Showing posts with label மொழி. Show all posts
Showing posts with label மொழி. Show all posts

Monday, September 6, 2010

வெள்ளைக்காரியும் குருவிக்காரியும்

செங்கல்பட்டு பஸ் நிலையத்தில், மாமல்லபுரம் செல்லும் பஸ்ஸூக்காகக் காத்துக் கொண்டிருக்கும்போது சற்றுத் தள்ளி இரண்டு வெள்ளைக்காரிகள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்நிய நாட்டினரைப் பார்த்தால் சிறு வயது முதல் ஏற்படும் சுவாரஸ்யத்துடன் அவர்களைக் கவனிக்க ஆரம்பித்தபோது எனக்கு ஆச்சரியம்!

ப்ளாட்பாரத்தில், தனக்கே உரிய பாணியில் அமர்ந்திருந்த நரிக்குறவர்களுடன் அவர்கள் வெகு சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தனர். குறவர்களின் தலைவன் - தலைவி போன்று தெரிந்தவர்கள், இவர்களிடம் எந்த அந்நியமும் பார்க்காமல், தங்கள் கூட்டதின் அங்கமாகவே கருதிப் பேசிக் கொண்டிருந்தது எனக்கு படா படா ஆச்சரியம்!

(இவர்களில் ஒருவரை எமி என்றும், மற்றொருவரை லிண்டா என்றும், இப்பதிவின் வசதிக்காக அழைக்கப் போகிறேன்!... சரிதானே!...)

எமியும், லிண்டாவும் மாமல்லபுரத்திற்கு வந்த டூரிஸ்ட் என்பதும், அங்கே இந்தக் குறவர்களுடன் எப்படியோ நட்பு ஏற்பட்டு, அவர்களுடன் செங்கல்பட்டிற்கு வந்து, இப்போது திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் எனக்கு ஒருவாறு புரிந்தது.

அப்போது ஒரு பஸ், நிலையத்தினுள் நுழைய, லிண்டா என்னிடம் வந்து...

“டஸ் இட் கோ டு மாமல்லபுரம்?” என வினவினாள்.

நான் “எஸ்” என்றதுதான் தாமதம்... தன் இருகைகளையும் தன் உதட்டருகே குவித்து...

“எவ்ரூரூரூ...... ப...ஸ்...” என்று குறவர்களைப் பார்த்து அவர்களைப் போலவே கூவ, நான் அசந்து போனேன்.

பஸ் வளைவில் திரும்பிக் கொண்டு வரும்போதே ரன்னிங்கில் ஏறினால்தான் இடம் கிடைக்கும். ஓடத் தயாரான நான் ஸ்தம்பித்து நின்றேன். என்னை முந்திக்கொண்டு, பஸ்ஸில் இடம் பிடிக்க அதிவேகமாகப் பாய்ந்தாள் லிண்டா. அவள் சற்று வாட்டசாட்டமாக இருந்தாள். வாலிபால் எல்லாம் ஆடுவாள் போல!  பஸ்ஸைத் தாவிப் பிடித்த கையில் உறுதி தெரிந்தது.

வேட்டியை மடித்துக்கட்டி பஸ்ஸில் ஏற முற்பட்ட உள்ளூர் வீரர்கள் சற்று சோப்ளாங்கிகள். லிண்டாவிடம் இடிபட்டதில், நிலை தடுமாறி தொபுக்கடீரென கீழே விழுந்து விழி பிதுங்கினர்.

பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்ட ஒருவர் ”ஏம்மா, இப்டி முட்ற” என்று கத்த...

“எலே... கோ...” என லிண்டா பதில் சவுண்ட் விட, அவர் அரண்டு போய்...

“அம்மா.. தாயீ... ஆள வுடு” என கும்பிடுபோட்டு நகர, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

ஒருவழியாக நானும் பஸ்ஸில் ஏறினேன். ஒரு மூன்றுபேர் சீட்டைப் பிடித்திருந்தாள் லிண்டா. ஆனால்...

அடடா... நம்ப ஊர் டெக்னிக் முழுமையாக அவருக்குத் தெரியவில்லை. சன்னல் வழியாக கூடையைப் போட்டு அதில் ஒரு சீட்டைப் பிடித்திருந்த நபர், அங்கே வந்து கூடையைக் காட்டி, “அது என் சீட்” என்று அங்கலாய்த்தார்.

“ஓ, இட் ஈஸ் யுவர் பேக்?” என்று லிண்டா கூடையை எடுத்து அவரிடம் கொடுக்க, அந்த இடமே ஏக ரகளையானது.

நான் குறுக்கிட்டு விளக்க, “ஓ சாரி, டேக் யுவர் சீட்” என்று பார்டிக்குப் பெருந்தன்மையுடன் வழிவிட்டார். எமியும், குறவர்களும் வந்து சேர்ந்தனர். முதல் சீட்டில் எமி அமர, லிண்டா குறவப் பெண்ணின் குழந்தையை வாங்கி, வாஞ்சையோடு அதன் தலையைக் கோதி தன் மடியில் அமர்த்திக் கொண்டாள்.

சன்-சில்க் காணா கேசங்களும், ரின் காணா உடைகளும் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. மதர் தெரசாவைப் படித்திருப்பார்களோ?! பெரிய விஷயம்.

பஸ் புறப்படத் தாமதமாக, உள்ளே கூட்ட நெரிசலால் புழுங்கத் தொடங்கியது. எமியின் டி-சர்ட் வேர்வையில் நனைந்தது. அருகில் நின்று கொண்டிருந்த குறவப் பெண்,  எமியின் டி-சர்டின் முதுகுப்பகுதி U-கட்டை லேசாக இழுத்து (லேசாகத்தான்)   உள்ளே பூ... பூ... என்று ஊதத் தொடங்கினாள். எமியின் முகமும் வேர்க்கத் தொடங்க, குறவப் பெண் தன் முந்தானையால் விசிறவும் செய்தாள். இப்போது எமியின் முகத்தில் வேர்வைக்குப் பதில் கொள்ளை சந்தோசம். இந்த அபூர்வக் காட்சியில் என் மனம் லயித்தது. (விசிறியதில் எனக்குக் கூட கொஞ்சம் காற்று வந்தது!).

பஸ் புறப்பட இருவரும் பள்ளித் தோழிகள் போல அன்னியோன்யமாய்ப் பேசத் தொடங்கினர். எமி ஆங்கிலத்தில் எதையோ கேட்க, குறவப் பெண் அதற்கு தமிழில் பதில் கூறித் தன்பங்குக்கு எதையோ கேட்க அதற்கு எமி ஆங்கிலத்தில் பதில் சொல்ல, எனக்கு மண்டை கிறுகிறுத்தது.

எமியின் ஆக்சென்ட் எனக்கு பிடிபடவில்லை. குறவப் பெண்ணின் தமிழ் உச்சரிப்பும் என் செவிக்குள் நுழையவே இல்லை. இருவரும் கேட்டுக்கேட்டு, கூறிக்கூறி, மாறிமாறிப் பேசியதில் எனக்கு மயக்கமே வந்தது. என்னத்தான் பேசுகிறார்கள்?! எப்படித்தான் இது சாத்தியம்?!...

மெல்ல உண்மை புரியத் தொடங்கியது.

வார்த்தைகள் உச்சரிக்கவே தெரியாத குழந்தைப் பருவத்தில், நாம் தாயிடம் இப்படித்தானே பேசினோம்!

இரண்டு கள்ளமற்ற மனங்களின் உணர்வுகள் ஒன்றிவிட்டால்,  அது அன்பினில் நிறைந்து விட்டால், மொழிகளுக்கிடையே பேதமில்லை. வார்த்தைகளினூடே அர்த்தங்கள் இல்லை. நயன பாஷை, மெளன பாஷை, டெலிபதி ஆகியவை இதன் அடுத்தடுத்த நிலைகளே.

நிறம், மொழி, மதம், நாடு கடந்து அவர்கள் கொண்ட நட்பை மானசீகமாய்க் கைகூப்பி வணங்கினேன்.

என் ஊர் வந்துவிட, படியில் இறங்கிக் கொண்டே அவர்களை மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்த்தேன். குறவப் பெண்ணின் குழந்தை, தன் தாய்மடி எனக் கருதியே, லிண்டாவின் மடியில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது.

Tuesday, August 24, 2010

சமஸ்கிருதமும் ஜாவாவும், தமிழும் டாட்நெட்டும்

கோவில்களில் சமஸ்கிருதமா தமிழா என்ற சர்ச்சை பல நாட்களாகத் தொடர்கிறது. என்னைப் பொருத்தவரை இரண்டையும் சமவிகிதத்தில் பயன்படுத்தலாம் என்றே நினைக்கிறேன். இதை, கணினி மொழிகளான ஜாவா (Java) மற்றும் டாட்நெட்டைக் (.Net) கொண்டு விளக்குகிறேன்.

நான் கல்லூரிகளுக்குச் செமினார் எடுக்கச் செல்லும்போது (அதைப்பற்றி ஒரு நகைச்சுவைப் பதிவு: முனியின் செமினார்)  மாணவக் கண்மணிகள் (இருபாலரையும் குறிப்பிட இதுதான் வசதியாக இருக்கிறது!) என்முன் வைக்கும் பிரதான கேள்வி: ஜாவா, டாட்நெட் இந்த இரண்டில் எதைப் படிப்பது?

இதில் எந்த மொழியில் ப்ரோக்ராம் எழுதினாலும் அவை ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்ள மொழி கடந்த ப்ரோட்டோகால்கள் (Protocol) வந்து விட்ட நிலையில், நான் இரண்டையுமே படிக்கச் சொல்கிறேன்.

இப்போதெல்லாம் எந்த ப்ராஜெக்ட்டானாலும் சர்வர் கம்ப்யூட்டரில் (Server Computer) இயங்கும் ப்ரோக்ராம்களும், க்ளையண்ட் கம்ப்யூட்டரில் (Client Computer) இயங்கும் ப்ரோக்ராம்களும் எழுதி அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்ளும் வகையில் வடிவமைக்க வேண்டியிருக்கிறது. (Web ப்ராஜெக்ட்கள் விதிவிலக்கு).

பெரும்பாலான க்ளையண்ட் கம்ப்யூட்டர்கள் விண்டோஸில்தான் இயங்குகின்றன. இதில் நாம் பயன்படுத்துவதற்கு வசதியாக ப்ரோக்ராம் எழுத டாட்நெட் சிறப்பாக இருக்கிறது.

சர்வர் கம்ப்யூட்டர்களை இன்விசிபிள் (Invisible) கம்ப்யூட்டர் என்றும் சொல்வார்கள். எங்கே இருக்கின்றன, எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் பார்க்க முடியாது. அவற்றின் பெயர் கொண்டு (உதா: yahoo.com) தொடர்பு கொள்ளலாம். அவை நீங்கள் கேட்கும் சர்வீஸைத் தரும். உதா: இமெயில்.

இந்த சர்வர்கள், இதில் பயன்படுத்தும் ஆபரேட்டிங் சிஸ்டம், கம்பெனிக்கு கம்பெனி மாறுபடும். அதனால் அனைத்திலும் இயங்கும்படி சர்வீஸ் ப்ரோக்ராம்களை வடிவமைக்க வேண்டியிருக்கிறது. இதற்கு ஜாவா சிறப்பாக உதவுகிறது.

ஆக, நான் கையாளும் ப்ராஜெக்ட்களில் இரண்டையுமே பாகுபாடின்றி சரியான விகிதத்தில் பயன்படுத்துகிறேன். அவை வெற்றியும் கண்டு கோலோச்சுகின்றன.

சரி, கோவிலுக்கு வருகிறேன். இங்கே இறைவன்தான் சர்வர்.  இவரும் கண்ணுக்குத் தெரிய மாட்டார். எப்படி இருப்பார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. நாம் கேட்கும் வரத்தை சர்வ் செய்வதால் இறைவனும் சர்வரே.

எங்கும் நீக்கமற இருக்கும், சர்வ வல்லமை படைத்த, உருவம் கடந்த பரம்பொருளை ஒரு குறிப்பிட்ட சக்தியாக சிவனாகவோ, விஷ்ணுவாகவோ (yahoo, google மாதிரி), ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் டியூன் செய்ய சமஸ்கிருதம் சிறப்பாக இருக்கிறது. இங்கே செய்யப்படும் ப்ரோக்ராம்கள்தான் யாகங்கள், யக்ஞங்கள், குடமுழுக்குகள். இவை சமஸ்கிருததில் இருக்கலாம் என்பது என் கருத்து.

பக்தர்களான நாம்தான் க்ளையண்ட். நம் சார்பில் செய்யப்படும் அர்ச்சனைகள், பூசைகள் தமிழில் நடந்தால் அது நமக்கு ரொம்ப வசதி.

தன்னிலை மறந்து மனமுருகிச் செய்யும் மொழி கடந்த பிரார்த்தனையே, நம்மையும் இறைவனையும் இணைக்கும் ப்ரோட்டோகால்.

ஆக, கடவுளென்றாலும் கணினியென்றாலும் எச்செம்மொழியும் நமக்குச் சம்மதமே.

Thursday, July 8, 2010

பிரெஞ்சுப் புரட்சி

நாங்கள் படித்த யுனிவெர்சிட்டியில் பல வசதிகள். ஒரே சமயத்தில் இரண்டு மூன்று கோர்ஸ்கள் படிக்கலாம். அல்லது குறைந்த பட்சம் மற்ற டிபார்ட்மெண்ட்களுக்குச் சென்று பிடித்தமான பேப்பர்களைத் தேர்ந்தெடுத்தும் படிக்கலாம்.

படிக்கும் ஐ.டி துறைமூலம் விரைவிலேயே ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்து, உலகம் சுற்றும் வாலிபர்களாகப் போகிறோம் என்ற கனவில் றெக்கை கட்டிப் பறந்து கொண்டிருந்ததால், லிங்குஸ்டிக் டிபார்ட்மெண்ட் சென்று ஒவ்வொரு செமஸ்டரிலும் ஒரு உலக மொழியைக் கற்கலாம் என்று முடிவெடுத்தோம்.

கடைசி செமஸ்டரில் கேம்பஸ் இண்டர்வியுவிற்கு வரும் முதல் கம்பெனிக்கு ஜப்பானில் கிளை இருப்பதால் முதலில் ஜப்பானிய மொழியைத் தேர்ந்தெடுத்தோம்.

எங்களுக்குப் பாடம் நடத்திய ஆசிரியர்... ஸாரி... ஜப்பானிய ஆசிரியை மிக அழகாக அம்மொழியைக் கற்றுக் கொடுத்தார்.

போஸ்ட் கிராஜுவேட் படிக்கும் வயதில் கிள்ளை பிள்ளைகளாட்டம் ”எ ஃபார் ஆப்பிள், பி ஃபார் பனானா” என்ற ரீதியில் கோரஸாகப் படிப்பதும், முதன் முதலாக ஸ்லேட்டில் பலப்பம் பிடித்து எழுதுவது போல மொழியின் எழுத்துக்களை வரைவதும் (அம்மொழியின் ஒவ்வொரு எழுத்தும் ஒரு பூச்சியின் படம் போல வேறு இருந்தது) தமாஷாக இருந்தது.

எனக்கு மட்டும் ஒரு சின்ன வருத்தம். அவருக்கு ’ர’ உச்சரிப்பு வராமல், என்னை ”லகுலாம், லகுலாம்” என்று அழைத்துக் கொண்டிருந்தார்.

(ஆனால், கணையாழியின் கடைசி பக்கங்களில் தன் ஜப்பானிய பயண அனுபவத்தைச் சொல்லும் சுஜாதா, அவர்களுக்கு ’ல’ க்கு பதில் ’ர’ தான் வருகிறது என்கிறார். “புர்ரட் ட்ரெயின், புர்ரட் ட்ரெயின்” என்று அவர்கள் சொன்னது “புல்லட் ட்ரெயின்” என்று வெகு நேரத்திற்குப் பின்பே தனக்கு புரிந்தது என்றும் சொல்கிறார். ஒரு வேளை அந்த ஆசிரியை இந்தியா வந்துவிட்டதால் லகரமும், ரகரமும் இடமாறிவிட்டதோ?!)

சின்னஞ்சிறு கண்களுடன், எப்போதும் சிந்தும் புன்னகையுடன், ஒரு குழந்தைக்கு கற்றுத் தரும் கனிவுடன் அவர் பாடம் நடத்தியவிதம் எங்களை பிரைமரி ஸ்கூலின் கபடமற்ற நினைவுகளில் தாலாட்டியது.

நான்கு ஜப்பானிய வார்த்தைகள் கற்றுக் கொண்ட குஷியில், ‘அனதாவா ஜென்கி தேசுகா (நீங்கள் சௌக்கியமா)?, சயோனாரா மாதாஆய் மாசோ (டாடா பை பை) ’ என்றெல்லாம் எதிர்பட்டவர்களிடம் பேசி, அவர்கள் முகம் வெளிர வைத்தோம்!

ஒரு மொழியைக் கற்கும்போது பரிசயமற்ற உச்சரிப்புகளில் நா பிறழ்வதும், புதிய புதிய வார்த்தைகளின் நளினத்தில் மனம் புரள்வதும் ஒரு சுகானுபவம்.

அந்த அனுபவம் தந்த உற்சாகத்தில், அடுத்த செமஸ்டரில் எந்த மொழியைத் தேர்ந்தெடுக்கலாம் என்று, நண்பர்கள் ஒன்று கூடி விவாதித்தோம். அப்போது, என்னுடைய ஐ.பி.எல் பதிவின் நாயகன் கிருஷ்ணன் எங்கள் முன் தோன்றி, பிரெஞ்சு மொழியைத் தேர்ந்தெடுக்கலாம் என்று ஆலோசனை கூறினார். தான் பிளஸ்ஒன் முதலே அதைப் படித்ததாகச் சொல்லி, அம்மொழியின் அருமை பெருமைகளையெல்லாம் சிலாகித்துச் சொன்னார்.

ஆஹா, பிரெஞ்சு மொழியைக் கற்று, அப்படியே கன்கார்ட் விமானத்தில் லண்டனிலிருந்து பாரிஸூக்குப் பறந்து, ஈஃபிள் டவர் அருகே நின்று எதிர்ப்படுபவர்களிடம் ”மான்சியூர்” சொல்லி போட்டோவெல்லாம் எடுத்துக் கொள்ளலாம் எனக் கனவு கண்டோம்.

முதல் நாள் வகுப்பு. பிரெஞ்சு ஆசிரியையை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஆனால் வந்ததோ ஒரு உள்ளூர் ஆசாமி. சிரிப்பை பாதாள லோகத்தில் புதைத்து விட்டார் போல; சுரத்தே இல்லாமல் வகுப்பெடுத்தார்.

ஜப்பானிய பாஷை கடினமாக இருந்தாலும் கற்க முடிந்தது. ஆனால் பிரெஞ்சு பாஷை ரெண்டுங்கெட்டானாக இருந்தது. சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் ரொம்பவே மெனக்கெட வேண்டியிருந்தது. எண்ணிக்கையைச் சொல்ல இருபதுக்கு மேல் வார்த்தைகளே இல்லை. உதாரணமாக 97 என்பதை ‘குவாதர் வான் திசெப்ட்” என்று சொல்ல வேண்டும். குவாதர் என்றால் நான்கு, வான் என்றால் இருபது, திசெப்ட் என்றால் பதினேழு. அதாவது நான்கு இருபது பதினேழு என்று சொல்ல வேண்டும். என்ன கொ. சரவணா இது?!

இதைவிடக் கொடுமை, எழுத்துக்கள் ஆங்கிலம் போன்றே இருந்தாலும், உச்சரிப்பிற்கும் ஸ்பெல்லிங்கிற்கும் சம்பந்தமே இல்லை. இந்த வான்-னுக்கான ஸ்பெல்லிங் Vingt. பொதுவாக எழுத்தைக் கூட்டி படிக்கச் சொல்வார்கள். இங்கே சில எழுத்துக்களை கழித்துப் படித்தாலும் உச்சரிப்பு வரவில்லை. உச்சரிப்பைப் படித்தால் தியரி எக்ஸாமிலும், ஸ்பெல்லிங்கைப் படித்தால் வைவாவிலும் பெயிலாகி அழ வேண்டியதுதான்.

எங்களை பெயிலின் பாதைக்கு அழைத்துச் சென்ற கிருஷ்ணனை பார்க்கும் போதெல்லாம் காது புகைந்தது. பரீட்சையும் வந்து விட்டது. முதலில் வருவது தியரியாதலால், டைப்ரைட்டிங் கிளாசில் ஆங்கிலமே தெரியாமல் ஒவ்வொரு எழுத்தாக டைப் அடித்தது போல, உருப்போட்டு மனனம் செய்து பரீட்சையை எழுதிவிட்டேன்.

மறுநாள் வைவா. ஹாஸ்டலில் கிருஷ்ணன் மடையான தண்ணி குடித்து சொல்லிக் கொடுத்தார். மற்றவர்களெல்லாம் தட்டுத்தடுமாறி கற்க, நம்ம மூளைக்கு உச்சரிப்பு ஏறவே இல்லை. இரண்டாவது பக்கத்தை படிக்கும் முன்பே முதல் பக்கம் அடியோடு மறந்து போனது. ”போடா, நீயும் உன் பிரெஞ்சும்” என்று சலித்துக் கொண்டு தூங்கச் சென்றேன். “டேய், பொறுப்பில்லாமல் படுக்காதே, நிச்சயம் பெயிலாயிடுவே” என்று அவர் திட்டிக் கொண்டிருக்க, அதை சட்டை செய்யாமல் தூங்கியே விட்டேன்.

விடிந்தது வைவா தினம். முதலில் சென்றுவந்த நண்பன், ”நமது பிரெஞ்சு புத்தகத்திலிருந்து ரேண்டமாக ஒரு பக்கத்தைப் பிரித்து, அதைப் படித்து அர்த்தமும் சொல்லச் சொல்கிறார்கள்” என்றான். அட அவ்வளவுதானா... ஒரு சுலபமான பக்கத்தை தேர்ந்தெடுத்து, அதை சொல்லிக் கொடுக்க கிருஷ்ணனை விளித்தேன். “இத மட்டும் படிச்சு என்னடா பண்ணபோற?” எனப் புலம்பிக் கொண்டே சொல்லிக் கொடுத்தார். அந்த பக்கத்தை ஒரு பத்து தடவை நன்றாக படித்துக் கொண்டேன்.

என் திட்டம் இதுதான். சுண்டு விரலை புக்மார்க்காக வைத்து புத்தகத்தை மூடிக் கொள்வது. எப்பக்கத்தைக் கேட்டாலும், இப்பக்கத்தை தற்செயலாக திறப்பது போல் நடித்து படிக்கத் தொடங்கிவிடுவது. பிறகு நடப்பது அந்த சாட்சாத் கிருஷ்ணன் விட்ட வழி (வேறு என்னதான் செய்ய?!).

என் முறை வர உள்ளே சென்றேன். அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு வருவது அதுதானோ? நான் படித்த இருபத்தி ஏழாவது பக்கத்தைதான் எக்ஸ்டர்னல் திறந்து வைத்தார். அதை ஓரக் கண்ணால் கவனித்துவிட்ட நான், டக்கென சுண்டுவிரலை எடுத்து விட்டு, நிதானமாக அமர்ந்து...

’வார்ம் கீரீட்டிங்ஸ் இன் திஸ் பிளசண்ட் மானிங்’ என்றேன்.

“ஹொ... வெல்கம்.. யு லுக் ஸோ ரிலாக்ஸ்ட்” என்றார். (பின்னே இருக்காதா?)

’வாட்ஸ் தி பேஜ் நம்பர் சார், ஈஸ் ட் ட்வெண்டி செவன்? ஜஸ்ட் எ செகண்ட்’... அப்பக்கத்தை புரட்டி, நெப்போலியன் பூமியில் பிறந்தவன் போல் மடமடவென படித்து அர்த்தத்துடன் அடுக்க...

”ஹோ.. ஹவ் ஃபுலூயண்ட் யு ஆர்... தட்ஸ் இனஃப்” என்றார்.

”தட் ஈஸ் யுவர் ஜெனராசிட்டி, அதர்வைஸ் வாட் ஆம் ஐ?” என்று நன்றி கூறி, ‘கிருஷ்ணா, இதுவல்லவோ உன் லீலா’ என்று புல்லரித்தபடி வந்து விட்டேன்.

அடுத்தது நண்பர் கிருஷ்ணனின் முறை. அவருக்கு மிகக் கடுமையான பகுதி வர, அவர் தன் புலமையைக் காட்டப் போக, ஏதோ களேபரம் ஆகியிருக்கிறது.

ரிசல்டைப் பார்த்தால், ஐந்து வருடம் படித்த அவருக்கு C கிரேடும், ஐந்து நிமிடம் படித்த எனக்கு B கிரேடும் கிடைத்திருந்தன.