Thursday, July 30, 2015

இனி முளைக்கட்டும் அக்னிச் சிறகுகள்!












(திரு. அப்துல் கலாம், ஜனாதிபதியாகப் பதவி
ஏற்ற போது, அவருக்கு அனுப்பிய கவிதை)

ஓயாத கடலலைகள்,
தாளமிடும் கரையினில்,
சத்திய உள்ளமுடன்,
கருணை வெள்ளமுடன்,
நித்திய ஊக்கமுடன்,
இடையறா உழைப்புடன்,
பிறந்து - நீர்
இன்றமரும் பதவி,

முப்படைத் தளபதிகளும்,
முதல் மரியாதை செலுத்தும்,
மூத்த பதவி.

நாற்பது ஆண்டுகளாய்,
மெய் வடித்த சாதனைகளால்,
பாரத வானை,
கோள்கள் வலமிட வைத்து,
ராணுவத் தூணியில்,
ஏவுகணைகள் நிரப்பியபின்,
இன்று நீர்,
முதல் குடிமகனாவதில்,

படித்தவர்க்கு ஆனந்தம்!
பாமரர்க்கோ பேரானந்தம்!

பிரதி தினமும் நீரோதும்,
குரானின் ஒலிகளும்,
கீதையின் வரிகளும்,
மதங்கள், தவறி வகுத்திட்ட
எல்லைகளை இணைக்கட்டும்!

தன்னலமற்ற உம் சேவைக் கண்டு,
கட்சிகள் ஓரணி ஆகட்டும்!
உம் தாயக விசுவாசம் கண்டு,
ஆயுதமேந்திய கைகள்,
தவறுணர்ந்து பணியட்டும்!

இனி உம்
ஒவ்வொரு அசைவினிலும்,
மாணவர் விஞ்ஞானம் படிக்கட்டும்!
நீர் மீட்டும் வீணையின் இசையில்,
மெய்ஞானம் கற்கட்டும்!

இனி ஒவ்வொரு
இந்தியனுக்கும் முளைக்கட்டும்,
அக்னிச் சிறகுகள்.
மெய்ப்படட்டும் உம் இந்தியக் கனவு!

இனி நிகழட்டும்,
எங்கு காணினும் வளர்ச்சி!
எவரிடம் காணினும் மலர்ச்சி!
எங்கு சென்றிடினும் செழிப்பு!
எவரிடம் பேசிடினும் நட்பு!

இனி பாரதம்,
மக்களுக்கு ஒரு நல்லரசாகட்டும்!
உலகினில் பெரும் வல்லரசாகட்டும்!

-- காஞ்சி ரகுராம்

Friday, July 10, 2015

பொன்னியின் செல்வன் நாடகம் - விமர்சனம்

‘நீங்க நெஜ வந்தியத் தேவரா’ - என் மகன் கேட்டான்.

‘இல்லை தம்பி, வந்தியத் தேவரா நடிக்கிறேன்’ - அவர் சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.

இடம்: மியூசிக் அகாடமி. SS International, Magic Lantern Theatre-இன் பொன்னியின் செல்வன் நாடகம்.


இன்று ஒரு திரைப்படம் இரண்டரை மணி நேரத்திற்கு மேல் சென்றாலே... நீளமா இருக்கு, ஸ்லோவா போகுது என்ற எண்ணங்கள் ஊன்றிவிட்ட நிலையில்...

மூன்று மணி நேரம் கடந்தும், சுவாரஸ்யக் குறைவின்றி நாடகம் தொடர்ந்தது. ஆனால் இரவு 9 மணியைக் கடந்து விட்டதால், மகனை கேன்டீனுக்கு அழைத்து வர, அங்கே வந்தியத்தேவன்.

‘எனக்கு டிவெண்டி மினிட்ஸ் பிரேக், அந்த கேப்ல நானும் சாப்பிட வந்துட்டேன்’ என்னிடம் சொன்னவர், மகனிடம் தொடர்ந்தார். ‘சீக்கிரம் சாப்ட்டு உள்ள போ தம்பி, யானையெல்லாம் வரும்’

அவர் ஒரு நாடகக் கலைஞர் என்ற எண்ணமே எனக்கு வரவில்லை. அசல் வல்லவராயன் வந்தியத்தேவராகவே காட்சி தந்தார்.

அறுபது வருடங்களுக்கு முன் கல்கி எழுதிய அமர காவியம். ஆழ்வார்க்கடியான், வந்தியத்தேவன், அருண்மொழி, குந்தவை... போன்ற சரித்திரப் பாத்திரங்களை, படிப்பவர் தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருத வைத்தது, கல்கியின் உயிரோட்ட வரிகள் என்றால், அவர்களின் பிம்பங்களை மனதில் பதிய வைத்தவை மணியமின் அற்புத ஓவியங்கள். அதன் வடிவங்களை ஒட்டியே நாடகப் பாத்திரங்களுக்கு ஒப்பனை செய்தது, Magic Lantern Theatre-இன் முதல் மாஸ்டர் ஸ்ரோக்.

ஓவியங்களுக்கு ஏற்றவாறு முகம் கொண்டவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு கடும் பயிற்சி தந்து, உடற்கட்டையும் வளர்த்து ஒப்பனை செய்தது பலருக்கு கச்சிதமாய்ப் பொருந்துகிறது. குறிப்பாக, குந்தவையின் மேல் நோக்கும் கொண்டை, ஆழ்வார்க்கடியானின் முன் குடுமி, அருண்மொழியின் தலைப்பாகை, வந்தியத்தேவனின் அலைபாயும் கேசம், அரும்பு/குறும்பு மீசை... இன்னும் பலப்பல.

முக்கிய பாத்திரங்களின் அறிமுகக் காட்சிகள் அற்புதம். பின்னணி இசையும் பிரமாதம். தடியைச் சுழற்றியபடி ஆழ்வார்க்கடியான் நுழைந்த போது அரங்கம் கலகலத்தது. வந்தியத்தேவனும், அருண்மொழியும் தோன்றிய போது புது உற்சாகம் வந்தது. அதற்கு மாறாக உக்கிரமாய் நுழைந்த கரிகாலனின் தோற்றமும், வேகமும் அதற்கேற்ற பின்னணி இசையும், ஒரு மிரட்சியையும், திகைப்பையும், பெருமிதத்தையும் தந்தன.

நாவலை பலமுறை ஊன்றிப் படித்து, அந்தந்த பாத்திரங்களாகவே கலைஞர்கள் தங்களை சுவீகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் அருண்மொழிக்கே அதிக பொறுப்பு. நாவலைப் படிக்காத பாமரனின் உள்ளங்களிலும் வாழும் மாமன்னன் ராஜராஜ சோழனின் இளமைப் பருவமது. அதற்குரிய கண்ணியம், கம்பீரம், வீரம், தீட்சண்யத்தை கண்ணசைவில், முக பாவத்தில், உடல் மொழியில், ராஜ நடையில் வெளிப்படுத்த வேண்டும். அந்தக் கலைஞர் பிரமாதப்படுத்தி விட்டார்.

கோட்டை வாயிலில் யானைப் பாகனாய் முக்காடிட்டு, வானதியை அழைத்து வரும் காட்சி... கோட்டையை முற்றுகையிட்டிருக்கும் பெரிய வேளாளர் வானதியை வெட்ட வாளை ஓங்க, அதை தன் வாளால் தடுத்து வீழ்த்தியபின், முக்காட்டைக் களைந்து தான் அருண்மொழியென வெளிப்படுத்திய சமயம்... எதிர்பாராத விதமாய் தலைப்பாகை கழன்று முதுகில் தொங்கியது. சற்றும் அசராமல், தீ விழிகளுடன், கோபம் கொப்பளிக்கும் வார்த்தைகளை பேசியபடியே, பாகையை எடுத்து, படு கம்பீரமாய்ப் பொருத்தி நின்ற ராஜதோரணையே அந்தக் கலைஞரின் அர்ப்பணிப்பை பறை சாற்றும்.

ஓகே கண்மணி திரைப்படக் காட்சிகள் கூட தூண்டாத காதலுணர்வை, குந்தவை வந்தியத்தேவனின் சந்திப்பு கிளறுகிறது. கண்கள் கலந்த நொடியே அவர்கள் ஸ்தம்பித்து நிற்பதும், வந்தியத்தேவன் இலங்கைக்குக் கிளம்பும் போது, குந்தவையின் பின்னே காதருகே மென்மையாய் ‘வருகிறேன்’ என்றதும் அவள் உடல் சிலிர்ப்பதும், அவர் பத்தடி சென்றபின் திரும்பி உடலுருக, முகமலர, கண்ணில் காதல் பெருக சில கணம் நின்று பார்த்தபின் விரைந்த போது, கரவொலியில் அரங்கம் அதிர்ந்தது.

நாற்பதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள். ஐந்து பாக நாவலை 4 மணி நேரத்திற்கு அழகாகச் சுருக்கி நாடகமாக்கியிருக்கிறார்கள். வெகு காலத்திற்குப் பிறகு, நல்ல தமிழ் உச்சரிப்பைக் கேட்டது காதிற்கு இனிமை.

சிலம்பு வீச்சும், சிறு சிறு வாட்போர்களும், இரு கைகளாலும் வாட்களை கரகரவென சுழற்றும் காட்சிகளும் நன்று. இடையில் வாளுறையைத் தரிக்காமல், ஒரு வளையம் போன்றதைக் கட்டியிருக்கிறார்கள். இதனால் அதிலிருந்து வாளை உருவுவதில் இருக்கும் கம்பீரம், மீண்டும் அந்த வளையத்தை சரியாகப் பிடித்து வாளைச் சொருகும்போது இல்லை. இவ்விடத்தை சற்று கவனிக்கலாம்.

தோட்டா தரணியின் பிரதான செட்டும், அதிலேயே செய்யும் சிறு மாற்றங்களும் அழகு. ஆனால் சிறு வயதில் மனோகரின் புராண நாடகங்களைப் பார்த்திருக்கிறேன். காட்சிகளுக்கு ஏற்ப, சபை, வீதி, காடு என் முழுமையாய் மாறும் செட்கள் இதில் இல்லாதது சிறு குறையே.

பலர் ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்கள். நந்தினியே ஊமைப் பெண்ணாகவும் வருகிறார். தேவராளனே பார்த்திபேந்திர பல்லவன். ஆனால் ஆழ்வார்க்கடியானே ஜோதிடராய் வருவது ஒட்டவில்லை. இதைத் தவிர்க்கலாம்.

பெரிய பழுவேட்டரையர். கதைகேற்றபடியே வயோதிகம். ஆனால் கனைப்பும், கர்ஜனையும் பிரமாதம். ‘பராசக்தீ... சோழ தேசத்தைக் காப்பாற்று’ எனக் கூவி, உடல் துடிக்க உயிர்விடும் நடிப்பில் அரங்கே சிலிர்த்தது. (சோழர்குல தெய்வமான நிசும்பசூதனியைத்தான் பராசக்தீ என்பது போன்ற பெயரில் அழைத்தார்)

முதலை, யானை வேட தந்திரங்கள் குழந்தைகளை குஷி படுத்துகின்றன. சிறுவர் முதல் முதியவர் வரை அனைவரையும் கட்டிப் போட்ட, இந்த நாடகமும் குழுவும் மேன்மேலும் வளர வேண்டும்.

இவர்களையும், பிற பாத்திரங்களையும் குறிப்பாக நந்தினியைப் பற்றியும் பலவாறு சிறப்பித்துச் சொல்லலாம். ஆனால் ஒரே வரியில் முடிக்கிறேன். வெளியே வரும் போது, என் ஐந்து வயது மகன் கேட்கிறான்...

‘இன்னோரு வாட்டி பாக்கலாமாப்பா’

சுட்டிகள்:

Wednesday, December 24, 2014

வயல்வெளிப் பறவை

ஃபேஸ்புக் பாக்கலாமா? ம்ஹூம் முடியாது.

டிவிட்டர்? நெட்-டே இல்லடா.

போன்? அட உன்கிட்ட எந்த டிஜிட்டல் டிவைஸும் இல்லடா. மனம் சொல்லிச் சிரித்தது.

என்ன பண்ணலாம்? கட்டிலைப் போட்டுப் படு.

ஆஹா நல்லது.

பம்ப் செட் ரூமிற்குச் சென்று, கயிற்றுக் கட்டிலைத் தூக்கி வந்து, வரப்பின் மேல், குட்டைத் தென்னை மரம் தன் ஓலைக் கிளைகளை விரித்து, நிழல் பரப்பி விசிறிய இடத்தில் போட்டு, ஹாயாகப் படுத்தேன்.

நண்பகல் வெயில் தெரியா வண்ணம் காற்று பலமாக வீசியதில், உழுத களைப்பில் மெல்ல கண் சொக்கியது.

என் உறவினர் கிராமம். (இவ்விடத்தை ஏற்கனவே இரு பதிவுகளில் வர்ணித்து விட்டேன்)

அன்று அவருக்கு வேறு வேலை இருந்ததால், நான் உழுகிறேன் என்று வயலிலிறங்கி விட்டேன். உழவு மிஷினை இயக்க, வயலைச் சீராக உழ, குறிப்பாக வரப்பு ஓரங்களில் மிஷினைத் திரும்பும் முறையைச் சொல்லிக் கொடுத்தபின் அவர் வீட்டிற்குச் சென்று விட்டார். அடுத்த வயலில் அன்றுதான் நாற்று நட்டிருக்கிறார்கள். சற்று பிசகினால், மிஷின் வரப்பை உடைத்துச் சென்று, பயிரைப் பாழ் செய்து விடும். வம்பு வளரும். கவனம் என்றும் சொல்லிச் சென்றார்.

மிஷினின் கியர், கார் கியரைப் போல அத்தனை சுலபமாக விழவில்லை. நான் அதை பலம் கொண்டு இழுக்க, டங்-கென்று கியர் விழ, மிஷின் திடுமெனக் கிளம்பி என்னையும் இழுத்துக் கொண்டு ஓடியது. தட்டுத் தடுமாறி, சேற்று நீரை, தையா தையாவென மிதித்து ஓடி, திமிறும் காளையை அடக்குவது போல, சீறும் மிஷினை (சும்மா ஒரு வர்ணனை சார்) வரப்பின் விளிம்பில் பிரயத்தனப்பட்டுத் திருப்பி ஆசுவாசப் படுவதற்குள், முதுகுத் தண்டு விண்ணென்று வலித்தது.

முதல் 15 நிமிடத்திற்கு மிஷினை, தாறுமாறாகத்தான் ஓட்டினேன். மண் இளகத் தொடங்கியதும் லாவகமானது. அடுத்த அரை மணி நேரத்தில் சீராக உழத் தொடங்கியதும், மிஷின் டயரிலிருந்து படபடவென வயற்சேறு என் மீது அடிக்கத் தொடங்க, அதன் மண் வாசத்திலும் குளிர்ச்சியிலும் உடல் மகிழ்ந்தது.

மண் மீதிருக்கும் உழவனின் காதல் புரிந்தது.

அடி மண்ணை மிஷின் கிளரத் தொடங்கியதும் திகைத்தேன். எங்கிருந்தோ சடசடவென பறந்து வந்த வளையம் பறவைகள், விர்விர்ரென கீழிறங்கி எதையோ கொத்திக் கொண்டு மீண்டும் பறந்தன.

ஓ, மண் புழுக்கள்.

அவ்வளவு புழுக்களா என் காலிடையே நெளிகின்றன?! உற்றுப் பார்த்ததில் ஒன்று கூட என் கண்ணில் படவில்லை. ஆனால் பல அடி உயரத்திலேயே பறவைகளின் கண்களுக்கு, வாழை இலையில் ஜவ்வரிசிப் பாயசமாய் புழுக்கள் தெரிந்திருக்கின்றன. இது படைத்தவனின் விந்தையே.

நான் நகர நகர, பின்னே சிறகு படபடக்க அவை இறங்கி எழும் காட்சியை விவரிக்க வார்த்தைகள்... இருக்கு சார். இதை அப்படியே ஒரு செல்ஃபி எடுத்தால், பல ஹீரோக்களின் இண்ட்ரோ காட்சியை மிஞ்சிடலாம் சார்!

நண்பகல் வரை, இடைவெளியின்றி, இடைஞ்சலுமின்றி உழுதேன். வேலையையே துவங்க விடாமல் யாரும் Work plan கேட்கவில்லை. துவங்கும் போதே Status கேட்டு நச்சரிக்கவும் இல்லை. Inbox-ஐ திறப்பதற்குள், மெயிலாய்க் கடுகி வந்து, மெயில் அனுப்பியிருக்கிறேன் படி, என்று யாரும் அணத்தவும் தொணத்தவும் இல்லை. மனித தலைகளே தென்படவில்லை. இரண்டு செல்போன் டவர்களைத் தவிர மருத நிலத்தின் பசுமை மட்டுமே கண்ணிற்கு விருந்தளித்தன.

இதையெல்லாம் அசை போட்டபடி, கட்டிலில் நான் படுத்திருக்க, தங்கமணி வந்து எழுப்பினார். கம்பக் கூழும் வடு மாங்காவும் கொண்டு வந்திருந்தார். அவருடன் பேசியபடி... ம்ம் இது என்ன, பாரதிராஜா படக் காட்சியா? இதை மேலும் விவரிப்பதாய் இல்லை!

உண்டபின், அவர் வீடு திரும்பியபின் நிதானமாக சுற்றிக் கவனித்தேன்.

வரப்புகளின் சந்திப்பில் பூத்த பூக்களின் மேல் பட்டாம்பூச்சி. க்ளக்.. க்ளக்... அருகே பெருங்கிணற்றில், தளும்பும் நீரில், தாவும் தவளை. கிணற்றிலிருந்து, மோட்டார் ரூமிற்கு பைப் செல்லும் பொந்தின் வழியே இரண்டு பூனைக் குட்டிகள் எட்டிப் பார்த்தன. அதன் கண்களில், என்னைக் கண்டதில் ஒரு மிரட்சி.

ம்ம். அதை அப்புறம் ரசிக்கலாம். சரியான நேரத்திற்கு உழுது முடிக்காவிட்டால், நீர் இறைக்க, மோட்டார் இயக்க, மின்சாரம் இருக்காது.

அந்தி வரை உழுதேன். பின் மோட்டாரை இயக்கினேன். வாய் அகண்ட பைப்பின் வழியே பெரும் தூணாய் விழுந்த நீர், வரப்பில் ஓடி, கழனிகளில் கலக்கத் தொடங்கியது.

உடல் மீது அப்பியிருந்த சேற்றை, நீரில் நனைத்து, தேய்த்துக் குளித்தேன். நீரின் வெண்மையால், சேற்றின் வன்மையால், மறுநொடியே என் பால்ய பருவ வண்ணத்தில் உடல் மின்னத் தொடங்கியது. (மெட்ராஸ் தண்ணில குளிச்சே கருத்துட்டேன் சார்.)

உற்சாகம் பொங்க, கிணற்றினுள் டைவ் அடித்து, சற்று நேரம் நீந்தி, மேலேறி வந்து, நீர் விழும் இடத்தில், பள்ளத்தில் கால் நீட்டிப் படுத்தேன்.

ம்ம். தினம் ஸ்கூல் வேனைப் பிடிக்க (பையனுக்குச் சார்), பின் ஆபீஸ் பஸ்ஸைப் பிடிக்க, அரை பக்கெட் நீருக்கு மேல் குளிக்க நேரமில்லை; இன்றோ குளித்து முடிக்கவே மனமில்லை.

உழுத உடலை, நீர் நீவி விட்டது. களைத்த கால்களுக்கு ரம்பை பிடித்து விடுவது போல் இதமாக சுகமாக இருந்தது. (தங்கமணி திட்டமாட்டாங்கனு நம்பி எழுதியிருக்கிறேன்!).

தொலைவில், மலை முகடுகளின் மேல், சிவந்தவன் மெல்ல அஸ்தமித்தான்.

மூன்றாண்டுகளுக்குப் பின்...

அதே இடத்தில் நிற்கிறேன். கண்ணீருடன்.

நகரமயமாக்கலுக்கு இந்த கிராமமும் பலியானது.

நான் நீந்திய கிணறு மூடப்பட்டிருக்க, கண்ணுக்கெட்டிய தூரம் வரை, மருத நிலம் காய்ந்திருக்க, ஏரிக் கரை வரையிலும், பிளாட் கற்கள் நடப்பட்டிருந்தன. கிணற்றின் மீதும் ஒரு பிளாட்.

நான் உழுத நிலத்திற்கு வெகு அருகே ரோட் ரோலர் நிற்க, அதனருகே தார் கலக்கும் இயந்திரம், கரும் புகையைக் கக்கிக் கொண்டிருந்தது.

இக்கிராமம் தொடர்புடைய பதிவுகள்: