Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Monday, August 5, 2013

மதுரை பேருந்தில் மகளிர் இருக்கையில்...

கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கிய பின் பூவையர் பகுதிக்குக் கண் திரும்ப, மனம் ஆஹாவெனத் துள்ளியது.

இடம் மதுரை; பெரியார் நிலையத்திலிருந்து அழகர் கோவிலுக்குச் செல்லும் பேருந்து.

அழகான பெயர் கொண்ட திருமாலிருஞ்சோலை சென்று, அழகரைக் கண்டு, வழி நெடுங்கும் சோலையடர்ந்த மலைமீதேறி, உச்சியில், ராக்காயி கோயிலில், நூபுர கங்கையில் குளித்து, பழமுதிர் சோலை முருகனை தரிசித்து, அவ்வைப் பாட்டி அமர்ந்ததாய்க் கருதும் நாவல் மரத்தடியில் (சுட்ட பழம் வேண்டுமா கதை) சிறிது நேரம் அமர்ந்து வர தனியாகப் புறப்பட்டேன்.

கிளம்பிய பேருந்தில் அப்போதுதான் இருக்கைகள் நிரம்பியிருக்க, நின்றபடி மகளிர் பகுதிக்குத் திரும்பி, நான்  கண்டதை எப்படிச் சொல்ல...?

கல்லூரி மாணவிகள் சிலர். தாவணியில் சிலர். குடும்பப் பெண்கள் சிலர். மஞ்சளில் குளித்த முகங்கள் சில. தலையில் மல்லிகைச் சரடுடன் சிலர்... இன்னமும் அடுக்கலாம். ஆனால் வயதும் பருவமும் மாறுபட்டும், கிட்டதட்ட அனைத்து பெண்களின் கையில் இருந்தது தமிழ்ப் புத்தகங்கள்... இலக்கணப் புத்தகங்கள்! (இதுதான் சார், ஆஹாவுக்கான ஓஹோ காரணம் :) )

அவர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். நான் ஈரடி முன்பின் நகர்ந்து புத்தகங்களைக் கவனிக்க... நச்சினார்க்கினியர், பரிமேலழகர், சீத்தலைச் சாத்தனார்... உரையாசிரியர், சங்கப் புலவர்களின் பெயர்கள் தொடர்ந்து தென்பட்டன. தமிழ் பேப்பர் இணைய இதழில், என்.சொக்கன் "அம்மா, ஆடு, இலக்கணம்" தொடர் எழுதி, இன்றைய இணைய தலைமுறைக்குப் புரியும்படி சொல்லித் தரும் ஐகார, ஔகார, மகர குறுக்கங்கள்... குற்றிய லிகர, லுகரங்கள் அளபடை எல்லாம் இங்கு சகஜமாகத் தென்பட்டன.

ஒரு மாணவி ஏதோ சந்தேகம் கேட்க, அவள் தோழி, சட்டென தன் பையிலிருந்து வேறோரு புத்தகமெடுத்து, சொல்லுறுப்புகளைப் பகுத்துப் பகுத்து விளக்கினாள். என்னால் முறுவலை மறைக்க முடியவில்லை. அதை அவள் பார்த்துவிட, சற்று வெட்கித் திரும்பிக் கொண்டாள். சில புத்தங்கள் சற்று கிழிந்திருந்தன. பழைய புத்தகக் கடையில் வாங்கியிருக்கக் கூடும். ஆனால் அவர்கள் படிப்பதில் புதிய ஆர்வம் இருந்தது.

இவர்கள் என்ன படிக்கிறார்கள். எங்கு படிக்கிறார்கள். இவர்களுக்கு என்ன வாய்ப்புகள் இருக்கிறது. விசாரிக்க நினைத்தேன். அதற்குள் k.புதூர் (ஆமாம் இனிஷியலுடன்!) என்னும் இடம் வர, அனைவரும் இறங்கிச் சென்று விட்டார்கள். அடுத்தமுறை அவ்வூர் சென்று, அவர்கள் படிக்கும் பல்கலைக்கழகத்தையோ கல்லூரியையோ கண்டு வர ஆவல்.

ம்ம். முதல் இடை கடை என்று சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணின் எச்சம், சொச்சம், மிச்சம் இருக்கத்தான் செய்கிறது.

நான் நின்ற இடம்வரை வந்து, தம்பி என்று கண்ணியமாக விளித்து டிக்கெட் கொடுத்த கண்டக்டர் முதல், எத்தனையோ விசயங்கள், சென்னை பேருந்திலிருந்து மாறுபட்டன. ஆனால் எவ்வூர் சென்றாலும் ஒன்று மட்டும் மாறவில்லை சார்.

அது, ஆண்கள் பகுதியில், அக்காலை வேளையிலும் அருந்தி விட்ட டாஸ்மாக் பான நெடி.

Tuesday, August 24, 2010

சமஸ்கிருதமும் ஜாவாவும், தமிழும் டாட்நெட்டும்

கோவில்களில் சமஸ்கிருதமா தமிழா என்ற சர்ச்சை பல நாட்களாகத் தொடர்கிறது. என்னைப் பொருத்தவரை இரண்டையும் சமவிகிதத்தில் பயன்படுத்தலாம் என்றே நினைக்கிறேன். இதை, கணினி மொழிகளான ஜாவா (Java) மற்றும் டாட்நெட்டைக் (.Net) கொண்டு விளக்குகிறேன்.

நான் கல்லூரிகளுக்குச் செமினார் எடுக்கச் செல்லும்போது (அதைப்பற்றி ஒரு நகைச்சுவைப் பதிவு: முனியின் செமினார்)  மாணவக் கண்மணிகள் (இருபாலரையும் குறிப்பிட இதுதான் வசதியாக இருக்கிறது!) என்முன் வைக்கும் பிரதான கேள்வி: ஜாவா, டாட்நெட் இந்த இரண்டில் எதைப் படிப்பது?

இதில் எந்த மொழியில் ப்ரோக்ராம் எழுதினாலும் அவை ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்ள மொழி கடந்த ப்ரோட்டோகால்கள் (Protocol) வந்து விட்ட நிலையில், நான் இரண்டையுமே படிக்கச் சொல்கிறேன்.

இப்போதெல்லாம் எந்த ப்ராஜெக்ட்டானாலும் சர்வர் கம்ப்யூட்டரில் (Server Computer) இயங்கும் ப்ரோக்ராம்களும், க்ளையண்ட் கம்ப்யூட்டரில் (Client Computer) இயங்கும் ப்ரோக்ராம்களும் எழுதி அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்ளும் வகையில் வடிவமைக்க வேண்டியிருக்கிறது. (Web ப்ராஜெக்ட்கள் விதிவிலக்கு).

பெரும்பாலான க்ளையண்ட் கம்ப்யூட்டர்கள் விண்டோஸில்தான் இயங்குகின்றன. இதில் நாம் பயன்படுத்துவதற்கு வசதியாக ப்ரோக்ராம் எழுத டாட்நெட் சிறப்பாக இருக்கிறது.

சர்வர் கம்ப்யூட்டர்களை இன்விசிபிள் (Invisible) கம்ப்யூட்டர் என்றும் சொல்வார்கள். எங்கே இருக்கின்றன, எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் பார்க்க முடியாது. அவற்றின் பெயர் கொண்டு (உதா: yahoo.com) தொடர்பு கொள்ளலாம். அவை நீங்கள் கேட்கும் சர்வீஸைத் தரும். உதா: இமெயில்.

இந்த சர்வர்கள், இதில் பயன்படுத்தும் ஆபரேட்டிங் சிஸ்டம், கம்பெனிக்கு கம்பெனி மாறுபடும். அதனால் அனைத்திலும் இயங்கும்படி சர்வீஸ் ப்ரோக்ராம்களை வடிவமைக்க வேண்டியிருக்கிறது. இதற்கு ஜாவா சிறப்பாக உதவுகிறது.

ஆக, நான் கையாளும் ப்ராஜெக்ட்களில் இரண்டையுமே பாகுபாடின்றி சரியான விகிதத்தில் பயன்படுத்துகிறேன். அவை வெற்றியும் கண்டு கோலோச்சுகின்றன.

சரி, கோவிலுக்கு வருகிறேன். இங்கே இறைவன்தான் சர்வர்.  இவரும் கண்ணுக்குத் தெரிய மாட்டார். எப்படி இருப்பார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. நாம் கேட்கும் வரத்தை சர்வ் செய்வதால் இறைவனும் சர்வரே.

எங்கும் நீக்கமற இருக்கும், சர்வ வல்லமை படைத்த, உருவம் கடந்த பரம்பொருளை ஒரு குறிப்பிட்ட சக்தியாக சிவனாகவோ, விஷ்ணுவாகவோ (yahoo, google மாதிரி), ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் டியூன் செய்ய சமஸ்கிருதம் சிறப்பாக இருக்கிறது. இங்கே செய்யப்படும் ப்ரோக்ராம்கள்தான் யாகங்கள், யக்ஞங்கள், குடமுழுக்குகள். இவை சமஸ்கிருததில் இருக்கலாம் என்பது என் கருத்து.

பக்தர்களான நாம்தான் க்ளையண்ட். நம் சார்பில் செய்யப்படும் அர்ச்சனைகள், பூசைகள் தமிழில் நடந்தால் அது நமக்கு ரொம்ப வசதி.

தன்னிலை மறந்து மனமுருகிச் செய்யும் மொழி கடந்த பிரார்த்தனையே, நம்மையும் இறைவனையும் இணைக்கும் ப்ரோட்டோகால்.

ஆக, கடவுளென்றாலும் கணினியென்றாலும் எச்செம்மொழியும் நமக்குச் சம்மதமே.