Showing posts with label கிராமம். Show all posts
Showing posts with label கிராமம். Show all posts

Sunday, September 5, 2021

கோவிலுக்குக் குடிபெயர்ந்த விநாயகர்

ஒன்றரை வருடமாக எங்கள் வீட்டில் குடியிருந்த விநாயகர், தனக்கென கட்டி முடிக்கப்பட்ட கோவிலுக்கு இன்று குடிபெயர்ந்தார்.

என் உறவினர் கிராமம். இதன் ஏரிக்கரை அருகே கிராமத்தார் விநாயகர் கோவிலை கட்டத் தொடங்கியிருந்தனர். கொரோனா காலத்தினாலும், பொருளாதாரச் சிக்கல்களாலும் கோவிலின் பணிகள் நீண்டு கொண்டிருந்தன.

கோவிலின் மூல விக்கிரகமாக வடிக்கப்பட்ட நான்கடி உயர கற்சிற்ப கற்பக விநாயகரை ஜலவாசம் முடிந்தபின், தான்ய வாசத்திற்கு எங்கள் வீட்டில் கிராமத்தார் வைத்திருந்தனர்.

இவருக்கென ஓர் அறை ஒதுக்கப்பட்டது. இவருக்கு இருபுறம் சுவர் இருக்க, இருபுறம் மரப்பலகைகள் வைக்கப்பட்டு உச்சிவரை நெல் குவிக்கப்பட, அதனுள் இவர் தன் தான்ய வாசத்தைத் தொடங்கினார். அன்றே எங்கள் குடும்பத்தில் ஒருவராய் உணர்வோடு ஒன்றிவிட்டார். 

அலுவல் பணியும், பள்ளிப் படிப்பும் வீட்டிலிருந்தே... என மருவிவிட்டதால், குடும்பமாய் இவ்வீட்டிற்கு வந்துவிட்டேன். 

நெற்குவியலின் மேல், பிரபையின் நடுவில் இருக்கும் சிங்க முகத்தின் பிடரி மட்டும் சற்றே வெளிப்பட்டிருப்பதைக் கண்டது முதலாய், ஒரு மகிழ்ச்சி என்னைத் தொற்றிக் கொண்டது. தினம் தோட்டத்திலிருந்து பூப்பறிக்கப்பட்டதும், முதலில் இவருக்கே, பிரபையின் மேல் சாற்றப்படும். ஒவ்வொரு முறையும் இவரைக் கடக்கும் போதெல்லாம், பிள்ளையாரப்பா... ஐங்கரா... பார்வதி மைந்தா என ஒரு பெயரை மனம் சொல்லிக் கொண்டே இருந்தது. 

தான்ய வாச காலம் முடிந்தது. இவருக்கு வெள்ளிக் கவசம் செய்ய அளவெடுப்பதற்கு கிராமத்தார், ஆச்சாரியை அவரது குழுவுடன் அழைத்து வந்தனர். 

நெற்குவியலை மெல்ல விலக்கியதும், அற்புதக் கலைநயத்துடன், சொக்க வைக்கும் அழகுடன் வெளிப்பட்டார் விநாயகர்.  

பீடத்தின் அடியிலிருந்து புடைத்துக் கொண்டிருந்த தாமரையின் மேல் வலது காலை வைத்து, அதன் முழங்கால் பகுதியைத் தடவியபடித் தொங்கும் நீண்ட ஆபரணத்தின் விளிம்பை இடது கால் விரல்கள் தொட்டபடி சம்மணமிட்டு பீடத்தின் மேல் ஆனந்த வடிவாய்க் காட்சி தந்தார். 

பாசாங்குசத்தை பிடித்திருக்கும் கைவிரல்களின் கோடுகள், அதன் நகத்தின் விளிப்புகள்,  இடக்கை கொள்ளளவிற்கு லட்டு,  வலமாய் வளைந்த தும்பிக்கையின் நுனியில் கொழுக்கட்டை, தந்தங்களுக்கிடையே மணி பூட்டிய சிறு ஆபரணம், பேழை வயிற்றின் வட்ட வடிவம், அதை இறுக்கியபடி ஒட்டியாணம், தோளையும், மேல் மார்பையும், நெற்றியின் இரு பகுதியில் பிறை வடிவாக அலங்கரிக்கும்  ஆபரணங்கள், மணிக்கட்டில் மணிகள் கோர்க்கப்பட்ட ஆபரணம், அக்னி சுடர்விடும் வடிவாய் கிரீடம்... கோபத்தில் மூக்கு புடைத்த சிங்க முகப் பிரபைதான், ஆனால் வாய்ப் பகுதி வேலைப்பாடுகளால் கோரைப் பற்கள் வெளிப்பட்டும் அது சிரிக்கும் சிங்கமாகவே காட்சி தந்தது. இவ்வளவு அழகுடன் வடித்த சிற்பி யாரோ, அவர் வளமுடன் வாழ்க.

வந்தவர் யாவரும் இவ்வழகில் லயித்து, மகிழ்வோடு தத்தம் செல்போனில் பலவாறு படம் பிடித்துக் கொண்டனர். (அப்பாடா, செல்ஃபி எடுக்கும் எண்ணமெல்லாம் யாருக்கும் வரவில்லை!).

கவசத்திற்கு அச்சு எடுக்கும் பணி துவங்கியது. 

பெரிய அண்டாவில் நீர் ஊற்றப்பட்டு கொதிக்க வைக்கப்பட்டது. ஒரு மூட்டை நிறைய மெழுகும் சாம்பிராணியும் கலந்த பெரிய பெரிய கட்டிகள் இருந்தன. அவை கொதிநீரில் போடப்பட்டதும், குழைந்து சாந்தாக மாறியது. நீண்ட மரக் கரண்டி மூலம் அதைக் கிண்டி எடுத்து தரையில் கிடத்தினர். 

கையால் தொடுமளவிற்குச் சூடு இறங்கியதும், அதை எடுத்து தலை, முகம், கழுத்து, தோள் பகுதிகளில் தனித்தனியாய் பொறுமையாய் அழுத்தி ஒட்டினர். சில நிமிடங்களுப்பின் அதைக் கவனமாய்ப் பிடித்து இழுக்க, அது எந்தவிதச் சிக்கலும் இன்றி, சிலை மேல் எந்தவித ஒட்டுதலும் இன்றி அழகாகப் பிரிந்து வந்தது. அதன் உட்பகுதியில் சிலையின் வடிவங்கள் பதிந்திருந்தன. ஆபரணத்தின் குண்டு மணிகள் கூட கச்சிதமாய்ப் பதிந்திருந்தன. அன்னக்கூடையில் நிரப்பட்ட குளிர்ந்த நீரில் இவற்றை வைக்க, இவை இறுகிக் கொண்டன. 

சிலையின் அனைத்து பகுதிக்கும் அச்செடுக்கும் வரை மெழுகை சாந்தாக்குவதும், அச்செடுப்பதும், அதைக் குளிர்விப்பதும் தொடர்ந்தது. (வெள்ளியை உருக்கி இவற்றில் விட அவை கவச வடிவு பெறும்).

பணி முடிந்தது. தான்ய வாசம் காலம் முடிந்து விட்டதால், துணியால் போர்த்தப்பட்டு அவர் அறையில் வைக்கப்பட்டார். 

இவர் யானை முகத்தை மட்டும் கொண்டிருக்கவில்லை. யானையின் எடையையும்தான் கொண்டிருக்கிறார். ஆறு பேர் சேர்ந்து முயன்றால் அரையடி மட்டும் நகர்ந்து சிரிக்கிறார். கனமான இரும்புக் குழாய்களையும், உருளைக் கட்டைகளையும் அடியில் வைத்து உருட்டித்தான் இவரை நகர்த்த முடிந்தது.

கோவில் பணிகள் மேலும் மாதங்களாய் நீண்டு கொண்டே செல்ல, இவரும் எங்கள் குடும்ப நபராகத் தொடர்ந்தார். 

மண்ணச்சநல்லூர் கிரிதரன் இசையில் விநாயகர் ஆல்பத்திற்கு (உச்சி பிள்ளையாரே சரணம்), உன்னி கிருஷ்ணன்,  ஹரிணி  இருவரின் குரலில் பாடல்கள் எழுதியது முதல் விநாயகரின் வடிவை அணுவணுவாக ரசிக்கத் தொடங்கியிருந்தேன். ஆல்பத்தில் கிரிதரன், ஔவையின் விநாயகர் அகவலுக்கும் இசையமைத்துப் பாடியிருந்தார். அதுமுதலாக தினமும் அகவலை ஓதிக்கொண்டுதான் இருந்தேன். 

ஆனால் இந்த விநாயகரின் வடிவை உள்வாங்கிக் கொண்டபின், தினசரி இவருக்கு ஒரு பூவைச் சூடி, அகவலைப் பாடத் தொடங்கியதும், பல சொற்கள் ஆழமாக விளங்கத் தொடங்க திகைத்துத்தான் போனேன். 

“வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)”... 

“சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி”...

போன்ற சொற்பதங்கள் எல்லாம் மனதை என்னன்னவோ செய்யத்தொடங்கின. 

மெய்யோகம் ரகுராமின், வசு-பிராணாயாமம் வகுப்புகளில் பங்கெடுத்து இடகலை, பிங்கலை, சுழுமுனை மூச்சு முறையை, முறையாகக் கற்றபின், 

“இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்

கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி” - வரிகளும், அதைத் தொடர்பவையும்  வேறொரு பரிமாணத்தில் புரிபடத் தொடங்கியது.

ஔவை வெறும் தமிழ் புலவர் மட்டும் அல்லர். விஞ்ஞானமும் மெய்ஞானமும் தெளிந்த ஞானி. அவர் அகவலை எளிமையாகத்தான் எழுதியிருக்கிறார். விநாயகரை வர்ணித்துத்தான் தொடங்குகிறார். ஆனால் அவரை வேண்டும் விதமாய்த் தொடரும்போது ஒரு மகோன்னத வாழ்விற்கான சூட்சுமத்தையே சொற்களில் மந்திரமாய்ப் பொதித்து வைத்திருக்கிறார்.  

அவற்றை விநாயகரின் வடிவை மனதில் நிறுத்தி சொல்லச் சொல்ல, காலம் செல்லச் செல்ல, சமயத்தில் நமக்குத் துணை வரும் விதமாய் அவை வெளிப்படுகின்றன.

அந்த நிலையை, இந்த விநாயகர் இப்போதே தந்தருளியிருக்கிறார்.

கோவில் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. இன்னும் மூன்று நாட்களில் கும்பாபிஷேகம்.

இன்று காலை கிராமத்தினர் எங்கள் வீட்டிற்கு வந்து, விநாயகரையும், சிறிய மூஞ்சூறு, பலிபீட சிலைகளையும் வண்டியில் ஏற்றினர். வண்டி கோவிலை நோக்கிப் புறப்பட... 

சட்டென்று உள்ளமும், இல்லமும் வெறிச்சோடியது.

Wednesday, December 2, 2020

பாம்பும் பூனையும்

சட்டென்று அந்தப் பாம்பு தோட்டத்தின் புற்களிடையே சீறி எழுந்து படமெடுத்து நிற்க, அதனுடன் சண்டைக்குச் சென்ற பூனை ஓரடி பின்வாங்கி நிற்க... ஆஹா, இன்று இவைகளின் சண்டையைப் படமெடுத்து விடலாம் என்று மொபைல் போனை எடுத்து வர வீட்டினுள் ஓடினேன்.

இந்த கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தே வேலையென்பதால், உறவினரின் கிராமத்திற்குச் சென்று விட்டேன். மழைக்காலம் தொடங்கியதில் பல ஜீவராசிகள் தத்தம் இடங்களிலிருந்து வெளியே வந்து சுற்றிக் கொண்டிருந்தன. ஒரு சிறு முதலை அளவிற்கு ஒரு உடும்பு தோட்டத்துப் பக்கம் வந்து சென்றது. சைனாவிலிருந்தே வந்து விட்டனவோ என அஞ்சும்படி இருபது வௌவ்வால்கள் கூட பெரும் சப்தம் எழுப்பிப் பறந்தன. ஆனால் அதிகப்படியாக சுற்றுவது என்னவோ பாம்புகள்தாம். 

வீட்டு வாசற் பகுதியில், ஜே.சி.பி இயந்திரத்தின் மூலம் நிலத்தடி குழாய் வேலையாய் ஊராட்சி பள்ளம் தோண்ட, பூமியினுள் நாகலோகம் திறந்து கொண்டதோ என்னமோ?!, அப்பள்ளத்தின் வழியே பாம்புகள் வெளிவந்து செல்வதும் சகஜமானது. ஒரு முறை டூ-வீலர் ஸ்டேண்டின் மீது நான் கால் வைக்க, வெகு அருகில், வண்டியின் அடியிலிருந்து ஒரு பாம்பார் எட்டிப் பார்த்து, தன் பிளவுபட்ட நாக்கு நுனியை, வெளியே உள்ளேயென சிலமுறை நீட்டி இழுத்து காட்சி தந்தபின் சென்றுவிட்டார். நாம் அதை அடிக்க முயலாமல் சிவனே என்று இருந்தால், அவைகளும் அதே சிவனே என்று போய்விடுகிறன. 

ஆனால் இங்கே நான்கு பூனைகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இவைகளுக்கு அக்கம்பக்கத்து வீடுகள் எதுவும் ஒரு எல்லையில்லை.  எந்தச் சுவர்களும் ஒரு தடையுமில்லை. வீட்டுக்கு வீடு சுவரேறிச் சென்று, சமையல் அறை சன்னல் வழியே உள்ளே நுழைந்து பாலைக் குடித்துவிட்டு, வெளியே விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர் சிறுமியரிடம் கொஞ்சிக் குலவிவிட்டுச் சுற்றிக் கொண்டிருக்கும். 

பாரதியார் பாடியதுபோல சாம்பல் நிறத்தில் ஒரு பூனை, வெள்ளைப் பாலின் நிறத்தில் ஒன்று, பாம்பின் நிறத்தில் ஒன்று... அட விடுங்க... பாம்பின் நிறத்தில் பூனை இருப்பதெல்லாம் தேவையில்லை. இவை நாலுமே, பாம்பைக் கண்டால் சண்டைக்கு வந்து விடுகின்றன. ஏரியா பிரித்து, உனக்கு அந்தப் பாம்பு எனக்கு இந்தப் பாம்பு என்றெல்லாம் பங்கு பிரித்து சண்டைக்கு வருகின்றன.

டூ-வீலரின் அடியே ஓய்வெடுக்கும் பாம்பை ஒரு பூனை தாவி அதன் தலையருகே கவ்விப் பிடிக்க, பாம்பு சடசடவென தன் உடலை பூனையின் கழுத்தை சுற்றி இறுக்க முயல... இவைகளின் சண்டையின் களம், தெருவுக்கு மாறி, பின் பள்ளத்தினுள் விழுந்து புரண்டு, மறுபடியும் மேலேறி, ஒரு புதரினுள் சென்று மறைந்து விட்டன. கிளைமாக்ஸ் தெரிய  இரண்டு நாட்கள் ஆனது. எதற்கும் பாதிப்பில்லை. மறுபடியும் டூ-வீலரின் அடியே பாம்பார் ஓய்வெடுக்க வந்தார். பூனையார் வழக்கம் போல் தோட்டத்துப் பக்கம் சுற்றித் திரியத் தொடங்கினார்.

நான் பெரும்பாலும் தோட்டத்தின் அருகேதான் லேப்டாப்பில் பணிசெய்து கொண்டிருக்கிறேன். வெள்ளைப் பூனை மெல்ல ஓட்டின் மேலே பதுங்கிப் பதுக்கி முன் நகர்வது ஓரக் கண்ணில் தெரிய திரும்பியவன் திகைத்தேன். இதுவரைக் கண்ட பாம்புகள் எல்லாம் இரண்டு முதல் இரண்டரை அடி நீளம் மட்டுமே இருந்தன. ஆனால் இப்போது கண்டதோ ஆறடிக்கும் மேலான நீளத்தோடு மிரள வைக்கும் தேகவனப்போடு ஒரு பாம்பு. மெல்ல ஓட்டின் மீதிருந்து, தூணின் வழியே கீழே இறங்கிக் கொண்டிருந்த இதன் வாலைப் பிடிக்கத்தான், பூனையார் பதுங்கி வந்து கொண்டிருந்தார்.

எனக்கும் தூணுக்கும் இடைப்பட்ட தூரம் வெறும் நாலைந்து அடிதான். பூனை, பாம்பின் வாலைப் பிடித்து இழுத்து, இது சீறி எழுந்தால், என்பக்கம் வந்து விழும் வாய்ப்பு அதிகம்,. சுதாரித்து நான் எழுவதற்குள். பூனை தாவிப் பிடிக்க, அதன் விரல் நகங்களுக்கிடையே, மாட்டிக் கொள்ளாமல், பாம்பின் வால் வழுக்கிச் செல்ல, பாம்பு காம்பவுண்ட் சுவர் ஓரமாய் பல மாதமாய் கிடக்கும் கட்டைகளுக்கிடையே சென்று மறைந்து விட்டது. அவ்வப்போது வெளியே வந்து ஓட்டின் மேலேறி, இரைதேடித் திரும்புவது இதன் வாடிக்கையானது.

எந்தக் காட்சியும் இமைபொழுதில் மறைந்து விடுகின்றன. ஒருமுறைகூட படம் எடுக்க முடிந்ததில்லை. இந்த ஆறடிப் பாம்பும் வெள்ளைப் பூனையும்தான் இப்போது நேருக்கு நேர் போர் முரசு கொட்டின.

சிறு வயதில் Snake in the monkey's shadow என்றொரு குங்ஃபூ படம் பார்த்ததெல்லாம் ஞாபகத்திற்கு வந்தது.  பாம்பின் ஸ்டைலில் சண்டை போட்டு பலரை வீழ்த்தும் வில்லன்கள் இருவரை வெல்ல முடியாமல் திணறும் நாயகன், காட்டில் பாம்புடன் சண்டையிட்டு ஜெயிக்கும் குரங்கைக் கண்டு, பின் அதைப் போலவே சண்டையிட்டு வெல்கிறான். அந்த பாம்பும் ஆறடிக்கு மேல் நீளமிருந்ததும் நினைவுக்கு வந்தது. அது போல ஒரு சண்டையை நாம் இப்போது படமெடுக்கப் போகிறோம்... அட மொபைலில்தாங்க... என்று எண்ணிக் கொண்டே, கேமிராவை ஆன் செய்து கொண்டே விரைந்து திரும்பினேன்.

பூனை அப்படியே அசையாமல் கூர்மையான பார்வையோடு நின்று கொண்டிருந்தது. ஆனால் பாம்பைக் காணோம். புற்களிடையே ஏதாவது சலசலப்பு தெரிகிறதா எனப் பார்த்தேன். ம்ஹூம். பாம்பிருக்கும் சுவடே இல்லை. அதுவரை வீரச் சவால் நாயகனாய் நின்றிருந்த பூனை என்னை திரும்பிப் பார்த்து விட்டு அதுவும் சிவனே என்று சென்று விட்டது. 

சை... இன்றும் படமெடுக்க முடியவில்லை என சலித்து, கேமராவை அணைக்கும் போது, யூ.டியூப் ஆப் மீது விரல் பட்டுவிட்டது. ஆப் திறந்து கொள்ள... ரஜினி, குஷ்பு, பாம்பு என அண்ணாமலை படத்தின் பாம்புக் காட்சி முதலாவதாய் வந்து நின்றது. என்ன டிசைனோ!

Wednesday, December 24, 2014

வயல்வெளிப் பறவை

ஃபேஸ்புக் பாக்கலாமா? ம்ஹூம் முடியாது.

டிவிட்டர்? நெட்-டே இல்லடா.

போன்? அட உன்கிட்ட எந்த டிஜிட்டல் டிவைஸும் இல்லடா. மனம் சொல்லிச் சிரித்தது.

என்ன பண்ணலாம்? கட்டிலைப் போட்டுப் படு.

ஆஹா நல்லது.

பம்ப் செட் ரூமிற்குச் சென்று, கயிற்றுக் கட்டிலைத் தூக்கி வந்து, வரப்பின் மேல், குட்டைத் தென்னை மரம் தன் ஓலைக் கிளைகளை விரித்து, நிழல் பரப்பி விசிறிய இடத்தில் போட்டு, ஹாயாகப் படுத்தேன்.

நண்பகல் வெயில் தெரியா வண்ணம் காற்று பலமாக வீசியதில், உழுத களைப்பில் மெல்ல கண் சொக்கியது.

என் உறவினர் கிராமம். (இவ்விடத்தை ஏற்கனவே இரு பதிவுகளில் வர்ணித்து விட்டேன்)

அன்று அவருக்கு வேறு வேலை இருந்ததால், நான் உழுகிறேன் என்று வயலிலிறங்கி விட்டேன். உழவு மிஷினை இயக்க, வயலைச் சீராக உழ, குறிப்பாக வரப்பு ஓரங்களில் மிஷினைத் திரும்பும் முறையைச் சொல்லிக் கொடுத்தபின் அவர் வீட்டிற்குச் சென்று விட்டார். அடுத்த வயலில் அன்றுதான் நாற்று நட்டிருக்கிறார்கள். சற்று பிசகினால், மிஷின் வரப்பை உடைத்துச் சென்று, பயிரைப் பாழ் செய்து விடும். வம்பு வளரும். கவனம் என்றும் சொல்லிச் சென்றார்.

மிஷினின் கியர், கார் கியரைப் போல அத்தனை சுலபமாக விழவில்லை. நான் அதை பலம் கொண்டு இழுக்க, டங்-கென்று கியர் விழ, மிஷின் திடுமெனக் கிளம்பி என்னையும் இழுத்துக் கொண்டு ஓடியது. தட்டுத் தடுமாறி, சேற்று நீரை, தையா தையாவென மிதித்து ஓடி, திமிறும் காளையை அடக்குவது போல, சீறும் மிஷினை (சும்மா ஒரு வர்ணனை சார்) வரப்பின் விளிம்பில் பிரயத்தனப்பட்டுத் திருப்பி ஆசுவாசப் படுவதற்குள், முதுகுத் தண்டு விண்ணென்று வலித்தது.

முதல் 15 நிமிடத்திற்கு மிஷினை, தாறுமாறாகத்தான் ஓட்டினேன். மண் இளகத் தொடங்கியதும் லாவகமானது. அடுத்த அரை மணி நேரத்தில் சீராக உழத் தொடங்கியதும், மிஷின் டயரிலிருந்து படபடவென வயற்சேறு என் மீது அடிக்கத் தொடங்க, அதன் மண் வாசத்திலும் குளிர்ச்சியிலும் உடல் மகிழ்ந்தது.

மண் மீதிருக்கும் உழவனின் காதல் புரிந்தது.

அடி மண்ணை மிஷின் கிளரத் தொடங்கியதும் திகைத்தேன். எங்கிருந்தோ சடசடவென பறந்து வந்த வளையம் பறவைகள், விர்விர்ரென கீழிறங்கி எதையோ கொத்திக் கொண்டு மீண்டும் பறந்தன.

ஓ, மண் புழுக்கள்.

அவ்வளவு புழுக்களா என் காலிடையே நெளிகின்றன?! உற்றுப் பார்த்ததில் ஒன்று கூட என் கண்ணில் படவில்லை. ஆனால் பல அடி உயரத்திலேயே பறவைகளின் கண்களுக்கு, வாழை இலையில் ஜவ்வரிசிப் பாயசமாய் புழுக்கள் தெரிந்திருக்கின்றன. இது படைத்தவனின் விந்தையே.

நான் நகர நகர, பின்னே சிறகு படபடக்க அவை இறங்கி எழும் காட்சியை விவரிக்க வார்த்தைகள்... இருக்கு சார். இதை அப்படியே ஒரு செல்ஃபி எடுத்தால், பல ஹீரோக்களின் இண்ட்ரோ காட்சியை மிஞ்சிடலாம் சார்!

நண்பகல் வரை, இடைவெளியின்றி, இடைஞ்சலுமின்றி உழுதேன். வேலையையே துவங்க விடாமல் யாரும் Work plan கேட்கவில்லை. துவங்கும் போதே Status கேட்டு நச்சரிக்கவும் இல்லை. Inbox-ஐ திறப்பதற்குள், மெயிலாய்க் கடுகி வந்து, மெயில் அனுப்பியிருக்கிறேன் படி, என்று யாரும் அணத்தவும் தொணத்தவும் இல்லை. மனித தலைகளே தென்படவில்லை. இரண்டு செல்போன் டவர்களைத் தவிர மருத நிலத்தின் பசுமை மட்டுமே கண்ணிற்கு விருந்தளித்தன.

இதையெல்லாம் அசை போட்டபடி, கட்டிலில் நான் படுத்திருக்க, தங்கமணி வந்து எழுப்பினார். கம்பக் கூழும் வடு மாங்காவும் கொண்டு வந்திருந்தார். அவருடன் பேசியபடி... ம்ம் இது என்ன, பாரதிராஜா படக் காட்சியா? இதை மேலும் விவரிப்பதாய் இல்லை!

உண்டபின், அவர் வீடு திரும்பியபின் நிதானமாக சுற்றிக் கவனித்தேன்.

வரப்புகளின் சந்திப்பில் பூத்த பூக்களின் மேல் பட்டாம்பூச்சி. க்ளக்.. க்ளக்... அருகே பெருங்கிணற்றில், தளும்பும் நீரில், தாவும் தவளை. கிணற்றிலிருந்து, மோட்டார் ரூமிற்கு பைப் செல்லும் பொந்தின் வழியே இரண்டு பூனைக் குட்டிகள் எட்டிப் பார்த்தன. அதன் கண்களில், என்னைக் கண்டதில் ஒரு மிரட்சி.

ம்ம். அதை அப்புறம் ரசிக்கலாம். சரியான நேரத்திற்கு உழுது முடிக்காவிட்டால், நீர் இறைக்க, மோட்டார் இயக்க, மின்சாரம் இருக்காது.

அந்தி வரை உழுதேன். பின் மோட்டாரை இயக்கினேன். வாய் அகண்ட பைப்பின் வழியே பெரும் தூணாய் விழுந்த நீர், வரப்பில் ஓடி, கழனிகளில் கலக்கத் தொடங்கியது.

உடல் மீது அப்பியிருந்த சேற்றை, நீரில் நனைத்து, தேய்த்துக் குளித்தேன். நீரின் வெண்மையால், சேற்றின் வன்மையால், மறுநொடியே என் பால்ய பருவ வண்ணத்தில் உடல் மின்னத் தொடங்கியது. (மெட்ராஸ் தண்ணில குளிச்சே கருத்துட்டேன் சார்.)

உற்சாகம் பொங்க, கிணற்றினுள் டைவ் அடித்து, சற்று நேரம் நீந்தி, மேலேறி வந்து, நீர் விழும் இடத்தில், பள்ளத்தில் கால் நீட்டிப் படுத்தேன்.

ம்ம். தினம் ஸ்கூல் வேனைப் பிடிக்க (பையனுக்குச் சார்), பின் ஆபீஸ் பஸ்ஸைப் பிடிக்க, அரை பக்கெட் நீருக்கு மேல் குளிக்க நேரமில்லை; இன்றோ குளித்து முடிக்கவே மனமில்லை.

உழுத உடலை, நீர் நீவி விட்டது. களைத்த கால்களுக்கு ரம்பை பிடித்து விடுவது போல் இதமாக சுகமாக இருந்தது. (தங்கமணி திட்டமாட்டாங்கனு நம்பி எழுதியிருக்கிறேன்!).

தொலைவில், மலை முகடுகளின் மேல், சிவந்தவன் மெல்ல அஸ்தமித்தான்.

மூன்றாண்டுகளுக்குப் பின்...

அதே இடத்தில் நிற்கிறேன். கண்ணீருடன்.

நகரமயமாக்கலுக்கு இந்த கிராமமும் பலியானது.

நான் நீந்திய கிணறு மூடப்பட்டிருக்க, கண்ணுக்கெட்டிய தூரம் வரை, மருத நிலம் காய்ந்திருக்க, ஏரிக் கரை வரையிலும், பிளாட் கற்கள் நடப்பட்டிருந்தன. கிணற்றின் மீதும் ஒரு பிளாட்.

நான் உழுத நிலத்திற்கு வெகு அருகே ரோட் ரோலர் நிற்க, அதனருகே தார் கலக்கும் இயந்திரம், கரும் புகையைக் கக்கிக் கொண்டிருந்தது.

இக்கிராமம் தொடர்புடைய பதிவுகள்:

Wednesday, December 29, 2010

சொன்னபடி கேளு மக்கர் பண்ணாத


“அம்மாவ், வுங்க கழனில மாடு பூந்திடிச்சி...” வாசலில் குரல் கேட்டது.

கிராமத்திலிருக்கும் உறவினர் வீட்டுக்கு அப்போதுதான் வந்திருந்தேன். மார்கழித் திங்களால் சில்லிட்ட கிணற்று நீரில் முகம் கழுவிக் கொண்டிருந்த போதுதான் அந்தக் குரல் கேட்டது.

“அது பொல்லாத மாடும்மா, எங்களால ஓட்ட முடியல... நடு கழனில அட்டகாசம் தாங்கலம்மா...” அடுத்தவீட்டுப் பெண்தான்(!) சொல்லிக் கொண்டிருந்தாள்.

உறவினர் வெளியூர் சென்றிருந்தார். நான் மட்டுமே ஆண்மகன். அந்தக் காளையை அடக்க... இல்லை இல்லை விரட்ட இந்தக் காளையாச்சு என, ஈர முகத்தை அவசர அவசரமாய்த் துடைத்துக் கொண்டு, வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு வீராவேசமாக கழனியை நோக்கி ஓடினேன்.

வீட்டிலிருந்து நூறு மீட்டர் தொலைவில் வயலும் வயல் சார்ந்த நிலம்தான். வரப்பில் ஓடியபோது அந்த வித்தியாசத்தை உணர்ந்தேன்.

ஐ.டி கம்பெனியில் 24 மணிநேரமும் சாக்ஸினூடே ஷூவினுள் புழுங்கும் கால்கள், செருப்பு கூட அணியாமல் கெட்டிப்பட்ட களிமண் வரப்புகளில் பனியுடன் படர்ந்திருந்த புற்களின் மேல் ஓடியபோது, ஒரு இனம் புரியாத சிலிர்ப்பு என்னுடல் முழுக்கப் பரவியது.

14 அங்குல மானிட்டரே உலகம் எனப் பார்க்கும் கண்களுக்கு நிஜமான உலகம் எதிரே விரிந்தது. அதன் பார்வையின் வீச்சுவரை இடுப்பளவு உயர்ந்த பயிர்கள் காற்றில் சலசலத்துக் கொண்டிருந்தன.

பயிர் நிலங்களைத் தொடர்ந்து குன்றுகளும், அதன் மேல் நிலவை விட குளிர்ச்சியாக சிவப்புச் சூரியனும்... காட்சியின் கவர்ச்சியில் லயித்து அப்படியே நின்றுவிட்டேன்.

சே! ஐ.டி-யால் எவ்வளவு இழந்து விட்டோம். இரவென்றாலும் பகலென்றாலும் டியூப் லைட்டே நமது சூரியன். காலை, மாலை, அந்தி, சந்தி... எதையுமே உணர முடிவதில்லை. சன்னல்கள்கூட அடைக்கப்பட்டுவிட்ட க்யூபிக்கிள்தான் நம்முடைய ஆறடி நிலம்.

இப்படி வேட்டியை மடித்துக் கட்டி, துண்டை மட்டும் தோளில் போர்த்திக் கொண்டு, வெறும் கால்களை மண்ணில் ஒற்றி, காற்றை நுகர்ந்து, அண்ணாந்து வான் பார்க்கும் சுகத்தை அடியோடு இழந்துவிட்டதை நினைத்து சோககீதம் மீட்டிக் கொண்டிருந்தேன்.

சுரீரென வந்த வேலை உறைத்தது.

சட்டென சுதாரித்து கண்களைச் சுழற்றி மாட்டைத் தேடினேன். எங்கும் காணவில்லை. உறவினரின் நிலத்தை அடையாளம் காணவே சற்று நேரம் பிடித்தது. மெதுவாக அதை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

திடீரென நன்கு வளர்ந்திருந்த வயல் நடுவிலிருந்து இரு கொம்புகள் சற்று எழும்பித்தாழ...

‘ஆஹா... அவனா நீ...’ என்று கூச்சலிட்டபடி அங்கே பாய்ந்தேன்.

நான் வயலை அடைய, அதுவும் வெளி வர, நேருக்குநேர் சந்தித்துக் கொண்டதில் ஜல்லிக்கட்டு முரசு கொட்டியது. அது சாதுவான பசுதான். ஆனால் அது கண்களை உருட்டிய விதத்தில், கொம்புகளை சிலுப்பிய விதத்தில் காங்கேய நல்லூர் காளையெனத் தெரிய, எனக்கு சற்று வெடவெடத்தது.

எனக்குப் பின்னால் அப்போதுதான் உழுது நீர் இறைக்கப்பட்ட கழனி. தமிழ் சினிமாவில் மட்டுமே ஹீரோவும் வில்லனும் சேர்ந்து விழுந்து கட்டிப் புரள்வார்கள். இந்தப் பசு இன்னொரு முறை தலையை சிலுப்பினாலே, நானாகச் சென்று விழ வேண்டியதுதான்.

முரட்டுக் காளை ரஜினி மாதிரி ஜல்லிக்கட்டு போஸ் கொடுத்தேன் (வயலில் யாருமில்லையென்ற தைரியம் தான்!). அது அசரவில்லை.

‘சொன்னபடி கேளு...’ சிங்கார வேலன் மாதிரி பாடினேன். அது முறைத்தபடி என்னை நோக்கி ஓரடி வைத்தது. அவ்வளவுதான். பின்வாங்கிய என் கால்கள் சேற்றில் வசமாகச் சிக்கிக் கொண்டதில் என் வீரம் பறந்தோடியது. கை கூப்பி...

‘மாதா... கோ மாதா... போ மாதா...’ என சாவித்ரி குரலில் பாட முயல, ஸ்ருதி நாராசமாய் எழ, அது மிரண்டு ஓடி, ஒரு வீட்டின் கொல்லைப்புரத்தில் நுழைந்து விட்டது.

உறவினர் பாடுபட்டு விதைத்த வயலின் நடு பகுதி முழுதும் பாழ். மாட்டின் மேல் கோபம் வரவில்லை. அதற்குரிய தீனியைத் தராமல் வயலில் மேய விட்ட மாட்டுக்கார வேலன் மேல்தான் கோபம் வந்தது. மாடு நுழைந்த வீட்டுத் தொழுவத்திற்குச் சென்றேன். அங்கே ஒருவர் தவிட்டைக் கலந்து மாடுகளுக்கு தண்ணி காட்டிக் கொண்டிருந்தார்.

‘ஏங்க, உங்க மாட்ட கட்டி வைக்க மாட்டீங்களா?’ சண்டைக்குச் சென்றேன்.

“எல்லா மாடும் கட்டிதானே இருக்கு” என்றார். உண்மைதான். அங்கே எல்லா மாடுகளும் கட்டப்பட்டுதான் இருந்தன. ஆனால் அனைத்தும் எருமை மாடுகள்.

‘ஒரு பசு மாடு வந்துச்சே!’

“அதுவா, அது எங்க வூட்டு மாடுல்ல. கோடி வூட்டு மாடு. அப்பவே வெரட்டிட்டேன்”

‘ஓ! நல்லது. எந்தப் பக்கம் விரட்டினீங்க’

“கழனி பக்கந்தான்”

அட, தேவுடா... மீண்டும் வயலுக்கு ஓடினேன். அங்கே அந்தப் பசு, என்னைப் பார்த்ததும் ஓடிக் கொண்டே வேகவேகமாய் பயிரைத் தின்னத் தொடங்கியது.30 நிமிடம் கடும் போராட்டம். சேற்றில் இறங்கி, வேலிகளைத் தாண்டி, கிணறுகளைச் சுற்றி, வரப்புகளில் ஓடி (நான் யார் பயிரையாவது மிதித்து விட்டால், கிராமத்து வீச்சரிவாள் என்னை அறுவடை செய்துவிடும்!) ஒரு வழியாக அந்தப் பசுவை வயலை விட்டு விரட்டிவிட்டேன்.

ஆனாலும் தீனி அகப்பட்டு விட்டதில், அதை அசை போட்டபடி அசைந்து அசைந்து நிதானமாகச் சென்றது பசு.

அதற்கு மேல் என்னால் நிற்க முடியவில்லை. வீடு சென்று, திண்ணையில் கால் நீட்டி, பெருமூச்சு விட்டு அமர்ந்தேன். என் மென்மையான(!) பாதங்கள் விண்விண்னென வலித்தது. குனிந்துப் பார்த்தால்...

முட்கள் குத்தி கிழிபட்டதில், சொட்டுச் சொட்டாய்... திட்டுத்திட்டாய் ரத்தம்.

கிணற்றடிக்குச் சென்று ஜல்லிக்கட்டு ரணங்களை கழுவிக் கொண்டிருக்கும்போது “அம்மாவ், கழனில மாடு....” என்று வாசலில் மறுபடி குரல் கேட்டது.

Wednesday, September 22, 2010

குரங்கு

என் உறவினரின் கிராமத்திற்கு நான் அடிக்கடிச் செல்வதுண்டு. எங்கள் வீட்டைச் சுற்றி மரங்களும், பின் பகுதியில் வயல்களும், சற்றுத் தள்ளி குன்றுகளும் சூழ்ந்த ரம்மியமான கிராமம்.

இங்கே தினமும் குரங்குக் கூட்டம் எங்கள் வீட்டை கடந்துச் செல்லும். எங்கள் வீடு மாடியில் உள்ளதால் அதன் சன்னல்களில் வசதியாக அமர்ந்துகொண்டு கம்பிகளுக்கிடையே தலையை நுழைத்து எட்டிப் பார்க்கும்.

U-வடிவத்தில் இருக்கும் கம்பிகளுக்கிடையே, கீழே இரண்டு குரங்குகளும், மேலே ஒரு குரங்கும் நெருக்கிக் கொண்டு தலையை நுழைக்கும்போது, அவை மூன்று முகத்தான் போல அழகாகத் தேரியும். ஆனால் அதன் கண்களில் பசியும், ஏதாவது கிடைக்காதா என்ற ஏக்கமும் பட்டவர்த்தனமாகத் தெரியும்.

அவைகளுக்குக் கொடுப்பதற்கென்றே வாழைப்பழம், பிரெட், பிஸ்கெட் ஆகியவை வீட்டில் இருக்கும். அதைக் கொண்டுவர உள்ளே சென்றால், கம்பியில் தலைசாய்த்து படுத்துக் கொண்டு எங்களை நோக்கி விழி வைத்து ஆவலாய்க் காத்திருக்கும்.

சற்றுப் பெரிய குரங்காய் இருந்தால், கொடுப்பதை கை நீட்டி வாங்கி, நிதானமாகச் சாப்பிட்டுவிட்டுச் செல்லும். சின்ன வாலுக்(!) குரங்குகள் ஒன்றோடொன்று போட்டி போட்டுக் கொண்டு, கொடுக்கும் முன்பே பிடுங்கிக் கொண்டு, சண்டையும் போட்டுக் கொண்டு, வாங்கியதை கீழேயும் போட்டு ரகளை செய்துதான் சாப்பிடும்.

பெரிய குரங்குகள் பெரிய மனிதர்களைப் போல பக்குவம் அடைந்தவை. ஒரு முறை மொட்டை மாடியில், கைப்பிடிச் சுவரில் சாய்ந்துகொண்டு சாண்டில்யனின் “யவன ராணி” படித்துக் கொண்டிருந்தேன். அருகில் ஏதோ நிழலாடியது. படிக்கும் சுவாரஸ்யத்தில் அதைச் சட்டை செய்யவில்லை. இரு நிமிடங்கள் கழித்துதான் திரும்பிப் பார்த்தேன். ஐயோ... நிழலாடவில்லை... வாலாடியிருக்கிறது... ஒரு திம்மாங் குரங்கு என் அருகில் அமர்ந்து கொண்டு நான் படிப்பதை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. எனக்கு இடப்பக்கம் அதன் சகாக்கள் வேறு அமர்ந்து கொண்டிருந்தனர். எனக்கு சப்தநாடியும் ஒடுங்கிப்போனது. அலறவோ, ஓடவோ வாய்ப்பின்றி வெலவெலத்துப் போனேன்.

ஆனால், அவை அமைதியாக இருந்தன. இக்கலிகால சாமியார்களிடம் காணமுடியாத சாந்தமும், நிதானமும் அதன் முகங்களிலும், கண்களிலும் தெரிந்தது.

”இப்பத்தான் இதெல்லாம் படிக்கிறயா?” என்பதுபோல என்னை ஒரு அற்பப் பார்வை பார்த்துவிட்டு, திம்மாங் குரங்கு கைப்பிடிச் சுவருக்குத் தாவி, வாலை ஆட்டியபடி செல்ல, அதன் சகாக்களும் ரயில்பெட்டி போல வரிசையாகத் தொடர்ந்தன.

அன்று முதல் எனக்கு குரங்குகளின் மேல் பாசம் அதிகரித்தது. (பின்னே, என் பெயரில் வேறு ’ராம்’ இருக்கிறதே!). அவைகளுக்கு அன்னமிட்ட கையனாய் அதனுடன் நட்பு கொண்டொழுக, ஒருநாள்...

பால்கனியில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தேன். எதிர்வீட்டு மாடியில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாய் குரங்குக் கூட்டம்.

ஒரு நிறைமாத கர்ப்பிணிக்கு மூன்று குரங்குகள் பேன் பார்த்துக் கொண்டிருந்தன (அட, கர்ப்பிணியும் குரங்குதான்). வாலைக் கடித்து, காலைக் கடித்து, காதைக் கடித்துக் கொண்டு குட்டிக் குரங்குகள் விளையாடிக் கொண்டிருந்தன. அந்த வீட்டைச் சுற்றியிருந்த தென்னை, புளி, முருங்கை, மா மரங்களில் பல குரங்குகள் போட்டி போட்டுத் தாவிக் கொண்டிருந்தன. மரங்களின் கிளைகள் காற்றினால் அசைந்ததைவிட குரங்குகளின் தாவலால், பறவைகளின் இறக்கைபோல படபடவென அசைந்தன.

அருகில் இருந்த பி.எஸ்.என்.எல் டவரிலும் சில குரங்குகள். அவை விறுவிறுவென உச்சிக்கு ஏறுவதும், பின் அங்கிருந்து தொங்கிக் கொண்டிருந்த ஒயரில் சர்ர்ர்...ரென இறங்குவதுமாக பரமபதம் ஆடிக்கொண்டிருந்தன.

ஒவ்வொரு குரங்கின் சேஷ்டையையும் நான் அணுவணுவாக ரசித்துக் கொண்டிருந்தபோது, அந்த விபரீதம் நிகழ்ந்தது...

எதிர்வீட்டு மாடியில் துணிக் கொடியை குரங்குகள் பிடித்துக்கொண்டு ஆடியபோது, பட்டென்று அறுந்த கொடி, ஒரு குட்டிக் குரங்கின் கழுத்தில் சுருக்கிட்டு இழுபட, நொடியில் மூச்சு நின்று அது சடலமாய்த் தொங்கியது.

நான் அதிர்ச்சியில் உறைந்தேன். தெருவில் இருந்தவர்கள் இதைக் கவனித்துவிட, மாடியை நோக்கி விரைந்தனர். ஆனால் அதற்குள் குரங்குகளுக்குள் எப்படியோ தகவல் பரிமாறிவிட்டது. அனைத்து குரங்குகளும் அந்த மாடியில் குவிந்து விட்டன. அவை குட்டியைச் சக்கரவட்டமாய்ச் சுற்றிக் கொண்டன. எந்த மனிதரையும் நெருங்கவிடவில்லை.

கீழே ஊர் சனம் கூடிவிட்டது. அவர்கள் பேசிக் கொண்டனர். குரங்குகளும் மனிதர்களைப் போலவே, அதற்கென தனி இடத்தில் தகனம் செய்யும் என்று.

இரு பெரிய குரங்குகள் கொடியிலிருந்து குட்டியை விடுவிக்கப் பார்த்தன. முடியவில்லை. பின் அவை குட்டியைத் தொட்டுத்தொட்டுப் பார்க்க, அதைக் காணத் திராணியற்று குலுங்கியது என்னுடல்.

அனைத்து குரங்குகளும் நடந்ததை ஏற்றுக் கொண்டது போல அமைதியாக அமர்ந்தன. சில நிமிடங்களுக்கு முன்வரை அதகளப்பட்ட மாடியில் இப்போது கனத்த நிசப்தம். அழு குரல்கள் இல்லை. போலியான ஒப்பாரிகள் இல்லை. மெளனமாக ஒரு அஞ்சலி மட்டுமே நடந்தது. பின் தலைவன் குரங்கு எழுந்து நடந்தது. அதைத் தொடர்ந்து அனைத்து குரங்குகளும் எந்தவொரு ஆர்ப்பாட்டமுமின்றி கலைந்து சென்றன.

ஊர் சனம் செயல்பட்டது. ஒருவர் குரங்கை ஜாக்கிரதையாக விடுவித்து கீழே படுக்கவைத்தார். இருவர் தென்னை மட்டையை உடைத்துக்கொண்டு வர, மடமடவென பாடை தயாரானது. பூமாலைகளும் வந்து சேர்ந்தது. அருகிலிருக்கும் பெருமாள் கோயிலின் பட்டர் வரவைக்கப்பட்டார்.

மந்திரங்கள் ஓதி, ஊர் மயானத்திற்குக் குரங்கை எடுத்துச் சென்று சகல மரியாதைகளுடன் தகனம் செய்துவிட்டு திரும்பியது சனம்.

அன்றிரவு உறக்கம் பிடிபடாமல் பால்கனியில் அமர்திருந்தேன். எதிர்வீட்டில் குரங்கு ஊஞ்சலாடி அறுந்த கொடி, காற்றில் ஊசலாடிக் கொண்டிருப்பது நிலவொளியில் தெரிய, அதையே வேகு நேரம் வெறித்துக் கொண்டிருந்தேன்.