Sunday, February 23, 2020

சத்யானந்தனின் புது-பஸ்டாண்ட்

சிலருக்கு பண்டைய வரலாறு இனிக்கும். சிலருக்கு இக்கால அரசியலும் காதலும் தித்திக்கும். சிலருக்கு எதிர்கால விஞ்ஞானம் சுவைக்கும். இவ்வனைத்தையும் புலிவலம், திருவள்ளரை, துறையூர், திருச்சி சுற்றிய பகுதிகளை ஒட்டி கடந்த காலம் கி.பி 600-1300, நிகழ்காலம், சற்று எதிர்காலம் 2040-2070 கொண்டு 180 பக்கங்களுடன் ஒரு கையடக்க நாவலாய் ‘புது பஸ்டாண்ட்’-ஐ எளிமையான நடையில் படைத்திருக்கிறார் சத்யானந்தன்.

இந்நாவல், படிப்பவர் தன் ஞாபகச் சக்தியைப் பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளும்படியாகவும் வடிக்கப்பட்டிருக்கிறது. சட்டெனக் கீழே விழுந்துச் சிதறும் குண்டு மணிகளைப் போல் பல சம்பவங்கள் - மூன்று காலப் பரப்பில் - ஒரே  நேர்க் கோட்டில் அல்லாமல், விதவித வழிகளில் தொகுக்கப்பட்டிருகின்றன. சற்று அசந்தால், அல்லது சிறு இடைவெளி விட்டுப் படித்தால் பாத்திரங்களின் பெயர்களும் சம்பவங்களும் மறந்தே போய்விடும்.

திருவள்ளரை வைணவக் கோவிலின் பூர்த்தியாகாத ராஜகோபுரத்தை மையப்படுத்தி கதையின் களம் அமைக்கப்பட்டிருக்கிறது. பல சிந்தனைகளைத் தூண்டிவிடுகிறது முன்னுரையில் வரும் ஒரு வரி - “இன்று நாம் ஓர் இரவுப் பயணத்துக்குள் கடந்து விடும் நிலப்பரப்பை ஒரு காலத்தில் நான்கு மன்னர்கள் ஆண்டனர்”. ம்ம், பல்லவன் போரில் தோற்க, சோழனிடம் ஆட்சி மாறியபின் கோபுரம் கட்டும் பணி நிற்கிறது. ஆனால் இப்பணியாலும், போராலும் சாமானிய மக்களிடம் நிகழும் தாக்கமே பிரதானமாகக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. கோவில் பணிக்குச் கல்தச்சர்கள் சென்று விட, அம்மி, ஆட்டுகல் கொத்தித் தருவதற்குக் கூட ஆளில்லை. ஒரு போர் நிகழும் போது கள்வரிடமிருந்து காக்கவும் வீரரில்லை... எந்த ஒரு காலத்திலும், எந்த ஒரு இடத்திலும் ஒரு பெரும் தொழில்/வேலை தொடங்கப்படும் போது, சுற்றுப் புற மக்களுக்கு வேலை கிடைக்கும் அதே சமயம், கடைப் பணிக்கும், வீட்டுப் பணிக்கும், கூலிக்கும் ஆட்கள் அற்றுப் போகும் அவலமும் சேர்ந்தே நிகழ்கிறது. 

அதனுடன் காலங்காலமாய்த் தொடரும் சாதிப் பிரச்சினைகளும், தீண்டாமைகளும், இதையும் மீறிப் பூக்கும் காதல்களும், காமமும், அதன் விளைவுகளும் காட்சிப் படுத்தப்படுகின்றன. ஆயர் குலப் பெண், கல்தச்சனின் வீட்டு வாயிலிலேயே நிற்பதும், இளவயதில் திருமணமாகி பூப்பெய்தும் முன்பே கணவனை இழந்த புலையர் பெண் வள்ளி, போரில் முடவனான சஞ்சீவனைக் காதலிப்பதும், சங்கரனின் தந்தை நடுநிசியில் தேவதாசி பெருந்தேவி வீட்டிற்குச் செல்வதும்... பலவாறு படிப்பவரின் மனதை அசைத்து விடுகின்றன.

இவை இப்படியே இன்றும் தொடர்வது, இவைதான் நம் அடையாளங்களா என்றும் திகைக்க வைக்கிறது. ஆனால் மாலா தன் தாய்க்காகத் தெளிந்து அறிவழகனை விட்டு விலகும் முதிர்ச்சி நம்மை ஆசுவாசப்படுத்துகிறது. இவள் குலத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலம், கொடுக்கப்படாமல் ஏமாற்றப்படுவதும், புது பஸ்டாண்டை  அரசியல் லாபங்களுக்காக கொண்டு வர முனைவதும், அதை ஒட்டிய போராட்டங்களும், வாழ்வாதாரங்களும், திரைமறைவு செயல்பாடுகளும்... குவாரி, கிரானைட், ரியல் எஸ்டேட், செம்மரக் கடத்தல், கந்து வட்டி, நக்ஸலைட்கள், ஃபைனான்ஸ் கம்பெனி, ஆள் கடத்தல் எனப் பலதும் இங்கே கோர்க்கப்பட்டிருக்கிறது. அற்புத திராவிட கழகம் (அ.தி.க), தமேஸான் என்றெல்லாம் சூட்டப்பட்ட பெயர்களால் இக்காலத்தின் பிரதிபலிப்பை படிப்பவர் சுலபமாக உணரலாம். மக்களின் கவனத்தை திசை திருப்பும் உத்திகள் அரசாட்சி முதலாய் நடப்பது சில பத்திகளிலேயே பட்டவர்த்தனம்.

ஒரு பேட்ஸ்மென், முதல் சில பந்துக்களை விட்டுவிட்டு, பிட்சின் தன்மையை உணர்ந்தபின் ஆடத் தொடங்குவது போலத்தான், இந்நாவலின் முதல் சில அத்தியாங்களை நிதானமாகப் படித்தபின்பே வேகமெடுக்க வேண்டும். எந்த ஒரு அறிகுறியுமின்றி, அடுத்த பத்தியிலேயே காலமும் காட்சியும் மாறும். அச்சுப் பிழையோ என்றும் நினைத்தேன். ஆனால் இது ஒரு உத்தி  எனப் புலப்பட்டபின், நினைவில் நிறுத்திப் படிக்கும் விதமாய்த் தொடர்ந்தேன். ஆனாலும், பல சம்பவங்கள் தொடர்ச்சியின்றி தனித்தீவுகளாய் நிற்கும். அதனுடன், பட்சிகளுக்குள் உரையாடல், நாய்க்கும் மனிதனுக்கும், ஒட்டகத்துக்கும் மனிதனுக்கும் உடைரயாடல் என்று துணுக்குகளும் உண்டு. சிலதில் ஒரு தகவலிருக்கும். சிலது வெறுமனே கடந்தும் செல்லும்.

எதிர்காலச் சம்பவங்கள் மிக நேர்த்தியாகத்தான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் வெகு விரைவில் மாற்றங்களைக் காணும் நமக்கு  இதன் சில பகுதிகளில் பட்டம் படிக்கும் விதம், உணவகத்தில் ரோபோக்கள், வேற்று கிரக உயிருடன் உரையாடல்... போன்றவை வசீகரிக்கவில்லை.

எங்கோ தடம் மாறி சென்று விட்ட நாம், இயற்கை விவசாயத்தை நோக்கி மெல்ல திரும்பத் தொடங்கியிருக்கிறோம். இதன் உச்சம் இனி வரும் சில பத்தாண்டுகளிலேயே நிகழ்வதாய்... அறிவழகனின் தந்தை மணவாளன் மூலம், வானம் பார்த்த பூமிகளில் சொட்டு நீர்ப் பாசனம்... விதை நடும் ரோபோக்கள்... பூச்சிக் கொல்லி மருந்துகளை அறவே தவிர்த்து பெரிய பெரிய வெட்டுக் கிளிகளை உண்ணும் க்ளோனிங் செய்யப்பட்ட ராட்சதத் தவளை... சரியும் மக்கள் தொகை.. விரியும் காடுகள் / நீர்ப் பரப்புகள் என்றெல்லாம், பலரின் கனவுகளும், ஆசைகளும்,  முன்னெடுப்புகளும் இப்புத்தகத்தில் பூர்த்தியாவது போல நிகழ வேண்டுமென்பதே படித்து முடிப்பவரின் வேண்டுதலாய் இருக்கும்.

ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்பும், திருச்சி ராஜ கோபுரம் எழும்பியதைப்போல்,  திருவள்ளரை கோபுரத்தோடு தமிழகமெங்கும் இன்னமும் வலுவான அடித்தளமுடன் இருக்கும் பீடங்களின் மேல் கோபுரங்கள் எழும்பட்டும். அதனுடன் இம்மண்ணின் வளமும், மக்களின் நலமும் உயரட்டும். அதைக் கண்டு இந்நூலாசிரியரின் மனம் நிறையட்டும்.

வெளியீடு: Zero Degree Publishing
சுட்டி: புது-பஸ்டாண்ட்

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்...