக்கி பஞ்சவன் மாதேவி இன்னமும் நலமுடன் இருக்கிறாள். கங்கைக்கு முன் சாளுக்கிய தேசத்தை நோக்கிய படையெடுப்பின் போதே, இராஜேந்திரனின் மகன்கள், சேர, பாண்டிய, ஈழ தேசங்களை ஆளத் தொடங்கியிருப்பார்கள். இங்கே இவர்கள் சிறுவராய்த் தெரிகிறார்கள். உடையாரில் தந்தையுடனான நீண்ட உரையாடலில் பலதும் உணர்ந்திடும் இராஜேந்திரன், இங்கே இன்னமும் பக்குவப்படவில்லை. நக்கன் பரவையின் அறிமுகமே இனிதான் நடக்கிறது. இப்படிச் சில.

ஆனாலும் பாதகமில்லை. கதையின் கரு அட்டகாசம். கடந்த விமர்சனத்தில் எழுதியிருந்தேன்.

இராஜேந்திரன் வென்ற தேசத்தவனாய் நினைக்கையில் குலை நடுங்குகிறது. கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா ஜிம்பாப்வேயை அடித்து நொறுக்குவதைப் போலத்தான், பல இலட்சம் வீரர்களுடன் சென்று... மேலைச் சாளுக்கியம், தட்சிணலாடம், உத்திரலாடம்... பல தேசங்களைத் துவம்சம் செய்திருக்கிறான். 

யுத்ததின் வலியை, அதன் நாசம் பெண்களிடம் விதைக்கும் வேதனையை குந்தவை, பரவை மூலம் இராஜேந்திரனுக்கு உணர்த்த முயல்வதே களம்.

பலதும் அறிந்திருந்தும், ஒப்பற்ற நிர்வாகத் திறமையிருந்தும், வெற்றி மட்டுமே கண்டவனெனினும், அவன் செயல்களுக்கு வேறொரு கோணத்தில் பாதக முகமுண்டு என்பதை இராஜேந்திரனுக்கு மட்டுமல்ல, படிப்பவருக்கும் புரியவைக்கிறார் பாலகுமாரன். கூடவே சில பாடங்களும் நயமாகக் கிடைக்கின்றன.

மூன்று சோழ அரசர்களுக்கு முதல் அமைச்சராய், சேனாதிபதியாய் இருப்பவர், கிருஷ்ணன் ராமன் பிரம்மராயர். சபையில் தன் வருகைக்கு எழுந்திருக்க வேண்டாமே என இராஜேந்திரன் வேண்ட...

“ஒரு நாள் உமது மகன் ராஜாதிராஜன் அரியணை ஏறி சபை வரினும் நாம் எழுந்து நிற்போம். அரசனை அதிகாரி மதிக்கவில்லையெனில் அதிகாரியை குடி படை மதிக்காது. வளையாத மூங்கில் வில்லாகாது”

அதைப் போல தளிச்சேரிப் பெண் சரபை. “உண்பதும் உடுப்பதும் சோழர் சொத்து, எனக்கும் நன்றிக் கடன் உண்டல்லவா?” எனத் தாமாக அரச குடும்பச் சிக்கலுக்கு உதவ முன் வருகிறாள்.

ம்ம், பணிவும், மரியாதையும், நன்றிக் கடனும் இருப்பின் சாம்ராஜ்யமே சீராக இயங்கும். இவை நீர்ப்பின், ஒரு வீட்டின் இயக்கம் கூட ஸ்தம்பிக்கும்.

- எவன் மனதிற்குள் சஞ்சலமின்றி அமைதியோடு இருக்கிறானோ அவனே வீரன்

- ஒரு சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி எதற்கெல்லாம் கவலைப்பட வேண்டியிருக்கிறது

- கோபத்தை விட கேடான விஷயம் எதுவுமில்லை

- தான் என்ற அகம்பாவம் அற்றவர், கற்றல் எளிது

- கூட்டமின்றி, கோலாகலமின்றி, சாமானியனாய் இருப்பது விடுதலையாய் இருக்கிறது

- வளர்ச்சியைச் சொல்வதே ஆன்றோர் புத்தி

இப்படி பல ஒற்றை வரிகள் நாவலில் பளிச்சிடுகின்றன. ஆசிரியரின் அனுமானங்களும் முறுவலைத் தருகின்றன.

மனைவிக்குப் பயந்து, அலுவலகத்தில் நடுநிசி வரை உழைக்கும் (நெட்டில் படம் பார்ப்பதுதான்) கணவர்கள் இன்று சகஜம்தானே. மனைவிகளின், சிற்றனைகளின் இம்சையைத் தவிர்க்கத்தான் இராஜேந்திரன் கங்கைவரை சென்று விட்டானாம் :)

பரவை, ‘அற்றைத் திங்கள், அவ்வெண்ணிலவில் யாம் எந்தையும் உடையோம்..’ என பாரி மகளிரின் கவிதையைச் சொல்லி, போரின் கொடுமையை விளக்க, படிக்கும் நமக்கும், எதற்கு இந்தச் சண்டை என்ற எண்ணம் வரத்தான் செய்கிறது.

இந்த நாவலில் ஒரே ஒரு பிழை. திருவாரூரில் இராஜராஜனும், அவன் சேனாதிபதி அருண்மொழியும் மாறு வேடத்தில், பரஞ்சோதி, நம்பி என்ற மாற்றுப் பெயர்களில் இருக்கிறார்கள். இது தனக்கு தெரியாது என்றே பரவை இராஜேந்திரனிடம் பழகுகிறாள். மன்னராய் வெளிப்படும் முந்தின தினமே அருண்மொழி என்ற பெயரை இருவருமே பயன்படுத்தி விட்டார்கள்!

திருவாரூரில் பெரும் வெள்ளம் ஏற்பட, கடைசி பகுதியை அற்புதமாய் முடித்திருக்கிறார் பாலகுமாரன். இது படித்து உணர வேண்டிய அனுபவம். செங்கல் தளியாய் இருக்கும், வீதி விடங்கர், தியாகேசர் கோவில் கற்றளியாய் மாற்றும் உபயம் இங்குதான் பரவையால் விதைக்கப்படுகிறது. முடிவில் அவள் இராஜேந்திரனிடம் சொல்லும் ஒரு வாக்கியம்...

‘நீங்கள் தூசு ஒட்டிக் கிடந்த மாணிக்கம். சற்று துடைத்தேன். மாணிக்கம் தானாய் பிரகாசிக்கிறது’

உடையார், கங்கை கொண்ட சோழன் பிரம்மாண்ட கதைகளுக்கு, இந்நாவல் ஒரு டீஸர்.

நன்றி ஐயா (பாலகுமாரன்).

Wednesday, December 17, 2014

இராஜராஜ சோழனின் அனுக்கி

பஞ்சவன் மாதேவி.

இராஜராஜ சோழனின் மனைவியருள் ஒருவர். இவர் அரச குலமல்ல. தேவரடியார். ஆனால்...

தனக்குப் பிள்ளை பிறந்து, அவன் இராஜேந்திரனுக்கு எந்த விதத்திலும் அரியணைப் போட்டியைத் தந்து விடக்கூடாது எனக் கருதி, மருத்துவரின் உதவியுடன் தன்னை மலடாக்கிக் கொண்டவள்.

இராஜராஜனுக்கு அனைத்து விதத்திலும் அனுசரணையாக (அனுக்கியாக)... தஞ்சைக் கோவில் கட்டும் பெரும் பணியிலும், அரசு நிர்வாகத்திலும், ஏன்... யுத்தக் களத்திலும் துணை நின்றவள். இதனால், இராஜராஜனின் பிற மனைவியர் முதல், மறவர், மந்திரிகள், மக்கள்... யாவரும் அவளைப் போற்றினர்.

இராஜேந்திரன், இவளை தன்னைப் பெற்ற அன்னையாகவே நினைத்து வணங்கினான். இதனால், இவள் இறையடி சேர்ந்த பின், இவள் அஸ்தியை வைத்து, அதன் மேல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, பள்ளிப்படை கோவில் எழுப்பினான். (இடம் பட்டீஸ்வரம்).

இதையெல்லாம் உடையார் நாவலில் விரிவாய், நெஞ்சம் நெகிழும் விதமாய்ச் சொல்லியிருந்தார் அதன் ஆசிரியர் பாலகுமாரன். சிதிலமடைந்திருந்த இக்கோவில் இப்போது புனரமைக்கப் பட்டுவிட்டது என்பதையும் நாவலின் இறுதியில் சொல்லியிருந்தார்.

இக்கோவிலைக் காணும் ஆவலுடன் சென்றேன். குடந்தையிலிருந்த ஒரு அலுவலால், பட்டீஸ்வரத்தை அடையவே மதியம் ஒரு மணியாகிவிட்டது.

கோவில் நிச்சயம் சாத்தப்பட்டிருக்கும் எனத் தெரிந்தும் ஒரு நம்பிக்கையுடன் வழி விசாரித்தபடி நடந்தேன். பலருக்கு இக்கோவில் பற்றித் தெரியவில்லை (ராமசாமி கோவில் என்று பெயர் மாறிவிட்டிருந்ததும் ஒரு காரணம்). கோபுரமும் தென்படவில்லை.

‘கஷ்டம் வந்தாதான் கோவிலுக்கு வருவியா” என்று ஒரு குடிமகன் வேறு சண்டைக்கு வந்து விட்டார்! அவரைச் சமாளித்துக் கடந்து, ஒரு குறுகலான தெருவின் முனையில், ஒரு வீட்டில் விசாரிக்க, என்னை ஒரு கணம் உற்றுப் பார்த்த அவ்வீட்டுப் பெரியவர்...

‘இதோ இந்தப் பக்கம்தான், கொஞ்சம் இருங்க’

‘ஏம்மா...’ இரண்டு வீடு தள்ளி, துணி துவைத்துக் கொண்டிருந்த சிறுமியை அழைத்து, ‘இவருக்கு, கோவில் சாவியை வாங்கிக் குடும்மா’ என்று சொல்ல அச்சிறுமி அவள் வீட்டினுள் சென்றாள்.

‘நீங்களே கோவிலைத் திறந்து பார்த்துட்டு, பூட்டி சாவியை அந்த வீட்டிலேயே குடுத்துடுங்க’

சிறுமியிடமிருந்து சாவியைப் பெற்று, அப்பெரியவருக்கு நன்றி சொல்லி, அவர் காட்டிய திசையில் ஒரு நிமிடம் நடக்க அங்கே...

பசுமையான, குளுமையான தோப்பின் மத்தியில், அமைதியாய், அழகாய், கம்பீரமாய் கோவில். கோபுர வாயிலின் பூட்டைத் திறந்த போது...

அடடா... ‘இக் கோவிலுக்குச் சென்று ஒரு தீபமாவது ஏற்றிவிட்டு வாருங்கள்’ என்று பாலகுமாரன் எழுதியிருந்தாரே. அதற்கு எதையுமே நான் கொண்டு வரவில்லையே. வருந்தினேன். அருகில் கடைகளும் இல்லை. உள்ளே நுழைந்த பின்னும் வருத்தம் தொடர்ந்தது.

முன் மண்டபத்தில், ஒரு பேனரில் ‘பஞ்சவன் மாதேவீஸ்வரம்’ என்று தலைப்பிட்டு, அவளது சிறப்புகள் பட்டியலிடப்பட்டிருந்தது. பெருமிதமாய்ப் படித்துக் கொண்டே வாயில் பக்கம் கண் திரும்ப, பிரமித்தேன்.

ஒரு முதியவர் நுழைந்தார். அவர் கையில்... எண்ணெய் பாட்டில், அகண்ட அகல், சாண் நீளத் திரி.

என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். நேரே கருவறை சென்றார். லிங்கத்தினடியே அகலை வைத்து, அது நிரம்பும் வரை எண்ணை விட்டு, திரியிட்டு, தீபம் ஏற்றி, பின் கற்பூரமும் காட்டினார்.

அவரிடம் ‘சாவியை உங்க கிட்ட குடுக்கனுமா? ஒரு பத்து நிமிடம் இருக்க முடியுமா?’

‘இல்லை தம்பி, நான் தீபம் ஏற்றவே வந்தேன். நீங்க கோவிலை நிதானமாகப் பார்த்தபின் வாங்கிய வீட்டிலேயே சாவியைக் குடுத்துடுங்க’. மீண்டும் புன்னகைத்துச் சென்று விட்டார்.

உணர்ச்சிகள் பலவாறு கிளர்ந்தன.

அம்மா, பஞ்சவன் மாதேவி, இன்னமும் இங்கே நீ உறைகிறாயா?

சாவி தந்ததும், தீபமேற்ற வந்ததும் தற்செயலா? இல்லை உன் செயலா?

எனக்கென நீ செய்ததாய் எண்ணுவதில்தான் எத்தனை ஆனந்தம்.

உன் பாதம் பணிகிறேன்.

உன்னைப் போன்ற மனைவிகள் பெருக வேண்டும். இராஜராஜன்கள் உருவாக வேண்டும்.

அருளம்மா.

தொடர்புடைய பதிவுகள்:

1) பாலகுமாரனின் உடையார், கங்கை கொண்ட சோழன் - விமர்சனம்
2) இராஜேந்திர சோழன் அரியணை ஏறிய 1000-ஆவது ஆண்டு விழா

Wednesday, December 10, 2014

பாலகுமாரனின் உடையார், கங்கை கொண்ட சோழன் - விமர்சனம்.


மனம் ஆட்டம் காணத் தொடங்கியது.

‘இராஜாதிராஜா, இனி சகலமும் உன் பொறுப்பு... எனக்கு விடை கொடு’ - என தன் மூத்த மகனிடம் மாமன்னன் இராஜேந்திரன் கூறி, சபையை வணங்கி விடை பெறும் போது, இனி இக்கதை அவரது இறுதி காலத்தை நோக்கிப் பயணிக்கும் என்பதால், அதைப் படிக்கும் திராணி இருக்குமா என எண்ணி மனம் கலங்கியது.

உடையார் நாவலில், இராஜராஜ சோழன் இறைவனடி சேர்ந்தார் என்பதை எழுத முடியாமல் கதறி அழுத ஆசிரியர் பாலகுமாரனின் உணர்ச்சிகள், படிக்கும் போது என்னையும் அழ வைத்தன. படிப்பது பேருந்தில் என்ற போதும், பிறர் பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்தும், வழியும் கண்ணீரை என்னால் துடைக்கக் கூட முடியவில்லை.

மறுபடியும் அந்நிலைக்குப் பயந்தே, அதன் தொடர்ச்சியான ‘கங்கை கொண்ட சோழன்’ நாவலின் இறுதி அத்தியாயங்களைத் தனிமையில் படித்தேன்.

ஆனால், ஆஹா, தென்னகத்தின் இரு ஒப்பற்ற மாமன்னர்களின் வாழ்வு மட்டுமல்ல மரணமும் கூட இணையற்றதாய் நிகழ்ந்திருக்கிறது.

சேரனை அடக்கி, பாண்டியனை ஒடுக்கி, மேலைச் சாளுக்கியனை விரட்டி, கீழைச் சாளுக்கியனுக்குப் பெண் கொடுத்து பந்தமேற்படுத்தி, சோழ மக்களைப் பாதுகாத்த திருப்தியுடன், சிறை பிடித்த பகை வீரர்களையும் பாங்குடன் நடத்தி, தக்க சன்மானமும் தந்து, கோவில் பணியில் பங்கெடுக்க வைத்து... பிரமிக்க வைக்கும் கலையாய், உள்ளம் சிவனிடம் சரணடையும் வகையாய், பிரகதீஸ்வரர் கோவில் எழுப்பிவிட்ட பேரானந்தத்துடன்... உடையார்குடியில் ஒரு யோகியைப் போல, உடலை உயிர் நீங்குவதை, உணர்ந்து கொண்டே சிவபாதம் சேர்ந்திருக்கிறான் இராஜராஜன் (சிவபாத சேகரன்).

தனயன் இராஜேந்திரனும் அவ்வண்ணமே.

கங்கைவரை வென்று, அந்நதி நீராலேயே, தான் எழுப்பிய கோவிலுக்குக் குடமுழுக்குச் செய்து, சோழனின் பொருளாதாரத்தை, அனைத்து வருணத்தினரின் தரத்தை பலமடங்கு உயர்த்தி, கடல் கடந்து, கீழைத் தேசங்களையெல்லாம் வென்று, அங்கெல்லாம் தமிழரின் ஆளுமையை, ஆதிக்கத்தை, நாகரிகத்தைப் பரப்பிவிட்டு, தன் வயோதிகத்தில், அரசியலிலிருந்து முற்றிலும் விலகி, காஞ்சி அருகே, பிரம்மதேசம் என்னும் கிராமத்தில், பாணர்களின் மத்தியில் பாடல்கள் கேட்டபடி சில ஆண்டுளை இனிமையுடன் கழித்து, பெரும் மன நிறைவுடன், விண்ணுலகு சென்றான் இராஜேந்திரன்.

தமிழரின் இன்றைய நாகரிகத்திற்கு மையம் சோழ மண்டலம். அதன் சரித்திரத்தை, அம்மக்களின் வாழ்க்கையை, வீரத்தை, இவ்விரு மன்னர்களின் கால கட்டத்தை, இரு பெரும் நாவலாய், மொத்தம் பத்து பாகமாய் விவரித்த பாலகுமாரன் அவர்களை வணங்குகிறேன்.

கதாநாயக நாயகிகளை, அரச குடும்பத்தை மையப்படுத்தியே நகரும் சரித்திரக் கதைகளிலிருந்து வேறுபட்டு, பாத்திரங்களை, மக்களை மையப்படுத்தியே கதை நகருகிறது. அடர்த்தியின்றி, சரளமாக, பிரவாகமாகச் செல்லும் நடை. ஆனால் ஆங்காங்கே நின்று, படித்ததை மனம் அலசுகிறது.

இல்லத்தில் ஒரு குடும்பமாய், பணியில் ஒரு குழுவாய் இயங்கவே இன்று நாம் திணறுகிறோம். நேரமில்லை என்று தள்ளிப் போடும் செயல்கள்தான் எத்தனை எத்தனை! ஆனால் தேவரடியார்கள், வேளாளர்கள், வணிகர்கள், கம்மாளர்கள், தச்சர்கள், சிற்பிகள், பஞ்சமர்கள், அந்தணர்கள் என்று மக்கள் பலவாய், தேசம் ஒன்றாய் இயங்கி வளர்வதைக் கண்டுத் திகைக்கிறேன்.

ஏன் இத்தனை பிரிவுகள். ஆசிரியரின் விளக்கத்தில் பலதும் புரிகிறது.

இன்று மழை வருமா? குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாமா? முடிவெடுக்க முடியாமல் திணறுகிறோம். செவ்வாய் கிரகத்தின் பாதையையும், பயணத்தையும் கணக்கிட்டு, இன்ன நேரத்தில் இன்ன திசையில் மங்கள்யான் ஏவப்பட்டால், அது செவ்வாயை சரியாக அடையும் என்று கணினிகளின் துணையுடன் கணக்கிடுகிறோம்.

எந்தப் பருவத்தில் விதைக்க வேண்டும், எந்த நாளில் படை / மரக்கலம் கிளம்ப வேண்டும், எப்போது பகை நாட்டைத் தாக்க வேண்டும் என்பதையெல்லாம் கணிக்க, நட்சத்திரங்களின் நிலைகளை, வானிலைகளை கவனித்து, கையில் வெறும் நூலைத் தொங்கவிட்டு அது அசைவதை வைத்து காற்றின் திசையை, வேகத்தை, அதில் படியும் ஈரத்தை வைத்து மழையின் நிலையை எல்லாம் கணக்கிட வேண்டி... அதற்கு மனம் கவனம் சிதறாமல் ஒருமுகப் பட்டு இருக்கவே வேறெந்தப் பணியிலும் ஈடுபடாமல் ஒரு சாரர் செயல்பட்டனர்.

பந்தை எதிர் கொள்ளும் பேட்ஸ்மெனின் தேவையை பூர்த்தி செய்யவே, ட்வெல்த்-மேன் தேவைப்படுகிறான். பகையை எதிர் கொள்ளும் மறவனின் ஆயுதங்களைச் செய்ய, செப்பனிட, அவன் குதிரைகளுக்கு லாடம் அடிக்க கம்மாளர்கள், குதிரைகளைப் பராமரிக்க பஞ்சமர்கள் இயங்கினார்கள்.

மறவர்களுக்குள் தான் எத்தனைப் பிரிவுகள். வெறுங்கையாலேயே தாக்கும் கைகோளப்படை, முதுகு வாள் படை, மரணம் நிச்சயம் எனத் தெரிந்தே யுத்ததின் முன்னனிக்குச் செல்லும், முனை திரியார், மாமுனை திரியார்... பெரும் பட்டியலே நீள்கிறது. இவர்களை வழி நடத்த உபதளபதி, தளபதி, மாராயர்... மாதண்ட நாயகர் வரை பல நிலையில் தலைவர்கள். ஆசிரியரின் விவரணங்கள் வாய் பிளக்க வைக்கின்றன.

சரித்திரக் கதையின் யுத்த தந்திரங்கள் பெரும்பாலும் அதன் ஆசிரியரின் கற்பனைகளே.

ஆனால் பாலகுமாரன் போர்ப் பகுதிகளைச் சுருக்கி, போருக்கான ஆயத்தங்களை விரிவாக்கியிருக்கிறார். பல இலட்சம் வீரர்கள் புறப்படும் காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன. காடுவெட்டிகள் முன் சென்று மரங்களை வெட்ட, காடு சேறு சரிவுகளில் தச்சர்கள் பலகைகளுடன் பாதையமைக்க, சமைப்பவர்கள் தானியங்களைச் சேகரித்து உணவிட, மறவரில் முன்னனியினர் தாக்க, கைப்பற்றியதை பின்னனியினர் காக்க... ம்ஹூம், இதை மேலும் விளக்க, மீண்டும் நாவலை நான் புரட்ட வேண்டும்.

போர் விவரங்கள் மட்டுமல்ல...

சிற்பங்கள் செதுக்குவது, ஐம்பொன் சிலைகள் வடிப்பது, கோவில், மரக்கலம் கட்டுவது, கடலில் நீரோட்டம் பிடிப்பது... என்சைக்ளோபீடியா போல், ஆனால் புள்ளி விவரங்களாகத் தந்து விடாமல், கதையின் ஓட்டத்திலேயே பெரும் தகவல்களை ஆசிரியர் தந்த விதம் அற்புதம்.

பாத்திரப் படைப்புகள் வாழ்க்கைப் பாடமே நடத்துகின்றன. பெண் பாத்திரங்கள் படிப்பவரை நிச்சயம் ஆட்டம் காண வைக்கும். அவரவர் வாழ்க்கையோடு ஒப்பிட்டுக் கதற வைக்கும். பெண்ணிற்குப் பிரதான இலக்கணம் இராஜராஜரின் அனுக்கி பஞ்சவன் மாதேவி. எதிர்மறை அவர் மகள் குந்தவை. இவளால் நிர்க்கதியில் உயிர்விடும் கீழைச் சாளுக்கிய மன்னன் விமலாதித்தனைப் போன்றவர் இன்றும் ஏராளம்.

காலம் போடும் கணக்குகள் திகைக்க வைக்கின்றன. 10+ மனைவிகளிருந்தும் இராஜராஜனுக்கு ஒரே மகன். இரு மகள்களும் தடம்மாற, இராஜேந்திரனோ மூர்க்கத் தனத்துடன் வளர்கிறான். பின் பக்குவப்படும் அவனுக்கு 7 மகன்கள். அவர்கள் கச்சிதமாக வளர்கிறார்கள். பரந்த சாம்ராஜ்யப் பகுதிகளை  திட்டம் போட்டு ஒற்றுமையாய் நிர்வகிக்கிறார்கள். சிறிது காலமே வாழும் கடைசி மகன், சோழ கேரளாந்தகன் (கேரளத்தை நிர்வகித்தவன்) உள்ளத்தை பெரிதும் கொள்ளை கொள்கிறான். மீண்டும் சரித்திரத்தின் விசித்திரம். இவர்கள் யாவருக்குமே பிள்ளையில்லை. (கதையின் காலத்திற்குப் பின் விமலாதித்தனின் பேரன் அநபாயன் குலோத்துங்கன் சோழ அரியணை ஏறுவான்.)

பல சம்பவங்கள், கதையைப் படித்து முடித்த பின்பும், பல நாட்களுக்குப் மனதில் பசுமையாகத் தொடர்கிறது.

உதாரணம். இருட்டில், சலசலக்கும் காவிரி நீரோட்டதின் மேல், ஆசனமிட்டு இராஜராஜனும் இராஜேந்திரனும் தனிமையில் உரையாடுவது அனாயாசமாக, 80 பக்கங்களைக் கடக்கிறது. அதுவரை தந்தையுடன் பலதில் முரண்பட்ட இராஜேந்திரன் மெல்ல மெல்ல உணரத் தொடங்குவதைப் படிக்கும் எந்த தந்தையின் உதடும் முறுவலிக்கும்.

இதைப் போலவே சின்னச்சின்ன காட்சிகளும்.

கோவில் கட்டுமிடத்தில் கட்டிலில் அமர்ந்து விவாதிக்கும் இராஜராஜன் அப்படியே கண்ணயர்ந்துவிட, அடுத்த நொடியே ஒரு தாதி வெண்பட்டைப் போர்த்த, இருவர் விசிறத் தொடங்க, மெய்க்காவல் படை தம் குதிரைகளின் கனைப்பு அரசரின் உறக்கத்தைக் கலைத்து விடக்கூடாது என்று அவற்றை சற்று தொலைவிற்கு அனுப்புவதெல்லாம் ஹைகூ.

உடையார் நாவலின் கரு, தஞ்சைக் கோவிலை எழுப்புதல். கங்கை கொண்ட சோழன் நாவலின் கரு கங்கை மற்றும் கடாரத்தின் மீது படையெடுப்பு. இரண்டுமே இரு மன்னரின் தனிப்பட்ட சிந்தனைகள். செயல்படுத்த இரண்டிற்கும் எந்த முன்மாதிரியும் கிடையாது. பலர் ஆதரவும் கிடையாது. அதை அவர்கள் சாதித்தபோது சோழனின், தமிழனின் வாழ்வு பலமடங்கு உயர்ந்து விட்டது.

இந்நோக்கங்களை அடைவதற்குள்தான் எத்தனை எத்தனை சோதனைகள். பிரச்னைகள். ஒரு பெண்ணோ, வீரனோ எந்த முன்யோசனையும் இன்றி செய்யும் ஒரு சிறு தவறு, ஒன்றன்பின் ஒன்றாய் பல்கிப்பெருகி, பெரும் கலவரமாகி, நோக்கத்திற்கே ஊறு விளைவிப்பதும், அதை இரு அரசர்களும் கடந்து சென்று, இலக்கை அடைவதை, ஆசிரியர் பாடமாய்ச் சொன்னது, நம் வாழ்க்கையில் எந்த முயற்சிக்கும் துணை வரும்.

இரு மன்னர்களை நினைத்து நினைத்து நெஞ்சு நிமிர்கிறது. பழையாறை, தஞ்சை, அமண்குடி, உடையார்குடி, மீன்சுருட்டி போன்ற பெயர்களைக் கேட்கும் போதே அது குளிர்கிறது. அவர்கள் வாழ்ந்த ஊர்களுக்கு, எழுப்பிய ஆலயங்களுக்குச் செல்லும் போது, பாலகுமாரன் விவரித்த காட்சிகளை கண்முன் நிறுத்தி, அக்காலத்திற்கே சென்று ஆனந்த சுகத்தில் லயிக்கிறது.

ஆனால் அதே கணம்...

இராஜேந்திரன் வென்ற தேசத்தவனாய் நினைக்கையில் குலை நடுங்குகிறது. கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா ஜிம்பாப்வேயை அடித்து நொறுக்குவதைப் போலத்தான், பல இலட்சம் வீரர்களுடன் சென்று... மேலைச் சாளுக்கியம், தட்சிணலாடம், உத்திரலாடம், ரோஹணம், இலங்கா சோகம், கடாரம்... இன்னும் பல தேசங்களைத் துவம்சம் செய்திருக்கிறான்.

அடுத்த பத்து இருபது ஆண்டுகளுக்கு எழ முடியாமல் நகரங்களைத் தரைமட்டமாக்கி, கடுகை விதைத்து விளைநிலங்களையும் மலடாக்கியிருக்கிறான். பாத்திரங்கள், பெண்டிர், செல்வம், புத்தர் பொற்சிலைகள், ஏன் கோவிலிலிருந்து காளி சிலைகளையும் பெயர்த்துக் கொண்டு வந்திருக்கிறான். மெல்ல அந்த தேசம் துளிர்க்கின்ற போது அவன் மகன் இராஜாதிராஜன் மீண்டும் படையெடுத்து அழித்து வந்திருக்கிறான். யுத்தத்தின் கோரத்தை, தோற்குமிடத்தின் அவலத்தை, வென்ற தேசமே ஆயினும் மரணமடைந்த வீரர்களின் குடும்ப நிலையையும், விதவைகள் பெருகுவதையும் வேறு எந்த சரித்திரக் கதையிலும் இல்லாத அளவிற்கு விவரித்திருக்கிறார் பாலகுமாரன்.

இந்தப் பாவங்களினாலோ என்னவோ... முன்னூறு வருடங்களுக்குப் பின், பாண்டியனால், மற்றொரு தமிழனால், அற்புதமாக நிர்மாணிக்கப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம், ஒரு தூண்கூட நிற்க விடாமல், அழிக்கப் பட்டிருக்கிறது. தமிழன் மட்டும் ஒற்றுமையாய் இருந்திருந்தால், உலகையே ஆண்டிருப்பான். என்ன செய்ய, இது விதி, இது விதி, இது விதி என்று ஆசிரியர் முடித்த போது, அது தந்த வலி மறையவே எனக்கு சில நாட்கள் பிடித்தது.

ம்ம். இது பத்து பாகம் கொண்ட நெடுங்கதை. குறைகளும் உண்டு. பல சின்னச் சின்ன சம்பவங்கள், தொடர்ச்சியின்றி அப்படியே நின்று விடுகின்றன. உதா: நரேந்திரன் இராஜேந்திரனுக்கு எழுதும் ஓலை, மேலைச் சாளுக்கியரிடம் சிக்க, அவர்கள் அவர்களுடைய மன்னனுக்கு எழுதியது போல் மாற்றி, வேண்டுமென்றே சோழ ஒற்றர்களிடம் சிக்க விடுவது. பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டிய இடம் இது. ஆனால் இது தொடரவே இல்லை. கால இடைவெளிகளும் குழப்புகின்றன. இராஜேந்திரனின் மனைவியின் பெயரும் பஞ்சவன்மாதேவி என்று வருவது சற்றே குழப்புகிறது. சொற்பிழைகளும் உண்டு: மூன்று மரக்கலம் (மரக்கால்) நெல். சின்னச் சின்னதாய் இது போன்ற பிழைகள், கதையை லயித்துப் படிக்கும் போது நெருடுகின்றன.

பாலகுமாரன் உயிரைப் பணயம் வைத்து எழுதிய கதை. மருத்துவர் நம்பிக்கையை இழந்த நிலையிலும், மீண்டும் எழுத வேண்டுமே என்ற எண்ண வலிமையினாலேயே மீண்டு படைத்த கதை. எழுத முடியாமல், வாயால் சொல்லி, ஒலிப்பதிவு செய்யப்பட்டு, அவரது உதவியாளரால் எழுத்தாக்கப்பட்ட கதை. இதனால் ஏற்பட்ட குறைகள் களையப்பட வேண்டும் என விரும்புகிறேன்.

பாலகுமாரன், வரலாற்றைச் சொல்லி, நம் பண்பாட்டைக் காட்டி, பற்பல சாதனைகளை, நெறிமுறைகளை விளக்கி, மனதிற்குப் பற்பல உணர்ச்சிகளைத் தந்து, அதைப் பக்குவப் படுத்தி புதிய தேடலுக்கும் வித்திட்டுவிட்டார்.

நன்றி ஐயா.

தொடர்புடைய பதிவு:

Thursday, July 31, 2014

இராஜேந்திர சோழன் அரியணை ஏறிய 1000-ஆவது ஆண்டு விழா

மாமன்னன் இராஜேந்திர சோழன் அரியணை ஏறிய 1000-ஆவது ஆண்டு விழா கங்கை கொண்ட சோழபுரத்தில்,  ஜூலை 25-ஆம் தேதி நிறைவாக நடந்தது. இம்மன்னன் தன் தந்தை இராஜராஜனைப் போல், இன்றைய தலைமுறை மக்களின் மனதில் அரியாசனமிட்டு அமர, இவ்விழா விதை விதைத்திருக்கிறது.

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல், இராஜராஜனை அருண்மொழி வர்மனாய், பல மக்களிடம் அவர்கள் குடும்பத்தில் ஒருவராய்ச் சொந்தமாக்கிவிட, அது போன்ற ஒரு பந்தம், தந்தையை மிஞ்சிய தனயன் இராஜேந்திரனுக்கு ஏனோ கிடைக்கவில்லை.

கல்கி, இராஜராஜன் இளவரசனாக இருக்கும் போதே கதையை முடித்துவிட, அங்கிருந்து அவன் மாமன்னனாகி, சிறந்த ஆட்சி தந்து, இம்மண் உள்ளளவும் தமிழரின் திறனை, நாகரிகத்தைப் பறைசாற்ற பெருங்கோவில் எழுப்பியதை, பாலகுமாரன் ஆறு பாக உடையார் நாவலில் அற்புதமாக விவரித்திருந்தார்.

தன் எண்ணங்களை, உணர்வுகளை, நினைவுகளை சோழ சரித்திரத்தில் சஞ்சரிக்கவிட்டு எழுதிய பெரும் பணியை, மேலும் தவமாக்கி, கர்மமாக்கி, அதன் வலிமையாலேயே தன் உயிரையும் மீட்டு, நான்கு பாகமாய் “கங்கை கொண்ட சோழன்” நாவலைப் படைக்க, இராஜேந்திரனின் கீர்த்தியின் மேல் இன்று புது வெளிச்சம் விழுந்துள்ளது.

இவ்விரு படைப்புகளும் என் சிந்தனைகளைப் புரட்டிப் போட்டன. இவன் தலைநகர் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு, பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் செல்லும் ஆவல் எனக்கு அதிகரிக்க...

அவ்விடத்தில் வசிக்கும் ராஜாராம் கோமகன் என்பவர், இராஜேந்திரன் அரியணை ஏறிய 1000-ஆம் ஆண்டை, விழாவாகக் கொண்டாடுகிறார்... அனைவரும் வாருங்கள் என பாலகுமாரன் நாளிதழில், வார இதழில், தொலைக்காட்சியில் அழைக்க...

ஜூலை 25-ஆம் தேதி, கங்கை கொண்ட சோழபுரத்தில், சோழ அரண்மனை அகழாய்வு செய்யப்பட்ட, மாளிகை மேட்டை, நான் சரியாக மாலை 4-மணிக்கு அடைய, வாத்திய ஒலிகளுடன் விழா துவங்கியது.

பாலகுமாரன் மற்றும் இராஜேந்திரனைப் பற்றி எழுதிய, ஆராய்ச்சி செய்த குடவாயில் பாலசுப்ரமணியன் போன்ற அறிஞர்களுக்கெல்லாம், மரியாதை செய்து, மலர்க் கிரீடம் அணிவித்து, அவர்களை ரதம் போன்ற வண்டியில் அமர்த்தி, யானைகள் முன் செல்ல, இராஜேந்திரன் கட்டிய கோவிலுக்கு (இதுவும் பிரகதீஸ்வரர் கோவில்தான்) அழைத்துச் சென்றனர்.

அனைவரும் அகன்ற பின், அவ்விடத்தில் காற்று மட்டும் துணையிருக்க, அகழாய்ந்த பள்ளத்தில், அரண்மனைச் சுவர்களின் அடித்தளத்தின் மேல் இருந்த, ஓரடி சதுர கல்லின் மேல் அமர்ந்தேன். மூடிய கண்முன் சோழனின் கலம் ஓடிய காலம் விரிந்தது.

ஒரு மனிதனின் சொல்லுக்கு ஒன்பது லட்சம் வீரர்கள் அசைந்திருக்கிறார்கள்.

கீழைத் தேசங்களையும் உள்ளடக்கி, பிரம்மாண்ட சாம்ராஜ்யத்தை, பிரமிக்க வைக்கும் நிர்வாகத்தை, பொருளாதார விருத்தியை, நாகரிக மேன்மையை, அனைத்து தரப்பு மக்களும் இணைந்து உயர்ந்த நிலையை... இதோ இந்த இடத்திலிருந்து நிகழ்த்தியிருக்கிறான் இராஜேந்திரன்.

இவன் வம்சம் மேலும் தொடர்ந்து 280+ ஆண்டுகளுக்கு கோலோச்சியிருக்கிறது. இச் சாதனைகள் எல்லாம் நமக்கு பெரும் பாடங்கள்.

எந்த வளர்ச்சியும், விருத்தியும், விஸ்தரிப்பும் ஒரு நாள் ஒடுங்கும். பிரம்மாண்ட கோட்டை கொத்தளங்களும், ராஜ வீதிகளும், மாட மாளிகைகளெல்லாம் மண் மேடாகி, ஒரு சில சுவடுகள் மட்டும், இன்று இங்கு எஞ்சியிருப்பதும் நமக்கு பாடமே.

ஊர்வலம் கோயிலை அடைந்த சமயத்தில் அதனுடன் இணைந்தேன். பெரும் கூட்டம் கூடியிருந்தது. ஆயிரம் தீபங்கள் ஏற்றப்பட்டன.

விழா மேடையில் நாட்டியாஞ்சலிக்குப் பின் அறிஞர்கள் பேசினார்கள். முனைவர் பொற்கோ தொடங்கிட, பின் பாலகுமாரன் தொடர்ந்தார். ‘இராஜேந்திரனைப் பற்றிப் பேசும் முன் இப்படி ஒரு அற்புத விழாவை ஒருங்கிணைந்து முனைந்து நடந்திய இராஜாராம் கோமகனைப் பற்றி நாலு வார்த்தையாவது பேச வேண்டாமா? எனக் கேட்டு அவரைச் சிறப்பித்துச் சொல்ல அதை மேடை ஓரத்தில், சிறு புன்னகையுடன், தன்னடக்கத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார் கோமகன்.

எந்த நேரத்தில் எந்தத் தகவலைக் கேட்டாலும் அள்ளிக் கொடுத்த குடவாயில் பாலசுப்ரமணியன், முனைவர் இராஜேந்திரன்... இவர்களின் உதவியால்தான் என்னால் நாவல்களைப் படைக்க முடிந்தது என அவர்களுக்குத் தன் நன்றியைத் தெரிவித்தார்.

உங்கள் பிள்ளைகளை ஊட்டி, ஏற்காட்டிற்கு அழைத்துச் செல்வது போல, தஞ்சைக்கும் கங்கை கொண்ட சோழபுரத்திற்கும் அழைத்து வாருங்கள். இக் கோவில்களின் மேன்மைகளை அவர்களுக்குச் சிறு வயதிலேயே சொல்லிக் கொடுங்கள் எனக் கேட்டுக் கொண்டு பேச்சை முடித்தார்.

பின் தொடர்ந்த முனைவர் இராஜேந்திரன் (ஆணையர், வேளாண் துறை) மன்னனைப் பற்றிய பல அரிய தகவல்களைத் தொகுத்துப் பேசினார். வெட்டனும், நட்டனும், கட்டனும்... இம்மூன்றையும் சிறப்பாகச் செய்தவன் இராஜேந்திரன் என்று நயமாகச் சொன்னார். அதாவது, குளங்கள் வெட்டனும், வெற்றிக் கொடி நட்டனும், கோவில் கட்டனும். இவன் மட்டும் கிழக்கே செல்லாமல், மேற்கே தன் படைகளைத் திருப்பியிருந்தால்... கஜினி முகமது முறியடிக்கப்பட்டிருப்பான். ஆப்கானின் ஊடுருவல்கள் தடுக்கப்பட்டிருக்கும். இந்தியாவின் சரித்திரம் மாறியிருக்கும் என தன் ஆதங்கத்தைப் பதிவு செய்தார். இருப்பினும் கிழக்கே தமிழர்கள் பரந்ததற்கு, மலேசியாவில் தை பூசத்திற்கு தேசிய விடுமுறை விடுவதற்கெல்லாம் இவனே காரணம் என்றார்.

மற்றவரும் தொடர்ந்து பேச விழா நடந்தது. ஒவ்வொருவரின் பேச்சையும், கலையாமல், ஆவலாகக் கேட்ட மக்கள் கூட்டத்தைக் கண்டு மகிழ்ந்தேன். பெரும்பாலும் சுற்றுப்புற மக்கள். கோவிலுக்கு வெளியே வெகுவாய் நீண்டிருந்த கார்களின் வரிசை பலரின் வருகையையும் சொல்லியது.

குடும்பமாக வந்திருந்த கூட்டத்தினரிடம் இருந்த மலர்ச்சி என்னையும் பற்றிக் கொண்டது. எந்த அவசரமும் இன்றி, தன் வீட்டு விழா போல், தன்னை அலங்கரித்துப் பங்கெடுத்து, தீபமேற்றி, அமைதியாய் தாமே வரிசையில் நின்று, உள்ளே இறையை தரிசித்து, விழா மேடைமுன் குழுமியதை நான் பார்த்தது, அங்கு பரந்திருந்த பசும் புல் தரையைவிட எனக்கு இதமாக இருந்தது.

மன்னா, இராஜேந்திரா உன் ஆன்மா இன்னமும் இங்கு உலவுவதை உணர்கிறேன். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பும் இங்கே மகிழ்ச்சியைத் தழைக்க வைக்கிறாய். மக்களை உன் பெயரால் ஒருங்கிணைக்கிறாய். குழுவாய்ச் செயல்பட்டு மேம்படவும் வழி நடத்துகிறாய். வணங்குகிறேன். உன் கீர்த்தி ஓங்குக.

இரவு கும்பகோணத்தில் தங்கினேன். இம்மண்ணின் மக்களுக்கு, விழாவின் நாயகர்களுக்கு, குறிப்பாக கோமகனுக்கு மானசீகமாய் நன்றி சொல்லி மன நிறைவுடன் படுத்தேன்.

மோசமான உடல் நிலையிலும் தன் உயிரைப் பயணம் வைத்து, மருத்துவர் துணையுடன் கங்கைவரை பயணம் செய்து, சோழன் சென்ற பாதைகளை கவனித்து, ஆயிரமாண்டிற்கு முந்தைய சோழ சாம்ராஜ்யத்தை நமக்கு எழுத்து மூலம் மீட்டுக் காட்டிய எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் நாவல் காட்சிகள் என்னைத் தாலாட்டி உறங்க வைத்தன.