Friday, April 15, 2011

கல்பாக்கம் அணு மின் நிலையம் பாதுகாப்பானதா?

பிரபல எழுத்தாளர்கள் எழுதும் ‘இன்று’ வலைத்தளத்தில் வெளியாகியிருக்கும் எனது கட்டுரை.  வெளியிட்டமைக்கு சத்யராஜ்குமார், சித்ரன் இருவருக்கும் நன்றி.


கான்கிரீட் கலவையைக் கொட்டியாவது அணுவின் கதிர்களைக் கட்டுப்படுத்த ஜப்பான் நினைக்கிறது.  திறமைக்கும், உழைப்பிற்கும், அரசு விசுவாசத்திற்கும் பெயர் பெற்ற ஜப்பானிற்கே இக்கதியென்றால்... நமது கூடங்குளம், கல்பாக்கத்தின் நிலை?  அதுவும் நாம் கண்ட சுனாமியின் ரணங்கள் இன்னமும் ஆறாத போது?  ஒரு சாமான்ய மனிதனாய் என் மனமும் சலனப்பட்டது.
சமீபத்தில் என் உறவினர் வீட்டிற்குச் சென்றபோது நடந்த ஒரு சிறு சம்பவம் என் சலனத்தை கடலாக்கியது.
மேலும் படிக்க...

Friday, April 1, 2011

இரா. முருகனின் “மூன்று விரல்”


கணினித்துறையில் இருந்தபடியே எழுத்துலகில் கோலோச்சும் இரா. முருகன் அவர்களின், அத்துறையின் வாழ்வு தழுவிய நாவலே “மூன்று விரல்”.

மென்பொருள் உலகின் மாயைகளை, நிலையற்ற தன்மைகளை, குறுகிய கால ஏற்றங்களை, படுபாதாள வீழ்ச்சிகளை, கூடிப் பிரியும் நட்புகளை, ஈரமற்ற மனங்களை, நாயகன் சுதர்சனனின் பயணத்தில் கோர்வையான நிகழ்ச்சிகளாகத் தொகுத்திருக்கிறார்.

முதல் பக்கமே மென்பொருள் உலகின் பாதக முகத்தை, அதன் ஒப்பனையை பட்டவர்த்தனமாக வெளுக்க வைக்கிறது. நாய் வளர்ப்போர் சங்கத்துக்கான சாஃப்ட்வேரில் துவங்கும் கதை, பாத்திரங்களை விற்பவர்கள் கூட தங்களுக்கும் ஒரு சாஃப்ட்வேர் வேண்டுமென்பதும், அதையே சாக்கிட்டு பெட்டிக்கடைகள் கூட, சில கம்ப்யூட்டர்களை வைத்தே சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட் கம்பெனியென சுயபட்டம் சூட்டிக் கொண்ட காலகட்டத்தை அப்பட்டமாகக் காட்டுகிறது.

கதையின் களமும் போக்கும் கச்சிதமாக அமைந்திருக்கிறது. மென்பொருள் துறையைச் சார்ந்ததென்றாலும், ஒரு மென்பொருளாளன் (சுருக்கமாக... மென்னவன்!) அனுதினமும் கணினியே கதியெனக் கிடப்பது போல், அத்துறையின் வலைகளிலேயே சிக்கிவிடாமல், கிராமம், காதல், பல மனிதர்களின் முகங்கள்/மனங்கள் எனப் பல துடுப்புகளுடன் பயணிக்கிறது கதை. அதே கணம் அத்துறையின் கீழ் நிலைகளை கோடிட்டுக் காட்டவும் அது தவறவில்லை.

ஒரு உதாரணம். சுதர்சன் தன் கிராமத்து வீட்டில் நுழையுமிடம். வாழ்வு முழுவதும் ஆனந்தமாக இருக்கத்தான், சீரான இடைவெளியில் பண்டிகைகளைக் கொண்டாடும்படி நம் முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். பெற்றவரை, பிறந்த மண்ணை விட்டு வெகு தொலைவு சென்றுவிடும் மென்னவன் இவற்றை முற்றிலும் இழக்கிறான். அவன் காலண்டரில், சிகப்பில் தேதி ஒளிர்வது புராஜெக்ட் டெட்லைன் மட்டுமே. இவ்வவல நிலையைத்தான் வீட்டினுள் நுழையும் சுதர்சன் மாக்கோலக் கால்களைக் கண்டு “எப்போது கிருஷ்ண ஜெயந்தி வந்து போனது?” எனக் கேட்கும் கேள்வி கோலத்தால் கோடிட்டுக் காட்டுகிறது.

நாவல் நெடுகிலும் வரும் உவமைகள் அழகு. நாயகிகள் சந்தியாவும் புஷ்பாவும் ஒருசேர தன்னை கேலி செய்வதாய் சுதர்சன் நினைக்குமிடத்தில், எந்தவொரு பூடகமும் இன்றி நுழையும் ஒற்றை வரி; “இவன் இளைய பல்லவனும் அல்ல. இது சாண்டில்யன் கதையும் அல்ல.” இந்த அட்டகாச சரித்திர உவமை தந்த பாதிப்பிலிருந்து விடுபடவே எனக்கு பல நாழிகை(!) பிடித்தது.

ஆங்காங்கே சில விசயங்களை ஆசிரியரின் பேனா உரசுகிறது. அப்துல் கலாமிற்கு வைத்தியம் பார்த்து, அவருடன் எடுத்த படத்தை சுவரில் மாட்டி, தன் சன்மானத்தை உயர்த்தும் டாக்டரைப் போல, பில்கேட்ஸுடன் எடுத்த போட்டோவை வைத்து ட்ரெயினிங் கம்பெனி நடத்துபவர்களை நோக்கி மறைமுகமாகச் சொடுக்கிய சாட்டை சபாஷ். ATL COM கோர்ஸூக்காக நிலங்களை விற்ற நபர்களை நான் கண்டிருக்கிறேன்.

பாத்திரங்கள் வெகு நுணுக்கமாகச் செதுக்கப் பட்டிருக்கின்றன. துறைமாட்சி இல்லாமல் சண்டித்தனம் செய்யும் ரங்கா, மனிதர்களை கத்திரிக்காய் கூறாய் விற்கும் கன்சல்டென்சி பலா, அபூர்வ புரொபஷலனாய் ஒளிவிடும் அவ்தார் சிங், மாற்றங்களை இழப்புகளை முறுவலித்து ஏற்கும் லண்டன் ஜெப்ரி, கிளையண்டாக இருந்தும் இக்கட்டில் முதல் நபராய் ஆதரவு நல்கும் தாய்லாந்து குன் தாங்க்லோர்... ம்ஹீம்... எவரையும் விட்டுவிட முடியவில்லை. உடல் பாதிக்கப்பட்டும் உழைக்கும் ராவை, ஒரு இரவில் பணத்தை மட்டும் பிரதானமாகக் கருதும் நீரஜ் மறந்து போகலாம். ஆனால் குழந்தை முக கண்ணாத்தா உட்பட எந்தப் பாத்திரத்தையும் படிப்பவரால் மறக்க முடியாது.

நிலம் விட்டு நடுங்கடலில் தத்தளிக்கும் படகைப்போல், தன் புலம் விட்டு, தன் வாழ்வாதாரம் விட்டு விழி பிதுங்கும் மென்னவர்களின் வாழ்க்கையை, இந்த நூல் தெளிவாகக் காட்சிப் படுத்துகிறது. கதையின் முடிவைப் போல் நடந்தவை ஏராளம். ஆனால், இந்நூற்றாண்டின் துவக்கத்தில் நடந்ததை பார்த்தறியாத மென்னவர்கள், முடிவை ஏற்க மறுக்கலாம்.

இவர்களின் வாழ்வைக் காக்கவும், இத்துறையின் அபரிமித வளர்ச்சியால் வேறு ரூபங்களில் பாதிக்கப்படும் சமுதாயத்தைக் காக்கவும் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

நூல்: மூன்று விரல்.
ஆசிரியர்: இரா. முருகன்.
வெளியீடு: கிழக்குப் பதிப்பகம், சென்னை.
URL: https://www.nhm.in/shop/978-81-8368-073-8.html

Monday, January 24, 2011

பேயோனின் ‘திசை காட்டிப் பறவை’


புத்தகங்களை வாசிக்கும் அனுபவத்தில் புதியதொரு திசையைக் காட்டுகிறது, ரைட்டர் பேயோனின் ‘திசை காட்டிப் பறவை’.

வரிகளின் ஓட்டத்தை விழிகளால் இடைவிடாமல் தொடர்ந்து, பக்கங்களைப் புரட்டிக் கொண்டேச் செல்வது ஒருவித சுகமென்றால், சில வரிகளைப் படித்ததுமே மனம் அதில் சிக்கி, சற்றுத் திகைத்து, வாய்விட்டுச் சிரித்து (பேருந்தில் படித்தால் வாய் பொத்திச் சிரித்து), பின் படிப்பைத் தொடந்து மீண்டும் மீண்டும் சிக்கிக் கொள்வது மற்றொரு சுகம்.

பேயோன் தரும் இந்த இரண்டாவது சுகத்தை எழுத்துலகில் கோலோச்சும் ஜெமோ, பாரா போன்றவர்களே சிலாகிக்கிறார்கள் என்றால், மேற்கொண்டு நான் எதைச் சொல்ல?  இருப்பினும் இது ஒரு கடைக்கோடி வாசகனின் வாசிப்பனுபவம்.

பொதுவாக ஒருவரின் தற்புகழ்ச்சியில் நமக்கு எரிச்சலே மிஞ்சும். ஆனால் இவர், எவர் மனதையும் புண்படுத்தாமல் தன்னைத்தானே புகழ்ந்து உயர்த்திக் கொள்வதெல்லாம் சிரிப்புச் சரவெடி. சர்வ நிச்சயமாக இது பேயோனுக்கு மட்டுமே சாத்தியம்.

பறவை நொடிமுள்ளிலிருந்து திசை காட்டத் தொடங்குகிறது.

இணையத்தில் பேயோனை நான் முதன்முதலில் வாசிக்கத் தொடங்கியதும், இந்த ‘நொடிமுள்ளின் கதை’-யிலிருந்துதான். எச்சூதுமறியா இளம்பிள்ளையாய் இக்கதையை வாசித்து, அதில் மேற்கோள் காட்டப்பட்டிருந்த புத்தகங்களை கூகுளில் தேடினேன். சொற்களை டைப் அடிக்கத் தொடங்கியதுமே தேடியதை சரமாரியாகக் கொட்டும் கூகுள் விழி பிதுங்கத் தொடங்கியதும்தான் இவை அனைத்துமே பகடி என்பது புரிந்தது. இப்படிக் கூட ஒருவரால் இட்டுக்கட்டி எழுத முடியுமா என்ற பிரமிப்பிலிருந்து விடுபடவே எனக்கு வெகு நேரம் பிடித்தது.

அதுமுதல் அவருக்கு வாசக ரசிகனானேன்.

நிஜங்கள் கசக்கும்போது கற்பனை உலகே நமக்கு மீட்சி. அதை அள்ளிக் கொடுத்த கவிதைகளும் இன்று நிஜங்களுக்கு வந்துவிட்ட பிறகு, பத்திகளால் அனுமான எல்லைகளுக்கு அப்பாற்பட்ட கற்பனை உலகிற்கு அழைத்துச் சென்று நம் மனதை அலசித் தருகிறார் ரைட்டர் பேயோன்.

இவர் பார்த்து நடந்த ‘பிரெஞ்சுப் புரட்சி’, இவர் பாத்திரம் பிச்சை போட்ட ‘ரஷ்ய புரட்சி’ போன்றவற்றின் பத்திகள் சிரிப்பை வெடிக்க வைப்பதெல்லாம் பதிவுலகில் ஒரு புதிய புரட்சி!

நுணுக்கமான வரி வார்த்தைகளால் நகைச்சுவையை ஊசியாய் நுழைப்பது போலவே சோகம், பயங்கரத்தையும் நுழைக்கிறார். ‘கனவினூடே’-வைப் படித்த இரவே, ஒரு ஆட்டோவின் ஒவ்வொரு சக்கரத்தின் மேல் பகுதி தனித்தனியாக கழன்று என்னுடலை ஊடுருவிக் கூறுபோடுவதுபோல் எனக்கு கனவு வந்ததென்றால், இதன் தாக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.

பிரிமியம் பாண்ட் பேப்பரில் பிராஜெக்ட் ரிப்போர்ட்டை பிரிண்ட் எடுப்பதையே நாங்கள் பெருமையாகக் கருதிய கல்லூரிக் காலங்களுண்டு. ஆனால் ஒரு புள்ளி கூட வைக்காத ஒரு பாண்ட் பேப்பரை வைத்தே ‘அந்த வெற்று காகிதமே’ எழுதியிருப்பது இவரின் கற்பனை ஊற்றுக்குச் சாட்சி என்றால், இனி எழுத எதுவுமே இல்லை என அங்கலாய்க்கும் பதிவர்களுக்கு, இல்லை என்ற ஒரு வார்த்தையை வைத்தே, இல்லை இல்லை என்று சொல்லியே அவர் ‘இல்லை’-யை எழுதியிருப்பது பாலபாடம்.

பூத உடலின் பயணத்தின் கணங்கள், சிந்தனை உலவின் கணங்களை வரையறுக்க வல்லவை. குறிப்பாக ஒரு தேர்ந்த எழுத்தாளன், தன் ‘சமகால’ எழுத்தாளனை ஒரு பயணத்தில் சந்தித்து கணங்களை பரிமாறிக் கொண்டால் அக்கணமே ஒரு இலட்சத்து எழுபத்தி ஆறாயிரம் சிந்தனைச் செல்கள் வளர்சிதை மாற்றத்திற்கு உட்படும்.  இப்படித்தான் ஒரு முறை, அண்டார்டிகா நீர்ப்பரப்பிலுள்ள அலக்டோரியா தீவினில் நடக்க இருந்த ‘சமகால எழுத்தரின் கணங்கள்’ மாநாட்டில் கலந்து கொள்ளப் பயணித்தேன். ஒரு ‘கேப் பெட்ரல்’ பறவை திசை காட்டிச் செல்ல, அதன் வெள்ளெச்சம் விழும் தடத்தை ஒற்றிச் சென்ற படகில் என்னுடன் பேயோனும் இருப்பதைக் கண்டு அதிசயத்து...

ஹஹ்ஹஹ்ஹா... வேறொன்றுமில்லை... ‘என்னைப் போல் பத்தி எழுதுவது எப்படி’ படித்ததன் பின்வினையே கடந்து சென்ற நிறைவேறாத பகடிப்பத்தி.

ஒற்றிலக்க பத்திகளில் ஒரு கதையும், இரட்டையிலக்க பத்திகளில் வேறொரு கதையும் நகர்ந்து, கடைசி பத்தியின் கடைசி வரிகளில் இணையும் ‘அடுத்த வாரத் தொடர்ச்சி’ கிளாசிக்.

அவரின் நினைவுக் கூர்மையும், பார்வைக் கூர்மையுமே அவரின் எழுத்தின் கூர்மைக்கு அடிப்படை. கண்ணின் நிழலில் அசைவதற்குக் கூட சுவாரஸ்ய எழுத்து வடிவம் தருகிறார்.

‘மயிலிறகிற்கு நட்ராஜ் பென்சில் சீவல் பிடிக்கும்’

‘உதவுதல் நாடி சுலைமான் அபெக்கேவுக்கு கடிதம்’ போன்ற இடங்கள் இரண்டே இதற்கு அத்தாட்சி.

பறவை ‘சியாமள விகாச பட்சியாய்’ நம்மை விகாசிக்க வைத்து, சிறகுதாரியாய் நம் மனதை சிறகடிக்க வைத்து, ‘வாழும் கணங்களில்’ நிறைகிறது.

பத்திகளின் வரிசையை மாற்றிப் படித்தாலும் தொடரும் ‘வாழும் கணங்கள்’, உண்மையில் வாசிக்கும் கணங்கள்.

இவரெழுத்தை ஆப்சன்மைண்டட்டாக வாசிக்க முடியாது. இன்னமும் சொல்ல எண்ணிக்கை இருந்தும், இப்பதிவு ‘நெடுங்கதையாகத்’ தொடர்வதால், என்னையும் சேர்த்து ஒற்றையிலக்க வாசிப்பாகும் எனத் தயங்கி, இத்துடன் புள்ளி வைக்கிறேன்.

புத்தக கண்காட்சியில், ஆழி பதிப்பகத்தில் இவர் யாரென்ற புலன் விசாரணை அனுதினமும் நடந்திருக்கும். அங்கே நான் இப்புத்தகத்தைக் கேட்டபோது, அங்கிருந்தவர்கள் என்னை நிமிர்ந்துப் பார்த்தார்கள். ஆனால் நான் ஒரு சொல் வினவாமல், புத்தகம் வாங்கி அமைதியாக நகர்ந்தேன். ஏனெனில்...

கடவுளைத் தேடும் வரைதான் ஆராதனைகள். பேயோன் என்ற தேடல் உள்ளவரைதான் அவர் எழுத்து சுவை ஊற்றெடுக்கும் சுனைகளாக இருக்கும்.