Showing posts with label நாவல். Show all posts
Showing posts with label நாவல். Show all posts

Sunday, February 23, 2020

சத்யானந்தனின் புது-பஸ்டாண்ட்

சிலருக்கு பண்டைய வரலாறு இனிக்கும். சிலருக்கு இக்கால அரசியலும் காதலும் தித்திக்கும். சிலருக்கு எதிர்கால விஞ்ஞானம் சுவைக்கும். இவ்வனைத்தையும் புலிவலம், திருவள்ளரை, துறையூர், திருச்சி சுற்றிய பகுதிகளை ஒட்டி கடந்த காலம் கி.பி 600-1300, நிகழ்காலம், சற்று எதிர்காலம் 2040-2070 கொண்டு 180 பக்கங்களுடன் ஒரு கையடக்க நாவலாய் ‘புது பஸ்டாண்ட்’-ஐ எளிமையான நடையில் படைத்திருக்கிறார் சத்யானந்தன்.

இந்நாவல், படிப்பவர் தன் ஞாபகச் சக்தியைப் பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளும்படியாகவும் வடிக்கப்பட்டிருக்கிறது. சட்டெனக் கீழே விழுந்துச் சிதறும் குண்டு மணிகளைப் போல் பல சம்பவங்கள் - மூன்று காலப் பரப்பில் - ஒரே  நேர்க் கோட்டில் அல்லாமல், விதவித வழிகளில் தொகுக்கப்பட்டிருகின்றன. சற்று அசந்தால், அல்லது சிறு இடைவெளி விட்டுப் படித்தால் பாத்திரங்களின் பெயர்களும் சம்பவங்களும் மறந்தே போய்விடும்.

திருவள்ளரை வைணவக் கோவிலின் பூர்த்தியாகாத ராஜகோபுரத்தை மையப்படுத்தி கதையின் களம் அமைக்கப்பட்டிருக்கிறது. பல சிந்தனைகளைத் தூண்டிவிடுகிறது முன்னுரையில் வரும் ஒரு வரி - “இன்று நாம் ஓர் இரவுப் பயணத்துக்குள் கடந்து விடும் நிலப்பரப்பை ஒரு காலத்தில் நான்கு மன்னர்கள் ஆண்டனர்”. ம்ம், பல்லவன் போரில் தோற்க, சோழனிடம் ஆட்சி மாறியபின் கோபுரம் கட்டும் பணி நிற்கிறது. ஆனால் இப்பணியாலும், போராலும் சாமானிய மக்களிடம் நிகழும் தாக்கமே பிரதானமாகக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. கோவில் பணிக்குச் கல்தச்சர்கள் சென்று விட, அம்மி, ஆட்டுகல் கொத்தித் தருவதற்குக் கூட ஆளில்லை. ஒரு போர் நிகழும் போது கள்வரிடமிருந்து காக்கவும் வீரரில்லை... எந்த ஒரு காலத்திலும், எந்த ஒரு இடத்திலும் ஒரு பெரும் தொழில்/வேலை தொடங்கப்படும் போது, சுற்றுப் புற மக்களுக்கு வேலை கிடைக்கும் அதே சமயம், கடைப் பணிக்கும், வீட்டுப் பணிக்கும், கூலிக்கும் ஆட்கள் அற்றுப் போகும் அவலமும் சேர்ந்தே நிகழ்கிறது. 

அதனுடன் காலங்காலமாய்த் தொடரும் சாதிப் பிரச்சினைகளும், தீண்டாமைகளும், இதையும் மீறிப் பூக்கும் காதல்களும், காமமும், அதன் விளைவுகளும் காட்சிப் படுத்தப்படுகின்றன. ஆயர் குலப் பெண், கல்தச்சனின் வீட்டு வாயிலிலேயே நிற்பதும், இளவயதில் திருமணமாகி பூப்பெய்தும் முன்பே கணவனை இழந்த புலையர் பெண் வள்ளி, போரில் முடவனான சஞ்சீவனைக் காதலிப்பதும், சங்கரனின் தந்தை நடுநிசியில் தேவதாசி பெருந்தேவி வீட்டிற்குச் செல்வதும்... பலவாறு படிப்பவரின் மனதை அசைத்து விடுகின்றன.

இவை இப்படியே இன்றும் தொடர்வது, இவைதான் நம் அடையாளங்களா என்றும் திகைக்க வைக்கிறது. ஆனால் மாலா தன் தாய்க்காகத் தெளிந்து அறிவழகனை விட்டு விலகும் முதிர்ச்சி நம்மை ஆசுவாசப்படுத்துகிறது. இவள் குலத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலம், கொடுக்கப்படாமல் ஏமாற்றப்படுவதும், புது பஸ்டாண்டை  அரசியல் லாபங்களுக்காக கொண்டு வர முனைவதும், அதை ஒட்டிய போராட்டங்களும், வாழ்வாதாரங்களும், திரைமறைவு செயல்பாடுகளும்... குவாரி, கிரானைட், ரியல் எஸ்டேட், செம்மரக் கடத்தல், கந்து வட்டி, நக்ஸலைட்கள், ஃபைனான்ஸ் கம்பெனி, ஆள் கடத்தல் எனப் பலதும் இங்கே கோர்க்கப்பட்டிருக்கிறது. அற்புத திராவிட கழகம் (அ.தி.க), தமேஸான் என்றெல்லாம் சூட்டப்பட்ட பெயர்களால் இக்காலத்தின் பிரதிபலிப்பை படிப்பவர் சுலபமாக உணரலாம். மக்களின் கவனத்தை திசை திருப்பும் உத்திகள் அரசாட்சி முதலாய் நடப்பது சில பத்திகளிலேயே பட்டவர்த்தனம்.

ஒரு பேட்ஸ்மென், முதல் சில பந்துக்களை விட்டுவிட்டு, பிட்சின் தன்மையை உணர்ந்தபின் ஆடத் தொடங்குவது போலத்தான், இந்நாவலின் முதல் சில அத்தியாங்களை நிதானமாகப் படித்தபின்பே வேகமெடுக்க வேண்டும். எந்த ஒரு அறிகுறியுமின்றி, அடுத்த பத்தியிலேயே காலமும் காட்சியும் மாறும். அச்சுப் பிழையோ என்றும் நினைத்தேன். ஆனால் இது ஒரு உத்தி  எனப் புலப்பட்டபின், நினைவில் நிறுத்திப் படிக்கும் விதமாய்த் தொடர்ந்தேன். ஆனாலும், பல சம்பவங்கள் தொடர்ச்சியின்றி தனித்தீவுகளாய் நிற்கும். அதனுடன், பட்சிகளுக்குள் உரையாடல், நாய்க்கும் மனிதனுக்கும், ஒட்டகத்துக்கும் மனிதனுக்கும் உடைரயாடல் என்று துணுக்குகளும் உண்டு. சிலதில் ஒரு தகவலிருக்கும். சிலது வெறுமனே கடந்தும் செல்லும்.

எதிர்காலச் சம்பவங்கள் மிக நேர்த்தியாகத்தான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் வெகு விரைவில் மாற்றங்களைக் காணும் நமக்கு  இதன் சில பகுதிகளில் பட்டம் படிக்கும் விதம், உணவகத்தில் ரோபோக்கள், வேற்று கிரக உயிருடன் உரையாடல்... போன்றவை வசீகரிக்கவில்லை.

எங்கோ தடம் மாறி சென்று விட்ட நாம், இயற்கை விவசாயத்தை நோக்கி மெல்ல திரும்பத் தொடங்கியிருக்கிறோம். இதன் உச்சம் இனி வரும் சில பத்தாண்டுகளிலேயே நிகழ்வதாய்... அறிவழகனின் தந்தை மணவாளன் மூலம், வானம் பார்த்த பூமிகளில் சொட்டு நீர்ப் பாசனம்... விதை நடும் ரோபோக்கள்... பூச்சிக் கொல்லி மருந்துகளை அறவே தவிர்த்து பெரிய பெரிய வெட்டுக் கிளிகளை உண்ணும் க்ளோனிங் செய்யப்பட்ட ராட்சதத் தவளை... சரியும் மக்கள் தொகை.. விரியும் காடுகள் / நீர்ப் பரப்புகள் என்றெல்லாம், பலரின் கனவுகளும், ஆசைகளும்,  முன்னெடுப்புகளும் இப்புத்தகத்தில் பூர்த்தியாவது போல நிகழ வேண்டுமென்பதே படித்து முடிப்பவரின் வேண்டுதலாய் இருக்கும்.

ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்பும், திருச்சி ராஜ கோபுரம் எழும்பியதைப்போல்,  திருவள்ளரை கோபுரத்தோடு தமிழகமெங்கும் இன்னமும் வலுவான அடித்தளமுடன் இருக்கும் பீடங்களின் மேல் கோபுரங்கள் எழும்பட்டும். அதனுடன் இம்மண்ணின் வளமும், மக்களின் நலமும் உயரட்டும். அதைக் கண்டு இந்நூலாசிரியரின் மனம் நிறையட்டும்.

வெளியீடு: Zero Degree Publishing
சுட்டி: புது-பஸ்டாண்ட்

Thursday, November 29, 2018

பா. ராகவனின் யதி

திரு. பா. ராகவன் அவர்கள், தினமணி.காம்-இல் ‘யதி’ என்னும் பெருந் தொடரை எழுதியிருக்கிறார். அதற்கான எனது விமர்சனம் அவரது வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

அடேய் கிராதகா! உன் யதியைப் படிக்க, மூச்சுப் பயிற்சியெல்லாம் செய்ய வேண்டுமா?
இதயம் அதிகமாய்ப் படபடத்தது. சமயத்தில் சில துடிப்புகள் சில நொடிகளுக்கு நின்று மீண்டன. படித்து முடித்த போது புயல் தாண்டவமாடிக் கடந்த நிலமாய் என் மனம். நிசப்தத்தில் செவி. வானை வெறித்தபடி விழிகள். இன்னும் சில நாட்களுக்கு யதிலிருந்து மீள முடியாது என்று நினைக்கிறேன்.
இது வீட்டை விட்டு விலகி துறவு பூண்ட நான்கு சகோதரர்களின் கதை...

நன்றி பா. ராகவன்.

Saturday, May 4, 2013

இரா. முருகனின் ‘அரசூர் வம்சம்’


கற்பனை. இதன் வளத்தையும், ஆற்றலையும் கொண்டு, தனக்கென ஓர் உலகைச் சிருஷ்டிக்கும் லயம் ஒரு மனிதனுக்கு வசப்பட்டு விட்டால், காலத்தின் வரிசைகளைக் கூட மாற்றியமைத்து அதில் தன்னிஷ்டம் போல் சஞ்சரிக்க முடியும். அப்படி காலம் மூன்றையும் ஸ்டெம்புகளாக நட்டு, இரா. முருகன் சார் ஆடிய மேட்ச் - அரசூர் வம்சம் - நாவல்.

2004-ல் வெளிவந்த நாவலுக்கு, இப்போது எதற்கு விமர்சனம்?

அவருடைய சமீபத்திய நாவல் - விஸ்வரூபம். அதன் வெளியீட்டு விழாவிற்கு என்னையும் அன்போடு அழைத்திருந்தார். எண்ணற்ற இலக்கியம் படைக்கும் அவர் கையெழுத்துடன், வாழ்த்தெழுத்துடன் அந்நாவலை வாங்கினேன். அது அரசூர் வம்சத்தின் தொடர்ச்சி. அதைப் இப்போது படித்ததால் விமர்சனம்...

மேலும் படிக்க ஆசிரியரின் வலைத்தள சுட்டியைக் கிளிக்கவும்.

Friday, April 1, 2011

இரா. முருகனின் “மூன்று விரல்”


கணினித்துறையில் இருந்தபடியே எழுத்துலகில் கோலோச்சும் இரா. முருகன் அவர்களின், அத்துறையின் வாழ்வு தழுவிய நாவலே “மூன்று விரல்”.

மென்பொருள் உலகின் மாயைகளை, நிலையற்ற தன்மைகளை, குறுகிய கால ஏற்றங்களை, படுபாதாள வீழ்ச்சிகளை, கூடிப் பிரியும் நட்புகளை, ஈரமற்ற மனங்களை, நாயகன் சுதர்சனனின் பயணத்தில் கோர்வையான நிகழ்ச்சிகளாகத் தொகுத்திருக்கிறார்.

முதல் பக்கமே மென்பொருள் உலகின் பாதக முகத்தை, அதன் ஒப்பனையை பட்டவர்த்தனமாக வெளுக்க வைக்கிறது. நாய் வளர்ப்போர் சங்கத்துக்கான சாஃப்ட்வேரில் துவங்கும் கதை, பாத்திரங்களை விற்பவர்கள் கூட தங்களுக்கும் ஒரு சாஃப்ட்வேர் வேண்டுமென்பதும், அதையே சாக்கிட்டு பெட்டிக்கடைகள் கூட, சில கம்ப்யூட்டர்களை வைத்தே சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட் கம்பெனியென சுயபட்டம் சூட்டிக் கொண்ட காலகட்டத்தை அப்பட்டமாகக் காட்டுகிறது.

கதையின் களமும் போக்கும் கச்சிதமாக அமைந்திருக்கிறது. மென்பொருள் துறையைச் சார்ந்ததென்றாலும், ஒரு மென்பொருளாளன் (சுருக்கமாக... மென்னவன்!) அனுதினமும் கணினியே கதியெனக் கிடப்பது போல், அத்துறையின் வலைகளிலேயே சிக்கிவிடாமல், கிராமம், காதல், பல மனிதர்களின் முகங்கள்/மனங்கள் எனப் பல துடுப்புகளுடன் பயணிக்கிறது கதை. அதே கணம் அத்துறையின் கீழ் நிலைகளை கோடிட்டுக் காட்டவும் அது தவறவில்லை.

ஒரு உதாரணம். சுதர்சன் தன் கிராமத்து வீட்டில் நுழையுமிடம். வாழ்வு முழுவதும் ஆனந்தமாக இருக்கத்தான், சீரான இடைவெளியில் பண்டிகைகளைக் கொண்டாடும்படி நம் முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். பெற்றவரை, பிறந்த மண்ணை விட்டு வெகு தொலைவு சென்றுவிடும் மென்னவன் இவற்றை முற்றிலும் இழக்கிறான். அவன் காலண்டரில், சிகப்பில் தேதி ஒளிர்வது புராஜெக்ட் டெட்லைன் மட்டுமே. இவ்வவல நிலையைத்தான் வீட்டினுள் நுழையும் சுதர்சன் மாக்கோலக் கால்களைக் கண்டு “எப்போது கிருஷ்ண ஜெயந்தி வந்து போனது?” எனக் கேட்கும் கேள்வி கோலத்தால் கோடிட்டுக் காட்டுகிறது.

நாவல் நெடுகிலும் வரும் உவமைகள் அழகு. நாயகிகள் சந்தியாவும் புஷ்பாவும் ஒருசேர தன்னை கேலி செய்வதாய் சுதர்சன் நினைக்குமிடத்தில், எந்தவொரு பூடகமும் இன்றி நுழையும் ஒற்றை வரி; “இவன் இளைய பல்லவனும் அல்ல. இது சாண்டில்யன் கதையும் அல்ல.” இந்த அட்டகாச சரித்திர உவமை தந்த பாதிப்பிலிருந்து விடுபடவே எனக்கு பல நாழிகை(!) பிடித்தது.

ஆங்காங்கே சில விசயங்களை ஆசிரியரின் பேனா உரசுகிறது. அப்துல் கலாமிற்கு வைத்தியம் பார்த்து, அவருடன் எடுத்த படத்தை சுவரில் மாட்டி, தன் சன்மானத்தை உயர்த்தும் டாக்டரைப் போல, பில்கேட்ஸுடன் எடுத்த போட்டோவை வைத்து ட்ரெயினிங் கம்பெனி நடத்துபவர்களை நோக்கி மறைமுகமாகச் சொடுக்கிய சாட்டை சபாஷ். ATL COM கோர்ஸூக்காக நிலங்களை விற்ற நபர்களை நான் கண்டிருக்கிறேன்.

பாத்திரங்கள் வெகு நுணுக்கமாகச் செதுக்கப் பட்டிருக்கின்றன. துறைமாட்சி இல்லாமல் சண்டித்தனம் செய்யும் ரங்கா, மனிதர்களை கத்திரிக்காய் கூறாய் விற்கும் கன்சல்டென்சி பலா, அபூர்வ புரொபஷலனாய் ஒளிவிடும் அவ்தார் சிங், மாற்றங்களை இழப்புகளை முறுவலித்து ஏற்கும் லண்டன் ஜெப்ரி, கிளையண்டாக இருந்தும் இக்கட்டில் முதல் நபராய் ஆதரவு நல்கும் தாய்லாந்து குன் தாங்க்லோர்... ம்ஹீம்... எவரையும் விட்டுவிட முடியவில்லை. உடல் பாதிக்கப்பட்டும் உழைக்கும் ராவை, ஒரு இரவில் பணத்தை மட்டும் பிரதானமாகக் கருதும் நீரஜ் மறந்து போகலாம். ஆனால் குழந்தை முக கண்ணாத்தா உட்பட எந்தப் பாத்திரத்தையும் படிப்பவரால் மறக்க முடியாது.

நிலம் விட்டு நடுங்கடலில் தத்தளிக்கும் படகைப்போல், தன் புலம் விட்டு, தன் வாழ்வாதாரம் விட்டு விழி பிதுங்கும் மென்னவர்களின் வாழ்க்கையை, இந்த நூல் தெளிவாகக் காட்சிப் படுத்துகிறது. கதையின் முடிவைப் போல் நடந்தவை ஏராளம். ஆனால், இந்நூற்றாண்டின் துவக்கத்தில் நடந்ததை பார்த்தறியாத மென்னவர்கள், முடிவை ஏற்க மறுக்கலாம்.

இவர்களின் வாழ்வைக் காக்கவும், இத்துறையின் அபரிமித வளர்ச்சியால் வேறு ரூபங்களில் பாதிக்கப்படும் சமுதாயத்தைக் காக்கவும் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

நூல்: மூன்று விரல்.
ஆசிரியர்: இரா. முருகன்.
வெளியீடு: கிழக்குப் பதிப்பகம், சென்னை.
URL: https://www.nhm.in/shop/978-81-8368-073-8.html